கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தினால் காணிகள் தொடர்ந்து அபகரிப்பு

காணிகள் தொடர்ந்து அபகரிப்பு

காணிகள் தொடர்ந்து அபகரிப்பு: கிளிநொச்சி மாவட்டத்தில் வன்னேரிக்குளம், குஞ்சுக் குளம், ஆனைவிழுந்தான் மற்றும் பூநகரி முட்கொம்பன் ஆகிய பகுதிகளில் வனவளத் திணைக்களத்தினால் பொது மக்களின் காணிகள் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்டு எல்லையிடப்படுவதாக  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப் பள்ளி ஆகிய பகுதிகளில் கடந்த காலங்களில் பொது மக்கள் பயன்படுத்திய பயிர் செய்கை காணிகள் தனியார் காணிகள் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த மிகப் பழம் பெரும் கிராமங்களான குஞ்சுக்குளம் திக்காய் மண்ணியா குளம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு சொந்தமான 400 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதிகள் வனவளத்திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டுள்ளன.

இவ்வாறு எல்லையிடப்பட்ட தமது காணிகளை விடுவித்து தருமாறு பிரதேச விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போன்று பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முட்கொம்பன் பகுதியிலும் வனவளத்திணைக்களத்தினால் பொதுமக்கள் பயன்பாட்டில் பயிர்செய்கை மேற்கொள்ளும் காணிகள் எல்லையிடப்பட்டுள்ளன.

இவ்வாறு வனவளத்திணைக்களம் ஆக்கிரமித்துள்ள குறித்த காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tamil News