Home Blog Page 3059

முல்லைத்தீவில் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிரான பொலிசாரின் வழக்கு தள்ளுபடி

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள பிரதேச சபைக்கு சொந்தமான குழாய் கிணற்றிலிருந்து இராணுவத்தினர் நாளாந்தம் பல லட்சம் லீற்றர் நீரை இராணுவத்தினர் எடுத்துச் செல்கின்றனர். இதனால் அயலிலுள்ள கிணற்றிலுள்ள நீர் மாசடைவது மற்றும் குடிநீரில் மாற்றங்கள் ஏற்படுவது தொடர்பாக மக்கள் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தவராசா அமலனிடம் மக்கள் முறையிட்டனர்.

இதனையடுத்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக குறித்த பகுதியில் அமைதிக்கு பங்கம் விளைவிக்க முற்பட்டதாக தெரிவித்து பிரதேச சபை உறுப்பினர் தவராசா அமலன் மீது முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிசார் திட்டமிட்ட வகையில் வழக்கை பதிவு செய்து முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

31.07 முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ். லொனின்குமார் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகளான கணேஸ்வரன், பிரபல சட்டத்தரணி கங்காதரன் உட்பட பலரும் ஆஜராகியிருந்தனர்.

இந்த சட்டத்தரணிகள், இது மக்களுடைய குறைபாடுகள் தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட விடயமே தவிர இதில் எந்தவிதமான அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளும் இல்லை என்பதை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனால் நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

இது குறித்து கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தவராசா அமலன் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறான திட்டமிட்ட இராணுவம் பொலிசாரின் அடக்குமுறை செயற்பாடுகள் எதிர்வரும் காலங்களிலும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் தாங்கள் ஈடுபடும் போது ஏற்படுத்தக் கூடாது என்ற விடயத்தை தெரிவித்தார்.

 

 

 

 

 

 

இலங்கையில் உணவுப் பொருட்களில் போர்மலின்

இலங்கையில் பாவிக்கப்படும் உணவுப் பொருட்களில் சடலங்களுக்கு நறுமணமூட்டும் போர்மலின் பாவிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பாவனை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்தல் கூட்டுறவு அபிவிருத்தி தொழிற்பயிற்சி திறனாற்றல் இராஜாங்க  அமைச்சர் புத்திஹபத்திரண தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் நாட்டிலுள்ள மலர்ச்சாலைகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மலர்ச்சாலைகளுக்கு அளவாக போர்மலினை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலதிகமாக போர்மலின் விநியோகிக்கப்படுமாயின், விநியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

 

இங்கிலாந்து இராணியை கடற் கொள்ளைக்காரியாக சித்தரிக்கும் ஓவியங்கள்

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கலாசார மையத்தில் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கடற்கொள்ளைக்காரராக சித்தரிக்கும் 40 வகையான கேலி சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

தடையை மீறி சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி சென்றதாக கூறி ஈரானின் சரக்கு கப்பலை ஜிப்ரால்டர் ஜலசந்தி அருகே இங்கிலாந்து கடற்படை கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை சிறைபிடித்தது.

இந்த விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஈரானின் எண்ணெய் கப்பலை கைப்பற்றிய இங்கிலாந்தை சாடும் விதமாக தலைநகர் டெஹ்ரானில் உள்ள கலாசார மையத்தில் ‘ராணி கடற்கொள்ளைக்காரர்’ (பைரேட்ஸ் ஆப் தி ராணி) என்ற தலைப்பில் கேலி சித்திரங்களுக்கான கண்காட்சி தொடங்கப்பட்டு உள்ளது.

இதில் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கடற்கொள்ளைக்காரராக சித்தரிக்கும் 40 வகையான கேலி சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. ஏராளமான மக்கள் இந்த காண்காட்சிக்கு வந்து, கேலி சித்திரங்களை பார்த்து ரசித்து செல்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏமனில் 40 படையினர் பலி

ஏமனில் ராணுவ தளம் மற்றும் காவல் நிலையத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த சில ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அரசு படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதனால் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் அவ்வப்போது கார் குண்டு வெடிப்பு, ஏவுகணை தாக்குதல் போன்ற  செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அந்நாட்டின் ஏடேன் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் கிளர்ச்சியாளர்கள் திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் வீரர்கள் பலர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அதே பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு நிரப்பிய காரை வெடிக்க செய்தனர். இந்த இரு பயங்கரவாத தாக்குதல்களிலும் சிக்கி மொத்தம் 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது. அல்கொய்தா  இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் உட்பட பல்வேறு பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ளார். இவர், கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது.

