ஏமனில் 40 படையினர் பலி

ஏமனில் ராணுவ தளம் மற்றும் காவல் நிலையத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த சில ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அரசு படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதனால் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் அவ்வப்போது கார் குண்டு வெடிப்பு, ஏவுகணை தாக்குதல் போன்ற  செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அந்நாட்டின் ஏடேன் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் கிளர்ச்சியாளர்கள் திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் வீரர்கள் பலர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அதே பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு நிரப்பிய காரை வெடிக்க செய்தனர். இந்த இரு பயங்கரவாத தாக்குதல்களிலும் சிக்கி மொத்தம் 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.