இலங்கை மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை – IFRC

இலங்கையில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை குழு சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி சமூகத்திலுள்ள அனைவரையும் பாதித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை குழு குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளன.

குறித்த அமைப்பின் தரவுகளுக்கு அமைய, நாட்டில் 5.7 மில்லியன் மக்கள், மொத்த சனத்தொகையில் 26 வீதம் அல்லது அதற்கும் மேற்பட்ட அளவானவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் இலங்கை சனத்தொகையில் 4.9 மில்லியன் அதாவது 22 சதவீதமான மக்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

5 வயதுக்குட்பட்ட சிறார்கள் போஷாக்கு குறைபாட்டை எதிர்கொள்வதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் நாட்டிலுளள 11 வீதமான குடும்பங்கள் வருமானத்தை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சங்கம், வருமான மட்டம் 62 வீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மொத்த சனத்தொகையில் 85 வீதமானவர்கள் தற்போதைய சூழலுக்கு ஏற்றாற்போல மாறியுள்ளதாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கம், சர்வதேச செஞ்சிலுவை குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.