இதையடுத்து, சவுதி அரேபியாவைச் சேர்ந்த பின்லேடனின் மூன்று மனைவிகளில் ஒருவரது மகன் ஹம்ஸா(29), தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என எச்சரித்திருந்தார். பின்லேடனுக்கு பின்னர் அல்கொய்தா இயக்கத்தின் தலைவராகவும், அல்கொய்தா  இயக்கத்தின் முடி இளவரசராகவும் பார்க்கப்படும் ஹம்ஸா பின்லேடனை கடந்த 2017ம் ஆண்டு, அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது. அதுமுதல் ஹம்ஸா பின்லேடனை அமெரிக்கா தேடி வரும் நிலையில், அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி இருப்பதாகவும், ஈரானில் வீட்டுக் காவலில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் உலா வருகிறது.

இதற்கிடையே, ஹம்ஸா பின்லேடனின் வசிப்பிடம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்நிலையில், ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா அரசின் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க உயரதிகாரிகள் மூன்று பேர் இத்தகவலை தெரிவித்ததாக என்.பி.சி தெரிவித்துள்ளது. அவர் எப்போது, எங்கு கொல்லப்பட்டார் என்ற விவரமும், இதில் அமெரிக்காவுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற தகவல்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. கடந்த 2 ஆண்டில் எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கைகளில் சிக்கி ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2011ம் ஆண்டில் பின்லேடன் கொல்லப்பட்ட பின் மேற்கத்திய நாடுகளுக்கு ஹம்சா பெரும் அச்சுறுத்தலாக இருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவின் மதிப்பீட்டை என்.பி.சி செய்தி நிறுவனம், முதன்முதலில் தெரிவித்ததை அடுத்து, இது உண்மைதானா என்று கேட்டதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுகுறித்து தாம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.

கீழடி அகழாய்வில் 4வது பழங்கால உறைக்கிணறு; 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீரை பாதுகாப்பாக பயன்படுத்திய தமிழன்

தமிழ் நாடு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு தொடங்கியுள்ளது. முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு ஆகியோரது நிலத்தில் இந்த அகழாய்வு நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கப்பட்ட அகழாய்வில் சுவர்,  வட்டப்பானை உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது உறைகிணறு, தண்ணீர் குடிக்க பயன்படுத்தப்படும் ஜக்-மூடி  உள்ளிட்டவைகள் கிடைத்துள்ளன.

உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளதால் இப்பகுதியில் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குடியிருப்புகள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உறைகிணறுகள் அனைத்தும் 5 முதல் 7 அடி உயரம் வரையே இருப்பதால் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் 5 அடியிலேயே கிடைத்திருக்க  வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உறைகிணறுகளை தொழில்நுட்ப ரீதியில் அமைக்கப்பட்டு அதனை தமிழர்கள் பாதுகாப்பாக பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடந்த நான்கு கட்ட அகழாய்வில் மூன்று கிணறுகள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது நான்காவதாக உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் குடியிருப்புகள் இருந்ததற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோட்டபாயா அமெரிக்க குடியுரிமையை இழந்துள்ளாரா?

அமெரிக்க குடியுரிமையை தான் இழந்துள்ளதாக சமூக ஊடகங்களில் வெளிவந்த ஆவணம் போலியானது என்று முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டபயா ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 17, அன்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் உள்ள தூதரக பிரிவின் தலைவர் முன் கோட்டபயா நேரில் ஆஜராகி, அமெர்க்க சட்டத்தின்படி தனது அமெரிக்கக் குடியுரிமையை கைவிடுவதாக உறுதிமொழியில் கையெழுத்திட்டார்.

