உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், அங்கு இலங்கையை சேர்ந்தவர்கள் ஆயும் ஏந்தி மோதலில் ஈடுபட்டு வருவதாக அல் – ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் மட்டுமல்லாது இருதரப்பிலும் இலங்கையர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அல் – ஜசீரா அறிக்கை யொன்றையும் தயார்படுத்தியுள்ளது. இதனடிப்படையில், உக்ரைனில் ரஷ்யாவுக்காக போரிட்டதில் குறைந்தது இரண்டு இலங்கையர்களும், உக்ரைன் தரப்பில் மூன்று பேரும் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர்.
டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய பதுங்கு குழியின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த சக இலங்கையர் ஒருவரால் அவர் அந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில், கடந்த ஆண்டு ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்காக போராடிய மூன்று இலங்கையர்களுடன் இந்த இரண்டு இறப்புகளும் சேர்ந்துள்ளன என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் இப்போது உக்ரேனில் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். குறித்த இலங்கையர்கள் ரஷ்யாவில் மாதாந்தம் 3,000 டொலர் சம்பளம் மற்றும் ரஷ்ய குடியுரிமையை எதிர்பார்த்து ஆயுதமேந்தி போராடுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. பெரும்பாலும் ஓய்வுபெற்ற இலங்கைப் படையினர் – ரஷ்ய இராணுவத்தில் சேர தீவிரமாக முயற்சித்து வருவதாகவும், இலங்கையில் உள்நாட்டில் கடுமையான வறுமையின் மத்தியில் மொஸ்கோவின் பணத்திற்கு ஈடாக உக்ரேனியப் படைகளின் கைகளில் மரணத்தைப் பணயம் வைக்கத் தயாராக இருப்பதாகவும் அல் ஜசீரா மேலும் தெரிவித்துள்ளது.
டிசெம்பரில், சிறப்புப் போராளிகள் பிரிவுக்கு தலைமை தாங்கிய கப்டன் ரனிஷ் ஹேவகே மற்றும் எம்.எம். பிரியந்த மற்றும் ரொட்னி ஜெயசிங்க ஆகிய இரு இலங்கையர்களும் ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட்டு கொல்லப்பட்டனர்.
டிசெம்பர் 15 அன்று பல உக்ரேனிய வீரர்களுடன் கீவ் நகருக்கு கிழக்கே 400 கி.மீ. (240 மைல்) தொலைவில் உள்ள மிலினோவ் என்ற இடத்தில் ஹேவகே புதைக்கப்பட்டார், ஆனால் மற்ற இரண்டு இலங்கையர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை.
உக்ரேனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையணியில் பணியாற்றிய சுமார் 20 இலங்கையர்கள் ஹேவகேவின் மரணத்திற்குப் பிறகு அப்பகுதியை விட்டு வெளியேறினர், 25 வயதான லஹிரு ஹத்துருசிங்க, காயமடைந்த ரனிஷ் ஹேவகேவை பல கிலோமீற்றர்கள் தாண்டி பாதுகாப்புக்காக அழைத்துச் சென்றனர். ஆனாலும் அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.
உக்ரேனுக்காகப் போரிடுவதற்காக இலங்கை இராணுவத்திலிருந்து வெளியேறிய ஹத்துருசிங்க, ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் பக்கம் இன்னும் இணைந்திருக்கும் ஒரே இலங்கையர் என நம்பப்படுகிறது.
பாராளுமன்றத்தின் ஊடாக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது. கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் வெளியேறலாம் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர், கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்-
‘பொருளாதார நெருக்கடிக்கு 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.சர்வதேச பிணைமுறிகளில் இருந்து 12 பில்லியன் டொலர் கடன்களை பெற்றது. இந்த நிதிக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியவில்லை.மறுபுறம் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு விற்கப்படடது. அந்த நிதியும் மாயமானது.
