பாராளுமன்றத்திற்குள் தமக்கு எதிராக அநாகரிகமான முறையில் வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை, பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு இராமநாதன் அர்ச்சுனா சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், “கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது உரையை முடித்த பின்னர், நாற்காலியில் அமர்ந்துகொண்டு தம்மை நோக்கி மிகக் கேவலமான மற்றும் தவறான வார்த்தைகளைப் பிரயோகித்தார்” என்று குற்றஞ்சாட்டினார்.
இந்தச் சம்பவம் பாராளுமன்றக் ஒளிப்படக் கருவிகளில் பதிவாகியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் அடியாட்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஐவருக்கு எதிராக, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் தம்மீதான உயிர் அச்சுறுத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்ட இராமநாதன் அர்ச்சுனா, தமக்கு பலமுறை உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கக் கோவையின் விதிகளுக்கு அமைய, இந்த விவகாரத்தை பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவிற்கு பாரப்படுத்துமாறு அவர் கோரினார்.
மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நபர் அதே சிறப்புரிமைக் குழுவில் உறுப்பினராக இருப்பது அக்குழுவின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தும் என்பதால், விசாரணைகள் நிறைவடையும் வரை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை குழுவிலிருந்து இடைநீக்கம் செய்ய சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



