உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான மேலதிக சமர்ப்பிப்புகள் ஜூலை மாதம் 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன்பாக இந்த மனு இன்று (24) இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இன்றைய விசாரணையின் போது கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, தனது தரப்பு வாதங்களையும் மேலதிக சான்றுகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்த மனுவில் காவல்துறைமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் ஷானி அபேசேகர, காவல்துறையின் பரிசோதகர் மாதவ குணவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளதுடன், பிரதிவாதிகள் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, இந்த விவகாரம் குறித்து இதுவரையில் எந்தவொரு விசாரணை அமைப்பும் தன்னிடம் விசாரிக்கவோ அல்லது வாக்குமூலம் பெறவோ இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாக அவர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
அதேவேளை, எவ்வித நியாயமான அடிப்படையுமின்றி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் ஊடாகத் தமது தரப்பிற்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், எவ்வித சான்றுகளும் இன்றி விசாரணைகளை முன்னெடுத்துத் தனது சுதந்திரத்தை மட்டுப்படுத்த பிரதிவாதிகள் முயல்வதாகவும் கோட்டாபய ராஜபக்ச தரப்பு சட்டத்தரணி இதன்போது குற்றம் சாட்டினார்.
இரு தரப்பு வாதங்களையும் அவதானித்த மேன்முறையீட்டு நீதியரசர்கள் குழாம் வழக்கை எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.



