முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உடனடியாக கைது செய்ய வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி மத்திய கொழும்பு அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை நீதிமன்றம் உத்தரவிட்டாலோ அல்லது கேட்டாலோ வெளியிடத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மைத்திரியின் கருத்துக்கு பல்வேறு அரசியல் தரப்பினரும் தமது நிலைப்பாட்டை வெளியிட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பல தடவை நீதிமன்றம் சென்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் குற்றவாளிகளை சட்டத்தின் தண்டனையில் இருந்து தப்பிக்க உதவி புரிந்துள்ளார்.
இது தேசத்துரோக குற்றமாகும். அவரை குற்றவியல் சட்டத்தில் கைது செய்து நீதிமன்றில் முன்னிறுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, கத்தோலிக்க சபை என்பன மைத்திரிபாலவை கைது செய்து விசாரணை செய்யுமாறு CID யிடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“ஜனாதிபதித் தேர்தலில் நிற்பவர்கள் யாராக இருந்தாலும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முன்வையுங்கள். அது பற்றி பரிசீலிப்போம்” இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் அமரா பெண்கள் ஒன்றியத்தின் மகளிர் தின நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இப்போது ஜனாதிபதித் தேர்தல் பற்றியும் பேசப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு வேட்பாளர் கூட இந்த மண்டபத்தில் ஒரு கூட்டத்தை நடத்திச் சென்றிருக்கின்றார்.
நீண்ட நெடுங்காலமாகக் கடந்த எட்டு சகாப்தங்களுக்கு மேலாக உறுதி தளராது – தனது கொள்கை தளராது இனத்தினுடைய அடிப்படைக் கொள்கைகளை அடிநாதமாகக் கொண்டு தமிழினம் பயணித்து வருகின்றது.
இவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் யாராக இருந்தாலும் இனப்பிச்சனைக்கான ஒரு தீர்வை முன்வையுங்கள். நாங்கள் அது பற்றி பரிசீலிப்போம். தமிழர்கள் பொது வேட்பாளர் பற்றிய சிந்தனையையும் கொண்டுள்ளனர்.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வை எட்டுவதற்காகத் தமிழ் வாக்காளர்கள் ஒன்றுதிரண்டு ஒரு தமிழ் பொது வேட்பாளரை தீர்மானிக்க முனைந்தால் தென்பகுதியில் இருந்து எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் வெல்ல முடியாத மிகப் பெரும் சங்கடத்தைக் கொடுக்கும். அது பற்றி கூட தமிழர் தரப்பு மிக நுணுக்கமாக ஆராய்கின்றது” என்றார்.
நிலத்தை ஆக்கிரமித்து மக்களை வெளியேற்றி ஈழத்தமிழர் இறைமையை அழித்தல் வேகம் பெறுகிறது | Ilakku Weekly ePaper 279 | ஆசிரியர் தலையங்கம்
சிறிலங்காப் பாராளுமன்றத்தில் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உடைய உரை நிலத்தை ஆக்கிரமித்து மக்களை வெளியேற்றி ஈழத்தமிழர் இறைமையை அழித்தல் வேகம் பெறுகிறது என்பதைத் தெளிவாக்கியுள்ளது. அவர் ‘வெடுக்குநாறி மலையில் எந்தக் கோயில்களும் இல்லை, இந்த மலையை தொல் பொருள் திணைக்களம் அநுராதபுர யுகத்துக்குச் சொந்தமான தொல்பொருள் மரபுரிமைகள் உள்ள பகுதியாக அடையாளப்படுத்தியுள்ளது. பௌத்த மரபுரிமைகள் உள்ள பகுதிகளில் பிறிதொரு தரப்பினர் தமது மதவழிபாடுகளை முன்னெடுக்கும் பொழுது முரண்பாடுகளே தோன்றும். 2023ம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் சிவலிங்கத்தை நிறுவினர். மார்ச் 4இல் மதிமுகராசா என்ற பூசகர் வெடுக்குநாறி மலையில் பூசை வழிபாட்டில் ஈடுபட வவனியா நீதிமன்றத்தில் கோரிக்கை மனுவை அளித்து அது நிராகரிக்கப்பட்டது. இவர் மார்ச் 8 சிவராத்திரி தினத்தன்று 400 பேருடன் சட்டவிரோதமாக வழிபாடு நடாத்தியுள்ளார். தொல்பொருள் மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய முறையில் அடுப்பு மூட்டித் தீ வளர்த்துள்ளார்.
