Home Blog Page 2806

வன்முறைகளை கட்டுப்படுத்த வான்படையின் உதவியை கோரியுள்ளது சிறீலங்கா அரசு

சிறீலங்காவில் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும், சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இனக்கலவரங்களை கட்டுப்படுத்துவதற்கு தனது வான்படையை பயன்படுத்தி வருகின்றது சிறீலங்கா அரசு.

வான்படை உலங்குவானூர்திகள் மூலம் இடங்களை கண்காணித்துவரும் சிறீலங்கா வான்படையினர் கலவரம் மேற்கொள்வோரை படம் எடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சிறீலங்கா வான்படை பேச்சாளர் குறுப் கப்டன் ஜிஹான் செனிவிரட்னா தெரிவித்துள்ளார்.

வான்படை உலங்குவானூர்திகள் 24 மணிநேரமும் பறப்பதாகவும், நாட்டில் பதற்றத்தை தணிப்பதே அதன் நோக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கலவரங்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து கைது செய்யும் நோக்கத்துடன் சிறப்பு காவல்துறை பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வன்முறைகளில் சிறீலங்கா காவல்துறையினர், இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் ஆகியோர் சிங்கள வன்முறையாளர்களுடன் இணைந்து செயற்பட்டது பல இடங்களில் உள்ள கண்காணிப்பு ஒளிப்பதிவு சாதனங்களில் பதிவாகியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த சிறீலங்கா வருகின்றது சீனா இராணுவம்

சிறீலங்கா அரசின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கத்துடன் 2.6 பில்லியன் ரூபாய்களை வழங்குவதற்கு சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த உதவித் திட்டத்தின் கீழ் 1.5 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான 100 இராணுவ ஜீப் வண்டிகளையும் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று நாள் பயணமாக சீனா சென்றுள்ள சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறீசேன நேற்று (14) சீனா அதிபரை சந்தித்த போது சிறீலங்கா எதிர்நோக்கும் தற்போதைய பிரச்சனைகளை எடுத்துக் கூறியதுடன் சிறீலங்காவின் பாதுகாப்பை பலப்படுத்த உதவுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேசமயம் இரு நாடுகளும் படைத்துறை ஒத்துழைப்புக்களை பரிமாறிக்கொள்வது தொடர்பான உடன்படிக்கை ஒன்றிலும் சீனா அதிபர் ஸி ஜின்பிங் மற்றும் மைத்திரிபால சிறீசேன ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தனர்.

சமூகவலைத்தளங்களால் வன்முறைகள் ஏற்படுவதாகவும், அதனை கட்டுப்படுத்த தம்மிடம் தொழில்நுட்ப வசதிகள் இல்லை எனவும் தெரிவித்த மைத்திரி அதனை கட்டுப்படுத்த உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.

சிறீலங்காவில் சமூகவலைத்தளங்களை கட்டுப்படுத்த சீனாவின் படைத்துறை நிபுணர்களை சிறீலங்காவுக்கு அனுப்புவதற்கு சீனா அதிபர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

எனவே சமூகவலைத்தளங்களை கட்டுப்படுத்தும் உபகரணங்கள் மற்றும் நிபுணர்களை சிறீலங்கா விரைவில் பெற்றுக்கொள்ளவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் வெடிபொருட்களுடன் இருவர் கைது

அமெரிக்காவின் எல்லைப் பாதுகாப்பு படையினர் வழங்கிய தகவல்களைத் தொடர்ந்து கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள றிச்மன்ட் கில் பகுதியில் முஸ்லீம் இனத்தவர்கள் இருவரை கனேடிய காவல்துறையினர் நேற்று (14) கைது செய்துள்ளனர்.

அவர்களின் வீட்டில் இருந்து வெடிமருந்துகளும், அதனை வெடிக்க வைக்கும் டிற்டனேற்ரர்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக யோர்க் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மஹயர் முகமடிசல் (18) மற்றும் அவரின் தந்தையான றிசா முகமடிசல் (47) ஆகியோரை கைது செய்யப்பட்டவர்கள். கைது நடவடிக்கையின் போது அவர்களின் இடத்திற்கு அருகில் உள்ளவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்கான வெளியேற்றப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் மன்னார் ஓலைத் தொடுவாயில் 508 ஏக்கர் காணி சுவீகரிப்பு

மன்னார் ஓலைத் தொடுவாய் உவரிப் பகுதியில் உள்ள 508 ஏக்கர் காணி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த காணி தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து அந்தப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், யுத்தம் முடிவடைந்த பின்னர் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர், பொதுமக்களின் காணிகளை அடாத்தாக கொள்வனவு செய்துள்ளனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள், மற்றும் யுத்தம் காரணமாக இந்தியா சென்றவர்களின் காணிகள் இதில் அடங்கும் என்றும் தெரிவித்தார்.