தான் பெற்ற அமெரிக்காவின் குடியுரிமை தகுதியிழப்பிற்கான சான்றிதழ் என்று கூறி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஆவணம் போலியானது என கோட்டபயா ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

 

சூழலழிவு கிளர்ச்சி – பேராசிரியர் அன்டி ஹிகின் (தமிழில் ந.மாலதி)

Extinction Rebellion என்பது சூழல் அழிவை நிறுத்துவதற்காக இன்று உலகெங்கும் பரவி வரும் ஒரு கிளர்ச்சி நடவடிக்கை. இதையே சூழலழிவு கிளர்ச்சி என்று இவ்வாக்கம் குறிப்பிடுகிறது. பிரித்தானியாவில் இதன் நடவடிக்கைகள் உக்கிரமடைந்து வருகின்றன. ஈழத்தமிழர் இனவழிப்பு தீர்ப்பு வழங்கிய பிரேமன் தீர்பாயத்தில் தமிழர் தரப்பு வழக்கறிஞராக இருந்த பேராசிரியர் அன்டி ஹிகின்பொத்தம் (Dr Andy Higginbottom) சூழலழிவு கிளர்ச்சி பற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.

அவருடைய ஆக்கம் நீண்டது. பல புள்ளிவிபரங்களை ஆதரமாக கொண்டது. இவற்றை தவிர்த்து அவர் வெளியிட்டுள்ள கருத்தையும் எமது போராட்டத்திற்கும் இதற்கும் உள்ள தொடர்பையும் இணைக்கிறது இவ்வாக்கம்.andy1 சூழலழிவு கிளர்ச்சி - பேராசிரியர் அன்டி ஹிகின் (தமிழில் ந.மாலதி)

சூழலழிவு கிளர்ச்சியாளர்கள் அண்மைய காலத்தில் முன்னெப்போதும் காணாதளவுக்கு பிரித்தானியாவில் வளர்ந்திருக்கிறார்கள். “அரசியலுக்கும் அப்பால்” என்ற சுலோகத்துடன் பத்து நாட்களுக்கு லண்டனின் நடுப்பகுதிகளை ஆக்கிரமித்து வன்முறையற்ற போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். “எமது அழிவை நோக்கி செல்லும் தற்கால பாதையில் அதிகாரவர்க்கமும் செல்வந்தர்களும்  பணம் ஈட்டுகிறார்கள். இத்தகைய அதிகாரத்ததை தரவுகளாலும் தர்க்கரீதியாகவும் மாற்ற முடியாது. இதில் குழப்பம் விளைவிப்பதாலேயே இதை மாற்ற முடியும்” என்று அதன் நிறுவனர் சொல்கிறார்.

இவர்களுடைய குழப்பம் செய்யும் உத்தி வெற்றிபெற்றிருக்கிறது. இனி என்ன என்ற கேள்வி இப்போது எம்முன்னே நிற்கிறது. சூழலழிவு கிளர்ச்சி பலதரப்பட்டோரை தன்னுள் கொண்டிருக்கிறது. தமது கிளர்ச்சியை பல்தேசிய கம்பனிகளிடம் கொண்டுசொல்ல மாட்டோம் என்று அதன் நிறுவனர் சொல்கிறார். அதே நேரம் இதில் பங்கு பற்றிய பலர் இப்பிரச்சனையின் அடித்தளமே முதலாளித்துவம் தான் என்கிறார்கள்.

ஷெல் கம்பனி சூழலழிவையே மறுப்பதால் சில சூழலழிவு கிளர்ச்சியாளர்கள் ஷெல் கம்பனியை குறிவைத்தார்கள். இருந்தாலும் பல்தேசிய கம்பனிகளை குறிவைக்கும் திட்டம் சூழலழிவு கிளர்ச்சியாளரகளிடம் இதுவரையில்லை.

ஷெல், BP போன்ற பல்தேசிய எண்ணெய் கம்பனிகளின் தலைமை பதவிகளில் உள்ளவர்கள், பிரித்தானியாவில் உள்ள உயர் அரச பதவிகளையும் அடிக்கடி நிரப்புவார்கள். இது நவதாராளவாத கொள்கைகளின் விளைவு என்று சில முற்போக்கு எழுத்தாளர்கள் எழுதுவார்கள்.

