Home Blog Page 28

ஈரான் போரை நிறுத்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை தீர்மானம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்   ஈரானில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதை தடுக்க முற்படும் நகர்வுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது.

பெப்ரவரியில் தொடங்கிய இந்தப் போருக்கு, பொதுவெளியில் ஏற்பட்ட அரிதான எதிர்ப்பாக 4 குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் ஜனநாயக கட்சியினருடன் இணைந்து வாக்களித்தனர். 215 – 208 என்கிற கணக்கில் இந்த வாக்கெடுப்பு வெற்றி பெற்றது.

ட்ரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த பிரதிநிதிகள் சபை மேற்கொள்ளும் நான்காவது முயற்சி இது. இதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லை என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்தத் தீர்மானத்துக்கு குடியரசுக் கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க செனட் சபையின் ஒப்புதலும் தேவைப்படுகிறது. ஒருவேளை செனட் சபையிலும் இந்த தீர்மானம் நிறைவேறினாலும் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் முழுமையாக கட்டுப்படுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவே.

இந்தத் தீர்மானத்தை டிரம்ப் நிராகரிக்கலாம் (வீட்டோ), டிரம்பின் வீட்டோவை ரத்து செய்ய வேண்டுமென்றால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும்.

கடந்த மே மாதம், ஏழு முறை தோல்வியடைந்த பிறகு இதே போன்றதொரு தீர்மானம் செனட் சபையில் மீண்டும் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்னும் முழுமையாக சபை வாக்கெடுப்புக்கு வரவில்லை.

நன்றி-பிபிசி தமிழ்

இலங்கையில் மாணவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்பு!

இலங்கையில் ஐந்தில் ஒரு பாடசாலை மாணவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பிற்காலத்தில் உடல் பருமன் ஏற்படும் அபாயமும் உள்ளது என்றும் அவர் இதன்போது எச்சரித்தார்.

ஐந்து வயதுக்குட்பட்ட மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் குறித்த அண்மைய கணக்கெடுப்புத் தரவுகளை மேற்கோள் காட்டி, வளர்ச்சி குன்றல் 10.1% ஆகவும், எடை குறைவு 16.1% ஆகவும் உள்ளது என்றும், அதே சமயம் அதிக எடை அளவு 0.5% ஆக ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெரியவர்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் விகிதங்கள் குறித்த கவலைகளை அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

உடல் பருமன் 47% பெண்களையும் 30% ஆண்களையும் பாதிக்கிறது என்றும், எதிர்காலத்தில் இந்த புள்ளிவிவரங்கள் முறையே 15% மற்றும் 6% ஆக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இளம் பாடகர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான உள்ளடக்கத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு இளம் கலைஞர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றவியல் விசாரணைப் பணியகமும் சாவகச்சேரி தலைமையக  காவல்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

மருந்து பொருட்களின் விலைகள் மீண்டும் உயரும் அபாயம்!

டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதைத் தொடர்ந்து, மருந்துகளின் விலைகளையும் அதிகரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை (NMRA) தெரிவித்துள்ளது.

இதற்குத் தேவையான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அதிகாரசபையின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் விலைகளை அதிகரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

அரசாங்க வர்த்தமானி மூலம் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 60 மருந்து வகைகளின் விலைகளையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம மேலும் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் தலைவர்,

“டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பதை நாம் அறிவோம். அதற்கமைய, மருந்துகளின் விலைகளும் அதிகரிக்கக்கூடும். இது குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நமது நாட்டில் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளே பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து மருந்துகளின் விலைகளும் அதிகரிக்காது, ஆனால் சில குறிப்பிட்ட மருந்துகளின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படும்.”

யாழ். தீவகங்களுக்கான இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டங்கள் ஆரம்பம் – இந்திய தூதர் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தின் அனலைதீவு, நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய மூன்று தீவுகளிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தியாவின் 11 மில்லியன் டொலர் முழுமையான மானிய உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டத்தின் முதற்கட்ட செயல்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவில் அமைந்துள்ள புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்ட தளத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு, அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் தனது உத்தியோகபூர்வ சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

