Home Blog Page 3119

சிறீலங்காவில் இடம்பெறும் வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்: அலன் கீனன்

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் முஸ்லீம் அரசியல்வாதிகளை பலவந்தமாக பதவிகளில் இருந்து வெளியேற்றிய நடவடிக்கை மிகவும் வருத்தமான செயல் என அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் திட்டமிடல் பணிப்பாளர் அலன் கீனன் அல்ஜசீரா ஊடகத்திற்கு நேற்று (03) தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அரசியலில் செல்வாக்குள்ள பௌத்த துறவிகள் தாம் பெரும்பான்மை மக்களுக்காக பேசுவதாக கூறிக்கொண்டு முன்வைத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தான் முஸ்லீம் அரசியல் தலைவர்கள் எல்லோரும் பதவி விலகியுள்ளனர்.

இந்த வழிமுறை சிறீலங்காவுக்கு நல்லது அல்ல, ஏனெனில் சிறுபான்மை இனங்கள் மீது மீண்டும் மீண்டும் அங்கு வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறீலங்காவில் இடம்பெறும் அரசியல் வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மற்றும் மேல் மாகாணத்திற்கு புதிய ஆளுநர்கள்

பதவி விலகிய ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் இடத்திற்கு புதிய நியமனங்கள் செய்யப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

மேல் மாகாண ஆளுநராக முன்னாள் கொழும்பு மாநகரசபை மேயர் A.J.M. முஸம்மில், கிழக்கு மாகாண ஆளுநராக சு.க.யின் முன்னாள் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச ஆகியோர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

7 பேர் விடுதலை குறித்து 2 வாரத்தில் பதில் உயர் நீதிமன்றில் தமிழக அரசு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் கேட்டு 2 வாரத்தில் பதில் தருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், றொபேட், ஜெயக்குமார், ரவிச்சந்திரன்  ஆகிய 7பேரும் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு கடந்த 2014ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.

இதையடுத்து, இத்தீர்மானத்தை ரத்துச் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று தெரிவித்திருந்தது. இது தொடர்பான அமைச்சரவைத் தீர்மானம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வேளையில், தங்களை முன்கூட்டி விடுதலை செய்யக்கோரி றொபேட், ஜெயக்குமார் ஆகியோர் 2012 தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள் M.M.நற்தரேஷ், M.நிர்மல்குமார் அவர்கள் முன் விசாரணைக்கு வந்த போது, அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இவர்களின் (7பேரின்) வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அதன் தற்போதைய நிலை பற்றி பதில் தெரிவிக்க தமக்கு 2வார கால அவகாசம் வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை 2 வாரம் ஒத்தி வைத்தார். இதற்கிடையில் 7பேரின் விடுதலை தொடர்பாக உள்துறை செயலாளரிடம் கொடுத்த மனுவை பரிசீலித்து முடிவெடுக்கும்படி நளினி தொடர்ந்த வழக்கில்  பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு கால அவகாசம் கோரியதையடுத்து, அந்த வழக்கை நீதிபதிகள் சுப்பையா, சரவணன் கொண்ட குழுவினர் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

முஸ்லீம் பள்ளிவாசல்கள் வர்த்தக நிலையங்கள்மீது தாக்குதல் – காவல் துறையினர் கண்டுகொள்ளவில்லை

அத்துரலிய ரத்ன தேரரின் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து கெக்கிராவ நகரில் இடம்­பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்­வ­லத்தின் போது முஸ்லிம் பள்ளி­வாசல் மற்றும் வர்த்தக நிலை­யங்கள் மீது கல்­வீச்சு தாக்­குதல் நடத்தப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இச்­சம்­பவம் நேற்று பகல் இடம்­பெற்­றுள்­ளது. இதன்போது பள்­ளி­வா­சலின் முன்­புற கண்­ணா­டிகள் பல­வற்­றுக்கு சேதம் ஏற்­பட்­டுள்­ளது. முஸ்லிம் வர்­தக நிலை­யங்கள் மீதும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டோ­ரினால் கல்­வீச்சு தாக்­குதல் நடாத்­தப்­பட்­டுள்­ள­துடன் முஸ்லிம் மக்­களை அசிங்­கி­ய­மானவார்த்­தை­களை கொண்டும் கோஷங்­க­ளையும் இவர்கள் எழுப்­பி­யுள்­ளனர். இதனால் நகரில் பதற்ற நிலைமை ஏற்­பட்­டது.

பொலிசார் நகரில் கட­மையில் இருந்­துள்ள போதிலும் எந்த வித­மான நட­வ­டிக்­கை­களும் எடுக்­க­வில்லை. தாக்­கு­தலைத் தொடர்ந்து நக­ரி­லி­லுள்ள வர்­தக நிலை­யங்கள் மூடப்­பட்­டுள்­ள­துடன் பொருட்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­காக நக­ருக்கு வந்­தி­ருந்த பொது­மக்­களும் பெரும் அச்­ச­நி­லையில் செய்­வ­த­றி­யாது அச்­சத்­துடன் தமது வீடு­க­ளுக்கு திரும்­பி­யுள்­ளனர்.

அதை தொடர்ந்து அதி­க­ள­வி­லான இரா­ணு­வத்­தினர் நகரில் குவிக்­கப்­பட்­டுள்­ள­துடன் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.இருந்­தாலும் முஸ்லிம் மக்கள் பெரும் அச்­சத்­துடன் வாழ வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

அநுராதபுரம்நகரிலும் அனைத்து வர்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தது. பொலிஸார் பாதுகாப்பு கடமையில் இருந்த வேளையிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

ஜேர்மன் நகரில் ஒரு தமிழ் பாடசாலை

ஏப்ரல் 01ஆம் திகதியிலிருந்து ஜேர்மன் வாழ் தமிழ் மக்கள், இந்தியா தஞ்சைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்சென் தமிழ் கல்விக் கழகத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

இது சாதாரண கல்விக் கழகமாக இல்லாது, பல்கலைக்கழக தரத்தில் கலை மற்றும் கலாசாரம், பண்பாடு, நாட்டுப்புற கலைகள், இலக்கியம், நூல் நிலையம் என்று ஒரு பல்கலைக்கழக துறைகள் அனைத்தையும் உள்ளடக்கியதான கல்விக் கழகமாக அமைந்துள்ளது.

ஒரு பல்கலைக்கழக நிர்வாகம் போன்று கல்வி மற்றும் பாடப்பிரிவுகள், மாணவர் சேர்க்கை, கட்டண விகிதம் என அனைத்தையும் இவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். ஒரு வருடத்திற்கும் மேலாகப் பலரின் கடின உழைப்புக்குக் கிடைத்த பலன்தான் இந்த கல்விக் கழகம்.

2018ஆம் ஆண்டு முன்சென் தமிழ் கல்விக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட போதே, இந்த தமிழ் கல்விக் கழகத்திற்கான ஆரம்பம் நிர்ணயிக்கப்பட்டது.

