முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள் இராணுவ படைத்தலைமையகத்தின் முன்பாக இன்று (24) புதன்கிழமை காலை 11.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
மாற்றுக்காணிகளை தாம் ஏற்றுக் கொண்டதாக ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது எனவும் தாம் அப்படி எந்த மாற்றுக் காணிகளையும் ஏற்கப் போவதில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
வட மாகாண ஆளுநர் நேரில் வருகை தந்து மக்களின் உண்மை நிலையை வெளிக்கொண்டு வருவதோடு, வாழ்விடப் பிரச்சினைக்கு உடனடியான சாதகமான தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கேப்பாபுலவு பூர்வீக மக்கள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
171 ஏக்கர் காணிகளை தொடர்ந்தும் இராணுவத்தின் 59 ஆவது காலால் படைப்பிரிவினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனவே எமது காணிகளை விடுவிக்க கோரி இன்றிலிருந்து தொடர் போராட்டமாக இந்தப் போராட்டத்தினை தாம் முன்னெடுக்க போவதாக மக்கள் தெரிவித்ததுடன் கேப்பாப்பிலவு இராணுவ முகாமிற்கு முன்பாக அடையாள உண்ணாவிரதத்தில தொடர்ந்து இன்றுமுதல் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கடல், கரை மற்றும் விவசாய நிலங்களை வாழ்வாதாரமாக நம்பியிருந்த கேப்பாபுலவு மக்கள், பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழில் துறைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
“போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் பாதுகாப்பு செயலகம் என்ற பெயரில் மக்களின் காணிகள் தொடர்ந்தும் அபகரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 17 ஆண்டுகளாக தமது சொந்த நிலத்தில் குடியேற முடியாமல் தவித்து வருகிறோம். எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் எமது வளங்களை பயன்படுத்துகிறது. ஆனால் நாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறோம். இது எந்த வகையிலும் நியாயமல்ல” என மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
குறித்த போராட்டத்தின் போது வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு, எம் மண்ணில் நாம் உழைக்க வேண்டும் எம் உரிமையை நீ தர வேண்டும் இராணுவமே வெளியேறு, முகாம்களை மூடு நிலங்களை விடு, நில ஆக்கிரமிப்பை நிறுத்து, ஜனாநாயக அல்லது இராணுவ ஆட்சியா?, எமது வாழ்விடம் எமக்கு வேண்டும் போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
நீண்டகாலமாக தீர்வு காணப்படாத காணி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே கேப்பாபுலவு மக்களின் பிரதான கோரிக்கையாகும்.