நிலையானதொரு எதிர்காலத்துக்கு வலுவூட்டும் நோக்கில், யாழ்ப்பாணத்துக்கு அப்பாலுள்ள நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளிலும் இத்திட்டம் தற்போது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டமானது சூரிய சக்தி, காற்றாலை மற்றும் மின்கலச் சேமிப்பு ஆகியவற்றுடன், அவசரத் தேவைக்கான டீசல் மின்பிறப்பாக்கி வசதிகளையும் உள்ளடக்கியதாக, 4.3 மெகாவோல்ட் மின் உற்பத்தித் திறனைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்ட செயல்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், முழுமையான செயல்பாடுகள் அனைத்தும் இவ்வாண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசாங்கத்தின் 11 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்த மனிதாபிமானப் பங்களிப்பானது, பிரதான மின்விநியோகக் கட்டமைப்புடன் இணையாத இத்தீவுப் பகுதி மக்களுக்கு நம்பகமான மற்றும் தூய்மையான பசுமை ஆற்றலை வழங்குவதை உறுதி செய்யும்.

இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்

பண்டைய காலம் தொட்டு பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டைப் பாதுகாத்தது போல், தற்போதைய சவால்களையும் எதிர்கொண்டு நமது நாட்டின் இறையாண்மையைத் தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு கங்காராம விகாரையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘வெசாக் வலயம்’ ஆன்மீக நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

வரலாறு நெடுகிலும், பண்டைய காலம் தொட்டு பல்வேறு சவால்கள் நாட்டிற்கு வந்த தருணங்களில் எல்லாம் அப்போதைய அரசர்களும் அமைச்சர்களும் ஒன்றிணைந்து நின்று நாட்டைப் பாதுகாத்தனர். ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்து, இறையாண்மை மிக்க நாடாகச் செயல்பட்டு வரும் இந்தத் தருணத்தில், அந்த இறையாண்மையைத் தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் ஒன்றாய் இணைந்து செயலாற்ற வேண்டும். இதன் பொருட்டு சகல தரப்பினரும் கைகோர்த்து இந்நாட்டைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.

புத்த தர்மத்தின் உயர்வுக்காகவும், அதன் நிலைபேறு தன்மைக்காகவும் முன்னெடுக்கப்படும் சமயச் செயற்பாடுகள் தற்காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக அமைந்துள்ளன. மறைந்த கலபொல ஞானேஸ்வர தேரர் பல கடினமான பாதைகளைக் கடந்து இந்த கங்காராம விகாரையை அபிவிருத்தி செய்தார்.

தற்போது அஸ்ஸஜி நாயக தேரரின் சிறந்த தலைமையில் அந்தப் பணிகள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, இந்த உன்னத வெசாக் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில், புத்த பெருமானின் மும்மங்கள நிகழ்வுகளை மனதிருத்தி, நன்மைகளை நிலைநிறுத்துவதற்கும் சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கும் நாம் அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பதைப் போலவே நாட்டின் ஒருமைப்பாடு, ஆள்புல ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் அரசியல் சுதந்திரம் என்பவற்றையும் எவ்வித சமரசமுமின்றி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

சிறுபோக நெல் அறுவடைக்காலம் நெருங்கியுள்ள சூழலில், தாமதமின்றி துரிதகதியில் விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை (03) இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சிறுபோக நெல் அறுவடைக்காலம் நெருங்கிவருகின்றது. இந்நிலையில் அறுவடை செய்யப்படுகின்ற நெல்லை விவசாயிகளிடமிருந்து துரிதகதியில் கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா? அல்லது கடந்த காலங்களைப்போன்று நெற்கொள்வனவில் தாமதங்கள் ஏற்படுமா?

அத்தோடு சிறுபோக நெல்லை விவசாயிகளிடமிருந்து  கொள்வனவுசெய்து களஞ்சியப்படுத்துவதற்கு  நெல்சந்தைப்படுத்தல் சபைக்குரிய களஞ்சியசாலைகளில் இடவசதிகள் உள்ளதா? இந்த விடயங்கள் தொடர்பில் உரியதரப்பினர் விளக்கங்களைத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இங்குள்ள நெற் களஞ்சியசாலைகளில் நெல் நிரம்பியிருப்பதாக அறியமுடிகின்றது.

அப்படியிருக்கையில் சிறுபோகத்தில் அறுவடைசெய்யப்படுகின்ற நெல்லை விவசாயிகளிடம் கொள்வனவு செய்து எங்கே களஞ்சியப்படுத்தி வைக்கப் போகின்றீர்களென்பது குறித்தும் உரியதரப்பினர் விளக்கந்தரவைண்டுமெனத் தெரிவித்தார்.