இது தொடர்பாக நிறுவன ஆர்வலரான செல்வகுமார் பெரியசாமி குறிப்பிடுகையில், அமெரிக்கா, லண்டன், சிங்கப்éரில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் பற்றி விசாரித்து அறிந்து கொண்டதாகவும். பின்னர் இந்தியா தஞ்சைப் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு கல்விக் கழகம் அமைப்பது தொடர்பாக தெரிந்து கொண்டதாகவும். அதன் பின்னர் தங்களுக்கு அனுமதி கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

தமிழ் டிப்ளோமா மற்றும் இளங்கலை பாடத்திட்டங்களை முன்னெடுப்பதே தங்களின் நோக்கம் என்று கூறினார்.

திலக் சிறிராம் முன்சென் நகர அலுவலகங்களில் அனுமதி வாங்குவது, குழந்தைகளுக்கான பாதுகாப்பு முறைகள், மக்கள் தொடர்பு போன்ற பல வேலைகளை கவனிக்கின்றார். நிர்மல் ராமன் கழகத்தின் கட்டமைப்பு, செயல்முறை, வடிவமைப்பு மற்றும் திட்டமிடல் சம்பந்தமான வேலைகளை கவனித்துக் கொள்கின்றார்.

அருண் சின்னமணி என்பவர் தெரிவிக்கையில், முன்சென் நகர நிர்வாகம், தங்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1மணிவரை “Grundschule an der Swanthalerstr” என்ற அரசுப் பள்ளியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்திருப்பதாகக் கூறுகின்றார்.

தன்னார்வ தொண்டர்கள் பலரின் முயற்சியில், ஜேர்மனியில் அமைந்துள்ள இந்தியத் தூதரகம் ஆலோசனைகளை வழங்கி பக்க பலமாக திகழ்கின்றது.

கழகத்திற்குத் தேவையான இசைக் கருவிகளை வாங்கிக் கொடுக்கும் எண்ணமும் அவர்களுக்கிருப்பதாக அறிய முடிகின்றது.

ஜேர்மனியில் கல்வியாண்டு செப்டெம்பர் ஆரம்பிக்கப்படவுள்ளதால், இந்த கல்விக் கழக வகுப்புகளையும் அதே மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளனர். இதுவரையில் 40 பிள்ளைகள் பதிவு செய்திருக்கின்றனர். 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பாடல்கள் சொல்லிக் கொடுப்பது என்றும் 6 தொடக்கம் 11வரை உள்ள பிள்ளைகளுக்கு எழுதுவது  படிப்பது என்றும் . இதுபோன்ற பல திட்டங்கள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

அனைத்து தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் வீதிக்கு வர வேண்டிய நிலைமை விரைவில் ஏற்படும் – அமைச்சர் மனோ

கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி, ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள பௌத்த துறவிகள், சித்தார்த்த கௌதம புத்தனை அவமானப்படுத்தி விட்டார்கள்.

இனியும் இந்நாடு ஒரு பௌத்த நாடு என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளாது என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

அமைச்சர் மனோ கணேசன் இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது,

இன்று பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கலந்தாலோசனையின் போது, முஸ்லிம் அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக இராஜினாமா செய்ய செய்யப்போவதாக அறிவித்தார்கள்.

அதை நானும், அமைச்சர் மங்கள சமரவீரவும் ஏற்றுக்கொள்ள மறுத்தோம். இது இனவாதிகளுக்கு பணிந்து இடம் கொடுக்கும் ஒரு பிழையான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என நாம் கூறினோம். எனினும் முஸ்லிம் அமைச்சர்கள் தம் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள்.

அங்கே பேசும்போது நான் ஒரு விடயத்தை சொன்னேன்.

இன்று காலை, இலங்கை பொலிசின் புலனாய்வு துறைக்கு பொறுப்பாக உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்னவுடனும், அதே புலனாய்வு துறையின் பணிப்பாளர் சானி அபேவிக்கிரமவுடனும் நான் உரையாடினேன்.

அமைச்சர் ரிசாத் பதுர்தீன் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், அவற்றை நீங்கள் விசாரிக்கவில்லை எனவும் எதிரணியினரும், பல பௌத்த துறவிகளும் கூறுகிறார்கள். உங்கள் நிலைப்பாடு என்ன என கேட்டேன்.

அமைச்சர் ரிசாத் பதுர்தீன் மீது இங்கே வந்து எம்மிடம் புகார் செய்பவர்கள் எவரும் அவருக்கு எதிரான சாட்சியங்கள் எதையும் முன் வைக்கவில்லை.

அவர்கள் எம்மிடம் தந்துள்ளது வெறுமனே புகார் கடிதங்கள் மட்டுமே. அவற்றை வைத்துக்கொண்டு எவரையும் எம்மால் கைது செய்யவோ, விசாரணைக்கு அழைக்கவோ, வாக்குமூலம் பெறவோ முடியாது.

அவற்றில் ஒன்றும் இல்லை. இங்கே வந்து இப்படியான கடிதங்களை தருபவர்கள், வெளியே போய் ஊடகங்களிடம் வீராவேசமாக கதைக்கிறார்கள்.

ஆனால், இப்படி கதைப்பவர்கள் முதலில், கைது செய்ய, விசாரிக்க உருப்படியான தடயங்களை தர வேண்டும்.

எங்களிடம் எதுவும் தரப்படவில்லை. ஆகவே எங்களால் எந்த ஒரு முஸ்லிம் அமைச்சருக்கு எதிராகவும் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது, என இலங்கை பொலிசின் புலனாய்வு துறைக்கு பொறுப்பாக உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்னவுடனும், பணிப்பாளர் சானி அபேவிக்கிரமவுடனும் என்னிடம் கூறினார்கள்.

இதை நான் இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கூறினேன்.

ஆகவே முஸ்லிம் அமைச்சர்கள் மீது புகார்களும், சாட்சியங்களும் இருக்குமானால், நடவடிக்கை எடுங்கள். இல்லாவிட்டால் எந்த ஒரு சாட்சியமும் இல்லை என அறிவியுங்கள். இதற்கு ஜூலை ஒன்றாம் திகதிவரை காலக்கெடு வழங்குகின்றேன் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ் மாதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என நான் யோசனை கூறியுள்ளேன்.

இதை கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட அமைச்சர்கள் மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, சம்பிக்க ரணவக்க ஆகியோரும் கூறினார்கள்.

இந்த யோசனையை நான் நாளை பாராளுமன்றத்தில் நடைபெற உள்ள கட்சித்தலைவர்கள் கூட்டத்திலும் கூற உள்ளேன்.

சபாநாயகர் கரு ஜெயசூரியவும், இது தொடர்பில், எவர் மீதும் சாட்சியங்கள் இருக்குமானால் நடவடிக்கை எடுங்கள். இல்லாவிட்டால் ஜூலை ஒன்றாம் திகதிக்கும் முன் அறிவியுங்கள் என பொலிஸ் மாதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்து பதிலை பெற்று கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எமக்கு தெரிவிக்க வேண்டும் என கூற உள்ளேன்.