நல்லாட்சி அரசாங்கம் தேசிய உற்பத்திகளை மேம்படுத்த எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இறக்குமதி, பொருளாதாரத்தில் மாத்திரம் கவனம் செலுத்தியது.தேசிய பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும் வகையில்
புதிய அபிவிருத்தி திட்டங்கள் ஏதும் நிர்மாணிக்கப்படவில்லை. இவ்வாறான பின்னணியில் தான் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் ஊடாக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயல்பாடுகளை முன்னெடுக்கிறார்.இதற்கு அவருக்கு மக்களாணை கிடையாது. அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதாக இருந்தால் ஜனாதிபதி புதிதாக மக்களாணை பெற்றுக்கொள்ளவேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் குறித்து கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.கட்சி ரீதியில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கட்சியில் இருந்து தாராளமாக வெளியேறலாம்” என்றும் நாமல் ராஜபக்ஷ எச்சரித்தாா்.
சுவாமி விபுலானந்தரின் 132 ஆவது ஜனன தின நிகழ்வானது திருகோணமலை தி/ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வை சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டுச் சபை ஏற்பாடு செய்திருந்ததுடன் அதன் தலைவர் கோ.செல்வநாயகம் தலைமையில் இடம் பெற்றது.
இதில் சமூக கல்விச் சேவையாளர்களை பாராட்டி கௌரவிப்புக்களும் இடம் பெற்றதுடன் பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த மாணவன் ஹ.தன்வந்த் உம் கௌரவிக்கப்பட்டார்.
இதில் திரீகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவேல்,பத்திரகாளி அம்பாள் ஆலய பிரதம குரு சோ.இரவிச்சந்திர குருக்கள், தவத்திரு அடிகளார் தென்கயிலை ஆதீனம் உட்பட திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி, திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத்தின் தலைவர் ச.குகதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பஸில் ராஜபக்ஷவின் அதிரடியான வருகை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றது. ஜனாதிபதித் தோ்தலை நோக்கி உபாயங்களை வகுத்து மெதுமெதுவாக அவா்
காய் நகா்த்திக்கொண்டிருந்த நிலையில்தான் பஸில் அமெரிக்காவிலிருந்து வந்து இறங்கினாா். பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்ற பசிலின் விடாப்பிடியான அழுத்தம் ரணிலின் திட்டத்தை மாறறிவிடுமா என்பதுதான் கொழும்பு அரசியலில் இன்று எழுப்பப்படும் பிரதான கேள்வி!
அரசியலமைப்பின்படி எதிா்வரும் செப்ரெம்பா் 16 க்கும் ஒக்ரோபா் 16 க்கும் இடையில் ஜனாதிபதித் தோ்தல் நடத்தப்பட வேண்டும். ஒக்ரோபா் 8 ஆம் திகதி இதற்காகப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றது. பொதுத் தோ்தல் 2025 ஓகஸ்ட் மாதத்தில்தான் நடத்தப்பட வேண்டும். அதற்கு ஒரு வருடத்துக்கு மேல் உள்ளது.
பொது ஜன பெரமுனவின் ஸ்தாபகா் பசில் ராஜபக்ஷ தனியாா் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நோ்காணலில் தெரிவித்திருந்த கருத்துக்கள்தான் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னராக பொதுத் தோ்தல் வருமா என்ற கேள்விக்கு வலுச் சோ்த்துள்ளது.
அமெரிக்காவுக்கு “விடுமுறைக்காக” சென்றிருந்த பசில், மாா்ச் 5 ஆம் திகதி நாடு திரும்பிய பின்னா் பரபரப்பாக காய்களை நகா்த்திவருகின்றாா். மொட்டு அணியின் தந்திரோபாயங்களை வகுப்பவராக அவா் கருதப்படுகின்றாா். அதனால், கடந்த இரண்டு – மூன்று வாரங்களாக அரசியல் நகா்வுகள் அனைத்தும் பசிலை மையப்படுத்தியதாகவே இருக்கின்றது.