உண்மையில் பிரித்தானியாவின் இத்தகைய ஊழல், அதனது ஏகாதிபத்திய தேவைகளை பூர்த்தி செய்யவதற்காக பல நூற்றாண்டுகளாக தொடரும் ஒன்று. இதனால் இந்த ஊழல் சாதாரணமாக்கப்பட்டு விட்டது. ஏகாதிபத்திய ஊழலும் அதன் கூட்டாளியான இராணுவமும் பிரித்தானியாவின் கட்டமைப்புகளின் இயற்கை விதியாகவே மாறிவிட்டது. அதாவது பிரித்தானிய அரசு அண்மைக் காலத்தில் தான் பல்தேசிய கம்பனிகளால் கைப்பற்றப்படவில்லை. நூற்றாண்டுகளாக மீண்டும் மீண்டும் கைப்பற்றப்படுகிறது.

இந்த பல்தேசிய கம்பனிகளின் ஏகாதிபத்திய போக்கிலிருந்து மக்களின் கவனத்தை திருப்புவதே பிரித்தானியாவின் பிரதான அரசியல் கட்சிகளின் வேலையாக நிலைபெற்று விட்டது.

பசுமை புரட்சியை நாடாளுமன்ற செயற்பாடுகளுக்குள் அடக்கி அதை பலமிழக்கச் செய்யும் செயற்பாடுகள் ஆரம்பித்து விட்டன. உலகிலேயே முதலாவதாக சூழலை மாசுபடுத்திய பிரித்தானியா இப்போது தானே சூழலை பாதுகாப்பதில் முன்னிற்பதாகவும் தானே முதன்முதலில் தனது கார்பன் உமிழ்வை சுழியமாக்க போவதாகவும்  மார்தட்டுகிறது. இது எத்துனை பொய்யானது என்பதை பார்ப்போம்.

பிரித்தானியாவுக்கு வெளியே பிரித்தானியா செய்துகொண்டிருக்கும் அழிவுகளை மறைத்தால் மட்டுமே இப்படியானதொரு கருத்தை அது பரப்பலாம். ஆனால் பிரித்தானியாவுக்கு உள்ளேயும் இது பொய்யானதுதான்.399758 சூழலழிவு கிளர்ச்சி - பேராசிரியர் அன்டி ஹிகின் (தமிழில் ந.மாலதி)

2015-2017 வரையான காலத்தில், பல்தேசிய எண்ணெய் கம்பனிகளுக்கு அரசு கொடுக்கும் வரிச்சலூகைகள் அதனிடமிருந்து அரசு பெற்ற வரிகளைவிட அதிகம் என்று அண்மையில் வெளிவந்த ஒரு சூழல் பற்றிய அறிக்கை (Sea Change) சொல்கிறது. வடகடலில் மேலும் எண்ணெய் தேடுவதை ஊக்குவிப்பதற்காகவே இவ்வரிச்சலூகைகள் கொடுக்கப்படுகின்றன.

நிலக்கரி தடைசெய்யப்பட்டதால் குறைக்கப்பட்ட கர்பன் உமிழ்வை விட நிலத்தடியில் இருந்து எண்ணெய் எடுப்பதால் வரும் கர்பன் உமிழ்வு அதிகமானது என்று அதே அறிக்கை சொல்கிறது.

பிரித்தானிய அரசு தன்னை மாற்றி பசுமை கொள்கைகளை பின்பற்றுவதற்கு இதுவரையான சூழலழிவு கிளிர்ச்சி போதுமா? சூழலை பாதுகாப்பதற்காக மாற்றங்கள் உண்டாக்குவதற்கு தேவையான அரசியல் மாற்றங்கள் தான் என்ன?

சூழலழிவு கிளர்ச்சியின் நேரடி நடவடிக்கைகளுக்கும் அப்பால், அவர்கள் அரசியல் கட்சிகளை லாபி செய்வதை ஒரு திட்டமாக முன்வைக்கிறார்கள். இது வலதுசாரி கட்சிகளிடையே நிச்சயமாக பலன் தாராது. இதனால் சூழலழிவு கிளர்ச்சி ஜெரமி கோர்பனின் தொழிலாளர் கட்சியுடன் ஒரு பேசப்படாத கூட்டணியாக மாறும். ஒரு நாடாளமன்ற உறுப்பினராக மட்டுமே இருந்தபோது, இவரும் இவரோடுள்ள சிலரும் முற்போக்கான கொள்கைகைள பேசியது என்னவோ உண்மைதான்.

