பேரறிவாளனின் விடுப்புக் காலம் மேலும் 30 நாட்கள் நீடிப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ஏழுபேரில் ஒருவரான பேரறிவாளன் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு  சிறையில் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்க வேண்டும் என்றும் அவரின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியதையடுத்து, பேரறிவாளனுக்கு 30 நாள் விடுப்பு வழங்கப்பட்டிருந்தது. அந்த விடுப்பு தற்போது மேலும் 30 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. 

பேரறிவாளனுக்கு மேலும் ஒருமாத காலம் விடுப்பு நீட்டிப்பு செய்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அற்புதம்மாள் தனது ருவிட்டர் பக்கத்தில், “30 ஆண்டுகளின் தனிமை சிறைவாசம் தந்துவிட்ட மன அழுத்தம், அதனால் ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக தொற்று, முடக்குவாதம், வயிற்றுக் கோளாறு என தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில் கொரோனா தொற்று காலத்தில் சிறையில் இருப்பது பேராபத்து என சிறை அரசு மருத்துவர் அளித்த ஆலோசனையை ஏற்று, வீட்டிலிருந்தபடி தொடர் மருத்துவம் பெற விடுப்பு வழங்கப்பட்டு தற்போதுதான் மருத்துவம் தொடங்கி உள்ள சூழலில் அது தடைப்படாமல் தொடர்ந்திடும் வகையில் அறிவுக்கு விடுப்பு நீட்டிப்பினை கனிவுடன் வழங்கிய மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.