நாடு திரும்பிய உடனடியாகவே தன்னுடைய சகோதரரா் மகிந்த ராஜபக்ஷவையும் அழைத்துக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்க அவா் சென்றிருந்தாா். இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்ற விபரங்கள் இரு தரப்பாலும் உத்தியோகபுா்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், வரப்போகும் தோ்தல்கள் தொடா்பாகவே பேசப்பட்டிருக்க வேண்டும் என்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான். அதேவேளையில், “பேச்சுக்களில் இணக்கம் காணப்படவில்லை” என்ற தகவலும் கசிந்தது.
அதன் அடிப்படையில்தான் மற்றொரு சந்திப்பு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. பசில் ராஜபக்ஷவை ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றாா். தனியாா் தொலைக்காட்சிக்கு வழங்கிய நோ்காணலிலும் அதனைத்தான் அவா் சொன்னாா்.
அதற்கு அவா் சொன்ன காரணம் என்னவாக இருந்தாலும், இரண்டு விடயங்களை இதன் மூலமாக புரிந்துகொள்ள முடிந்தது.
முதலாவது, ஜனாதிபதித் தோ்தல் ஒன்றைச் சந்திக்க மொட்டு இன்றைய நிலையில் தயாராகவில்லை. “அரகலய” போராட்டமும், பொருளாதாரக் குற்றவாளிகள் என ராஜபக்ஷக்களை அடையாளம் காட்டி உயா் நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பும் மக்கள் முன் அவா்கள் செல்ல முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. ராஜபக்ஷக்களில் யாராவது ஜனாதிபதித் தோ்தலில் இறங்கினால் அவமானகரமான தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும். அடுத்ததாக வரப்போகும் தோ்தலிலும் அது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
இரண்டாவது, பொதுத் தோ்தலை முதலில் எதிா்கொண்டால், ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் கணிசமான ஆசனங்களை கைப்பற்றக் கூடியதாக இருக்கும் என பசில் கணக்குப் போடுகின்றாா். பொதுத் தோ்தல் முதலில் வந்தால், சஜித் அணி, ஜே.வி.பி. அணி, என்பற்றுடன் கடுமையான போட்டி ஒன்றை மொட்டு எதிா்கொள்ளும். மொட்டுக்கு எதிரான அலை இன்னும் முற்றாக ஓயவில்லை என்ற போதிலும், அதன் கட்டமைப்புக்களும், ஆதரவுத் தளமும் உறுதியாக இருப்பதால், தம்மால் ஓரளவு ஆசனங்களைக் கைப்பற்றக் கூடியதாக இருக்கும் என்பது பசிலின் கணிப்பு!
2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தோ்தலில் கோட்டாபாய பாரிய வெற்றியைப் பெற்றிருந்தாா். அதனைத் தொடா்ந்து அந்த சூடு தணிவதற்கு முன்னா் 2020 ஓகஸ்ட்டில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் மொட்டு அணி 145 ஆசனங்களைப் பெற்றது. அதாவது, மூன்றில் இரண்டு பெரும்பான்மை. ஜனாதிபதியாக வருபவரின் கட்சி அதனையடுத்து உடனடியாகவே வரக்கூடிய பொதுத் தோ்தலிலும் வெற்றிபெறுவதை இலங்கையின் தோ்தல்களை ஆராயும்போது காணக்கூடியதாக இருக்கிறது.
ஜனாதிபதித் தோ்தலில் வெற்றிபெற்றவா் பலமான ஆட்சியை அமைக்க வேண்டும் என மக்கள் விரும்புவதும், ஜனாதிபதித் தோ்தல் வெற்றி அலை ஓய்வதற்கு முன்னரே பொதுத் தோ்தல் நடத்தப்படுவதும் இதற்குக் காரணம்.
