ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி (Dr. Ebrahim Raisi) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இன்று நண்பகல் திறந்து வைக்கப்பட்டது.
மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்குப் பின்னர் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் இத்திட்டம் ஒன்றாகும்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிருவாகத் தெரிவு தொடர்பான வழக்கு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் பின் குறித்த வழக்கு மே மாதம் 31ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.
குறித்த வழக்கின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இவ் வழக்கிற்கு 07 எதிராளிகள் பெயரிடப்பட்டுள்ள நிலையில் 2ம்,4ம் எதிராளிகளான தலைவராக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், செயலாளராக தெரிவாகிய ச.குகதாசன் ஆகியோர்களுக்கு சார்பாக ஆஜராகினேன்.
சுமார் மூன்று மணி நேரங்கள் இவ் வழக்கு விவாதிக்கப்பட்டு சமர்ப்பணம் செய்யப்பட்டது.கடந்த பெப்ரவரி 15ம் திகதி வழகுகல் தாக்கல் செய்யப்பட்டு 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இந்த வழக்கு பொதுநலன் கருதி முடிவுக்கு கொண்டு வரவேண்டும் கட்சி யாப்பை மீறியதாக இங்கு எதுவும் சொல்லப்படவில்லை.
குறிப்பாக சில விதிகளில் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது இதன் பிரகாரம் வழக்கு தொடர்ந்தால் அதனை வெற்றி கொள்ளலாம். ஆனால் காலம் செல்லும் இதனால் வழக்கை காலம் சென்ற நிலையில் வெற்றி கொண்டால் தோல்வியாகவே கருதப்படும் .வழக்காளி கோரும் நிவாரணத்தை வழங்க தயாராக இருக்கிறோம். எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை இதனை வழக்காளி தனது சட்டத்தரணி ஊடாக தெரிவிக்க வேண்டும். வழக்கை வாபஸ் பெற வேண்டும் என எனது வாதத்தை நீதிமன்றில் தெரிவித்தேன் என்றார்.
திருகோணமலை மாவட்ட தமிழ் அமுதம் கலைவட்டத்தின் சித்திரைக் கலை விழா ஞாயிற்றுக்கிழமை (21) திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
தமிழ் அமுதம் கலைவட்டத்தின் தலைவரும் அதிபருமான திருமதி சுஜந்தினி யுவராஜா தலைமையில் இடம்பெற்ற சித்திரைக் கலை விழாவுக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி த.வருணி மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி ஆகியோர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஊடகவியலாளரும் எழுத்தாளருமான திருமதி ஜெ.நித்தியானந்தன், ஓய்வுநிலை அதிபர்களான க.ஜெயநாதன், ப.மதிபாலசிங்கம், ந.நவரெத்தினராஜா, கெ.சித்திரவேலாயுதம் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும், கிராம சேவையாளர், கலாசார உத்தியோகத்தர்கள், எழுத்தாளர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கவிஞர் .அம்.கௌரிதாசன் அவர்கள் தலைமையில் கவியரங்கும், கவிஞர். க. யோகானந்தன் அவர்களின் தலைமையில் விவாத அரங்கும் , சிலம்பம், அகரம் மக்கள் கலைக்கூடம் மாணவர்களின் புல்லாங்குழல் இசையும், பேச்சு ,கவிதை, திருக்குறள் ,பாடல்கள் ,பிரகதீஸ்வரா நடன கலாலயா மாணவர்களின் நடனமும், சிவபாத நடனனாலயா மாணவர்களின் நடனம் உட்பட பல கலை நிகழ்வுகள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி (Dr.Ebrahim Raisi) உள்ளிட்ட தூதுக்குழுவினர் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று காலை மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு, பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வரவேற்பளிக்கப்பட்டது.
ஈரான் ஜனாதிபதியின் ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் திறந்து வைக்கப்படவுள்ளது.
இன்று ஆரம்பமாகும் ஈஸ்டர் தாக்குதல் பற்றிய நாடாளுமன்ற விவாதத்துக்கு நான்கரை கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இதன் மூலம் ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் யார் என்ற பதில் கிடைக்குமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
முன்னரும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் 11 நாட்கள் விவாதங்கள் நடந்துள்ளன. இதற்காக 13 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதம் இன்று புதன்கிழமை ஆரம்பமாகி வெள்ளிக் கிழமை வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற வுள்ளது.
