Home Blog Page 3135

நாட்டில் இரத்த ஆறு ஓடும் – அன்று ஹிஸ்புல்லா, நாட்டில் பாரிய அழிவு ஏற்படும் – இன்று அசாத் சாலி

இஸ்லாமிய பள்ளிவாசல்களில் தேடுதல் நடவடிக்கைகள் இதற்கு மேலும் அதிகரித்தால், நாட்டில் பாரிய அழிவொன்று இடம்பெறும் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி எச்சரித்துள்ளார்.

பாதுகாப்புப் பிரிவினர் ஒரே முஸ்லிம் பள்ளிவாசலில் மேற்கொள்ளும் ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு தான் பாதுகாப்பு சபையில் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முன்னராக ‘வடக்குக்கிழக்கு இணைந்தால் நாட்டில் இரத்த ஆறு ஓடும்’
என தற்போதைய கிழக்குமாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா குறிப்பிட்டிருந்தமை நாமறிந்ததே.

அவுஸ்ரேலியாவில் தாயகம் தொடர்பான நூல் வெளியீடு

சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் ‘அக்கினிப் பறவைகள்’ அமைப்பினரால் ‘தமிழீழ கட்டுமானங்கள்’ (“Structures of Tamil Eelam: A Handbook”) என்ற நூல் அண்மையில் சுவிற்சலாந்தில் வெளியிடப்பட்டது. இந்த நூலுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து இந்த நூல் புலம் பெயர் நாடுகளில் பரவலாக வெளியீடுசெய்யப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக அவுஸ்ரேலியாவில் இந்த வெளியீடு நடைபெறுகிறது. எதிர்வரும் 09.06. 2019 அன்று பி.ப 5.00 மணிக்கு  Reg Byrne Community Centre
Wentworthmille 2145 Sidney Australia  என்ற முகவரியில் இது தொடர்பான நிகழ்வுகள் இடம்பெறுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இந்த நிகழ்வு தொடர்ப்பன சுவரொட்டிகள் அவுஸ்திரேலியாவில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.WhatsApp Image 2019 05 25 at 09.59.25 அவுஸ்ரேலியாவில் தாயகம் தொடர்பான நூல் வெளியீடு

WhatsApp Image 2019 05 25 at 09.59.251 அவுஸ்ரேலியாவில் தாயகம் தொடர்பான நூல் வெளியீடு

பொறுப்பான எவரினதும் பிரசன்னம் இன்றி அவசரகாலாச் சட்ட விவாதம் – கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிப்பு

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அனுமதியை பாராளுமன்றம் நேற்று வழங்கியது. மிகக்குறைந்தளவான உறுப்பினர்களே சமூகமளித்திருந்த நிலையில் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் கிடைத்தன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்ததுடன், எதிர்க்கட்சி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

சபையில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பான சபைநடவடிக்கைள் இடம்பெற்றபோது பாதுகாப்பு அமைச்சரோ,இராஜாங்க அமைச்சரோ அல்லது பாதுகாப்புச் செயலாளரோ சமூகமளித்திருக்கவில்லை. அத்துடன் முப்படை மற்றும் காவல்துறை அதிகாரிவுகளும் கூட அங்கிருக்கவில்லை.

அங்கு உரையாற்றிய சபைமுதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல, அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதம் இடம்பெறும் போது சம்பிரதாயப்படி முப்படைய அதிகாரிகள்,காவல்துறை தரப்பு மற்றும் பாதுகாப்புச் செயலாளர் சபையில் சமுகமளித்திருக்க வேண்டும். அவர்கள் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவேண்டும். ஆனால் இம்முறை ட்டுமல்ல கடந்தமுறையும் சமூகம் தரவில்லை.இவர்கள் ஏன் இவ்வாறுசெய்கின்றனர் எனது தெரியவில்லை எனக் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு வருடங்களில் சீனா சந்தித்த முதலாவது விண்வெளித் தோல்வி

சீனாவின் விண்வெளித் திட்டம் இந்த வாரம் தோல்வியைச் சந்தித்துள்ளதாக றோய்ட்டர் செய்தி நிறுவனம் நேற்று (24) தெரிவித்ததுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

செய்மதி ஒன்றைச் செலுத்தும் முயற்சியில் கடந்த வியாழக்கிழமை (23) சீனா தோல்வியைச் சந்தித்துள்ளது. விண்வெளித் திட்டத்தில் கடந்த சில வருடங்களாக சீனாவே முன்னிலை வகித்து வந்துள்ளது.