6மணிக்கு மேல் மலையில் தங்கக் கூடாதென்ற சட்டத்தையும் மீறி 40பேருடன் அங்கு தங்கியுள்ளார். இந்தச் சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தொல்பொருள் திணைக்கள மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தடுத்து நிறுத்துமாறு பொலிசாரைக் கேட்டுக்கொண்டதற்கு அமையவே சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட பொலிசார் 8 பேரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர் என விளக்கமளித்துள்ளார். சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புத் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகராவும் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் “வெடுக்குநாறி மலையில் இருந்த பழமையான பௌத்த தூபி இடித்தழிக்கப்பட்டே அதன்மீது சிவலிங்கம் அமைக்கப்பட்டது. பௌத்த மரபுரிமைகளை அழித்து அதன்மீது பிறமத அடையாளங்களைக் காட்சிப்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள பௌத்தர்களின் பொறுமையைக் கோழைத்தனம் எனக் கருதவேண்டாம்” என எச்சரிப்பு வேறு விடுத்துள்ளார். இவை பாராளுமன்றத்துக்கு முன்னால் வடக்கு கிழக்குப் பாராளுமன்றப் பிரதிநிதிகள் வெடுக்குநாறி மலை விடயத்தில் ஈழத்தமிழர்களின் வழிபாட்டுச் சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம், சட்டத்தின் முன் குடிகள் அனைவரும் சமம் போன்ற அடிப்படை மனிதஉரிமைகள் மறுப்புக்கு எதிராகச் சனநாயக முறையில் அமைதிவழியில் பதாகைப் போராட்டம் நடத்தியதற்குச் சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கத்தின் பதிலாக இந்த இருவரது பேச்சும் அமைந்து சிறிலங்காவில் எத்தகைய சனநாயகம் உள்ளது, எத்தகைய சட்டத்தின் ஆட்சி உள்ளது என்பதை மீண்டும் உலகுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது. அத்துடன் இவ்வுரைகள் உள்ளக பொறிமுறையில் ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்குச் சிறிலங்கா அரசாங்கம் தீர்வு அளித்தல் என்பதற்கான அரசியல் கலாச்சாரம் சிறிலங்காவில் என்றுமே இல்லை என்பதையும் மீள்நிரூபணம் செய்துள்ளன. இந்நிலையில் புலம்பெயர் தமிழர்கள் நாளாந்த வாழ்வில் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை உலகுக்கு அறிவிக்க வல்ல பொதுக் கருத்துக்கோளத்தை உருவாக்கும் தங்களுக்கான ஈழத்தமிழர் தேசிய ஊடகத்தை உடன் நிறுவுவதும் அந்த ஊடகத்தின் மூலம் ஈழத்தமிழர் தாயகம் எங்கும் ஊடகவியலாளர்களை உருவாக்கி ஊடகத்தின் வழி ஈழத்தமிழர்களின் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டும் என்பதும் இலக்கின் எண்ணமாக உள்ளது.
