வட மாகாண கடல்வளத்தை சீனர்கள் சுரண்டும் அபாயம்! – கூட்டமைப்பு கடும் எச்சரிக்கை

வடக்கு மாகாண கடல் வளத்தை வெளிமாவட்ட மீனவர்கள் கையகப்படுத்தும் நிலை மாறி, தற்போது சீனர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் சுரண்டும் நிலை உருவாகியுள்ளது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பூநகரி, கௌதாரிமுனை கடல் பரப்பில் கடலட்டை வளர்ப்பில் ஈடுபடும் சீன நிறுவனம் தொடர்பில் ஆராய்வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் நேற்று குறித்த பகுதிக்குச் சென்றிருந்தனர்.

இதையடுத்து, ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், “சீன நிறுவனம் கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விடயத்தை பார்ப்பதற்காக நாங்கள் சென்றிருந்தோம். அந்த இடம் மக்களுக்குத் தெரியாத மறைவிடமாக அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தினர் அரியாலையில் தமது அலுவலகத்தை வைத்துள்ளனர் என்ற விபரத்தையும் நாங்கள் சேகரித்துள்ளோம். இவர்களுக்கு சட்டவிரோதமான அனுமதி கடற்றொழில் அமைச்சால் வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இந்தத் தொழிலில் ஈடுபடுவதற்கு ஒருவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு அப்பால், இந்த நாட்டிலே சீன ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சியாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம்.

நேற்று முன்தினம் குடத்தனையில் உள்ள எனது வீட்டுக்குச் சென்று திரும்புகின்ற போது வீதி அபிவிருத்தி பணிகளில் சீனர்கள் நின்றார்கள். நான் படம் எடுத்து வைத்துள்ளேன். வீதிவேலை செய்வதற்குத் தொழிலாளிகள் கூட எங்கள் ஊரில் எடுக்காமல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்கின்றார்கள்” என்றார்.