போயிங் 737 MAX மீண்டும் பயன்பாட்டிற்கு வருகிறது?

ஐந்து மாதங்களில் இரண்டு விபத்துக்களைச் சந்தித்த  போயிங் 737 MAX விமானங்கள், மொத்தம் 346 உயிர்களை காவு வாங்கியது.

முதல் விபத்து, கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் லயன் எயர் (Lion Air) சேவைக்குச் சொந்தமான விமானம் ஜாவா கடலில் விழுந்ததில் 189பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் ஐந்து மாதங்களில் எத்தியோப்பியாவில் எத்தியோப்பிய எயர்லைன் நிறுவனத்திற்கு சொந்தமான 737 MAX 8 விமானம் தரையில் மோதி 157பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, உலகின் பல்வேறு நாடுகளும் இந்த விமானங்களை பறக்க தடை விதித்தன. இந்த விபத்திற்கு அந்த வகை விமானங்களில் இருந்த MCAS மென்பொருளும் கோளாறான சென்சர் ஒன்றும் தான் காரணமாக இருக்க வேண்டும் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது  குறித்த சர்ச்சை கடந்த 6 மாதங்களாக ஏழுந்து வரும் இந்நிலையில், இந்த விமானத்திற்குரிய மென்பொருட்கள் மீள தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த MCAS மென்பொருளுடன் 207 விமானங்கள் 360 மணி நேரங்களுக்குச் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளதாகவும், அடுத்ததாக அமெரிக்காவின் FAA (Federal Aviation Administration) சான்றிதழுக்காக இவற்றை அனுப்பும்  என்றும் போயிங் தெரிவித்த போதும், இதுவரை எதுவும் வரவில்லை என FAA தெரிவிக்கிறது.

இருப்பினும், அமெரிக்கன் ஏயர்லைன்ஸ், சவுத்வெஸ்ட் எயர்லைன்ஸ் போன்ற விமான சேவைகள் இவற்றிற்கு அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ஆகஸ்ட் மாதம் இந்த விமானங்களை பயன்படுத்தும் சேவைக்கான முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் 36 நாடுகளைச் சேர்ந்த 38,000 விமானிகளைப் பரிந்துரைக்கும் ECA (European Cockpit Association) அமைப்பு இது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறது.

ஐரோப்பிய விமானிகளைப் பொறுத்த வரையில் இந்த முன்னேற்றங்கள் ஒரு வகையில் பயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. FAA மற்றும் போயிங் இந்த விமானங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாமா என்று பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. ஆனால், விமானத்தின் வடிவமைப்பில் இருக்கும் சவாலான விடயங்கள் குறித்து இன்னும் பேசப்படவில்லை என்று கூறிய அந்த அமைப்பு FAAஇன் சோதனையை நம்பாமல் ஐரோப்பிய யுனியனும் தன்னிச்சையாகச் சோதனை செய்து அனுமதி வழங்க வேண்டும் என நிர்ப்பந்தித்துள்ளது.

ஏற்கனவே இந்த சர்ச்சைகளால் போயிங் மேல் மட்டுமல்லாமல் ஒழுங்கு முறை ஆணையமான FAA பெயரும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாகப் பேசி முடிவெடுக்க, உலகெங்கும் இருக்கும் விமான ஒழுங்கு முறை  ஆணையங்களும் அடுத்த வாரம் டெக்சாஸில் சந்திக்கவுள்ளன.