ஏனைய நாடுகளை விட அதிக செய்மதிகளை கடந்த வருடம் சீனா விண்ணுக்கு அனுப்பியிருந்தது. கடந்த வருடம் ஜனவரி மாதம் சந்திரனின் மறு பக்கத்தில் நிலைகொள்ளுமாறு செய்மதியை செலுத்தியதன் மூலம் சீனா வரலாற்றில் இடம்பிடித்திருந்தது.

ஆனால் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது செய்மதியை எடுத்துச் செல்லும் ஏவுகணை அதன் மூன்றாவது நிலையில் செயற்படவில்லை என சீனாவின் சிங்குவா ஊடகம் தெரிவித்துள்ளது.

150 அடி நீளமான ஏவுகணையானது செய்மதியை எடுத்துச் செல்ல முற்பட்டபோதே இந்த தோல்வி நிகழ்ந்துள்ளது.

சீனா அரசுக்கு தேவையான புலனாய்வுத் தகவல்களைத் சேகரிக்கும் நோக்கத்துடன் விண்ணில் செலுத்தப்படவிருந்த இந்த செய்மதியின் தோல்வி குறித்து பொறியியலாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

இனவழிப்பை சந்தித்த நாம் பூச்சியத்திலேயே உள்ளோம் – கிரிசாந்தன்

தாயகத்தில் தமிழினம் பன்னெடுங்கால வரலாற்றைக் கொண்டது. அந்த இனத்தின் மீது போர் என்ற போர்வையில் திட்டமிட்ட இன அழிப்பு அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த இன அழிப்பின் கொடூரங்கள், வடுக்கள் இன்றும் சமூகத்திலிருக்கின்றன. நாம் அவலத்தின் பின்னர் எதனையும் சாதிக்கவில்லை. நீதியைப் பெறுவதிலிருந்து அனைத்திலும் கேள்விக்குறியாகிய நிலையில் தான் இருக்கின்றோம் என யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் இராஜர ட்ணம் கிரிசாந்தன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இலக்கு வார இதழுக்கு வழங்கிய கருத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஆகவே முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது வெறுமனே உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. எமது இனத்தின் விடுதலைக்கான பயணத்துடன் தொடர்பு பட்டதொன்றாகும். இரண்டாம் உலகப் போரில் சொல்லொணா அவலங்களுக்கு முகங்கொடுத்து இனவழிப்புக்குள்ளான யூத இனம் தனது இனவிடுதலைக்கான பயணத்தில் தன்னுடைய அவலங்களை, அனுபவங்களை சந்ததி சந்ததியாக கடத்தி வந்தது.

ஆகவே பரம்பரியத்தினைக் கொண்ட நாமும் எமது சந்ததிக்கு விடுதலை வேட்கையை உணரச் செய்யவேண்டியது தலையாக கடமையாகின்றது. ஆகவே இனவழிப்புக்கு முகங்கொடுத்து விட்டோம் என்றோ நீதி கிடைக்கவில்லை என்றோ நொந்துபோகாது எமது இலக்கை எமது சந்ததிக்கு உணர்த்தும் வகையில் ஆவணங்களை, காட்சிப்படுத்தல்களை, அனுபவப்பகிர்வுகளை முறையாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

எமது விடுதலைப்போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் நாம் முகங்கொடுத்த அனைத்தையும் எமது அடுத்த சந்ததிக்கு உணரவைக்கும் முகமான கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டும்.

கடந்த பத்தாண்டுகளில் நாம் எதனையும் செய்யவில்லை. கிடைத்த வாய்ப்புக்களையும் தமிழ்த் தலைமைகள் சரியாக பயன்படுத்தியிருக்க வில்லை.

ஆகவே பத்தாண்டுகளாகின்ற இந்த நினைவேந்தலிலாவது, எமது இனவிடுதலைக்கான வேட்கையை அடுத்த சந்ததிக்கு பாய்ச்சும் அறிவுசார்ந்த நடவடிக்கையை முறையாக முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைவரும் திடசங்கல்பம் கொள்ளவேண்டும்.

