யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93 ஆக உயர்வடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை, தும்பளையைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்புத் தொடர்பில் கேள்வியுற்ற பொதுச் சுகாதாரப் பரிசோதகர் நேற்று முன்தினம் காலை அங்கு சென்றுள்ளார். சந்தேகம் கொண்டு உயிரிழந்தவரின் சடலத்தை பி.சி.ஆர். பரிசோதனைக்கு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன் வீட்டிலிருந்தவர்களிடம் மாதிரிகளைப் பெற்றனர்.
அதன் பரிசோதனை முடிவுகளில் உயிரிழந்தவர் மற்றும் அவரது குடும்பத்தில் மூவருக்குத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் நேற்று முன்தினம் காலை மரண வீட்டுக்குச் சென்றவர்கள் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.