பயங்கரவாத தடை சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் : ஜனாதிபதி உறுதி

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, திட்டமிடப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்கும் பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் சட்ட மறுசீரமைப்புகள் குறித்து கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகாலமாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தற்போதைய சமூகத்துக்குப் பொருத்தமான வகையில் இந்த புதிய சட்டக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்கும், நாட்டின் சாதாரண குடிமக்களின் மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.