முஸ்லீம் தீவிரவாதிகளின் வங்கிக் கணக்குகள் 134 மில்லியன் ரூபாய்களுடன் முடக்கம்

சிறீலங்காவில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட தேசிய தௌகீத் ஜமாத் இயக்கத்தின் வங்கிக் கணக்குகளை தாம் முடக்கியுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் நேற்று (24) தெரிவித்துள்ளனர்.

இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களின் 41 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாகவும், அதில் 134 மில்லியன் ரூபாய்கள் இருந்தது எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவை தவிர சந்தேக நபர்கள் வசம் இருந்து மேலும் 14 மில்லியன் ரூபாய்களையும் கவல்துறையினர் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகநபர்களின் 7 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தேசிய தௌகீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரானுடன் நெருங்கிய தொடர்புடைய கொரவப்பொத்தானை பகுதி பிரதேச செயலக அபிவிருத்தி உதவி அதிகாரி உட்பட ஐந்து பேரை தாம் கைது செய்துள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் நேற்று (24) தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் அரபுக் கல்லூரி ஆசிரியரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

போயிங் 737 MAX மீண்டும் பயன்பாட்டிற்கு வருகிறது?

ஐந்து மாதங்களில் இரண்டு விபத்துக்களைச் சந்தித்த  போயிங் 737 MAX விமானங்கள், மொத்தம் 346 உயிர்களை காவு வாங்கியது.

முதல் விபத்து, கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் லயன் எயர் (Lion Air) சேவைக்குச் சொந்தமான விமானம் ஜாவா கடலில் விழுந்ததில் 189பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் ஐந்து மாதங்களில் எத்தியோப்பியாவில் எத்தியோப்பிய எயர்லைன் நிறுவனத்திற்கு சொந்தமான 737 MAX 8 விமானம் தரையில் மோதி 157பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, உலகின் பல்வேறு நாடுகளும் இந்த விமானங்களை பறக்க தடை விதித்தன. இந்த விபத்திற்கு அந்த வகை விமானங்களில் இருந்த MCAS மென்பொருளும் கோளாறான சென்சர் ஒன்றும் தான் காரணமாக இருக்க வேண்டும் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது  குறித்த சர்ச்சை கடந்த 6 மாதங்களாக ஏழுந்து வரும் இந்நிலையில், இந்த விமானத்திற்குரிய மென்பொருட்கள் மீள தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த MCAS மென்பொருளுடன் 207 விமானங்கள் 360 மணி நேரங்களுக்குச் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளதாகவும், அடுத்ததாக அமெரிக்காவின் FAA (Federal Aviation Administration) சான்றிதழுக்காக இவற்றை அனுப்பும்  என்றும் போயிங் தெரிவித்த போதும், இதுவரை எதுவும் வரவில்லை என FAA தெரிவிக்கிறது.

இருப்பினும், அமெரிக்கன் ஏயர்லைன்ஸ், சவுத்வெஸ்ட் எயர்லைன்ஸ் போன்ற விமான சேவைகள் இவற்றிற்கு அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ஆகஸ்ட் மாதம் இந்த விமானங்களை பயன்படுத்தும் சேவைக்கான முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் 36 நாடுகளைச் சேர்ந்த 38,000 விமானிகளைப் பரிந்துரைக்கும் ECA (European Cockpit Association) அமைப்பு இது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறது.

ஐரோப்பிய விமானிகளைப் பொறுத்த வரையில் இந்த முன்னேற்றங்கள் ஒரு வகையில் பயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. FAA மற்றும் போயிங் இந்த விமானங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாமா என்று பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. ஆனால், விமானத்தின் வடிவமைப்பில் இருக்கும் சவாலான விடயங்கள் குறித்து இன்னும் பேசப்படவில்லை என்று கூறிய அந்த அமைப்பு FAAஇன் சோதனையை நம்பாமல் ஐரோப்பிய யுனியனும் தன்னிச்சையாகச் சோதனை செய்து அனுமதி வழங்க வேண்டும் என நிர்ப்பந்தித்துள்ளது.

