இலங்கையின் கொழும்பு துறைமுக நகர செயற் திட்டங்கள் குறித்து தவறாக வழிநடத்தும் அறிக்கையை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வெளியிட்டுள்ளார் என கொழும்பு துறைமுக நகர நிறுவனம் China Harbour Engineering Company (CHEC) குற்றம்சாட்டியுள்ளது.
சமீபத்தில் ஊடகவியலாளர்களுடனான கருத்துப் பரிமாற்றத்தின் போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ், கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமொன்று அமெரிக்காவின் தடைப் பட்டியலில் உள்ளது. இதன் காரணமாக அந்த நிறுவனத்துடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவருடைய இந்தக் கருத்து குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தவறாகவழி நடத்தும் அறிக்கையை வெளியிட்டுள்ளார் என கொழும்பு துறைமுக நகர நிறுவனம் (சிஎச்ஈசி) குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கொழும்பு துறைமுகநகர நிறுவனம்,“நாங்களோ அல்லது எங்களின் பிரதான நிறுவனமான சிசிசிசியோ(China Communications Construction Company) அமெரிக்காவின் 2020 ம் ஆண்டு தடைப் பட்டியலில் இடம் பெற்றிருக்கவில்லை.
அமெரிக்காவினால் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள சீனா Communications Construction நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் எவற்றுடனும் நாங்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
தென்சீனாவில் மண் மீட்டாக்கப் பணிகளில் ஈடுபட்ட நிறுவனங்களையே அமெரிக்கா தடை செய்துள்ளது, கொழும்பு துறைமுக நகரத்திற்காக சிஎச்ஈசி போர்ட் சிட்டி கொழும்பு முன்னெடுத்த மண்மீட்டாக்க நடவடிக்கைகள் முற்றிலும் வேறு நிறுவனங்களாலேயே முன்னெடுக்கப்பட்டன.
கொழும்பு துறைமுக நகரம் குறித்த பக்கச் சார்பான புரிந்துணர்வுடன் அலைனா பி டெப்பிளிட்ஸ் வெளியிட்ட கருத்துக்களை தெளிவுபடுத்துவதே தங்களின் நோக்கம்” தெரிவிக்கப்பட்டுள்ளது.