இலங்கைக்கு இந்தியா பாரிய உதவிகளை வழங்குவது சாத்தியமில்லை-முன்னாள் இந்திய தூதுவர்

இலங்கைக்கு இந்தியா பாரிய  உதவிகளை வழங்குவது சாத்தியமில்லை என தெரிவித்துள்ள இலங்கைக்கான முன்னாள் இந்திய தூதுவர் அசோக் காந்த இந்தியா எச்சரிக்கையாகயிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவுவதற்கான 6பில்லியன் டொலர் உதவி, முன்னொருபோதும் இல்லாதது.  இந்தியா வேறு எந்த நாட்டிற்கும் இவ்வளவு பெரும் உதவியை வழங்கியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்வாறான உதவி சாத்தியமற்றது என தெரிவித்துள்ள அவர் பொருளாதார நெருக்கடியில்சிக்கியுள்ள நாட்டிற்கு இந்தியாவால் எவ்வளவு பொருளாதார உதவியை வழங்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதில் இந்தியா சர்வதேசசமூகத்தை  அணிதிரட்டும் இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை வேகமாக பெற்றுக்கொடுக்கும் நடவடிக்களை மேற்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சீனா குறித்த கற்கை நெறிகளிற்கான சென்னை நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடரும் உக்ரைன் யுத்தம் மேற்குலகம் கடன்நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகளிற்கு உதவமுடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி கடந்த சில வருடங்களாகவே உருவாகி வந்தவொன்று என சுட்டிக்காட்டிய அசோக் காந்த கட்டமைப்பு மற்றும் பாரம்பரியம் குறித்த சிக்கல்களின் கலவையே இந்த நெருக்கடி என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.