திருச்சி முகாம் போராட்ட அகதிகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்

கடந்த ஜூன் 9 ஆம் திகதி முதல் இன்று வரை திருச்சி முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் கடந்த 20 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை இன்று தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையகத்தின் ஆணையாளர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக உத்தரவாதம் அளித்ததையடுத்து, அவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.

தங்கள் மீதான வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டு, தண்டனைக் காலம் முடிந்தும், சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போராட்டதினை நடத்தி வந்தனர்.

அவர்களின் போராட்டத்தைக் குறித்து அறிந்து கொள்ள அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையகத்தின் ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் நேரில் சந்தித்து அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் அவர்களின் கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்து, அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையில் இலங்கைத் தமிழ் அகதிகள் தங்களது காத்திருப்புப் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டுள்ளனர்.