இன்று முஸ்லிம் அமைச்சர்களை பதவி விலக கூறி ஊர்வலம் போய், ஆர்ப்பாட்டம் செய்து, உபவாசம் இருக்கும் பௌத்த துறவிகள் நாளை மீண்டும் ஒரு முறை, தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், பிறகு தமிழ்-சிங்கள கத்தோலிக்க அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், பின்னர் தாம் விரும்பாத சிங்கள பௌத்த அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், அவர்களை பதவி விலக்க கூறி சிங்கள மக்களை தூண்டி விட்டு குரல் எழுப்புவார்கள்.

இந்த பேரினவாதிகளுக்கு ஆதரவாக மறந்தும் போய் எவரும் ஆதரவு தெரிவித்து விடக்கூடாது. அது மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும் என நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.

இந்த பேரினவாத இயக்கத்துக்கு அரசியல்ரீதியாக ஒரு முடிவு காணப்பட வேண்டும். இல்லாவிட்டால், இந்நாட்டின் அனைத்து தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் வீதிக்கு வர வேண்டிய நிலைமை விரைவில் ஏற்படும்.

பூகோள அரசியலைப் புரிந்துகொள்ள.. ‘Confessions of an Economic Hit man’-  ந.மாலதி 

மூன்று தசாப்தங்களாக ஐ-அமெரிக்காவின் பொருளாதார அடியாளாக பணி செய்த இந்நூலின் ஆசிரியர் ஜான் பேர்கின்ஸ் தன் மனச்சாட்சியின் உந்துதலால் தனது அனுபவங்களை இந்நூலில் பதிவு செய்கிறார். பல நாடுகளில் ஐ-அமெரிக்காவின் அடியாளாக வேலை செய்த இவருக்கு ஒரு சாதாரண மனிதருக்கு கிட்டாத பல விடயங்கள் தெரியும். அவர் போல இன்னும் பல நூறு பேர்கள் இவ்வாறு பணி செய்திருப்பார்கள் ஆனால் இவர் ஒருவரே மனச்சாட்சிக்கு அடிபணிந்து இதை வெளிக்கொண்டுவந்து இருக்கிறார். இந்நூல் தமிழிலும் வெளிவந்திருக்கிறது.

இவர் போன்றவர்களின் வார்த்தைகளை உள்வாங்கினாலே ஈழத்தமிழர்கள் அவர்களுக்கு தேவையான பூகோள அரசியலை புரிந்து கொள்ளலாம். மனித உரிமைகள் சனநாயகம் என்றெல்லாம் ஐ-அமெரிக்கா பேசுவது எத்துணை பம்மாத்து என்பதை இது போன்ற நூல்களின் ஊடாகவே புரிந்து கொள்ளலாம். ஆசிரியர் சொன்னவற்றில் சில-

வாழ்க்கையே சில தற்செயல் நிகழ்வுகளின் கூட்டுத்தான். நாம் அந்நிகழ்வுகளுக்கு எப்படி வினையாற்றுகிறோம் என்பதே வாழ்க்கை. இரண்டு தற்செயல் சம்பவங்கள் எனது வாழ்க்கையை வடிவமைத்தன. இதில் ஒன்று இரானிய ஷாவுக்கு ஆலோகசராக இருந்த ஒரு இரானியரின் மகனை சந்தித்தது…

எனது மனைவியின் மாமா என்னை தேசிய பாதுகாப்பு நிறுவனத்தில்வேலைக்கு விண்ணப்பிக்க ஊக்கம் கொடுத்தார். எனது நேர்காணலில் அவர்கள் எனது திறமையையோ வேலை அனுபவங்களையோ பற்றி அக்கறை கொள்ளாமல் நான் வளர்ந்த சூழல், என் பெற்றோரைப் பற்றிய எனது அபிப்பிராயங்கள், செல்வந்த பிள்ளைகள் மத்தியில் நான் ஏழ்மையில் வளர்ந்தது போன்றவற்றிலே கவனம் செலுத்தினார்கள். பெண்கள், பாலியல் உறவுகள், பணம் பற்றிய எனது விரக்திகளையும் அதனால் என்னைச் சுற்றி நான் வளர்த்துக்கொண்ட கற்பனா ஆசைகளும் அவர்கள் கவனத்தை ஈர்த்தது.

இவையெல்லாம் என்னைப்பற்றிய மோசமான கருத்தை உண்டாக்கி நான் அவ்வேலைக்கு நிராகரிக்கப்படுவேன் என்றே நினைத்தேன். ஆனால் தொடர்ந்த நேர்காணல் இதற்கு எதிராக இருந்தது. பல வருடங்களுக்குப் பின்னரே இத்தகைய மோசமான விடயங்கள் அந்நிறுவனத்தைப் பொறுத்த மட்டில் விரும்பத்தக்கவை என்பதை அறிந்துகொண்டேன். நாட்டின் மேல் எனக்கிருந்து பக்தியைவிட வாழ்க்கையில் எனக்கிருந்த விரக்தியே அவர்களை ஈர்த்தது. பெற்றோர் மேல் என்கிருந்த கோபம், பெண்ணாசை, செல்வசெழிப்பான வாழ்கை பற்றிய எனது ஆசை, பொலிசுக்கும் பொய் சொல்லும் துணிவு போன்றவையே அவர்கள் தேடிய தகுதிகள்….

நான் இந்நோர்காணலில் தெரிவு செய்யப்பட்டாலும் அமைதிப்படைநிறுவனம் ஒன்றில் சேர்ந்து என் மனைவியுடன் இகுவடோருக்குப் போனதே எனது முதல் தொழிலாக இருந்தது….

இகுவடோரில் ஒரு சிறிய பூர்வகுடி மக்கள் கிராமத்திலிருக்கும் போது ஒரு நாள், ‘மெயின்‘ (MAIN)  என்ற நிறுவனத்தின் துணைத்தலைவர்  அங்கு வந்திறங்கினார். உலக வங்கி இகுவடோருக்கும் அதன் அயல் நாடுகளுக்கும் அணைக்கட்டு மற்றம் பல கட்டுமானங்கள் கட்டுவதற்கு பல பில்லியன் டொலர் நிதி கடன் கொடுப்பதா என்பதை ஆராயும் பொறுப்பை இந்நிறுவனம் ஏற்றிருந்தது. இவருடன் நான் பேசிய போது தேசிய பாதுகாப்பு நிறுவனம்என்னை முன்னர் ஏற்றிருந்தது பற்றியும் அங்கு நான் வேலையில் சேர எண்ணியிருப்பது பற்றியும் அவருக்கு சொன்னேன். இதற்கு அவர் தான் அந்நிறுவனத்திற்கும் வேலை செய்வதாக சொன்னார். அவர் பேசிய பாணியிலிருந்து அவர் அங்கு வந்ததற்கு என்னை எடைபோடுவதும் நோக்கமாக இருந்திருக்குமோ என்று எனக்கு தோன்றியது. வசதியற்ற இடங்களில் வாழக்கூடிய எனது திறமையை அவர் எடைபோட்டார் என்றே நான் இப்போது எண்ணுகிறேன். அவரே அந்நிறுவனத்தில் எனக்கு வேலையும் தந்தார். அந்நிறுவனம் பொறியில்துறையில்தான் அதிகம் திட்டங்கள் செய்தாலும் அவர்களின் பிரதான வாடிக்கையாளரான உலக வங்கி நாங்கள் பொருளாதார நிபுணர்களையும் எமது நிறவனத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறது என்று சொன்னார்.