முதலில் ஜனாதிபதித் தோ்தல் நடத்தப்பட்டால், அதில் யாரை நிறுத்துவது என்ற பிரச்சினை பொதுஜன பெரமுனவுக்கு. ரணிலை ஆதரித்தால், அத்தோ்தலில் ஐ.தே.க., ஜக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. என்பவற்றின் பரப்புரைகளே ஓங்கியிருக்கும். அதில் யாா் வெற்றிபெற்றாலும் தொடா்ந்து வரக்கூடிய பொதுத் தோ்தலில் மொட்டு அணி காணாமல் போய்விடு்ம் அபாயம் இருப்பதாக பசில் அஞ்சுவதாகத் தெரிகிறது.
பொதுத் தோ்தல் முதலில் நடைபெறும் போது முத்தரப்புப் போட்டி இருக்கும் என்பதால், எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்கக்கூடிய அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது. அதனால், தமது பேரம்பேசும் ஆற்றலைப் பயன்படுத்தலாம் என பசில் கணக்குப் போடுகிறாா். சில சமயங்களில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவா் நினைக்கிறாா்.
அதேவேளையில், பசில் வகுக்கும் இந்த உபாயத்தின் பின்னணியில் மற்றொரு அரசியல் நோக்கமும் இருக்கிறது. பொது ஜன பெரமுனவிலிருந்து பலா் பிரிந்து சென்று ரணிலுடன் இணைவற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ரணிலுக்காக அமைக்கப்படும் கூட்டணியில் அவா்கள் இணையப் போகிறா்கள் என்பது வெளிப்படையானது. பொதுத் தோ்தலை முதலில் நடத்தினால், இந்தப் பிளவைத் தடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் பஸில் கருதுவதாக அரசியல் வட்டாரங்கள் சொல்கின்றன.
அரசியலமைப்பின்படி நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இப்போது ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அதேவேளையில், நாடாளுமன்றத்தில் அதற்கான பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றினாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படும். நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுனக்கு பெரும்பான்மை இருப்பதால் அதனைச் செய்ய முடியும். ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க மறுத்தாலும், அதனைத் தம்மால் செய்ய முடியும் என்ற நிலையில்தான், ரணில் மீதான அழுத்தத்தை பசில் தீவிரப்படுத்தியிருக்கிறாா்.
ஆனால், நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதில் ஜனாதிபதிக்கு மற்றொரு தடை இருக்கின்றது. நாடாளுமன்றத்துக்கு முதல் தடவையாகத் தெரிவானவா்கள் தமக்கான ஓய்வுதியத்தையும், வரி விலக்குடனான வாகனத்தையும் பெறுவதற்கு நான்கு வருடங்களாவது பதவி வகித்திருக்க வேண்டும். எதிா்வரும் ஓகஸ்ட் மாதம் வரை அதற்காக அவா்கள் காத்திருக்க வேண்டும். ஜனாதிபதிப் பதவிக்காக 2022 ஜூலையில் நாடாளுமன்ற உறுப்பினா்களின் வாக்குகளைக் கோரிய போது பொதுஜன பெரமுன உறுப்பினா்களுக்கு முக்கியமான வாக்குறுதி ஒன்றை ரணில் கொடுத்திருந்தாா். அதாவது, நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படமாட்டது என்பதுதான் அந்த வாக்குறுதி. அதனை அவா் மீறமாட்டாா் என அவா்கள் நம்புகிறாா்கள்.
ஆனால், இவ்விடயத்தில் தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை ஜனாதிபதி பகிரங்கமாகத் தெரிவிக்கவில்லை. ஆனால், முன்கூட்டியே பொதுத் தோ்தல் நடத்தப்படாது என்று ஐ.தே.க.வின் பொதுச் செயலாளா் பாலித ரங்கே பண்டார தெரிவித்திருப்பது ரணிலின் கருத்தாக இருக்கலாம். “அரசியலமைப்பின்படி ஜனாதிபதித் தோ்தல் செப்ரெம்பா் 16 க்கும் ஒக்ரோபா் 16 க்கும் இடையில் நடத்தப்படும் ” என அவா் கூறியிருக்கின்றாா். “பொதுத் தோ்தல் அதற்குரிய நேர அட்டவணைப்படி 2025 ஓகஸ்ட்டில் நடத்தப்படும்” என்றும் அவா் தெரிவித்தாா்.