அதுமட்டுமல்ல சரத்வீரசேகரா வடக்கு கிழக்குப் பிரதிநிதிகள் கொழும்பில் சனநாயக முறையில் போராட்டம் நடத்தி விட்டு வடக்குக் கிழக்குக்குத் திரும்பிச் செல்வதே சிங்கள பௌத்தர்களின் கருணைச்செயல் எனப்பேசி மறைமுகமாக மனித உரிமைகள் வன்முறையைத் தூண்டும் எச்சரிப்பையும் தனது பாராளுமன்ற உரையில் விடுத்துள்ளார். சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் ஈழத்தமிழின அழிப்பை நடாத்திய அதே இராணுவ மனநிலையில் மீண்டும் ஒரு ஈழத்தமிழ் இனஅழிப்பை மதவெறி இனவெறி வழி தூண்டுகின்ற போக்கில் நிகழ்த்தும் இத்தகைய உரைகளை ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவையும் ஆணையகமும் அனைத்துலகச் சட்டங்களையும் ஒழுங்குகளையும் மீறும் செயல் என்ற வகையில் கவனத்தில் எடுத்து இவ்வாறு அனைத்துலக சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக அனைத்துலகத் தடைகளை விதித்து ஈழத்தமிழர்களை இன்னுமொரு இனஅழிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டுமென்பது இலக்கின் மற்றொரு கவனப்படுத்தலாக உள்ளது. இலக்கின் இந்தக் கவனப்படுத்தலை நடைமுறைக்குக் கொண்டு வரக் கூடிய நெறிப்படுத்தல் உரையைப் பிரித்தானிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மார்ச் 20 அன்று பிரித்தானியப் பாராளுமன்றத்தில் சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து நடாத்திய விவாதத்தில் காசல்டன் வோலிங்டன் கொன்ச்வேடிவ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மாண்பமை எலியட் கொல்பேர்ன் அவர்கள் நிகழ்த்தி பிரித்தானிய அரசுக்கு மட்டுமல்ல உலகுக்கு மட்டுமல்ல ஈழத்தமிழர்களுக்கும் வழிகாட்டியுள்ளார். அவரது உரையின் முக்கிய சில கருத்துக்களை மட்டும் இங்கு மீள்பதிவு செய்கின்றேன்.
“சிறிலங்காவின் 2009 முரண்பாடு இரத்த ஆற்றில் முடிவுற்றது. இறுதி மாதங்களில் சிறிலங்காவின் இராணுவம் பத்தாயிரக் கணக்கில் தமிழ்ப் பொதுமக்களை நன்கு திட்டமிட்ட முறையில் இராணுவ இலக்குகளாக்கிக் கொன்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அந்த இருண்ட அத்தியாயம் இன்னமும் திறந்தபடிதான் உள்ளது. 70000 முதல் 170000 தமிழர்களுக்கு என்ன நடந்தது என்ற பொறுப்புக்கூறல் இல்லாதநிலையில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றே ஊகிக்கப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கம் யுத்தக் குற்றங்களையும் மனிதாயத்துக்கு எதிரான குற்றங்களையும் தொடர்ந்து மறுத்து வருவதால் அவர்கள் இனஅழிப்புக்குத்தான் உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்ற கோபம் தூண்டப்பட்டு குணப்படுத்தலை அளிக்கக் கூடிய சமாதானப்பாதைக்கு இது தடையாக உள்ளது. தமிழர்களின் நிலையும் அத்துடன் முஸ்லீம் சிறுபான்மை மக்களின் நிலையும் தொடர்ந்தும் ஆபத்திலேயே உள்ளது. சிறிலங்காவில் தண்டனையின்மை ஆட்சி செய்கிறது. மனித உரிமைகள் வன்முறைகள் நிலைத்ததாக உள்ளன. பலமான இராணுவமயமாக்கல் வார்ப்பு நீண்டகால நிழலாக உள்ளது. சிறிலங்கா இவற்றுக்குப் பொறுப்புக் கூறுவதில் தவறுவதும் நிலைமாற்று நீதிக்கான பொறிமுறைகளைத் தொடர்வதற்குத் தொல்லைகளை ஏற்படுத்துவதும் நிரந்தரமான அமைதிக்கும் மறுவாழ்வுக்குமான எல்லா நம்பிக்கைகளையும் இழக்க வைத்துள்ளது. அனைத்துலக சமூகத்தின் பொறுப்புக் கூறலுக்கான அழைப்பு உறுதியான செயற்பாடாக மாற்றப்படவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சில் சிறிலங்கா உய்வதற்கு முக்கியமான இழப்பாக உள்ளது அதன் பொறுப்புக் கூறலின்மையே என்பதை சரியாகக் கண்டறிந்து அடையாளப்படுத்தி உள்ளது. பல தசாப்பதங்களாகத் தேசிய உணர்வால் செலுத்தப்படும் ஆற்றலற்ற ஆட்சியே முரண்பாட்டின் மூலகாரணமாகி நாட்டின என்பதைக் கொள்ளையிட்டு இன்றைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளது.
