தென்பகுதி கலவரங்களுக்கு உடனடி நிவாரணம் தமிழர்களுக்கு….? – சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கேள்வி

அண்மையில் காலிமுகத்திடலில் அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர் கூட்டத்திற்கு எதிராக போராட்டக்காரர்களால் மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதல் தொடர்பான மதிப்பீடுகளையும் நிவாரணங்களையும் அரசாங்கம் உடனடியாக அறிவித்துள்ள நிலையில், இதுகாலம்வரை தமிழ் மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு உரிய மதிப்பீடுகளோ, விசாரணைகளோ, நிவாரணங்களோ வழங்கப்பட்டதா? என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

இலங்கையில் 1956ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் அரச கரும மொழி சட்டம் கொண்டுவரப்பட்டபொழுது அதனைத் தமிழர்கள் எதிர்த்தனர். இதற்கு எதிர்வினையாக இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் நூற்றுக்கணக்கான கோடி ரூபா சொத்துகளை அழித்ததுடன் பலநூறு தமிழர்களையும் கொன்று குவித்தது. ஆனால், இன்றுவரை இது தொடர்பான விசாரணைகளும் நடைபெறவில்லை, நிவாரணமும் கிடைக்கவில்லை.

1977ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தன தமிழ் மக்கள்மீது வன்முறையை ஏவிவிட்டார். இதன்போதும் பல்லாயிரக்கணக்கான கோடிரூபா சொத்துகள் அழிக்கப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கான தென்பகுதி வாழ் தமிழர்கள் தமது தாயகமான வடக்கு-கிழக்கிற்கு விரட்டியடிக்கப்பட்டனர். இதுதொடர்பான விசாரணைகளும் நடைபெறவில்லை, நிவாரணமும் கிடைக்கவில்லை.

மீண்டும் 1983ஆம் ஆண்டும் தமிழர்கள்மீது அரச அனுசரணையுடன் பாரிய ஒரு வன்முறைத்தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், திட்டமிட்ட வகையில் அவர்களது வீடுகளும், வியாபார நிறுவனங்களும் கொள்ளையிடப்பட்டு தீயூட்டப்பட்டன.

இந்த வன்முறைகளிலிருந்து தமிழர்கள் தம்மைத் தற்காத்துக்கொள்ள தனிநாடுகோரி இலங்கைப் படையினருக்கு எதிராக நீண்ட ஆயுதப்போராட்டத்தை நடத்தினர். அன்றைய காலகட்டங்களில் வடக்கு-கிழக்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டு, அவர்களின் குடும்பங்கள் ஏதுமற்றவர்களாக, எஞ்சியவர்களின் உயிரைக் கையில் பிடித்தபடி நிற்கதியாகி நடுத்தெருவுக்கு வந்தனர்.

இறுதியில், 2009இல் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதுடன், முள்ளிவாய்க்காலில் விவசாயிகளின் நூற்றுக்கணக்கான உழவு இயந்திரங்கள், கனரக வாகனங்கள்,இயந்திரங்கள், மகிழூந்துகள், உந்துருளிகள், துவிச்சக்கர வண்டிகள் என்பன கைவிடப்பட்டு மக்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டனர். அவர்கள் மீண்டு வந்தபொழுது அவர்களுக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் உடமைகள் எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

வடக்கு-கிழக்கில் யுத்தத்தின் பின்னர் வங்கிகளில் வைப்பிலடப்பட்டிருந்த பல்லாயிரம் கோடி பெறுமதியான தங்கமும், வைப்பிலிடப்பட்டிருந்த பல்லாயிரம்கோடி பணமும் அரசாங்கத்தினால் கபளீகரம் செய்யப்பட்டது. இவை தொடர்பாக அன்றிலிருந்து இன்றுவரை எந்தவிதமான விசாரணைகளோ நிவாரணங்களோ எமது மக்களுக்குக் கிடைக்கவில்லை.