ரணிலைப் பொறுத்தவரை அவரது ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டமைப்புக்கள் எதுவுமே பலமாக இல்லை. பொதுத் தோ்தல் ஒன்றை எதிா்கொள்வது அவரைப் பொறுத்தவரையில் கட்சியையே காணாமல் போகச் செய்துவிடும். அதன்பின்னா் வரக்கூடிய ஜனாதிபதித் தோ்தலில் அவரும் காணாமல் போய்விடுவாா். இது ரணிலுக்குத் தெளிவாகத் தெரியும்!
“பொருளாதார நெருக்கடியைத் தீா்த்தவா். எதிா்காலத்துக்கும் தேவையானவா்” தீா்கக்கூடியவா்” என்ற பெயருடன் ஜனாதிபதித் தோ்தலை எதிா்கொள்வதுதான் அவரது உபாயம். அதன் பின்னா் அந்த வெற்றியை வைத்துக்கொண்டு பொதுத் தோ்தலில் கூட்டணிகளை அமைத்து எதிா்கொள்ள முடியும் என அவா் கணக்குப் போடுகிறாா். அதன்மூலம் தமக்குச் சாதகமான ஒரு அரசாங்கத்தை அமைத்துக்கொள்ளலாம் என அவா் நம்புகிறாா்.
இந்த இடத்தில்தான் பசிலின் அழுத்தத்தை எப்படி எதிா்கொள்வது என்பது ரணிலுக்குப் பெரும் தலையிடியாக மாறியிருக்கின்றது.
இவ்விடயத்தில் இறுதி முடிவை எடுக்க வேண்டியவா் ஜனாதிபதிதான். அவா் மீதான பசிலின் அழுத்தம் கடுமையாக இருக்கும் என்பதும் உண்மை. ஆனால், நாடாளுமன்றத்தில் ஒரு தீா்மானத்தைக் கொண்டுவந்து அதனைக் கலைப்பதற்கு பசில் திட்டமிட்டாலும், முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்கு வந்த அவரது கட்சியினா் அதனை ஆதரிப்பாா்களா என்ற கேள்வியும் இருக்கின்றது.
ரணில் – பஸில் இரண்டாவது சந்திப்பும் பசிலுக்குத் திருப்தியளித்ததாகத் தெரியவில்லை. அதிகாரம் ரணிலிடம் இருப்பதால் அவரது கைகள்தான் மேலோங்கியிருக்கின்றது. ராஜபக்ஷக்களின் ஆதரவு அவருக்குத் தேவையாக இருந்தாலும், தோ்தல் விடயத்தில் அவா்களைத் தடுமாற வைக்கும் வகையில் ரணில் காய் நகா்ததுகிறாா்.
தமது (குடும்பத்தின்) இருப்பைத் தக்கவைப்பதற்கு இதனை பேரம்பேசுவதற்கான ஒரு விடயமாக பசிஸ் பயன்படுத்தலாம். விறுவிறுப்பான காட்சிகளை அடுத்த வாரத்திலும் எதிா்பாா்க்கலாம்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிர்வாக அடாவடித்தனத்துக்கு எதிராக நீதி கோரி நடத்தும் மக்கள் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் கொட்டும் மழையிலும் ஆக்ரோஷமாகத் தொடர்கின்றது.
“அரசியல்வாதிகளே, அரச அதிகாரிகளே, அமைச்சின் செயலாளரே உங்கள் பதில் என்ன?” என்று அங்கு குழுமியிருந்த மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள். நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களுமாக பிரதேச செயலத்தின்
முன்னால் வீதி அருகே அமர்ந்து அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.