ஆனால் கட்சி தலைமை ஏற்ற பின்னர் அதிகாரம் தனது வழமையான சீர்கேடுகளை கொண்டுவந்து விட்டது. தொழிலாளர் கட்சியின் தலைவராக இருந்தவர்களில் ஜெரமி கோர்பன் மிகவும் முற்போக்கானவர்தான். இருந்தும் இவருடைய தொழிலாளர் கட்சி பிரித்தானிய பல்தேசிய கம்பனிகளுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தவில்லை. சூழல் பற்றிய விவாதத்தின் போது இவருடைய கட்சியில் எவருமே கர்பன் உமிழ்வை அதிகமாக செய்யும் பல்தேசிய எண்ணெய் கம்பனிகளுக்கு எதிராக கருத்து சொல்லவில்லை. அப்படியான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால் தொழிலாளர் கட்சியின் பசுமை புரட்சியும் எண்ணெய் கம்பனிகள் பூமியை பொரித்தெடுக்க விட்டுவிட்டு, “பிரித்தானிய வேலைகள் பிரித்தானியருக்கே” என்று தேசியம் பேசுவதோடு நின்றுவிடும்.

ஆக சூழலழிவு கிளர்ச்சியும், தொழிலாளர் கட்சியும் அவர்களின் நடவடிக்கையில் சிறிது மாறுபட்டாலும் ஒன்றையே சொல்கிறார்கள். சூழலழிவு கிளர்ச்சி பொதுசன போராட்டத்தை முன்வைத்தாலும் சோசலிச சிந்தனைக்கமைய  உற்பத்தி தனியுடமையாக இருப்பதை மாற்ற விளையவில்லை. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். ஆதலால் ஒற்றுமையை குலைக்கும் பல்தேசிய கம்பனிகளை அழிப்பதைப் பற்றி பேசக் கூடாது. பெரும் சவாலை எதிர்கொள்ளும் போது ஒற்றுமையை வலியுறுத்துவது தேவைதான். ஆனால் எதை தடுக்க விளைகிறோமோ அந்த குற்றத்தை செய்பவர்களுடன் ஒற்றுமை பேணுவதை என்னவென்று சொல்வது.

பல்தேசிய எண்ணெய் கம்பனிகளுடன் கூட்டாக இணைய எண்ணுவது எமது தந்திரோபாயதின் பெரிய தவறு. இது பிழையாக வழிநடத்தப்படவும், தோல்வியை தழுவவும் வழிவகுக்கும். பதிலாக சர்வதேச ஒற்றுமையை தேடி பிரித்தானிய ஏகாதிபத்திய கம்பனிகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும். தேசிய ஒற்றுமை என்கிற கருத்தற்ற ஒற்றுமை இக்கம்பனிகளை தப்பவிடுவது மட்டுமல்லாமல் அவற்றை நாம் பாதுகாக்கவும் வழி செய்யும். இவ்வாறான ஒரு தேசிய ஒற்றுமை, எம்மை சூழல் அழிவிற்கு முகம் கொடுக்கும் உலகின் பெரும்பான்மை மக்களிடமிருந்து பிரிக்கும் போலியான தேசியம்.

அடிப்படையான மாற்றங்கள் எவ்வழியில்?

அடிப்படை மாற்றங்கள் என்று நாம் பேசும் போது அது பற்றிய தெளிவு எமக்கு தேவை. சூழலிய சோசலிச எழுத்துக்கள் ஒரு புதிய கற்பனா உலக ஒழுங்கை பேசுகிறது. இவ்வாறான ஒரு நோக்கு எமக்கு தேவை. நிலத்தடி எண்ணெய் மேல் எமது தங்குநிலையை அழிக்க வேண்டுமானால், மேற்குலகலகில் வாழும் நாம் எமது வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்ற வேண்டும். அதைவிடவும் முக்கியமாக, முதலாளித்துவம் எவ்வாறு நிதி மற்றும் தொழில்நுட்பம் ஊடாக சிறுசிறு மாற்றங்களை செய்து தப்பிக்க விளைகிறது என்பதை நாம் பகுத்தறிய வேண்டும்.