ஏற்கனவே இந்த சர்ச்சைகளால் போயிங் மேல் மட்டுமல்லாமல் ஒழுங்கு முறை ஆணையமான FAA பெயரும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாகப் பேசி முடிவெடுக்க, உலகெங்கும் இருக்கும் விமான ஒழுங்கு முறை  ஆணையங்களும் அடுத்த வாரம் டெக்சாஸில் சந்திக்கவுள்ளன.

பொருளாதார நெருக்கடி – பயண எச்சரிக்கையை நீக்கக் கோருகின்றது சிறீலங்கா

சிறீலங்காவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான பயண ஆலோசனைகளை மீளாய்வு செய்யுமாறு இராஜதந்திரிகளிடம் சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (24) கேட்டுக் கொண்டார்.

இராஜதந்திரிகளுடனான  ஒரு சந்திப்பொன்றில் பேசிய பிரதம மந்திரி, மக்களின் வாழ்வாதாரத்தை திரும்பப் பெற்றுக் கொண்டிருப்பதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு அளவில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் புனித ஞாயிறு தாக்குதல்களின் விசாரணையின் முன்னேற்றம் பற்றி பாதுகாப்புப் பிரிவின் பிரதிநிதிகள் வெளியுறவுத் தூதர்களிடம் கூறும் போது, நாட்டில் தீவிரவாத சம்பவங்களை தூண்டிவிடுவோர் மீது சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என கூறியதாக பிரதமர் அலுவலகம் தனது செய்தியாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு மந்திரி ருவன் விஜேவர்தன, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளியுறவு விவகார செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க மற்றும் டி.ஐ.ஜி அஜித் ரோஹன ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனிடையே கடந்த மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதல் அதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து. அனைத்துலக நாடுகள் தமது மக்களை சிறீலங்காவுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு பயண எச்சரிக்கையை விடுத்திருந்தன. இந்த பயண எச்சரிக்கையானது சிறீலங்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து வருகின்றது. சுற்றுலாப்பயணத்துறையும் அதனுடன் இணைந்தத விமானப்போக்குவரத்து மற்றும் ஆடம்பர விடுதிகளின் வருமானம் என்பன கடுமையான பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதுடன் தென்னிலங்கை மக்கள் வேலை வாய்ப்புக்களையும் இழந்து வருகின்றனர்.

பௌத்த மதகுருவின் விடுதலை – பாதுகாப்பு கேட்கிறார் காணாமல் போன ஊடகவியலாளரின் மனைவி

காணாமல் போன பத்திரிகையாளரான பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட சிறீலங்கா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.

நேற்று மாலை கலாகொட அத்தீ ஞானசார தேரர் விடுதலையானதையடுத்து, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று வெள்ளிக்கிழமை (மே 24) கடிதத்தை அனுப்பி வைத்தார்.   தேரரை விடுவித்ததானது, தனது பிள்ளைகளுக்கும் தனக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞானசார தேரரை ஆதரிக்கும் துறவிகள் அவரை அவதூறு செய்ததோடு சிறையில் இருந்தபோதும் அவரைக் கடுமையாக விமர்சித்ததாக திருமதி எக்னெலிகொட விளக்கினார்.

இதனிடையே சிறீலங்கா அரசின் பேரினவாத மற்றும் மதக் கொள்கைகள் தீவிரம்பெற்றுவருவது சிறுபான்மை இன மக்களிடமும் அச்சத்தை தோற்றுவித்தள்ளது.

இது முதுகெலும்பற்ற அரசாங்கம் – பாராளுமன்றத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்

முஸ்லீம் வைத்தியர் ஒருவர் 4000 சிங்கள பௌத்த பெண்களுக்கு கருத்தடை செய்ததாக ஒரு சிங்கள பத்திரிகையை மேற்கோள் காட்டி பரபரப்பாக செய்திகள் வெளியிடப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஆளும்கட்சி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ,

ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு இனரீதியான மோதல்களைத் தூண்டும் வகையில் பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த வகையில் 4000 சிங்களப்பெண்களுக்கு கருத்தடை செய்யப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தியில் எந்தவித உண்மையுமில்லை.

இப்படிப்பட்ட செய்திகளை வெளியிடும் தீவிரவாத ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாக முதுகெலும்பு அற்ற அரசாங்கமாக இது காணப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.Screen Shot 2019 05 23 at 1.58.56 PM இது முதுகெலும்பற்ற அரசாங்கம் - பாராளுமன்றத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்