இந்த விவாதத்துக்கான பிரேரணை எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதலுக்கு முதல்நாள் ஷங்கிரிலா ஹோட்டலில் சஹ்ரான் ஹாசிம் தங்கியிருந்தார். அதேநேரம், 616, 623 ஆம் இலக்க அறைகளில் தங்கியிருந்தோரின் விவரங்களை உயர் நீதிமன்றுக்கு தெரிவிக்காமல் ஹோட்டல் நிர்வாகம் மறைத்துள்ளது என்று இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அத்துடன், 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரான் ஹாசிமும் அவரின் சகா இலாம் அஹமட்டும் 20ஆம் திகதி அதே ஹோட்டலில் சந்தித்த நபர்களின் விவரம் மறைக்கப்பட்டுள்ளது – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளர் முஜிபுர் ரஹ்மான் சாடியுள்ளார்.
இந்த விடயம் குறித்து முஜிபுர் ரஹ்மான் வெளியிட்ட தகவல்கள் வருமாறு,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரான இரண்டு வாரங்களில் ஹோட்டலில் தங்கியிருந்தவர்களின் விவரங்கள் உயர்நீதிமன்றத்திடம் வழங்கப்பட்டுள்ளன. எனினும் 616, ஆம் இலக்க அறையில் தங்கியிருந்தவர்களின் பெயர் விவரங்களை ஹோட்டல் நிர்வாகம் வழங்கவில்லை.
அத்துடன், ஹோட்டலின் 6ஆவது மாடியில் 623ஆம் இலக்க அறையில் தங்கியிருந்தவர்களின் விவரமும் மறைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் தங்கியிருந்தவர்களும் சஹ்ரான் ஹாசிம் குழுவினருடன் தொடர்புபட்டவர்கள் போல் தோன்றுகின்றது” என்றும் அவா் தெரிவித்தாா்.
இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவிருந்த நிலையில் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திருகோணமலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று இடம்பெறவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திருகோணமலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதனால் கட்சி உறுப்பினர்கள் அங்கு செல்லவுள்ளதாகவும் இதனால் கூட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனால் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தை அடுத்த வாரம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதன்போது ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவில் இம்மாதம் இனம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான அகழ்வு பணி இன்று புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் இடம்பெறவுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது;
அண்மையில் புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் வைத்தியசாலைக்கு வன்மையாக மனித எலும்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்ட நிலையில் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் ஆரம்பித்திருந்தனர்.
தொடர்ந்து ஊர்காவற்துறை நீதவான் நீதி மன்றத்தினால் இன்றைய தினம் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் காலை 8: 30 மணி முதல் அகழ்வுபணிகள் முன்னெடுக்கப்
படவுள்ளன.
அகழ்வு பணிகளின்போது ஊர்காவற்துறை நீதவான் , சட்டவைத்திய அதிகாரி ,நிலஅளவைத் திணைக்களத்தினர், ஊர்காவற்துறை பொலிசார், வேலணை பிரதேச செயலாளர் உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான துணை அமைச்சர் சன் ஹையன் (Sun Haiyan) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று நாட்டை வந்தடைந்தார்.
சர்வதேச அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான மத்திய குழுவிற்கு நேரடியாக பொறுப்புக்கூறும் சர்வதேசப் பிரிவின் முக்கிய பொறுப்பாகும்.
2023 ஆம் ஆண்டில் இந்த பிரிவின் துணை அமைச்சராக பதவியேற்ற சன் ஹையன், இதற்கு முன்னர் சிங்கப்பூருக்கான சீனத் தூதுவராக கடமையாற்றினார்.
இன்று முற்பகல் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்ட அவர், மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான துணை அமைச்சர் சன் ஹையனுடன், இலங்கைக்கான சீன தூதரகத்தின் கன்சியூலர், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான திணைக்களத்தின் பணிப்பாளர் தற்றும் பிரதி பணிப்பாளர், இலங்கைக்கான சீன தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் உள்ளிட்டோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில், கட்சியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான விஜித்த ஹேரத், கலாநிதி ஹரினி அமரசூரிய, பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தற்போதைய அரசியல் நிலைமை, எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேர்தல் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரசியல் நிலைமைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பிற்கு முன்னர், சீன பிரதிநிதிகள் கட்சியின் பிரதேச தலைவர்களுடன் மஹரகமவில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட மட்ட மற்றும் பிரதேச மட்ட அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டார்.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாளைய தினம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று உறுதிப்படுத்தியிருந்தார்.
உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.
ஈரான் ஜனாதிபதி இப்ரஹிம் ரைசியின் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்துடன் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) கூறியுள்ளார்.