திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகமும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிராந்திய பற்சுகாதாரப் பிரிவும் இனைந்து திருகோணமலை நகராட்சி மன்றத்தின் வேலைத்தளப்பகுதி மற்றும் சுகாதாரப் பிரிவு உழியர்களுக்கு இன்று புதன் கிழமை காலை 7.00 மணிக்கு நகராட்சி மன்றத்தின் வேலைத்தளப் பகுதியில் வாய் புற்று நோயை தடுப்போம் என்ற கருப்பொருளில் கருத்தரக்கும் நடமாடும் சிகிச்சையும் இடம் பெற்றது.
இவ் நிகழ்வு பிரதம நூலகர் ந . யோகேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்வில் சமூக பல் வைத்தியநிபுணர் வைத்தியர் சசிதரன், திருகோணமலை பிராந்திய பல்வைத்திய நிபுணர் திருமதி. உதயலக்ஷ்மி சூரியகுமார், நடமாடும் பல் சிகிச்சை நிபுணர் வைத்தியர் கியாஸ் ஆகியோர் கருத்துரைகள் வழக்குவதையும் மேலும் இந் நிகழ்வில் திருகோணமலை பொது நூலகத்தின் நூலக உதவியாளர்களான அ . அச்சுதன், பா.விபூஷிதன், உ.ரஜனிக்காந் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
2019 ஏப்ரல் 21 அன்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்பாவி பொது மக்கள் 269 பேரின் உயிர்களை காவு கொள்ள காரணமான ஈஸ்டர் தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம் எம் மஹ்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று புதன் கிழமை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே அவரால் மேற்படி கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. தொடர்ந்தும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது –
“கடந்த காலங்களில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினை பெரும்பான்மை மக்களினதும் நாட்டினதும் எதிரிகளாக சித்தரித்துக் காட்டுவதன் மூலம் அரசியல் இலாபம் தேடுகின்ற திட்டமிட்டட செயற்பாடுகள் தொடராக அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருந்தன.
அதன் அடிப்படையில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒரு கொடூர சம்பவமே இந்த ஈஸ்டர் தாக்குதலாகும். இவ்வாறான ஒரு தாக்குதலை நடாத்துவதற்கு முஸ்லிம் சமூகத்திற்கு எந்த ஒரு தேவையும் இருக்கவில்லை.
இருந்தாலும் நிரபராதிகளான அப்பாவி முஸ்லீம் சமூகம் அநியாயமாக குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டதோடு உயிர்கள், பல கோடி சொத்துக்கள் என பாரிய அழிவுகளுக்கும் முகம் கொடுத்தனர்.
எனவே பிரதான சூத்திரதாரியை தனக்கு தெரியும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கூறுவதன் அடிப்படையில் துரிதமாக விசாரணையை நடாத்தி உண்மையான சூத்திர தாரியை நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்துவதோடு உரிய தண்டனையை வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய – இலங்கைக் கூட்டுச் செயற்குழு விரைவில் கூடவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Fishermen Care என்ற தனியார் அமைப்புத் தாக்கல் செய்த பொதுநல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மேற்படி மனுவிற்கு பதிலளிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர் பிரமாணப் பத்திரத்தில் இந்திய மத்திய அரசாங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பரில் மீன்பிடி தொடர்பான இந்திய – இலங்கை கூட்டு செயற்குழுவின் ஆறாவது கூட்டத்தை நடத்த முன்மொழியப்பட்ட போதிலும், உள்நாட்டு பிரச்சினைகளால் அந்தத் திட்டம் பலனளிக்கவில்லை என இந்திய மத்திய அரசாங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சு இந்தக் கூட்டத்தை கூடிய விரைவில் நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய மீன் வளத்துறை அமைச்சு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் எட்டப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, இந்திய – இலங்கை கூட்டுச் செயற்குழு உருவாக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2017-2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழகத்தின் பாரம்பரிய மீனவர்களுக்கு இழுவைமடிப் படகுகளுக்குப் பதிலாக 750 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை கொள்வனவு செய்ய உதவியாக தமிழக அரசாங்கத்திற்கு மத்திய அரசாங்கம் 300 கோடி இந்திய ரூபாவை விடுவித்தமையும் இதன்போது நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிக்கும் வகையில், இராமேஸ்வரம் குந்துகால் பகுதியில் மீன்பிடி இறங்கு தளமொன்றை அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டுவதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை இந்திய கடலோரக் காவல் படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர் எனவும், இந்திய மத்திய அரசாங்கம் தாக்கல் செய்துள்ள பதில் சத்தியக்கடதாசியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதில் சத்தியக்கடதாசியை ஆராய்ந்த நீதிபதிகள், பொதுநல வழக்கினை ஜூன் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.
கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு நேற்று வாக்குமூலம் வழங்கச் சென்றிருந்த முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசிக்கும் போராளிகள் நலன்புரிச் சங்கத் தலைவர் செல்வநாயகம் அரவிந்தன் (ஆனந்தவர்மன்) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர், கடந்த 14ஆம் திகதி கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டிருந்தார். எனினும், அன்றைய தினம் அவர் வாக்குமூலம் வழங்கச் செல்லாத காரணத்தால் நேற்று மீண்டும் அழைக்கப்பட்டிருந்தார்.
விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்யும் வகையில் முகநூலில் அவர் பதிவிட்டிருந்தார் என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எதிர்வரும் ஒக்ரோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என கொழும்பு உயர் அரசியல் வட்டாரம் மூலம் தெரிய வருகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் செப்ரெம்பர் 17 – ஒக்ரோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் நடத்தப்பட வேண்டும். புதிய ஜனாதிபதி நவம்பர் 17ஆம் திகதிக்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் சட்ட நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படாவிட்டால் நவம்பர் 18 ஆம் திகதிக்கு பின்னர் தற்போதுள்ள அரசாங்கம் சட்டபூர்வமானதாக அமையாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் தொடர்பில் தனக்கு தகவல் அளித்தவர் குறித்து எந்த விடயங்களையும் சி.ஐ.டியினருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் யார் என்பது தனக்கு தெரியும் என மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தார். இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அவரிடம் சி.ஐ.டியினர் சுமார் 6 மணிநேரம் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
முன்வாசல் வழியாக வந்த சிறிசேன வழமையான கேள்விகளை எதிர்கொண்டார் என சி. ஐ. டி. வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கண்காணிப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விசாரணைகளை முன்னெடுத்தார். குறுக்கு விசாரணைகளும் நடைபெற்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரிகள் யார் என்பது மூன்று வாரங்களுக்கு முன்பே தனக்கு தெரியவந்ததாக விசாரணையின்போது தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, தனக்கு யார் அந்த விடயத்தைத் தெரிவித்தார் என்பதைக் கூறவில்லை. முன்னாள் ஜனாதிபதி தெரிவித்த விடயங்களை மீளாய்வு செய்வோம் என தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர் சட்டமா அதிபரின் உத்தரவின் படி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்போம்” என்று தெரிவித்தாா்.
இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி தெரிவித்த விடயங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சி. ஐ. டியினர் நடவடிக்கை
களை எடுத்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
இலங்கையின் வடக்கு, கிழக்கில் காணி அபகரிப்புகள் அதிகரித்து வருகின்றன. இவை, மத வழிபாட்டு தலங்களை இலக்கு வைத்தவையாக உள்ளன. இவ்வாறான செயல்பாடுகள் சமூகங்களிடையே பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளன என்று பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி பணிமனை தெரிவித்துள்ளது.
அத்துடன், வடக்கு, கிழக்கில் வாழும் சமூகங்கள் படைத் தரப்பினரின் தொடர் கண்காணிப்பு, ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றன என்று அந்தப் பணிமனை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக நிலவரம் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
32 நாடுகளின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக நிலவரம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் இலங்கை தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,
“இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்ந்தும் கரிசனைக்கு உரியதாகவே உள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்வதை முன்னிறுத்திய பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியிலும் அந்தச் சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதுடன் கருத்து வெளிப்பாடு மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் ஏனைய சட்டங்களும் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.
இதேபோன்று அமைதியான முறையில் நடத்தப்பட்ட போராட்டங்கள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் கடுமையான முறையில் அடக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் சமூகங்கள் படைத் தரப்பினரின் தொடர் கண்காணிப்புக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றன.
அதுமாத்திரமன்றி அப்பகுதிகளில் கரிசனைக்குரிய மட்டத்தில் காணி அபகரிப்புகள் அதிகரித்து வருவதுடன், சிலவேளைகளில் இவை மத வழிபாட்டுத் தலங்களை இலக்கு வைத்தவையாக உள்ளன. இவ்வாறான செயல்பாடுகள் சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளன.
உண்மை மற்றும் நல்லிணக்க விவகாரத்தில் முன்னேற்றத்தை அடைவதற்கான கடப்பாட்டை இலங்கை கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் எவையும் 2023 ஜூன் மாதமளவில் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
இலங்கை தொடர்பில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் நாம் சமர்ப்பித்த அறிக்கையில் யுத்தத்துக்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்குக்கும் வழிவகுத்த அடிப்படைக் காரணிகளைக் கண்டறிந்து
களைவதற்குரிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வெளிப்படைத்தன்மை – பொறுப்புக்
கூறல் – அனைவரையும் உள்ளடக்கிய தன்மை என்பன பேணப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தோம்” என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சம்பூர் தமிழ்க்கலாமன்றத்தின் ஒமுங்கமைப்பில் ” கடாட்சம்” நூல் வெளியீடும் இலக்கியப் பணிக்கான பாராட்டு நிகழ்வும் 29 -03-2024 வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு திருகோணமலை பொது நூலக மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.
இவ் நிகழ்வு சம்பூர் தமிழ்க்கலாமன்றத்தின் தலைவர் மருத்துவர் அ . சதீஸ்குமார் தலைமையில் நடைபெறும்.
மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரை, நூல் நயவுரை, நூல் வெளியீடு, கருத்துரைகள், பாராட்டு நிகழ்வு என்பனவும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நேற்று முன்தினம் 22ஆம் திகதி வௌியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தியவரை தமக்கு தெரியுமென மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவாரென பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் குறிப்பிட்டார்.
இதேவேளை நாளை திங்கட்கிழமை தான் குற்றப்புலனாய்வுப் பிரிவு முன் தோன்றி சாட்சியமளிக்க உள்ளதாக மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.