அரசாங்கத்தின் தமிழ் மக்கள் விரோத தவறான அணுகுமுறை மற்றும் பொருளாதாரக் கொள்கை காரணமாக நாடு பொருளாதார ரீதியில் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. பொருளாதார வீழ்ச்சியினால் கொதித்தெழுந்த தென்பகுதி சிங்கள மக்கள், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை பதவி விலகுமாறு கோரி கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் கோத்தா கோ கம, மகிந்த கோ கம என்னும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த பாரிய கிளர்ச்சியை அடக்குவதற்காக, அரசாங்கம் தமது கட்சிக் குண்டர்களை அமைதியாகப் போராடிக்கொண்டிருந்தவர்கள்மீது ஏவிவிட்டு வன்முறையைத் தூண்டியது. இதன் காரணமாக ஏற்பட்ட கலவரத்தில், ஆளும் கட்சியினரின் பல வீடுகள் எரியூட்டப்பட்டதுடன், அவர்களது அலுவலங்களும் வாகனங்களும் தீயிடப்பட்டன.

ஆளும் தரப்பு அமைச்சர்களின் வீடுகளிலிருந்து சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான எரிவாயு கொள்கலன்களும், பெற்றோல், டீசல் பேரல்களும், நூற்றுக்கணக்கான நெல் மூடைகளும், உரமூடைகளும், குண்டர் கூட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த சாராய போத்தல்களும் பொதுமக்களால் மீட்கப்பட்டது. அது மாத்திரமல்லாமல், மக்களின் போராட்டத்தைக் குழப்புவதற்காககுண்டர் கூட்டத்தை அழைத்துவந்த 48 பேரூந்துகள் பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டு எரியூட்டப்பட்டது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் இன்னமும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த கலவரத்தின் சூத்திரதாரிகளைக் கண்டுபிடிப்பதற்காக அரசாங்கத்தின் பல்வேறுபட்ட புலனாய்வுப் பிரிவுகளும் விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றன.

அதுமாத்திரமல்லாமல், பொதுமக்களிடமிருந்தும் இதுதொடர்பான தகவல்களைத் தருமாறு கோரிவருகின்றனர். ஒரு நாளில் நடைபெற்ற இந்தக் கலவரத்தில் ஏறத்தாழ இரண்டாயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்து அழிக்கப்பட்டதாக அரசாங்கம் ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறது.

இதில் சொத்துகளை இழந்த பலர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் என்ற வகையிலும் மேலும் பெரும்பான்மை சிங்கள தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற வகையிலும் அவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் துரிதகதியிலான ஏற்பாடுகளைச் செய்ய முன்வந்திருக்கிறது.

மேற்கண்டவற்றிலிருந்து இலங்கை அரசாங்கம் சிங்கள மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நலன்களில் காட்டுகின்ற அக்கறையை தமிழ் மக்கள் மீது காட்டுவதில்லை என்பதும், இவ்வளவு அழிவுகளுக்குப் பின்னரும், நாடு இன்று எதிர்நோக்கியிருக்கின்ற பொருளாதார வீழ்ச்சிக்கு அரசாங்கத்தின் தமிழர்விரோத செயற்பாடே காரணம் என்று தெரிந்த பின்னரும், இலங்கை அரசாங்கம் இன்னமும் தமிழர் விரோத செயற்பாட்டையே உயர்த்திப் பிடிக்கின்றது என்பதும் தமிழ்த் தேசிய இனத்தை தனது கால்களின்கீழ் அடிமைகளாக வைத்திருப்பதையே விரும்புகிறது என்பதும் தெளிவாகின்றது.

இந்த நாடு ஒரு பல்லின மக்கள் வாழ்கின்ற நாடு என்பதையும், பலமொழி, பலகலாசாரங்களையும் பண்பாடுகளையும் பின்பற்றுகின்ற மக்கள் இங்கு வாழ்கின்றனர் என்பதையும், அவர்களது உரிமைகள் மதிக்கப்பட்டு அனைவருக்கும் சமநீதி வழங்கப்படவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்ளாதவரை இந்த நாட்டில் பொருளாதார எழுச்சியும் வராது. இந்த நாட்டிற்கு விமோசனமும் ஏற்படாது” என்றார்.

Tamil News