இறுதிச்சடங்கை நடத்த பிறிதொரு நாட்டிடம் இடம்கோருவது இழிவு – மங்கள சமரவீர சாடல்

நாட்டின் பிரஜையொருவரின் இறுதிச்சடங்குகளைச் செய்ய உதவுங்கள் என்று பிறிதொரு நாட்டிடம் இடம்கோருவது மிகவும் இழிவான செயல் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கடுமையாகச் சாடியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் இறுதிக்கிரியைகளை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய மாலைதீவில் நடத்துவது தொடர்பில் அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி ஆராய்ந்து வருகிறார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷஹீட் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார்.

அந்தப் பதிவை மேற்கோள் காட்டி மங்கள சமரவீர தனது ருவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே இவ்வாறு சாடியுள்ளார். அவர் அந்தப் பதிவில் மேலும்
தெரிவித்தவை வருமாறு:

“மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கூறியிருப்பது உண்மையெனும் பட்சத்தில் எமது நாட்டின் பிரஜையொருவரின் இறுதிச்சடங்குகளைச் செய்ய உதவுங்கள் என்று பிறிதொரு நாட்டிடம் கோருவது மிகவும் இழிவானதாகும். நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் தமது நம்பிக்கைகளுக்கு அமைய இறுதிச்சடங்குகளை நடத்த உரிமையைக்கொண்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.