எனது முதலாவது வேலையாக நான் இந்தோனேசியாவுக்கு அனுப்பப்பட்டேன். என்னுடன் இன்னும் பத்து பேர்கள் மட்டில் இத்திட்டத்திலிருந்தோம். வேலையில் இறங்கிய பின்னர், எமது திட்டத்தின் நோக்கம் தெளிவாகியது. ஐ-அமெரிக்காவின், இந்தோனேசியா உட்பட்ட, வெளிநாட்டு கொள்கைகளை அமுல்படுத்தவே நாம் இங்கு அனுப்பப்பட்டிருக்கிறோம். இந்தோனேசிய மக்களுக்கு உதவி செய்வதற்காக நாம் இத்திட்டத்தை அமுல்படுத்தவில்லை. இத்திட்டங்களை வரைபவர்கள் இப்பூலோகத்தை தாம் ஆளவேண்டும் என்று முடிவு செய்தே இதைச்செய்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒருவரோடொருவர் இணைந்து கூட்டாக இருக்கிறார்கள். இவர்கள் பல்தேசிய காப்பரேசன்களின் முகாமைத்துவத்திலிருந்து அரச உத்தியோகங்களுக்கு இலகுவாக மாறுவார்கள். உதாரணமாக உலக வங்கியின் தலைவர், ரோபேட் மக்னமாரா. இவர் ஃபோட் கார் கம்பனி தலைவராக இருந்து, ஜனாதிபதி கெனடியின் கீழ், பாதுகாப்பு செயலராக அமர்த்தப்பட்டார். இப்போ மிகவும் சக்தி வாய்ந்த உலக வங்கயின் தலைவராக இருக்கிறார். எனக்கு கற்பித்த பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு, பொருளாதார வளர்ச்சி ஒரு சிலரை செல்வந்தராக்கி பலரை இன்னும் ஏழ்மையில் தள்ளுகிறது என்பதெல்லாம் புரியவில்லை என்றே நினைக்கிறேன். இவர்களுக்கு புரிந்திருந்தாலும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பணி செய்யும் பல்கலைக்கழகங்களும்  பெரிய கார்பரேசன்களின் நிதியுதவியாலேயே இயங்குகின்றன.

இந்தோனேசியாவில் நான் பணிசெய்த இக்காலத்தில் இந்நினைவுகள் என்னை சங்கடப்படுத்தின. எனினும் இப்போது நான் ஒரு மதிப்புக்குரிய பொருளாதார நிபுணராக இருந்தேன். மிகத்திறமைசாலிகளின் திட்டத்தையே நான் நிறைவேற்றுகிறேன் என்று சமாதானம் செய்து கொள்வேன். இரவில் சந்தேகங்களை என்னை சங்கடப்படுத்தும் போது ஒருநாள் நான் உண்மையை வெளிக்கொணருவேன் என்றும் சமாதானம் செய்து கொள்வேன்….

இவர்களை ஒரு கூட்டுச்சதி செய்பவர்கள் என்றோ அல்லது பூகோளத்தின் மேல் ஆதிக்கம் செலுத்த விருப்புகிறவர்கள் என்றோ மாறி மாறி மதிப்பிட்டேன். காலப்போக்கில் இவர்களை பொதுவான சில கொள்கைகளைக் கொண்ட சுயநலத்தால் உந்தப்படும் ஒரு இறுக்கமற்ற கூட்டாகவே மதிப்பிட்டேன். இவர்களுக்கும் அடிமைகளை வைத்து அக்காலத்தில் பெரும்தோட்டம் பயிர் செய்தவர்களுக்கும் பொதுக்குணங்கள் இருப்பதாக கருதினேன். இப்பெருந்தோட்டக்காரர்கள் அடிமைகளை வைத்திருப்பதும் அவர்களை காப்பதும் அவர்களை தமது சமய நம்பிக்கைகளுக்கு மாற்றுவதும் தமது கடமை என்றே நம்பினார்கள். அடிமை என்பதை இவர்கள் தத்துவரீதியாக ஏற்காவிட்டாலும், அதை ஒரு கட்டாய தேவையென்று நினைத்தார்கள். அது இல்லாவிட்டால் சமூகம் உடைந்து பொருளாதாரம் அழியும் என்று நம்பினார்கள். இப்போது இருக்கும் கூட்டமும் இதேபோலத்தான் என்று நினைத்தேன்….

போராலும், பெரும் தொகையான ஆயுத உற்பத்தியாலும், அணைகள் கட்டுவதாலும், பூர்வகுடி மக்களின் சூழலை அழிப்பதாலும் யார் நன்மை பெறுகிறார்கள் என்று யோசித்தேன். ஆயிரக்கணக்காக மக்கள் பசியாலும் நீர் அசுத்தமடைந்ததாலும், மாற்றக்கூடிய வருத்தங்களாலும் இறக்கும் போது யார் நன்மையடைகிறார்கள் என்று யோசித்தேன். நீண்ட கால நோக்கில் எவருமே இதனால் நன்மை அடைவதில்லை என்றும் குறுகியகால நோக்கில் அதிக செல்வத்தை வைத்திருக்கும் ஒரு சிலரே எனது அமைப்பின் தலைவர்களும் நானும் – நன்மை அடைபவர்கள் என்ற முடிவுக்கு வந்தேன்.

இம்முடிவு வேறும் பல கேள்விகளை எழுப்புகிறது. எவ்வாறு இந்த நிலைமை நீடிக்க முடிகிறது. பலமானவன் சொல்வதே சரிஎன்பதாலா? இது மட்டுமே காரணம் என்பது திருப்தியாக இல்லை. இதைவிடவும் பலமான ஒன்று இதை நீடிக்க வைக்கிறது என்று தோன்றியது. ஒரு பேராசியார் முதாளித்துவம் எப்படி இயங்கும் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. வரையாறையான வளங்கள், தொடர்சியாக வளர எண்ணும் மனிதர், மற்றும் அடிமைகள் பற்றி விளக்கிய இவர் ஒவ்வொரு முதாளித்துவத்திலும் ஒரு சில செல்வந்தரே உள்ள ஒரு பிரமிட் அமைப்பில் சமூகம் இருக்கும் என்றும் அதில் அடிமட்டத்தில் வேலை செய்பவர்கள் உண்மையில் அடிமைகளே என்று விளக்கினார்….

