இலங்கை நிராகரித்த இலகு இரயில் திட்டம் பங்களாதேஷூக்கு

பங்களாதேஷ் வருடத்தின் அதிகளவான காலப்பகுதியில் இயற்கை அனர்த்தங்களால் அதிகளவில் நெருக்கடியை எதிர்கொள்கிறது. எனினும், அந்நாடு இன்று அதீத வளர்ச்சிப் பாதையில் பயணிக்கின்றது.

உலக நாடுகளிடமிருந்து கடன் பெற்று, நாட்டின் வளங்களை விற்று, பங்களாதேஷ் வளர்ச்சியை நோக்கி பயணிக்கவில்லை. 2026 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தி அடைந்த நாடாக உருவாகும் இலக்கு பங்களாதேஷூக்கு உள்ளது.

இலங்கை வேண்டாம் என கூறி நிராகரித்த இலகு ரயில் அபிவிருத்தி திட்டத்தை பங்களாதேஷின் டாக்கா நகரில் ஜப்பான் ஆரம்பித்துள்ளது. பங்களாதேஷ் ஜனாதிபதி மக்களிடம் இதனை நேற்று உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

3.3 பில்லியன் ரூபாவில் 75% ஜப்பான் கடன் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கால அவகாசத்தின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட இந்த கடனுக்கு ஜப்பான் அறவிடுகின்ற வட்டி 0.0 வீதமாகும்!

இந்த இலகு ரயில் திட்டத்தின் மூலம் டாக்காவின் உத்தராவிலிருந்து அகர்கான் வரையான 12 கிலோமீட்டர் தூரத்தை 10 நிமிடங்களில் கடக்க முடியும். இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 2030 ஆம் ஆண்டளவில் மேலும் ஆறு ரயில் திட்டங்களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் இந்த திட்டத்தை இலங்கைக்கு கையளிக்க இணக்கம் தெரிவித்தது.அதற்கான சகல நிதி ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஸவின் செயலாளரின் கடிதத்தின் மூலம் குறித்த திட்டம் இரத்து செய்யப்பட்டது.

0.01% அடிப்படையிலும்12 வருட கால அவகாசத்தின் அடிப்படையிலும் திருப்பி செலுத்தும் கடன் முறைமைக்கு அமைய ஜப்பானால் இந்த திட்டம் கையளிக்கப்படவிருந்தது.

அவசரமாக திட்டம் இரத்து செய்யப்பட்டமையினால்  5978 மில்லியன் ரூபா வீணாக்கப்பட்டது. திட்டத்தின் ஆலோசனை நிறுவனம் கோரிய 5169 மில்லியன் ரூபா நிதியை செலுத்த வேண்டியேற்பட்டுள்ளதுடன், இறுதியில் அந்த சுமையும் இலங்கை மீது வீழ்ந்தது.