Home Blog Page 7

பயங்கரவாத தடைச் சட்டம் இந்த ஆண்டுக்குள் மாற்றி அமைக்கப்படும் : நீதியமைச்சர் உறுதி

நீண்டகாலமாக விவாதத்திற்குரியதாக இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.

வடக்கில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நாங்கள் நிச்சயமாக ஒழித்து, திருத்தப்பட்ட புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவோம்.

இந்த வரைவு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. அது சமர்ப்பிக்கப்படும் போது, கடந்த கால அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் இது எவ்வளவு முற்போக்கானது என்பதும், மக்களின் உரிமைகளை சிறப்பாகப் பாதுகாக்கும் வகையில் இது எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதும் உங்களுக்கு புரியும்.” என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

“இந்தச் சட்டம் எந்தவொரு இனம், மதம் அல்லது தனிநபரை இலக்கு வைப்பதற்காக அல்லாமல், பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த கால அரசாங்கங்கள் இந்தச் சட்டத்தை நீக்குவதாக பலமுறை வாக்குறுதி அளித்து காலத்தை கடத்தியதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தற்போதைய அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கை எடுத்து வரைவுப் பணிகளை முடித்துள்ளதாகக் கூறினார்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் இந்த புதிய சட்ட வரைவை அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும், அதன்படி இந்த ஆண்டுக்குள்ளேயே பழைய பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகிய இரண்டுக்கும் இடையே சமநிலையைப் பேணும் வகையில் இந்த புதிய சட்டம் உன்னிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தலையின் மேல் தொங்கும் கத்தி : விதுரன்

