கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமெரிக்கப் பிரஜை கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அமெரிக்கப் பிரஜை ஒருவர் துப்பாக்கி ரவைகள் மற்றும் மகசீன் என்பவற்றை வைத்திருந்ததாக அங்கு வைத்து விமானப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அமெரிக்கர் நேற்றிரவு (28) கைது செய்யப்பட்டதாக விமான நிலைய பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபரான அமெரிக்க பயணி ஒரு பெண்ணுடன் சென்னை செல்வதற்காக நேற்று இரவு 8.25 மணியளவில் விமான நிலையத்துக்கு வந்துள்ளார்.

விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் உள்ள ஸ்கிரீனிங் இயந்திரம் வழியாகச் சென்றபோது, ​​அவர் வெடிபொருட்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

அவரிடம் இருந்து 9மி.மீ. ரக 10 துப்பாக்கி ரவைகள் மற்றும் ஒரு மகசீன் என்பவற்றை விமானப்படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவருடன் வந்த பெண்ணுக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பை வழங்க விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.