ஜோர்ஜ் மொம்பயற் சொல்வது போல-

எமக்குள்ள தெரிவு இவ்வளவு தான். முதலாளித்துவம் தொடர்வதற்காக பூமியில் உயிரினங்களை அழிப்பதா அல்லது உயிரினங்கள் தொடர்வதற்காக முதாளித்துவத்தை அழிப்பதா என்பதே.

லண்டன் நகரம்தான் உலகின் வளங்கள் உறிஞ்சும் முதலாளித்துவத்தின் மையம் என்பதை நாம் உணர வேண்டும். அப்போதுதான் பிரித்தானியாவின் முதவாளித்துவத்தை நிறுத்துவதன் அவசியம் உணரப்படும். சூழலழிவு கிளர்ச்சி உண்மையானதான இருக்க வேண்டும் என்றால், அழிவுகளை கொடுக்கும் முதலாளித்துவ எண்ணெய் கம்பனிகளின் சக்தியை ஒழிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஏமாற்று கதையாடல்களை வெளியிட்டுக்கொண்டு இச்சக்திகளின் சூழலழிவுகள் தொடரும். இதனால்தான் பூமியை காப்பாற்றுவதற்கு பிரித்தானியாவின் முதலாளி வர்க்கத்தை தோற்கடிக்க வேண்டும்.

தொழிலாளர் கட்சி முன்மொழியும் திட்டமும் மோசமானதுதான். பிரித்தானியாவும் ஐ-அமெரிக்கா செல்லும் பாதையில் தான் போகிறது. சூழலழிவு போராட்டம் மையநீரோட்டத்துடன் ஒத்து போகுமாயிருந்தால், அடிப்படை மாற்றங்கள் உருவாவதற்கு தேவையான கருத்துக்கள் தொலைந்து போகும்.

வெறும் வார்த்தைகளுக்கு அப்பால் போவதாயிருந்தால் இக்கிளர்ச்சி முற்றிலும் புதுவகையான பொருளாதார உற்பத்தி முறைகளை கோர வேண்டும். ஐநாவின் சூழல் கூட்டங்களுக்கு பல்தேசிய எண்ணெய் கம்பனி தலைமைகளும் ஆதரவு வழங்குகின்றன. இயக்கம் வளர்வதற்கு இது துணைபோகும் என்பது சரிதான்.

ஆனால் சூழலழிவின் பெரும் குற்றவாளிகள் பல்தேசிய எண்ணெய் கம்பனிகளும் அவற்றிற்கு நிதிகொடுத்து உதவும் லண்டன் மாநகரமும் தான் என்பதில் நாம் கவனத்தை குவிமையப்படுத்த வேண்டும். பூமியை அழிக்கும் இவர்களின் கட்டமைப்புக்களை அழிப்பதில் நாம் குறியாக இருக்க வேண்டும். வளங்கள் உறிஞ்சும் முதலாளித்துவத்தின் நன்மைகளை பெற்றுக்கொள்ளும் பிரித்தானியாவில் வாழும் எமக்கு இதில் அதிக பொறுப்பும் ஏனையவர்களுக்கு இல்லாத இதை மாற்றுவதற்கான தெரிவுகளும்  உள்ளன.

எமது எதிரிகள் யார் என்பதை நாம் தெரிந்து கொள்வதோடு, எமது நண்பர்கள் யார் என்பதையும் தெரிந்து அவர்களுடன் கூட்டொருமை வளர்க்க வேண்டும். பிரித்தானிய சூழலழிவு கிளர்ச்சி போராட்டத்தில் பெர்தா கார்செரஸ் என்பவரின் பெயர் தாங்கிய பதாகைகள் உயர்த்தப்பட்டன.

