இந்தியா மூலம் அனைத்துலக விசாரணையைத் தடுக்க முயலும் சிறிலங்கா தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் விழிப்புடன் செயற்பட வேண்டிய நேரம்: அனைத்துலக மனித உரிமைகள் ஆணையகத்தின், சிறிலங்காவை அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துவது தொடர்பான சான்றாதாரங்களைத் திரட்டும் அலுவலகத்தின் செயற்பாட்டுகளைத் தடுப்பதற்கான, பாதுகாப்புக் கவசமாக ஐக்கியநாடுகள் சபைக்கான தனது வருகையின் போது உள்ளகப் பொறிமுறையின் கீழ் புலம்பெயர் தமிழர்களைப் பேச்சுக்கு அழைத்தல் என்னும் நரித்தந்திர மூலோபாயத்தை முன்வைத்தார் கோத்தபாய ராசபக்ச.
இதன் உள்நோக்கு புலம்பெயர் தமிழர்கள், தங்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களான, ஈழத்தமிழர்களின் உள்ளகத் தன்னாட்சி உரிமை தொடர்ந்து இழக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்பும், அமைதியும், வளர்ச்சியும் தினம் தினம் பாதிப்புற்று வருவதால், தாங்கள் வாழும் நாடுகளில் தங்களின் உளவியல், சமூக உளவியல் பாதிப்புக்கு உள்ளாகிறது என்ற அடிப்படையில் ஈழத்தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையினை உலக நாடுகளும், அமைப்புக்களும் உறுதிப்படுத்தி, அவர்களின் பாதுகாப்புக்கும், அமைதிக்கும், வளர்ச்சிக்கும் உடனடியாக உதவுவதன் வழி தங்களின் நாளாந்த வேலைத்திறனும், உடல் உள வளர்ச்சிகளும் பாதிப்புக்குள்ளாகித், தாங்கள் வாழும் நாடுகளில் அவற்றின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் தம்மாலான பங்களிப்புக்களை இயல்பாகச் செய்வதற்கு உதவ வேண்டுமென அனைத்துலகச் சட்டங்களுக்கும், முறைமைகளுக்கும் அமைய எடுக்கும் முயற்சிகளை முறியடிப்பது என்பதாக உள்ளது.
அதே நேரத்தில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் சட்டத்துறைப் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், வெளியகப் பொறிமுறைகளை ஐக்கிய நாடுகள் சபை உறுப்புரிமை நாடுகளின் விருப்பின்றி நடைமுறைப்படுத்த முடியாதென தன்னளவிலான சட்ட அறிவின் அடிப்படையில் சட்ட எச்சரிப்பு ஒன்றையும் அவரின் ஐக்கியநாடுகள் சபைக்கான அவரது வருகையின் நோக்காக வலியுறுத்தினார். இதன் உள்நோக்கு, தங்கள் தங்கள் நாடுகளில் ஐக்கியநாடுகள் சபையின் நெறிப்படுத்தல்களை விரும்பாத ஆசிய, ஆபிரிக்க நாடுகளைத் தங்களோடு இணைத்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் மிகக்குறைந்த பட்ச முயற்சிகளையும் சிறிலங்காவில் இடம்பெறாது தடுத்தல் என்பதாக அமைந்தது.
இந்த நோக்கில் மிகுந்த அக்கறை காட்டி வரும் இந்தியாவும் இந்த விடயத்தில் தங்களுடன் இணையும் என்னும் அவரின் நம்பிக்கையின் அடிப்படையில் இந்தியாவைத் தங்கள் நோக்குகளுக்கு உதவிக்கு அழைக்கும் முயற்சியாக ஐக்கிய நாடுகள் சபைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுடன் அங்கு வைத்தே பேச்சுக்களை சிறிலங்கா நடாத்தியது. இதன் பயனாக இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா அவசர விஜயம் ஒன்றை நேற்று முதல் கொழும்பில் மேற்கொண்டுள்ளார்.
சீனப் பாகிஸ்தான் தளமாக வடக்கை மாற்றும் செயற்திட்டமாக இந்தியாவால் இவை பார்க்கப்படும் இயல்பு நிலையைத் தோற்றுவித்துள்ளது. இதனைப் பாகிஸ்தான் தூதரகம் தனது ருவிற்றர் செய்தி மூலம் மறுத்து, ஊடகச் செய்தியாளர்களின் நம்பிக்கைத்தனம், பொறுப்புணர்வு பற்றி கேள்வி எழுப்பிய போதிலும், வடக்கில் சீன பாகிஸ்தான் மேலாதிக்கம் என்பது விரிவடைந்து வருவது வெளிப்படையான ஒன்றாகவே உள்ளது. வடக்கின் நிலப்பரப்புக்களைச் சீனாவுக்குத் தனது குறுங்கால கடனைக் கட்ட இயலாத நிலையில் உள்ள இன்றைய சிறிலங்கா அரசாங்கம் கடனுக்காகக் கொடுக்கும் சூழ்நிலைகளின் அடிப்படையில், சீன புதிய குடியேற்ற நாடாக சிறிலங்கா மாறுவதன் அடிப்படையில், இதனைப் பார்க்க வேண்டுமென 1987-90 களில் இலங்கையில் இந்திய அமைதிப்படையின் உளவுப்படைத் தளபதியாக இருந்த கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.