கடவுள் சிலரை பிரமிட்டின் உச்சியில் வைத்து அவர்கள் உலகம் முழுவதும் தமது வாழ்க்கை முறையை பரப்புவதை விரும்புகிறார் என்று நாமும் நம்பி இந்த நிலைமையை நாமே ஊக்கப்படுத்துகிறோம் என்ற முடிவுக்கு வந்தேன்.

இவ்வாறு இருப்பது இதுதான் முதல்தடவை இல்லை. மிகப்பழைய வட-ஆபிரிக்க, மத்திய கிழக்கு, ஆசிய பேரரசுகளில் ஆரம்பித்து பின்னர் பெர்சியா, கிரேக்கம், ரோம், கிறித்தவ சிலுவைபோர் மற்றும் கொலம்பஸ்க்கு முந்தைய ஐரோப்பிய பேரரசுகளாக தொடர்ந்தது. இந்த பேரரசு வேட்கையே அதிகமான போர்களுக்கும், சூழல் மாசடைதலுக்கும், பட்டினிக்கும், உயிரினங்களின் அழிவுக்கும், இனவழிப்புக்கும் பின்னாலுள்ள காரணி. இப்பேரரசுகளில் வாழும் மக்களின் நலனை இது மோசமாக பாதித்ததை, இத்தகைய செல்வம் நிறைந்த சமூகங்களில் பரவும் தற்கொலைகளிலும், போதைப்பொருள் பாவிப்பிலும், வன்முறைகளிலும் இருந்து புரிந்து கொள்ளலாம்….

இந்நூலில் ஆசிரியர் பல நாடுகளில் தான் செய்த பணியை விபரித்து காபரேட் ஐ-அமெரிக்கா எவ்வாறு பேரரசை வளர்க்கிறது என்பதை பல உதாரணங்கள் மூலம் விபரிக்கிறார். பனாமா நாட்டை இங்கு விபரமாக எடுப்போம். இவர் விபரிக்கும் ஏனைய நாடுகள் எண்ணெய் வளத்திற்காகவும் மக்களாட்சியை அழிப்பதற்காகவும் கையாளப்பட்டது. ஆனால் பனாமா நாடு சுவேஸ் கால்வாயை ஆளாவும் பனாமாவில் உருவான மக்களுக்கான ஆட்சியை அழிக்கவும் கையாளப்பட்டிருக்கிறது. இதனால் இலங்கைக்கும் பனாமா நாட்டுக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக தோன்றுகிறது. ஏனெனில் இலங்கையும் திருகோணமலை துறைமுகத்திற்காகவும் தமிழீழத்தில் உருவாகி வந்த மக்களாட்சியை அழிப்பதற்காகவுமே கையாளப்பட்டது, படுகிறது.

1977 இல் ஆசிரியர் பொருளாதார நிபுணராக மதிக்கபடுபவராகவும் பெரிய செல்வந்தராகவும் வளர்ந்து விட்டார். தனது திருமணம் உடைந்து விட்டாலும் பல அழகிய பெண்களுடன் உலகின் பல கண்டங்களில் தான் இருந்ததாக சொல்கிறார். இக்கட்டத்தில் ஒரு இந்திய கணிதமேதையின் உதவியுடன் ஒரு நாட்டின் கட்டுமானங்களை பெருக்குவதால் உருவாகும் பொருளாதார வளர்ச்சியை எதிர்வு கூறும் ஒரு பொருளாதார மாதிரியை உருவாக்கி அதன் மூலம் பிரபலமடைந்தார். இம்மாதிரி வீக்கமான எதிர்வு கூறுவதை வைத்தே ஒரு நாட்டை உலக வங்கியிடமிருந்து திருப்பி கொடுக்க முடியாத அளவிற்கு கடன் பெறச் செய்து அக்கடனின் மூலம் அந்நாட்டை பணியவைக்கலாம்.  இதுவே ஆசிரியர் போன்றோர் செய்து வந்த வேலை.

 

யாழ் நூலக எரிப்பு ஈழத் தமிழினத்தின் மீதான அறிவழிப்பு – தீபச்செல்வன

ஈழத் தமிழ் இனம், அறிவாலும் ஆற்றலாலும் உலகறியப்பட்ட இனம். இதுவே ஈழத் தமிழ் மக்களின் உரிமை பறிப்புக்கும், அவர்களை இரண்டாம் தரப் பிரசைகளாக அடிமை கொள்ள வேண்டும் என்ற பேரினவாத ஆதிக்கத்திற்கும் காரணமாகும். இலங்கை இன ஒடுக்குமுறை வரலாற்றில், 1983 யூலைப் படுகொலை மிகப் பெரும் முன் ஈழ இன அழிப்பாக கருதப்படுகின்றது. அதைப்போலவே, 1981 ஆம் ஆண்டு யாழ் நூலக அழிப்பும் ஈழத் தமிழ் இனத்தின் அறிவு மீதான மாபெரும் இன அழிப்பு.

யாழ் நூலகம் ஆசியாவிலேயே புகழ்பெற்ற நூலகம். அங்கு உலகின் அரிய புத்தகங்கள், ஓலைச்சுவடிகள், சாஸ்திரங்கள் என பலவகைப்பட்ட பொக்கிசங்கள் இருந்தன. ஈழத்தின் பழம்பெரும் நூல்கள், தமிழின் கிடைத்தற்கரிய நூல்களை எல்லாம் கொண்டிருந்தது யாழ் நூலகம். சிறையில் சிக்கிய சிங்கள தலைவர்களை மீட்பற்கு பிரித்தானியா சென்ற ஈழத் தமிழ் தலைவர்கள், அறிவினால்தான் பிரித்தானிய அரசின் செல்வாக்குரியவர்களாக இருந்தனர்.

பிரித்தானிய இலங்கையில் அதிகம் அரச தொழிலில் இருந்தவர்களும் ஈழத் தமிழ் மக்களே. முதல் கட்டமாக தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டு, அவர்களின் வேலைகள் பறிக்கப்பட்டன. அத்துடன் இன மேலாதிக்க வெறி முடிந்துவிடவில்லை. அதன் பிறகு கல்வி தரப்படுத்தல் சட்டம். எல்லாவற்றையும் விஞ்சும் கொடூரமாக யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. உலகில் பள்ளிக்கூடங்களையும் நூலகங்களையும் அழிக்கக்கூடியவர்கள் மிகவும் கொடூரமானவர்களாயிருப்பர். அவர்களிடம் சனநாயகம் இருப்பதில்லை. அவர்கள் மனித இனத்திற்கு எதிரான விலங்குகள்.

அத்தகைய கொடூரச் செயல்தான் யாழ் நூலக எரிப்பு. 1981ஆம் ஆண்டு யூன் 1ஆம் நாள். அதாவது மே 31 அன்று நள்ளிரவு யாழ் நூலகம்மீது தீயிடப்பட்டது. மே 1ஆம் திகதி வரையில் யாழ் நூலகம் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய தலைவர், ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசே இந்த பயங்கரவாதத்தை நிகழ்த்தியது. அன்று ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் நேரடியாக இவ் இன அறிவழிப்பில் களமிறங்கினர் என்பதற்கும் சிங்கள தலைவர்களே சாட்சி.