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் பதிலளிக்கையில்,

இந்தவிடயம் தொடர்பாக விவசாயத்திணைக்கள பணிப்பாளர் நாயகம், நெல்சந்தைப்படுத்தல்சபையினர் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயங்கள் தொடர்பில் தெரிவித்திருக்கின்றோம்.

பெரும்பாலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென நம்புகின்றோம்.

குறிப்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில், களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்லை சந்தைப்படுத்தவேண்டிய தேவை இருக்கின்றது. நெல் சந்தைப்படுத்தல் தாமதப்படுவதால்தான், விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதிலும் தாமதங்கள் ஏற்படுகின்றன.

இந்த விடயங்கள் தொடர்பில் உரியதரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன் இதன்போது பதிலளித்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தவிடயத்தில் கூடுதல் கவனஞ் செலுத்தப்படவேண்டும். ஏன்எனில் இவ்வாறு சிறுபோக நெல் கொள்வனவில் தாமதங்கள் ஏற்பட்டால் அனைத்து விவசாயிகளும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும்.

அவ்வாறு விவசாயிகள் பாதிப்புக்களுக்குள்ளாகாதவாறு, விவசாயிகள் பயன் பெறக்கூடிய வழிவகைகளை மேற்கெள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

பிள்ளையானின் மனு மீதான விசாரணை நிறைவு: தீர்ப்பு ஒத்திவைப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்து, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதை சவாலுக்குட்படுத்தி பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான வழக்கு விசாரணையை நிறைவு செய்த உயர்நீதிமன்றம், வழக்கு தீர்ப்பு அறிவிப்பதை ஒத்திவைத்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன, அர்ஜூன ஒபேசேகர கிஹான் குலதுங்க ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா ‘ பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனது சேவை பெறுநரை கைது செய்து, தொடர்ச்சியாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமான செயற்பாடு’ என்று விடயங்களை முன்வைத்தார்.

தமது சேவை பெறுநரை கைது செய்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்படுவதற்கான காரணத்தையும் அவருக்கு குறிப்பிடவில்லை. இது அடிப்படை மனித உரிமை மீறலாகும். என்று அவர் வாதிட்டார்.

அத்துடன் 19 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் விவகாரம் தொடர்பில் கைது செய்ததாக குற்றப்புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டாலும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அந்த விடயத்துக்காக கைது செய்வதற்கு எந்தவொரு சட்ட ஏற்பாடுகளும் கிடையாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் உத்தரவை பெறுவதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதிக்கு போதுமான விடயங்களை முன்வைக்கவில்லை.

ஆகவே தடுப்புக் காவலுக்கான அனுமதி பெற்றுக்கொண்ட விதமும் முற்றிலும் சட்டவிரோதமானது என்று பிள்ளையானின் சட்டத்தரணி சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியர் நாயகம் ‘ குறித்த மனுதாரர் கைது செய்யப்படும் போது குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்யப்படுவதற்கான காரணத்தை வாய்மூலமாக குறிப்பிட்டுள்ளார்கள். அதன் பின்னர் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள்” என்று தெரிவித்தார்

பிள்ளையான் என்ற குறித்த மனுதாரர் பொலன்னறுவை செவனப்பிட்டிய பகுதியில் சட்டவிரோதமான முறையில் நடத்திச் சென்ற முகாமில் தனது எதிர்வாதிகளையும் மேலும் பலரையும் அடைத்து வைத்து சித்திரவதைச் செய்துள்ளார்.

இந்த முகாமில் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சுப்ரமணியம் ரவீந்திரநாத் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் சாட்சியம் உள்ளது என்றும் பிரதி மன்றாடியர் நாயகம் வெளிப்படுத்தினார்.

இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் நீதவானிடம் இரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்கள். தீவிர விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டே பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பிரதி மன்றாடியர் நாயகம் தெரிவித்தார்

இருதரப்பினாலும் முன்வைக்கப்பட்ட வாய்மூல சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், எழுத்துமூலமான விடயங்களை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு இருதரப்புக்கும் அறிவுறுத்தியது.

சாட்சியாளர்களின் வாக்குமூல விடயங்களை இரகசியமான முறையில் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியர் நாயகத்துக்கு நீதியரசர்கள் குழாம் அறிவுறுத்தியது.