அனைத்துலக சமூகம் தொடர்ச்சியாகச் சிறிலங்காவின் கடந்தகால, நிகழ்கால மனித உரிமை வன்முறைகளுக்குப் பொறுப்புக் கூற வைப்பதற்குரிய ஆற்றலுள்ள பொறிமுறைகளைக் கையாண்டு அனைத்துலக விசாரணையை நடாத்தி வழக்கினைப் பதிவதால் மட்டுமே சிறிலங்காவை அர்த்தமுள்ள நீதியையும் மறுவாழ்வையும் அளிக்கச் செய்து இந்த இருண்ட அத்தியாயத்தை மூட வைக்கலாம்.” என்பது மாண்பமை எலியட் கொல்பேர்ன் அவர்களின் உண்மையும் நேர்மையுமான வழிகாட்டலாக உள்ளது. இவர் தனது உரையில் சிறிலங்காவின் இராணுவ வார்ப்பால் மூடப்பட்ட பகுதியாக வடக்கு கிழக்கு மக்களின் பிரதேசம் உள்ளது என்ற உண்மையை வெளிப்படுத்தி சிறிலங்காவின் 20 இராணுவ அணிகளில் 18 வடக்கு கிழக்கிலும் குறிப்பாகப் 14 வடக்கிலும் நிலைஎடுக்க வைக்கப்பட்டுள்ளது என்ற புள்ளிவிபரத்தையும் பதிவு செய்தார். ஈழத்தமிழர்களின் சமகால நிலையின் காட்சியாக இவரின் உரை அமைந்தது. இடம் கருதி அதனை முழுமையாகப் பதிவு செய்ய இயலாத நிலையில் இவரது உரையையும் மற்றையப் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையும் வெளிவந்துள்ள பிரித்தானியப் பாராளுமன்றக் கன்சாட்டை உலகத் தமிழர்கள் உடனடியாக ஒரு நூலாக உலக மக்கள் அனைவருக்கும் அவரவர் மொழியில் வழங்குவதற்கு ஆவன செய்தாலே ஈழத்தமிழரின் உண்மைக் குரலாக அது மாறும் என்பது இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது.
Ilakku Weekly ePaper 279 | இலக்கு இதழ் 279 மார்ச் 23, 2024: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
நிலத்தை ஆக்கிரமித்து மக்களை வெளியேற்றி ஈழத்தமிழர் இறைமையை அழித்தல் வேகம் பெறுகிறது – ஆசிரியர் தலையங்கம்
பஸிலுக்கு அதிர்ச்சியளிக்கும் ரணிலின் காய் நகர்த்தல்கள் – அகிலன் வடக்கு கடலில் நடப்பதென்ன? – வடபகுதி கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் முகமத் ஆலம்
இலங்கையின் 76 வருட தொடர் ஏமாற்று அரசியலின் புதிய முகம் அனுர – திரு. செல்வநாயகம் நேசன் தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழ் தேசிய மக்கள் இயக்கம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரியை தெரியும் என பகிரங்கமாக கூறுகிறார். இது ஒரு அதிர்ச்சி தகவல் குண்டு. பொலீசார் உடனடியாக மைத்திரிபாலவை அணுகி, உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரி பற்றிய தகவல்களை வாக்குமூலமாக பெற வேண்டும். அதுபோல், இத்தனை நாள் ஏன் இந்த தகவலை அவர் மறைத்து வைத்தார் என்ற கேள்விக்கும் பதிலை வாக்குமூலமாக பெற வேண்டும். இந்த இரண்டு வாக்குமூலங்களின் அடிப்படையில் உடனடியாக ஸ்ரீலங்கா பொலிஸ் விசாரணைகளை முடுக்கி விட்டு, குற்றவாளிகளை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும்.