பிரித்தானியருடன் இத் தீவின் சுதந்திரத்திற்காக போராடிய இனத்தின் உரிமைகளை மறுத்து, அவர்களை ஒடுக்கியபோது, அவர்கள் தமது உரிமைகளை கோரி சனநாயகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதற்கு பதிலாக சிங்கள அரசு, ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது. அவர்களின் சொத்துக்களை அழித்தது. இங்கே மாபெரும் அறிவுச் சொத்து 97 ஆயிரம் புத்தகங்களை அழித்தது. ஈழத் தமிழ் மனிதர்களுடன் மாத்திரம் இன வன்முறை செய்யப்படவில்லை. ஈழ நூலகங்களில் உள்ள புத்தகங்களுடனும் இன வன்முறைகள் புரியப்பட்டன.

யாழ் நூலக எரிப்பு ஈழத் தமிழ் மக்களில் நெஞ்சங்களில் ஆறாத வடுவாக பதிந்தது. மனிதர்கள் வெட்கி தலைகுனிகின்ற செயல் இதுவாகும். இன்றளவிலும் இலங்கை அரசு நிகழ்த்திய மாபெரும் குற்றமாக இது காணப்படுகின்றது. ஈழத் தமிழ் மக்களை மாத்திரமின்றி, உலக மக்களையே இது பாதித்த நிகழ்வு. புத்தகங்களுடன் இன வன்முறை செய்பவர்கள், மனிதர்களை என்ன செய்வார்கள் என்ற புரிதலை ஏற்படுத்தியது. சிங்களப் பேரினவாதிகள், தமிழர் நிலத்தில் உள்ள மரங்கள் முதல் பறவைகள் வரை அழிப்பதில் குறியாய் இருப்பவர்கள்.

யாழ் நூலக எரிப்பு என்பது, ஈழத் தமிழ் அறிவுச் சொத்தழிப்பாகவும், பண்பாட்டு அழிப்பாகவும் நிகழ்த்தப்பட்டது. ஈழத் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டதுடன் இவ் விரண்டு அழிப்பிலும் சிங்கள அரசு திட்டமிட்டு கவனம் செலுத்தியது. பிற்காலத்தில், தமிழீழ மண்மீது திட்டமிட்ட அழிப்புப் போரை தொடங்கியபோது, கிராமம் கிராமமாக நூலகங்களும் புத்தகங்களும் அழிக்கப்பட்டன. ஈழத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை வரை எத்தனையோ நூலகங்களில் அரிய அறிவுப் பொக்கிசங்கள் இருந்தன.

அவை எல்லாம் அழிக்கப்பட்டிருக்கின்றன. போர் நடவடிக்கைகளின் போது, வீடுகளில் இருந்த புத்தகங்கள் சிங்கள இராணுவத்தால் தீயிடப்பட்டுள்ளன. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரையில் முன்னெடுக்கப்பட்ட இன அழிப்புப் போரில் நாம் எத்தனையோ அரிய புத்தகங்களை இழந்துவிட்டோம். அவ்வளவும் இன அழிப்பு செய்யப்பட்டன. போராட்ட காலத்தில் வன்னியில் எழுதப்பட்ட அத்தனை படைப்புக்களும் உருவாக்கப்பட்ட ஆவணங்களும் அழிக்கப்பட்டன. எத்தனையோ அரிய பத்திரிகைகளும், வெளியீடுகளும் வன்னியில் சேகரிக்கப்பட்டன. அவை யாவற்றின்மீதும் தீயை வைத்தது சிங்களம்.

யாழ் நூலகத்தின் சுவர்கள் மாத்திரம் சிங்களப் படைகளால் எரியூட்டப்படவில்லை. எத்தனையோ நூலகச் சுவர்கள் எரியூட்டப்பட்டன. எத்தனையோ கலாசார மரபுரிமை கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஒரு இனத்தின் அடையாளத்தை அழிப்பதால், ஒரு இனத்தின் கல்வியை அழிப்பதால், ஒரு இனத்தின் பண்பாட்டு மரபுரிமையை அழிப்பதால், அவர்களை அழித்து விடலாம் என்பது ஆக்கிரமிப்பாளர்களின் இன அழிப்பாளர்களின் கணிப்பு. அதையே சிங்களமும் செய்தது.

2009 போர் முடிவுக்கு வந்த பின்னர், யாழ் நூலகத்திற்கு சுற்றுலா வந்த சிங்களப் பிரயாணிகள் நூலகத்தின் அலமாரிகளில் அடுக்கியிருந்த புத்தகங்களை இழுத்தெறிந்து வீசி தமது வெறுப்பை வெளிப்படுத்திய நிகழ்வு, ஊடகங்களில் வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கிட்டத்தப்பட்ட 28 வருடங்களின் முன்னர் எமது நூலகத்தில் தீயை வைத்ததைப்போலவே இன்றும் தீயை வைக்கும் மனநிலையில் இன்னமும் வரும் பேரினவாதிகளை என்னவென்பது? இப்படியான மனநிலை இன்னமும் இருக்கிறது என்பது நமக்கு பல புரிதலை தர வேண்டும்.

அண்மையில், நான் எழுதிய நடுகல் நாவலை, எடுத்துச் சென்ற சகோதரி ஒருவர், இராணுவத்தின் ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும், அதற்கு பெரும் விளக்கம் கொடுக்க நேரிட்டதாக சொன்னார். இப்போதும், எமது புத்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இப்போதும் எமது புத்தகங்கள் கண்காணிக்கப்படுகின்றன. இந்தியாவிலிருந்து ஈழம் வரும் புத்தகங்கள் எல்லாம் விசாரணைகளின் பின்னரே கையளிக்கப்படுகின்றன. தமிழர் பூமி புத்தகம் இலங்கை வந்தபோது, அதன் அட்டைப்படம் குறித்த விசாரணைக்குச் சென்றிருந்தேன்.

எமது மண்ணின் தலைமுறைகள், எமது மண்ணின் மனிதர்கள் எமது புத்தகங்களையும் எமக்கு தேவையான புத்தகங்களையும் படிக்க கூடாது என்பதில் இராணுவமும் அரசும் தெளிவாக இருக்கிறது. இலங்கை அரசும், சிங்களப் பேரினவாதிகளும் சொல்லித் தரும் கதைகளையும் வரலாற்றையும் படிக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். அல்லது அவர்களின் ஞானஸ்தானம் பெற்ற தமிழ் புலி எதிர்ப்பு படைப்பாளிகளின் நூல்களை படிக்கலாம். அன்று யாழ் நூலக எரிப்பு எமது போராட்டத்தை வலுப்படுத்தியது. புத்தகங்களைப் பெருக்கியது. நாம் சாம்பலாகிவிடாமல், புதிய பக்கங்கள் எழுதப்படுகின்றன. புதிய புத்தகங்கள் எழுதப்படுகின்றன. புதிய நூலகங்கள் உருவாக்கப்படுகின்றன. ஏனெனில், அறிவாலும் போராடி இவ் உலகை வெல்ல வேண்டும் என்ற தலைவர் பிரபாகரனின் சிந்தனை விதைக்கப்பட்ட மண் இது.