குறித்த ஒரு தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக இந்த காணியை ஆளுநர் ஹிஸ்புல்லா கொள்வனவு செய்துள்ளார். இந்த நிறுவனத்தின் இயக்குநராக ஹிஸ்புல்லாவே இருக்கின்றார்.

இதற்குரிய நிதி எங்கிருந்து பெறப்பட்டது. இந்த அரசியல்வாதிக்கு எந்த அரபு நாட்டிலிருந்து நிதி வந்தது போன்ற விபரங்களை அரச தரப்பினர் உடனடியாக கவனத்தில் எடுக்க வேண்டுமென்றும் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்டுள்ளார்.

இதே போன்று மட்டக்களப்பில் பல்கலைக்கழகம் ஒன்று ஜனாதிபதியினால் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. அதற்கு சவுதியைச் சேர்ந்த  தனிப்பட்ட நபர் ஒருவர் ஹிஸ்புல்லாவிற்கும் அவரது மகனுக்கும் சொந்தமான நிறுவனம் ஒன்றிற்கு பெரும் தொகை பணம் அனுப்பியிருக்கின்றார். இந்தப் பணத்தின் மூலம் பல்கலைக்கழகம் கட்டப்பட்டுள்ளது.தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள முஸ்லிம் மத தீவிரவாத அமைப்புக்களால் கிறிஸ்தவர்கள் இலக்கு வைத்து தாக்கப்படுகின்றார்கள்.

மன்னார் உவரி கிராமமும் ஒரு கிறிஸ்தவ கிராமமாகும். இந்தப் பகுதியில் வசித்த மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவிலும், வேறு இடங்களிலும் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்பிரதேசம் கிறிஸ்தவர்களின் பிரதேசம் என்பதற்கு சான்றாக 500 வருடங்கள் பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இங்கு இருக்கின்றது.

ஹிஸ்புல்லா என்ன நோக்குடன் இப்பகுதி காணிகளை ஆக்கிரமித்துள்ளார் என்பதை அரச புலனாய்வுத் துறையினர் ஆராய வேண்டும் என்றும் நிர்மலநாதன் கேட்டுள்ளார்508 ஏக்கர் என்ற போர்வையில் 900 ஏக்கர் காணிகளை அடைத்து வைத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறிலங்கா ஒரு பன்முக சமுதாய நாடு ஐ.நா அதிகாரிகள் தகவல்

சிறீலங்காவில் சிறுபான்மை மதத்தவர் அபாயத்தில் இருப்பதாக  ஐ.நா அதிகாரிகளான  சிறப்பு அலோசகர் அடாமா டயேன் மற்றும் ஐ.நா விசேட ஆலோசகரான கரோன் ஸ்மித் ஆகியோர் கூட்டாக விடுத்த தெரிவித்துள்ளனர்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னர் ஏற்பட்ட சிறுபான்மை முஸ்லிம், பெரும்பான்மை சிங்களவர்களுக்கிடையிலான மோதலில் கடந்த திங்கள் ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

அண்மைக்கால வன்முறை ஆசிய பிராந்தியத்தில் தேசியவாத மற்றும் தீவிரவாத கருத்துக்கள் வளர்ந்து வருவதை காட்டியுள்ளது. சிறுபான்மை மதத்தவர் அபாயத்தில் இருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டினர் சிறிலங்கன் ஒவ்வொருவரும் தமது சமூகங்களை சுதந்திரமாக அடையாளப்படுத்த வேண்டும் என சிறப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும். என்றும் அவர்கள் மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

வன்முறை அதிகரிக்காதிருப்பதற்காக அரசாங்கம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமுல்ப்படுத்தியுள்ளதுமக்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத நிகழ்வு – வற்றாப்பளை அம்மன் உற்சவம் ஆரம்பம்

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாக பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு உப்பு நீரில் விளக்கெரிப்பதற்கான தீர்த்தம் எடுக்கும் உற்சவம் நேற்று (13) மாலை 6.00 மணியளவில்  நடைபெற்றது.

காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து தீர்த்தம் எடுக்கப் புறப்பட்ட மாலை 6.00 மணியளவில் கடலில் தீர்த்தம் எடுக்கப்பட்டது. நள்ளிரவு 12.00 மணியளவில் காட்டா விநாயகர் ஆலயத்தில் உப்பு நீரில் விளக்கேற்றப்பட்டது.

இந்த விளக்கு எதிர்வரும் திங்கட் கிழமை அன்று வற்றாப்பளைக்கு எடுத்து வரப்பட்டு அங்கு வைக்கப்பட்டு, பொங்கல் வழிபாடுகள் நடத்தப்படும்.

நாட்டிலுள்ள மூன்று குழுக்களுக்கு தடை – வர்த்தமானி அறிவிப்பு

சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பொன்றில், தேசிய துவேத ஜமா அத் (N T J) , ஜமாத் மில்லாத் இப்ராஹஜம் (J M I) மற்றும் வில்லாய்ட் அஸ் செலிணி ஆகிய 3 குழுக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க அவசரகாலச் சட்டத்தின் 75 ( 1 ) ஒழுங்கின் கீழ், அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த வர்த்தமானி அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.

இந்த அறிவிப்பில் ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முப்படையினர், மற்றும் காவல்துறையிலுள்ளோர் தவிர ஏனையோர்  இவற்றை பயன்படுத்த முடியாது. கடந்த மாதம் பொது மக்கள் போக்குவரத்து ஆணையமும் (C A A)  இதே அறிவித்தலை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வடமேல் மாகாண பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளது

சிறிலங்காவின் வடமேல் மாகாண பாடசாலைகள் இன்று(14)  மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க ரஷ்யாவின் உதவியை நாடும் சிறிலங்கா

சிறிலங்காவின் தற்போதைய நிலை தொடர்பாக ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோரோவ் என்பவருடன், சிறிலங்காவிற்கான வெளிவிவகார அமைச்சர் தயான் ஜயதிலக பேச்சு நடத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் அனைத்துலக தீவிரவாதம் தொடர்பாக இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் உயிரிழந்தவர்களிற்கு இரங்கலைத் தெரிவித்த, ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இந்த தீவிரவாத செயல்களை கண்டித்துள்ளார்.

1990களில் ரஷ்யாவின் தொண்டர் நிறுவனங்கள் மூலம் பரவிய வகாபியிசம் மற்றும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் ரஷயா எதிர்கொண்ட அனுபவங்களை சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.

இராணுவத்தின் ஜெனரல் தர நிலையில் உள்ள பிரதி வெளிவிவகார அமைச்சர் ஒலேக் சைரோமோலோரோவ், சோவியத் ஒன்றிய காலத்தில்  K G B , என அழைக்கப்பட்டு, பின்னர் F S B  என்றழைக்கப்பட்ட சமஷ்டி புலனாய்வு சேவையில் பிரதிப் பணிப்பாளராக இருந்தவராவார். 2004 முதல் 2015 வரை D K R  புலனாய்வுப் பிரிவின் தலைவராகவும் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை அறமற்றது – கௌதமன்

விடுதலைப் புலிகள் மீதான மத்திய அரசின் தடை நீட்டிப்பு என்பது நேர்மையற்ற அறமற்ற ஒரு செயலாகும்.  இந்தியாவுக்கு எதிராக இந்தியாவே விதித்துக் கொண்ட தடை  இது என்று இந்தியா உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என திரைப்பட இயக்குனரும், தமிழ்ப் பேரரசு கட்சியின் தலைவருமான திரு கௌதமன் இன்று (14) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

இலங்கையில் சமீபத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலை கண்டித்து அமெரிக்காவும் பிரான்சும் “விடுதலைப்புலிகள்  அந்த மண்ணில் இதுவரை ஒரே ஒரு சாமானிய மக்களை கூட கொன்றதில்லை அவர்கள் நடத்தியது அறப்போர் அந்த மண்ணின் விடுதலைக்கான போர்” என்று விடுதலைப் புலிகளை பெருமைப்படுத்தினார்கள்.