கொழும்பு கொச்சிக்கடை, நீர்கொழும்பு கடுவாபிடிய, மட்டக்களப்பு ஷியொன் தேவாலயங்களிலும், கொழும்பு நட்சத்திர விடுதிகளிலும் கொல்லப்பட்ட அப்பாவிகளின் பெயரால் இதை நான் கூறுகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பு பேராயர் இல்ல வளவில் ஊடகங்களை சந்தித்த மனோ கணேசன் எம்பி இதுபற்றி ஊடகங்களுக்கு மேலும் கூறியதாவது,
நீதிமன்றம் கேட்டால், தான் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரி பற்றிய தகவல்களை தருவேன் எனவும், அந்த தகவல்களை நீதிபதிகள் இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன்.
நீதிமன்றம் இவரை தேடி வந்து கோராது. இவர்தான் பொலிசை தேடி சென்று தகவல்களை வழங்க வேண்டும். குற்றவாளி பற்றிய தகவல்களை அறிந்த இவர் இதுபற்றி இதுவரை மௌனமாக இருந்தமை குற்றமாகும்.
தான் தரும் தகவல்களை நீதிபதிகள் இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என ஏன் இவர் கூறுகிறார் என எனக்கு விளங்கவில்லை. பொதுமக்களின் வரிப்பணத்தில் பாதுகாப்பு பெற்று வாழும் இவர் யாரை கண்டு பயப்படுகிறார் எனவும் எனக்கு தெரியவில்லை.
இதுபற்றிய ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்த போது இதுபற்றி ஏன் ஆணைக்குழு அதிகரிகளுக்கு தன அறிந்த உண்மை தகவல்களை கூறவில்லை என்பதற்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதில் கூறி ஆக வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரி பற்றிய தகவல்களை இதுவரை மறைத்து வைத்தமை, மைத்திரிபால சிறிசேனவை பிடித்த ஒரு குற்றவியல் நோய். இந்த நோய் இலங்கை பொலீசுக்கும் வந்துவிடாமல் பொலிஸ் துறை அமைச்சர் டிரான் அலசும், பொலிஸ் மாஅதிபரும் கவனமாக செயலாற்ற வேண்டும்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த அரங்கில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும் அதன் நம்பகத்தன்மை இன்னும் அரசுத் தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை.
ரஷ்யாவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் அமோக வெற்றி பெற்றார். 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடர்ச்சியாக 3வது முறையாக அதிபராகி ஸ்டாலினின் சாதனையை முறியடித்திருந்தார். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த கோரத் தாக்குதல் நடந்துள்ளது. ரஷ்யாவில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக இது அறியப்படுகிறது.
மாஸ்கோவின் மேற்குப் பகுதியில் உள்ள க்ரோகஸ் நகரின் மையத்தில் உள்ள 6200 பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட இசையரங்கில்தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சம்பவத்தின் போது அங்கு ரஷ்ய பேண்ட் இசைக் குழுவான ‘பிக்னிக்’ குழுவின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென துப்பாக்கிக் குண்டுகள் பாய பலர் சரிந்து விழுந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியது மட்டுமல்லாது அரங்குக்கு பயங்கரவாதிகள் தீவைத்தும் சென்றனர். உடனடியாக தகவலறிந்த காவல், தீயணைப்பு, பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். இந்த சம்பவத்தில் இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
தமிழரின் இதயபூமி என்று வர்ணிக்கப்படும் மணலாறில் (வெலிஓயா) சிங்கள சமூகத்தவருக்கு வலி. வடக்கில் – ஒட்டகப்புலத்தில் வைத்து காணி களை வழங்கி வைத்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 20 இலட்சம் பேருக்கு காணி உரிமை வழங்கும் ‘உறுமய” வேலைத் திட்டத்தின்கீழ் 408 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி வைத்தார். இவ்வாறு காணி உறுதி வழங்கப்பட்டவர்களில் அநேகமானவர்கள் பெரும்பான்மை இனத்தவர்களே என்று தெரியவருகிறது.