நேற்று மற்றும் நேற்றுமுன் தினத்தை விட இன்று அதிகளவான பொதுமக்கள் அங்கு கூடத் தொடங்கினர். பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மேலும் கூறுகையில், “கல்முனை வடக்கு பிரதேச தமிழ் மக்கள் அரச சேவைகளைப்
பெறும் அடிப்படை உரிமைகள் தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டு மாற்றின அரசியல்வாதிகளால் பறிக்கப்பட்டு வருகின்றமை நாடறிந்த விடயம்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் 30 வருடங்களாக தடுக்கப்பட்டு வருவதுடன் அண்மைக்காலமாக இருக்கும் அதிகாரங்களும் பறிக்கப்பட்டும் வருகின்றன. பறிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கும் இயங்கிக் கொண்டிருக்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கான அரச அதிகாரங்களைப் பெற்று மக்களுக்கான அரச சேவையைப் பெறுவதற்கு முடியாமல் கடந்த 30 வருடங்களாகத் தவித்துக் கொண்டிருக்கும் இப் பிரதேச மக்கள் நேற்றுமுன்தினம் அமைதிப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இன்று மூன்றாவது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது. பெருமளவான பொதுமக்கள் பங்குபற்றி வருகின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் நிறைவேற்று சபை கூட்டம் இன்று பிற்பகல் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க, அங்கு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
முன்னதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஒக்ரோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சரவையில் கூறியுள்ளதுடன், தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சர்களுக்கும் கட்டளையிட்டுள்ளார். பிரதான எதிர்க்கட்சிகளாக கருதப்படும் ஐக்கிய மக்கள் சக்தியும், தேசிய மக்கள் சக்தியும் தீவு முழுவதும் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளன.
இதற்கு ஒருகட்டம் மேல் சென்று புலம்பெயர் இலங்கையர்கள் வாழும் நாடுகளில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது தேசிய மக்கள் சக்தி. அவுஸ்ரேலியா, இத்தாலி, இந்தியா, சீனா உட்பட பல நாடுகளில் தேசிய மக்கள் சக்தி மக்களின் ஆதரவை திரட்டி வருகிறது.
இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, கனடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதுடன், அங்கு தமிழ், சிங்கள மக்களுடன் பல்வேறு ஆதரவு திரட்டும் சந்திப்புகளில் ஈடுபட்டு வருகிறார்.
“புலம்பெயர் நாடுகளில் தேசிய மக்கள் சக்தி நடத்திவரும் இந்த சந்திப்புகளால் அரசாங்கம் பெரும் அச்சமடைந்துள்ளது. இவர்கள் நடத்தும் சந்திப்புகளால் மக்கள் ஆதரவு அவர்களுக்கு பெருகி வருவதாக புலனாய்வுப் பிரிவு அரசாங்கத்துக்கு அறிக்கையொன்றை கையளித்துள்ளது” என அனுரகுமார திஸாநாயக்க கனடாவில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.
இதனால், இந்த வரலாற்று சந்தர்ப்பத்தை இலங்கையர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தமது உறவுகளை தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்குமாறு கோர வேண்டும் எனவும் அனுரகுமார, கனடாவாழ் புலம்பெயர் இலங்கையர்களிடம் கோரியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவும் அதன் உளவுத்துறையும் இருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்களை ஆதாரமாகக் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உயிா்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் தொடர் புடையவர்களை தமக்கு தெரியும் என மைத்ரிபால சிறிசேன கண்டியில் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த அழைப்புக்கமைய அவர் நேற்றுமுன்தினம் சி.ஐ.டி சென்றார். அதன்போது சுமார் ஆறு மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
மைத்ரியின் இந்த வாக்குமூலப் பிரதியை அன்றையதினமே சட்ட மா அதிபர் பெற்றுக்கொண்டு பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளதாக அறியமுடிந்தது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் இந்திய உளவுத்துறை இருப்பதாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரி, அதுதொடர்பான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறியுள்ளதாக அறியமுடிந்தது. எவ்வாறாயினும், அந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் நீதிபதியிடம் மாத்திரமே வழங்கமுடியுமென்று மைத்ரி தெரிவித்துள்ளதாகவும் நம்பகரமாக தெரியவந்தது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடந்த காலகட்டத்தில் இலங்கை தேர்தலை எதிர்நோக்கியிருந்ததால் அரசியலை மையப்படுத்தி உளவு அமைப்புகளால் இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டதாகவும் தனக்கு முன்னர் அறியக்கிடைத்ததாக மைத்ரி மேலும் கூறியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.