ஹொண்டூரஸ் நாட்டை சேர்ந்த பெண்ணான பெர்தா கார்செரஸ் தனது மக்களின் வளங்கள் அகழ்வுகளால் அழிக்கப்படுவதற்கு எதிராக போராடியதால் கொலை செய்யப்பட்டார். சூழலழிவு போராட்டம் சர்வதேச மக்கள் கூட்டொருமை என்ற கருத்தை உள்வாங்க முடியும் என்பதை இந்த உதாரணம் காட்டுகிறது.37799541 303 சூழலழிவு கிளர்ச்சி - பேராசிரியர் அன்டி ஹிகின் (தமிழில் ந.மாலதி)

கொலம்பியா அகதிகள் லண்டனின் சூழலழிவு கிளர்ச்சியில் பங்கு பற்றி சமூக சூழல் ஆர்வலர்கள் கொலை செய்யப்படுவதைப்பற்றி பேசினார்கள். தங்கள் நாட்டிலும் பெர்தா கார்செரஸ் போன்று, இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து போராடும், பெண்கள் தாக்கப்படுவதைப் பற்றியும் பேசினார்கள். வளரும் நாட்டு மக்களையும் இணைத்து சூழலழிவு கிளர்ச்சி சிந்திக்க வேண்டும். அவர்களின் வளங்கள் பல்தேசிய கம்பனிகளால் சுரண்டப்படுவதை முடிவுக்கு கொண்டுவருவதை எமது நோக்கமாக கொள்ளவேண்டும். இப்போதைய தேவை தொழிலாளர் கட்சியின் மெல்லிய பசுமை புரட்சி அல்ல. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு கடும்பச்சை புரட்சி.

சூழல் அழிவை சிறு சிறு செயற்பாடுகளால் தவிர்க்க முடியாது. வங்கிகளும், பல்தேசிய கம்பனிகளும் தாமாகவே அழிந்து போகப் போவதில்லை. தங்கள் சாவு நோக்கிய பாதையில், சிறு சிறு மாற்றங்கள் செய்தாலும், அவர்கள் அப்பாதையை, சாவை நோக்கிய பாதையை மாற்றப் போவதில்லை. பல்தேசிய எண்ணெய் கம்பனிகள் அழிக்கப்பட வேண்டும். இக்கம்பனிகளின் தலைமைச் செயலகங்கள் யாவும் லண்டனின் மையத்திலேயே இருக்கின்றன. இவர்கள்தான் பிரித்தானியாவை ஒரு நூற்றாண்டாக வழிநடத்துகிறார்கள். இத்கைய ஒரு புரட்சிதான் எமக்கு தேவை. உண்மையான சர்வதேச கூட்டொருமையுடன், பிரித்தானிய முதலாளித்துவத்தின் உலகின் வளங்களை சுரண்டும் கார்பரேட்டுகளுக்கு எதிரான புரட்சி. பூமியை காப்பதற்கு இவர்களின் அழிவு அவசியம்.

மொழியாக்கம் செய்தவரின் குறிப்பு-

சூழலழிவு கிளர்ச்சி பற்றிய பேராசியரின் விளக்கத்தை ஈழத்தமிழர் போராட்டத்துடன் சேர்த்து ஈழத்தமிழ்ர்களாகிய நாம் சிந்திக்கலாம். இரண்டையும் அடைவதற்கான வழியாக சர்வதேச கூட்டொருமையே வலியுறுத்தப்படுவதை பார்க்கிறோம். ஈழத்தமிழ் விடுதலையும் சரி, ஏனைய தேசிய இனங்களின் விடுதலையும் சரி உலகின் பொதுசன கவனத்தை அதிகம் ஈர்க்காத விடயம். ஆனால் சூழலழிவு அப்படியல்ல. எம்முடைய போராட்டத்தை இதனுடன் இணைப்பதால் இரண்டு போராட்டங்களும் வீரியம் அடையுமா? சிந்தித்து செயற்படுவோம்.

தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் கிளிநொச்சியில் கைது – வரலாறுகளை அழிக்கும் முயற்சி?

கிளிநொச்சி, மண்டைக்கல்லாறு பகுதியில், 28/07 அன்று புதையல் அகழ்வில் ஈடுபட்ட தென்பகுதியைச் சேர்ந்த ஐவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தென்னிலங்கை அவிசாவளை மற்றும் பாதுக்க பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், 29, 34, 35, 47, 48 வயதையுடையவர்கள் என்றும் இனங்காணப்பட்டுள்ளது.