காணியை திட்டமிட்டே அபகரிக்கிறார்கள் போராட்டத்தை  கைவிடமாட்டேன்திருமலை(நேர்காணல்) – திருமதி. கோகிலறமணி

திருமலைதிருமதி. கோகிலறமணி இலக்கு மின்னிதழுக்கு  வழங்கிய  சிறப்பு நேர்காணல்

தமிழினத்தின் அடையாளங்களை அழிப்பதே பேரினவாதத்தின் பிரதான திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலாகும். தமிழினம் தாயகத்தின் பாரம்பரியத்தினைக் கொண்ட இனம் என்ற வரலாற்று உண்மைகள், தடையங்களை அழிப்பதோடு பேரினவாத அடையாளமாக முன்னிறுத்துவதும் சிங்கள, பௌத்த மாற்று அடையாளங்களை இலங்கை தீவு எங்கும் நிறுவுதைக் கொண்ட நிகழ்ச்சி நிரலே போர் நிறைவடைந்து தற்போது பத்தாண்டுகளாகின்ற நிலையில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றது.

பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலில் கடந்த பத்து வருடங்களில் திருமலையில் திரிவுபடுத்தப்பட்ட வரலாற்றின் அடிப்படையில் பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமாக பாழடைந்துவரும் மிக நீண்ட வரலாற்று ஆதாரமான கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவில் புனர் நிர்மாணப் பணிகள் தொடர்ந்து தடுக்கப்பட்டே வந்திருந்தன. தற்போது ஒருபடி மேலே சென்று கடந்த 21ஆம் திகதி அப்பிள்ளையார் ஆலயப்பகுதியை கிண்டிக்கிளறி கிணற்றில் போட்டு மூடுமளவிற்கு நிலைமைகள் சென்றுள்ளன.IMG 20190523 WA0003 காணியை திட்டமிட்டே அபகரிக்கிறார்கள் போராட்டத்தை  கைவிடமாட்டேன்திருமலை(நேர்காணல்) - திருமதி. கோகிலறமணி

முன்னதாக, தற்பேதைய வில்கம் விகாரை காணப்படுகின்ற பிரதேசம் மன்னராட்சிக் காலத்து சிவன் கோவில் என்பதும் தேரர்களின் தந்திரத்தினால் காலப்போக்கில் அது வில்கம் விகாரையாக மாற்றப்பட்டதாகவும் திருக்கோணமலை மூத்த தமிழர்களால் கூறப்படும் வாய்மொழிக்கதையொன்றும் இல்லாமில்லை.

அப்படியிருக்க, வில்கம் விகாரதிபதிகளின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் பலமாதங்களுக்கு முன்னரே மெதுவாக ஆரம்பித்தாகிவிட்டது. கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் பௌத்த விகாரை ஒன்று அமைப்பதற்காக நிதி சேகரிப்பு நிலையம் ஒன்றை வில்கம் விகாரை பௌத்த பிக்கு ஒருவர் நடாத்த ஆரம்பித்திருந்தார்.

அத்துடன் கன்னியா வெந்நீர் ஊற்றுப்பகுதியின் பின்பக்கத்தில் அமைந்துள்ள மலை அடிவாரத்தில் பௌத்த விகாரை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் ஒன்றிணைத்து பார்க்கின்றபோது கன்னியா பிள்ளையார் கோவிலை அகற்றி அந்த வரலாற்றுப்பகுதியை கையகப்படுத்துவதற்கு வர்த்தமானி அறிவிப்பினையும் விடுத்து சிறீலங்கா அரசாங்கமும் துணைபோயிருக்கின்றது என்பது வெளிப்படையாகின்றது.

இந்நிலையில் கன்னியா மடத்தடி முத்துமாரி ஆலயத்தின் அறங்காவலரும், பிள்ளையார் கோவில் அமைந்திருக்கும் கன்னியா காணி உரிமையாளருமான திருமதி,க.கோகிலறமணி அம்மா அவர்களை நேரடியாக சந்தித்து நிைலமைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தோம். அப்போது இலக்கு மின்னிதழுக்கு அவர் வழங்கிய  சிறப்பு பேட்டிff 1 காணியை திட்டமிட்டே அபகரிக்கிறார்கள் போராட்டத்தை  கைவிடமாட்டேன்திருமலை(நேர்காணல்) - திருமதி. கோகிலறமணி

கேள்வி:- பிள்ளையார் கோவில் மற்றும் காணி உரிமம் பற்றி கூறுங்கள்?

பதில்:- கன்னியா காணியானது எனது பேரனான செல்லையா மணியம் அவர்களுக்கு ஆங்கிலேயர்களால் பரிசாக வழங்கப்பட்டது. 1833ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் இதற்கான உறுதியும் வழங்கப்பட்டள்ளது. எனது பேரன் 1964ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதுவரையில் அவரே இதனை பராமரித்து வந்திருந்தார். அதன் பின்னர் எமது குடும்பத்தினரே பரம்பரைபரம்பரையாக பராமரித்து வருகின்றோம். கன்னியா காணியானது 8ஏக்கரும் 22பேர்ச்சஸ் பரப்பினைக் கொண்டதாக அமைந்துள்ளது.

இந்தக்காணியின் பின்பகுதியில் வெந்நீர் ஊற்று உள்ளது. அங்கு உள்ளுர், வெளியூர் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது வழக்கமாகும். பௌத்த தேரர்கள் முதலில் அதனையே ஆக்கிரமித்தனர். பின்னர், எனக்குச் சொந்தமான இந்த பகுதியில் எமது இந்து மக்கள் 31ஆம் நாள் உள்ளிட்ட அந்தியேட்டி கிரியைகளை செய்து வந்தனர்.

இப்படியிருக்க 2002ஆம் ஆண்டு இக்காணியில் இருந்த பிள்ளையார் கோயிலின் ஒருபகுதியை இடித்து பௌத்த விகாரையை அமைப்பதற்கு முனைந்தார்கள். அச்சமயத்தில் நான் போராட்டங்களை நடத்தி அதனை தடுத்திருந்தேன்.