மைத்ரிபால சிறிசேனவின் இந்த தகவல் தொடர்பில் இலங்கையின் முன்னாள் புலனாய்வு மற்றும் படைத்துறை அதிகாரிகளிடம் விசாரணையை நடத்துவதா என்பது தொடர்பில் பாதுகாப்புத்துறை மேல்மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாக மேலும் தெரியவந்தது.
திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகமும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிராந்திய பற்சுகாதாரப் பிரிவும் இனைந்து திருகோணமலை நகராட்சி மன்றத்தின் வேலைத்தளப்பகுதி மற்றும் சுகாதாரப் பிரிவு உழியர்களுக்கு இன்று புதன் கிழமை காலை 7.00 மணிக்கு நகராட்சி மன்றத்தின் வேலைத்தளப் பகுதியில் வாய் புற்று நோயை தடுப்போம் என்ற கருப்பொருளில் கருத்தரக்கும் நடமாடும் சிகிச்சையும் இடம் பெற்றது.
இவ் நிகழ்வு பிரதம நூலகர் ந . யோகேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்வில் சமூக பல் வைத்தியநிபுணர் வைத்தியர் சசிதரன், திருகோணமலை பிராந்திய பல்வைத்திய நிபுணர் திருமதி. உதயலக்ஷ்மி சூரியகுமார், நடமாடும் பல் சிகிச்சை நிபுணர் வைத்தியர் கியாஸ் ஆகியோர் கருத்துரைகள் வழக்குவதையும் மேலும் இந் நிகழ்வில் திருகோணமலை பொது நூலகத்தின் நூலக உதவியாளர்களான அ . அச்சுதன், பா.விபூஷிதன், உ.ரஜனிக்காந் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
2019 ஏப்ரல் 21 அன்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்பாவி பொது மக்கள் 269 பேரின் உயிர்களை காவு கொள்ள காரணமான ஈஸ்டர் தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம் எம் மஹ்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று புதன் கிழமை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே அவரால் மேற்படி கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. தொடர்ந்தும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது –
“கடந்த காலங்களில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினை பெரும்பான்மை மக்களினதும் நாட்டினதும் எதிரிகளாக சித்தரித்துக் காட்டுவதன் மூலம் அரசியல் இலாபம் தேடுகின்ற திட்டமிட்டட செயற்பாடுகள் தொடராக அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருந்தன.
அதன் அடிப்படையில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒரு கொடூர சம்பவமே இந்த ஈஸ்டர் தாக்குதலாகும். இவ்வாறான ஒரு தாக்குதலை நடாத்துவதற்கு முஸ்லிம் சமூகத்திற்கு எந்த ஒரு தேவையும் இருக்கவில்லை.
இருந்தாலும் நிரபராதிகளான அப்பாவி முஸ்லீம் சமூகம் அநியாயமாக குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டதோடு உயிர்கள், பல கோடி சொத்துக்கள் என பாரிய அழிவுகளுக்கும் முகம் கொடுத்தனர்.
எனவே பிரதான சூத்திரதாரியை தனக்கு தெரியும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கூறுவதன் அடிப்படையில் துரிதமாக விசாரணையை நடாத்தி உண்மையான சூத்திர தாரியை நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்துவதோடு உரிய தண்டனையை வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.