சிங்கள தலைவர்களும் சில புத்த துறவிகளும் கூட புலிகள்  எங்கள் மக்களை இதுபோன்று ஈவு இரக்கமற்ற முறையில் கொன்றதில்லை என்று விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நற்சான்று வழங்கினார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலே சென்று ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையை நீக்கி அது வன்முறை இயக்கமல்ல தமிழீழ தமிழ்க்குடி மக்களின் விடுதலைக்கான இயக்கம் என்று பிரகடனப்படுத்தியது. அப்படி இருக்க தமிழ் நாட்டின் மீது பழியினைப் போட்டு இந்திய ஒன்றிய அரசு 2024 வரை புலிகளின் மீதான தடையை நீட்டித்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தமிழர்களை ஒடுக்குவதிலும் இல்லாமல் ஒழிப்பதிலும் ஆகப் பெரும் வித்தியாசம் இல்லை என்பதையே இந்நிலைபாடு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தமிழ் ஈழத் தமிழர்களும் விடுதலைப் புலிகளும் தாய்நாடு தமிழீழம் என்றும் தந்தையர் நாடு இந்தியா என்றும் பெருமை கொண்டு வாழ்ந்தவர்கள்.

2009ல் விடுதலைப் புலிகளின் அரசு இருந்தவரை தமிழ்நாட்டு மீனவ தமிழர்கள் ஒருவர் மீது கூட சிங்கள அதிகாரவர்க்கம் கை வைத்தது இல்லை. அதன் பிறகு எத்தனை எத்தனை  படுகொலைகள். விடுதலைப்புலிகள் அரசு இருந்தவரை இந்துமா கடல் பகுதியிலோ இலங்கைத்தீவிலோ அத்துமீறலோடு ஒரே ஒரு சீனர் கூட நடமாடியது இல்லை. ஆனால் இன்று கூட்டம் கூட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிங்கள அதிகாரவர்க்கம் 99 ஆண்டுகள் ஒப்பந்தத்தோடு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு தாரை வார்த்திருக்கிறது. மிகச் சரியாகப் பார்த்தால் இந்தியா தடுத்திருக்க வேண்டும். புலிகள் இருந்திருந்தால் துரத்தி அடித்திருப்பார்கள். இந்துமா கடலுக்கும் இந்தியாவிற்கும் காலம் முழுக்க அரணாக நின்றவர்கள் விடுதலைப் புலிகள். சமீபத்தில்கூட கொழும்பில் உள்ள சீன தூதர் மன்னார் வழியாக ராமேஸ்வரம் நடு கடல் பகுதிக்கு வந்து ஆய்வு நடத்தி சென்றிருக்கிறார்.

2009-க்கு முன்பு இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பு உண்டா என்பதை இப்போதாவது இந்தியா நினைத்துப் பார்க்க வேண்டும். சிங்களப் பகுதியில் மட்டுமல்ல தமிழீழப் பகுதியில் மட்டுமல்ல கச்சத்தீவிலும் சீனர்களின் அத்துமீறல், ஆக்கிரமிப்பு பெருகிக்கொண்டே வருகிறது.

இந்திய அரசு இதையெல்லாம் எப்பொழுது உணர போகிறது. இந்தியா- சீன யுத்தம் நடந்தபோது இலங்கை சீனா பக்கம்தான் நின்றது என்கிற வரலாறை மறந்து விடப் போகிறதா இந்தியா. சமீபத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு மைத்திரிபாலாவோ ரணில் விக்கிரமசிங்காவோ இந்தியாவிற்கு வந்து ஆலோசனை செய்யவில்லை.

மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு சென்றுதான் ஆலோசனை நடத்தி தங்களது நட்பை பலப்படுத்துகிறார். புலிகள் மீதான தடை நீட்டிப்பு மூலம் சீன அரசுக்கு இந்திய அரசு உதவி செய்திருக்கிறது என்பதுதான் யதார்த்தத்தின் பேருண்மை. இந்து மாக்கடலின் அதிகாரம் இந்தியாவிடம் இருக்கவேண்டுமானால் தமிழீழம் தமிழர்களிடமும் விடுதலைப் புலிகளிடமும் இருக்க வேண்டும். இல்லையேல் ஒருநாள் இந்துமாக்கடல் சீனாவிடம் இருக்கும். அப்போது இந்தியா யாருக்கு கீழ் இருக்கும் என்பது காலத்திற்கே வெளிச்சம்.

வ.கௌதமன்

தலைவர்

தமிழ்ப் பேரரசு கட்சி.