எனினும் அக்காலப்பகுதியில் பாரம்பரிய வரலாற்று இடத்தினை டோசர் மூலம் உடைத்து விட்டதாக பொய்யான குற்றம் சாட்டப்பட்டு உப்புவெளி காவல் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆதரவுனும், தேரர்களின் பின்னணியுடனும் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் எனது தாயாரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினார்கள். அவர் பத்தாயிரம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டதோடு குறித்த வழக்கு நான்கு வருடங்களாக நடைபெற்றது. எனினும் வில்கம் விகாரதிபதி இந்த வழக்கின் நேரடி சாட்சியமாக இருந்தபோதும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததன் காரணமாக பொய்வழக்கு எனக்கூறப்பட்டு ஆலய அறங்காவலராக இருந்த எனது தாயார் விடுவிக்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

கேள்வி:- தொல்பொருள் திணைக்களம் இந்த இடத்தினை எப்படி பொறுப் பேற்றது?

பதில்:- அவர்கள் பொறுப்பேற்றகவில்லை. வழக்கு தள்ளுபடியாகியவுடன் அடுத்த கட்டமாக இந்தக்காணியை கைப்பற்றுவதற்கு திட்டமொன்று இட்டார்கள். நாங்கள் ஒருநாள் காணியைப் பார்க்க வருகின்றபோது காணியில் தொல்பொருள் பகுதி என்று அறிவித்தல் விடுக்கும் பலகையொன்று நாட்டப்பட்டிருந்தது. தொல்பொருள் திணைக்களம் இதனை கையகப்படுத்தவதாக இருந்தால் எமக்கு அறிவித்திருக்க வேண்டும். உத்தியோக பூர்வமான ஆவணங்களை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் எதனையும் வழங்காது ஆட்சியாளர்களின் துணையுடன் வர்த்தமானியில் பிரசுரித்துவிட்டு அறிவித்தல் பலகையை மட்டுமே இட்டிருந்தார்கள். இவ்வாறு அவர்களால் பொதுமக்களுக்குச் சொந்தமான காணியை கையகப்படுத்த முடியாது. இருப்பினும் அவர்கள் அவ்வாறு செய்யாது, பிள்ளையார் கோவில் இருந்த வரலாற்று மேடைப்பகுதியை அண்மித்த இடங்களில் எல்லாம் ஆய்வு என்ற பெயரில் தோண்ட ஆரம்பித்தார்கள். அதனை தனியாக எல்லையிடவும் செய்தார்கள். இதற்கு பின்னணியில் வில்கம் விகாரையின் விகாரதிபதியே காரணமாக இருக்கின்றார்.

கேள்வி:- நீங்கள் விகாரதிபதியுடன் பேச்சுக்களை நடத்தினீர்களா?

பதில்:- ஆம், அவர் பலதடவைகள் என்னை வந்து சந்தித்துள்ளார். அவருக்கு என்னிடம் உள்ளஆதாரங்களை முன்வைத்து விடயங்களை புரிய வைத்துள்ளேன். எனினும், அவர் இந்த பகுதியை தமக்கு விற்பனை செய்யுமாறே வலியுறுத்தினார். அதுமட்டுமன்றி சில அரசியல்வாதிகள் கூட பல கோடிகளை வழங்குகின்றோம். அந்த பகுதியை விட்டுவிடுங்கள் என்று கோரினார்கள். அவர்களின் பெயர்களை நான் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. ஆனால் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அரசியல்வாதிகளே இப்படி இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றபோது கவலையாக உள்ளது. மேலும் 1985ஆம் ஆண்டு பிள்ளையார் ஆலயம் பதிவு செய்ததற்கான ஆதராங்களும் உள்ளன.

கேள்வி:- அடுத்து என்ன செய்வதாக உள்ளீர்கள்?

பதில்:- நான் ஒரு இந்து சமயத்தினை பின்பற்றும் நபர். எனது ஆகமத்தின் வரலாற்றுத் தொன்மம் வாய்ந்த பகுதியை பணத்திற்காக விற்பனை செய்வதற்கு தயாரில்லை. எத்தனை கோடிகளை வழங்கினாலும் அதனை விற்பனை செய்யப்போவதில்லை. பிள்ளையார் கோவிலை கிளறி பிள்ளையாரை அரசமரத்தின் கீழ் தற்போது வைத்துள்ளார்கள். நான் நீதிமன்றத்தினை நாடுவேன். எனது ஆதாரங்களை மன்றில் சமர்ப்பிப்பேன். விகாரதிபதி முடிந்தால் நீதிமன்றில் முன்னிலையாகி பதிலளிக்கலாம். நீதி கிடைக்கும் வரையில் போராடுவேன். எனக்கு பலம் சேர்த்து என்னுடன் கைகோர்த் திருக்கும் ஏனைய மத, சிவில் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள். சத்தியம் ஒருநாள் வெல்லும். பௌத்தத்தினை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அதனை திணிப்பதையும் அதன் பெயரால் எமது இந்து பாரம்பரியத்தினை கையகப்படுத்த முயற்சிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். எனது மூச்சு இருக்கும் வரையில் போராடுவேன்.

கேள்வி:- தமிழ்த்தலைமையும் இந்த மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்ப டுத்துவதாக இருக்கின்ற நிலையில் அவருடன் பேச்சுக்களை நடத்தினீர்களா? இந்து கலாசார அமைச்சர் மனோகணேசனின்  சந்திப்பு எப்படி இருந்தது?

பதில்:- இந்த விடயம் சம்பந்தமாக நான் யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்ட விரும்பவில்லை. ஆரம்பத்திலிருந்தே இந்த விடயத்தினை மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கின்றேன். ஆனால் அதில் அவர்களின் அக்கறை அதிகமாக இருந்திருக்கவில்லை. தற்போதைய சம்பவத்தின் பின்னர் அமைச்சர் மனோக ணேசனை சந்தித்திருந்தேன். அவரிடத்தில் இந்த பகுதியின் பாரம்பரியத்தினை கூறி மீண்டும் பிள்ளையார் ஆலயத்தினை அமைப்பதற்கு உதவியளிக்குமாறும், பௌத்த ஆக்கிரமிப்பையும், தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பையும் உடன் நிறுத்து மாறும் கோரியுள்ளேன்.

அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிவிலகுகின்றனர்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இன்று மாலை முதல் இராஜினாமா செய்வதாக அலரிமாளிகையில் தற்சமயம் இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்திருக்கின்றனர்.

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் தற்சமயம் இடம்பெற்றுவருகின்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களான கபீர் ஹாஷிம், ரிஷாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்துவித அமைச்சுக்களிலிருந்தும் இன்றுமுதல் இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

கடந்த சம்பவங்களுடன் அமைச்சர்கள் எவரும் ஏதாவது முறையில் சம்பந்தப்பட்டிருந்தால் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை மூலம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.

அரசாங்க அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்து விலகினாலும் நாடாளுமன்றத்தில் பின்வரிசை உறுப்பினர்களாக அரசாங்கத்திற்குத் தேவையான ஆதரவினை தொடர்ந்தும் வழங்குவோம் என்றும் அவர் கூறினார்.

அமைச்சுப் பொறுப்புக்களை இந்த நாட்டில் நிலையான ஐக்கியம், நல்லிணக்கம், சமாதானத்திற்காக அர்ப்பணிப்பு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.