2.5 மில்லியன் டொலர் முறைகேடு தொடர்பான நிதி அமைச்சின் அறிக்கையை ஹர்ஷ டி சில்வா நிராகரிப்பு

நிதியமைச்சின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அறிக்கை, தனக்குத் தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்கப்பட்டதை அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நிராகரித்துள்ளார்.

அத்துடன், இந்த அறிக்கையை குழுவின் பரிசீலனைக்காக பாராளுமன்றத்தின் ஊடாக உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிதிப் பரிமாற்றம் தொடர்பான விரிவான அறிக்கை மற்றும் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சின் செயலாளரிடம் அரசாங்க நிதி பற்றிய குழு முன்னதாகக் கோரியிருந்தது.

இதற்காக அமைச்சுக்கு நான்கு வார கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்த நிலையில், அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு அது ஹர்ஷ டி சில்வாவின் தனிப்பட்ட பார்வைக்காக அவருக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், “குறித்த அறிக்கை அரசாங்க நிதி பற்றிய குழுவினால் கோரப்பட்டதே தவிர தனது தனிப்பட்ட நலனுக்காக அல்ல என்பதால், இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, “நான் மக்களின் பிரதிநிதி, அத்துடன் தற்போது அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றுகிறேன். இந்த அறிக்கை குழுவினர் கூடி ஆராய்ந்து விவாதிப்பதற்கே கோரப்பட்டது, எனது தனிப்பட்ட பார்வைக்காக அல்ல” என்று குறிப்பிட்டார்.

தனிப்பட்ட சம்பவத்தை இனவாதமாக்கும் முயற்சிக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஒட்டுமொத்தத் தமிழ் மாணவர் சமூகத்தின் மீதும் பொறுப்பைச் சுமத்த முயற்சிப்பதைத் தாம் கண்டிப்பதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு சிலரால் சேதமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எமது பீடத்தைச் சேர்ந்த சிங்கள மாணவர்களால் வெசாக் விளக்குகள் காட்சிப்படுத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, ஒன்றியத்தின் ஒப்புதல் மற்றும் ஆதரவுடன் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியை எளிதாக்குவதிலும் அது வெற்றிகரமாக நடைபெறுவதை உறுதி செய்வதிலும் தமிழ் மாணவர்கள் தங்களின் ஒத்துழைப்பையும் உதவியையும் முனைப்புடன் வழங்கினர்.

மாணவர்கள் இந்த முக்கியமான சமய மற்றும் பண்பாட்டு விழாவைக் கொண்டாடுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கச் சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன.

துரதிர்ஷ்டவசமாக ஒரு சில நபர்களால் வெசாக் கூடு சேதப்படுத்தப்பட்டுள்ளது, இந்த நாசவேலையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இதற்கு நேரடியாகப் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனக் கோருவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

சில தனிநபர்கள் இந்தச் சம்பவத்தைப் பொதுமைப்படுத்தி ஒட்டுமொத்தத் தமிழ் மாணவர் சமூகத்தின் மீதும் பொறுப்பைச் சுமத்த முயற்சிப்பதை கண்டிப்பதுடன் தங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இத்தகைய குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை, தவறாக வழிநடத்துபவை, குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

“அதேசமயம், இந்தத் தனிப்பட்ட சம்பவத்தை ஒரு இனப் பிரச்சினையாக மாற்றும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் நிராகரிக்கிறோம்” என்று யாழ். முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

“ஒரு சில தனிநபர்களின் செயல்களைச் சமூகங்களுக்கு இடையே பிளவுகளை உருவாக்கவோ அல்லது நமது பீட மாணவர்களிடையே நிலவும் ஒற்றுமையையும் பரஸ்பர மரியாதையையும் சீர்குலைக்கவோ பயன்படுத்தக் கூடாது.

அனைத்து மாணவர்களும் பொறுப்புடன் செயல்படுமாறும், தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நியாயமான விசாரணை நடத்த அனுமதிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்” என்றும் யாழ். முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக்கூடு சேதமாக்கப்பட்டமைக்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

யாழ். முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையை வரவேற்று கருத்துரைத்துள்ள அவர், சகல மதங்களினதும் பண்பாட்டு மற்றும் சமய உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.