மணலாறு பிரதேசம் ஏற்கனவே வெலி ஓயா எனப் பெயர் மாற்றப்பட்டு 1980கள் முதல் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் பகுதியாக மணலாறு உள்ளது. இந்த இரு மாகாணங்களின் நிலத்தொடர்பையும் துண்டிக்கும் விதமாக இந்தப் பகுதியை அநுராதபுரத்துடன் இணைத்து தனிமாவட்டமாக அறிவிக் கவும் முயற்சிகள் இடம்பெற்றன – இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மணலாறு பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் வைத்து காணிகளை வழங்கியமை பல தரப்பினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து உலக சாதனை படைத்த திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஹரிகரன் தன்வந்தைக் கனடா திருக்கோணமலை நலன்புரிச் சங்கம் ஓர் இலட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வெற்றிக் கிண்ணமும் வழங்கிக் கௌரவித்தது.
கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கத் தலைவர் திரு க.இரகுநாதன் அவர்களும் அதன் காப்பாளரும் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் தலைவருமாகிய திரு.சண்முகம் குகதாசன் அவர்களும் இவற்றை வழங்கினர்.
2024/03/20 ஆம் நாளாகிய இன்று திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் மாணவர் ஒன்றுகூடலின் பொழுது இந்தக் கௌரவிப்பு நிகழ்ச்சி நடபெற்றது. கல்லூரி முதல்வர், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தன்வந்தின் பெற்றோர் உள்ளடக்கிய பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் பொழுது உரை ஆற்றிய திரு. சண்முகம் குகதாசன் அவர்கள் இச்சாதனை புரிந்த மாணவன் நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்திருப்பதாகவும் மென் மேலும் முன்னேறி ஒலிம்பிக் வரை செல்ல வேண்டும் எனவும் வாழ்த்தினார்.
சர்வதேச நீர் தினமான நேற்று தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியின் விவசாயிகளால் விசேட பூசை நிகழ்வொன்று வெம்பு பகுதி வயல் நிலத்தில் மேற் கொள்ளப்பட்டது. கடும் மழையுடனான கால நிலையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த நிகழ்வினை தம்பலகாமம் பிரதேச விவசாய சம்மேளனங்கள்,பிரதேச செயலகம்,கமநல அபிவிருத்தி திணைக்களம்,நீர்பாசன திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது குறித்த வயல் வெளிக்கு அருகாமையில் உள்ள பிச்சைவெளி ஆற்று ஓடையில் பூஜை மேற்கொள்ளப்பட்டு தீர்த்தம் செய்து விட்டனர்.
மிக நீண்ட நாட்களின் பின் கனமழை பெய்ததால் விவசாயிகள் கடும் சந்தோசம் வெளியிட்டனர்.
இதன் போது பொங்கல் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டு விசேட பூஜையும் இடம் பெற்றதுடன் பொங்கலும் பகிரப்பட்டது.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி,நீர்ப்பாசன திணைக்களத்தின் கந்தளாய் பிரதேச பொறியியலாளர் எஸ்.ஏ.சி.எஸ்.சுர வீர உட்பட கமநல சேவைகள் திணைக்கள உத்திதோகத்தர்கள்,விவசாய சம்மேளனங்களின் உறுப்பினர்கள்,விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.