இதனிடையே வடபகுதியில் புதையல்களை தேடுவது என்ற போர்வையில் செயற்படும் சிங்கள இனத்தவர்கள் தமிழ் மக்களின் வரலாற்று சின்னங்களை திருடுவது மற்றும் அழிப்பதன் மூலம் தமிழ்மக்களின் தொன்மையான மரபுகளை மறைக்க முற்பட்டு வருகின்றனர். இதற்கு சிறீலங்கா அரசும் படையினரும் உதவி வருகின்றனர். வடபகுதி கடலில் சிங்கள மீனவர்களை அனுமதித்து தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை திருடும் சிங்கள தேசம் தமிழ் மக்களின் மரபுச் சின்னங்களையும் அழிக்க முற்பட்டு வருகின்றது.

வெலிசரையில் FBI; அதிகரிக்கும் அமெரிக்கத் தலையீடு – வீரவன்ச

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணைப்பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை, அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சிலர் சந்தித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்று சபையில் தெரிவித்தார்.

2019 ஜூலை 24ஆம் திகதி காலை 9.30-க்கு FBI-ஐ சேர்ந்த இருவர் வெலிசரை கடற்படை முகாமிற்கு சென்று, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை சந்தித்ததாக விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

மேல் மட்டத்திலிருந்து TID அதிகாரிக்கு விடுக்கப்பட்ட உத்தரவிற்கமைய அவர்கள் சந்தேகநபர்களை சந்திக்க அனுமதிக்கப்பட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக FBI-ஐ சேர்ந்தவர்கள் சந்தேகநபர்களிடம் கேள்விகளைக் கேட்டு பதிவு செய்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ACSA, SOFA மற்றும் Millennium Challenge உடன்படிக்கைகள் ஊடாக அமெரிக்க இராணுவத்தினர் இலங்கைக்குள் பிரவேசித்து சுதந்திரமாக நடமாடுவதற்கும் பொருட்கள் மற்றும் ​சேவை வசதிகளை பெறுவதற்கான கேந்திர நிலையமொன்றை உருவாக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழும் நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனைக் கூறியுள்ளார்.

ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ள ACSA இணக்கப்பாடுகளுக்கு அமைய அண்மையில் அமெரிக்க விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்ததுடன், அங்கிருந்து கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த தமது கப்பல்களுக்கும் அவர்கள் பொருட்களை பரிமாறியிருந்தனர்.

அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் சிவில் விமான வசதிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள Western Global நிறுவனத்தின் மிகப்பெரியளவிலான இரண்டு விமானங்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் சில வாரங்களுக்கு முன்னதாக இலங்கை வந்திருந்தன. இதில் ஒரு விமானம் குஆம் தீவிலுள்ள அமெரிக்க முகாமில் இருந்து இலங்கைக்கு வந்திருந்தது.

அமெரிக்க இராணுவம் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் SOFA உடன்படிக்கை தொடர்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் சில திருத்தங்களை இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

அவற்றுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டால் மாத்திரம் SOFA உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதாக பிரதமர் கூறினாலும் ஏற்கனவே இதற்கான அடிப்படை இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர்.

Millennium Challenge Corporation ஊடாகக் கிடைக்கும் 480 மில்லியன் டொலர் நிதியை பயன்படுத்தி காணி சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கை அரச காணி சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் தடுக்கப்பட்டது.

காணி சட்டம் ஊடாக அரச காணிகளை இலகுவாக விடுவித்து திருகோணமலை மற்றும் கொழும்பிற்கு இடையிலான உத்தேச பொருளாதார வலயத்திற்காக கையகப்படுத்தும் நடவடிக்கை இலகுபடுத்தப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர்.

அமெரிக்க அழுத்தங்கள் தொடர்பில் இவ்வாறு கருத்துக்கள் உருவாகி வருகின்ற நிலையில், ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி Clement Nyaletsossi Voule என்பவர் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து பிரதம நீதியரசரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

பாராளுமன்றத்தில் இவரது முயற்சி தொடர்பிலான தகவல்கள் வௌிக்கொணரப்பட்டதை அடுத்து மேல் நீதிமன்ற நீதிபதிகள் சிலரை சந்திப்பதற்கான அவரது முயற்சி தடுக்கப்பட்டது.

இத்தகைய வௌிநாட்டு அழுத்தங்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில் தகவல்கள் உறுதி செய்யப்பட்டன.