இலங்கையில் சிறையில் உள்ள இந்திய மீனவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை என்ன – உயர்நீதிமன்றம் கேள்வி

சிறையில் உள்ள இந்திய மீனவர்

இலங்கையில் சிறையில் உள்ள இந்திய மீனவர்களை அழைத்துவர எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விரிவான பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் வழக்குரைஞர் தீரன் திருமுருகன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், “இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 68 பேரையும் மீட்க, இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் தேவையான சட்ட உதவிகளுக்கும் உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஸ்ரீமதி ஆகியோர், “68 மீனவர்களை இந்தியா அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கேள்வி எழுப்பினர்.

தமிழ்நாடு அரசு தரப்பில், “68 மீனவர்களையும் அழைத்து வர இந்திய உள்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது” என்று கூறப்பட்டது.

மத்திய அரசு தரப்பில், “மீனவர்களை இந்தியா கொண்டு வர இலங்கை வெளியுறவுத் துறையுடன் தொடர்பு கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்,” என்றனர்.

இதையடுத்து நீதிபதிகள், “ஜனவரி மாத தொடக்கத்திலேயே 68 மீனவர்களும் அவர்கள் குடும்பத்தை சந்திக்க துரிதமாக நடவடிக்கை எடுங்கள்” என அறிவுறுத்தினர். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசு தரப்பில், விரிவான பதில் மனுவை நாளை மறுநாள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை டிசம்பர் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

நன்றி-பிபிசி தமிழ் Tamil News