பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்து, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதை சவாலுக்குட்படுத்தி பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான வழக்கு விசாரணையை நிறைவு செய்த உயர்நீதிமன்றம், வழக்கு தீர்ப்பு அறிவிப்பதை ஒத்திவைத்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன, அர்ஜூன ஒபேசேகர கிஹான் குலதுங்க ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா ‘ பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனது சேவை பெறுநரை கைது செய்து, தொடர்ச்சியாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமான செயற்பாடு’ என்று விடயங்களை முன்வைத்தார்.
தமது சேவை பெறுநரை கைது செய்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்படுவதற்கான காரணத்தையும் அவருக்கு குறிப்பிடவில்லை. இது அடிப்படை மனித உரிமை மீறலாகும். என்று அவர் வாதிட்டார்.
அத்துடன் 19 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் விவகாரம் தொடர்பில் கைது செய்ததாக குற்றப்புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டாலும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அந்த விடயத்துக்காக கைது செய்வதற்கு எந்தவொரு சட்ட ஏற்பாடுகளும் கிடையாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் உத்தரவை பெறுவதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதிக்கு போதுமான விடயங்களை முன்வைக்கவில்லை.
ஆகவே தடுப்புக் காவலுக்கான அனுமதி பெற்றுக்கொண்ட விதமும் முற்றிலும் சட்டவிரோதமானது என்று பிள்ளையானின் சட்டத்தரணி சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியர் நாயகம் ‘ குறித்த மனுதாரர் கைது செய்யப்படும் போது குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்யப்படுவதற்கான காரணத்தை வாய்மூலமாக குறிப்பிட்டுள்ளார்கள். அதன் பின்னர் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள்” என்று தெரிவித்தார்
பிள்ளையான் என்ற குறித்த மனுதாரர் பொலன்னறுவை செவனப்பிட்டிய பகுதியில் சட்டவிரோதமான முறையில் நடத்திச் சென்ற முகாமில் தனது எதிர்வாதிகளையும் மேலும் பலரையும் அடைத்து வைத்து சித்திரவதைச் செய்துள்ளார்.
இந்த முகாமில் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சுப்ரமணியம் ரவீந்திரநாத் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் சாட்சியம் உள்ளது என்றும் பிரதி மன்றாடியர் நாயகம் வெளிப்படுத்தினார்.
இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் நீதவானிடம் இரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்கள். தீவிர விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டே பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பிரதி மன்றாடியர் நாயகம் தெரிவித்தார்
இருதரப்பினாலும் முன்வைக்கப்பட்ட வாய்மூல சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், எழுத்துமூலமான விடயங்களை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு இருதரப்புக்கும் அறிவுறுத்தியது.
சாட்சியாளர்களின் வாக்குமூல விடயங்களை இரகசியமான முறையில் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியர் நாயகத்துக்கு நீதியரசர்கள் குழாம் அறிவுறுத்தியது.