சர்வதேச அரசியலிலும் புவிசார் இராஜதந்திரத்திலும் சிறிய தீவு நாடுகள் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகள், அவற்றின் உள்நாட்டுப் பொருளாதார அமைப்பிலும் உலக ளாவிய நம்பகத்தன்மையிலும் எத்தகைய பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு சமகால அமெரிக்க – இலங்கை உறவுகளில் ஏற்பட்டுள்ள கடுமையான விரிசலே மிகச் சிறந்த உதாரணமாகும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோரின் திடீர் இலங்கை விஜயம், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு முனையங்களை உற்றுநோக்கியமை, அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய கடலோர காவற்படைக் கப்பல் ஒப்படைப்பு விழாவில் அவரது முகம் காணப்படாமை என்பன வெறும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல.
மாறாக, உலகளாவிய எரிசக்திப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை மையப்படுத்தி அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் புவிசார் அரசியல் சதுரங் கத்தில், கொழும்பு எடுத்த முதிர்ச்சியற்ற இராஜதந்திர நிலைப்பாடும், அதன் விளைவாக வொஷிங்டனிடம் இருந்து உத்தியோகபூர்வமாக வெளிப்பட்ட கடுமையான கோபமுமே இதன் பின்னணியில் உள்ளன.
இந்த இராஜதந்திர முரண்பாடு, வல்லரசுகளின் அழுத்தங்களுக்கு மத்தியில் தற்போதைய அநுர அரசாங்கம் கொண்டுள்ள வெளியுறவுக் கொள்கையின் தெளிவின்மை யையும், மூலோபாயத் தடுமாற்றத்தையும் சர்வதேச அரங் கில் அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது.
இந்தப் பாரிய இராஜதந்திரப் பூசலின் அடிநாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிலும் பொதுச் சபையி லும் அரங்கேறிய சர்வதேச அரசியல் நகர்வுகளோடு பிணைந்துள்ளது. ஈரானால் ஹோர்முஸ் ஜலசந்தி முழுமையாக முடக்கப்பட்டதை அடுத்து, உலகளாவிய கப்பல் போக்கு வரத்தை வழமைக்குக் கொண்டுவர அமெரிக்கா பாதுகாப்புச் சபையில் ஒரு விசேட தீர்மானத்தைக் கொண்டு வந்தது. எனினும், அமெரிக்காவின் புவிசார் அரசியல் எதிரிக ளான சீனாவும் ரஷ்யாவும் தங்களின் ‘வீட்டோ’ அதிகாரத் தைப் பயன்படுத்தி இத்தீர்மானத்தைத் தோற்கடித்தன. பாது காப்புச் சபையில் முறியடிக்கப்பட்ட தீர்மானத்தை சர்வதேச சட்டங்களின்படி ஐ.நா. பொதுச்சபைக்குக் கொண்டு சென்று, அங்குள்ள உறுப்பு நாடுகளில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற அமெரிக்கா தீவிரமாக முயன்றது.
இதற்கமைய தயாரிக்கப்பட்ட உடன்படிக்கையில், தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிரதான பங்காளியான இந்தியா முதலாவதாகக் கையெழுத்திட்டது டன், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளும் வொஷிங்டனின் அழுத்தங்களுக்குப் பணிந்து உடன்படிக் கையை அங்கீகரித்தன. பாகிஸ்தான் தான் அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு மத்தியஸ்தராகச் செயற்படுவதைக் காரணம்காட்டி, இராஜதந்திரத் தந்திரோபாயத்துடன் இதிலிருந்து விலகிய நிலையில், இலங்கை இந்த விவகாரத்தைக் கையாண்ட விதம் அதன் இராஜதந்திர அறியாமையையே வெளிப்படுத்தியது.
ஆரம்பத்தில் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகமும், ஐ.நா.கொழும்பு அலுவலகமும் இந்தத் தீர் மானத்தில் கையெழுத்திடுமாறு விடுத்த தொடர் நினை வூட்டல்களுக்குப் பதிலளிக்காது மௌனம் காத்த இலங்கை அரசாங்கம், இறுதியாக எழுத்துபூர்வமாக விடுக்கப்பட்ட அழுத்தங்களின் பின்னர், ‘ஈரான் தரப்பு உள்ளடக்கப்படாமல் முற்றிலும் ஒருதலைப்பட்சமாக இத்தீர்மானம் கொண்டுவரப் பட்டுள்ளதால் இதில் கையெழுத்திட முடியாது’ என்று திட்ட வட்டமாக அறிவித்தது.
பாகிஸ்தான் தனது விலகலுக்குப் பின்னால் நியாயமான மூலோபாயக் காரணத்தைக்காட்டி அமெரிக்கா வின் கோபத்திலிருந்து தப்பித்துக்கொண்ட வேளையில், இலங்கை எவ்வித சர்வதேச அரசியல் பின்புலமும் இன்றி, ஈரானுக்காக வாதாடி அமெரிக்காவை நேரடியாகப் பகைத்துக்கொண்டமையானது ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. இதன் நேரடி இராஜதந்திர சமிக்ஞையாகவே, தான் கலந்துகொள்ளப் போவதாக முன்கூட்டியே அறிவித்திருந்த கடலோர காவல்படைக் கப்பல் ஒப்படைப்பு விழாவை செர்ஜியோ கோர் முற்றாகப் புறக்கணித்தார்.
அமெரிக்கா வழங்கிய கப்பல் மற்றும் ஹெலிகொப் டர்களைப் பெற்றுக்கொள்ளும் பிரம்மாண்ட விழாவில், அக்கொடையின் பின்னணியில் இருந்த சிறப்புத் தூதுவரே வராமல் தவிர்த்தமையானது, புதிய அரசாங்கத்திற்கு வொஷிங்டன் விடுத்த பகிரங்கமான இராஜதந்திர எச்சரிக் கையாகும்.
இந்த இராஜதந்திரக் கோபத்தின் தொடர்ச்சியாக, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீது மேலும் 12.5சதவீதம் கூடுதல் சுங்கவரியை விதிக்கப் பரிந்துரைத்துள்ளமையானது இலங் கையின் பொருளாதார முதுகெலும்பைக் தட்டிப்பார்க்கும் பழிவாங்கல் நடவடிக்கையாகும்.
‘கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உலகச் சந்தைக்கு வருவதைத் தடுக்கத் தவறியமை’ என்ற குற்றச்சாட்டின் கீழ், இலங்கை உள்ளிட்ட 45நாடுகளுக்கு இந்த வரிவிதிப்பு உத்தேசிக்கப் பட்டுள்ளது.
இலங்கையின் ஆடைத்தொழிற்துறையானது தமக்கான மூலப்பொருட்களில் பெரும்பகுதியை சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது. இந்தச் சீன, ரஷ்ய மூலப்பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் ஆடைகளின் பிரதான ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்காவே விளங்கும் பின்னணியில், ஏற்கனவே நடைமுறையிலுள்ள 20சதவீத சுங்கவரியுடன் இந்த 12.5சதவீத கூடுதல் வரியும் இணையும் போது, அமெரிக்கக் கொள்வனவாளர்கள் இலங்கைப் பொருட்களுக்கு அதிகவிலை கொடுக்க வேண்டியிருக்கும்.  இதனால் சர்வதேச சந்தையில் இலங்கையின் ஆடை ஏற்றுமதித்துறை தனது போட்டித்தன்மையை முற்றாக இழந்து, பாரிய வேலைவாய்ப்புப் பறிப்புகளையும், நாட்டின் பிரதான வெளிநாட்டு வருமான வீழ்ச்சியையும் சந்திக்க நேரிடும்.
அமெரிக்கா எடுத்த இந்த அதிரடிப் பொருளாதார நகர்வு, இராஜதந்திர ரீதியாகத் தடம்மாறும் சிறிய நாடுகளை அமெரிக்கா எவ்வாறு பொருளாதாரக் காரணி மூலம் பணிய வைக்க முற்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
மறுபுறம், இலங்கைக்கு மிக அருகில், காலிக்குத் தெற்கே சர்வதேச கப்பல் பாதையில் அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளையகத்தின் சிறப்புப் படையினர் நடத்திய வான்வழி அதிரடித் தாக்குதலும், ஈரானிய மசகு எண்ணெயைக் கடத்திய ‘லெனோரே’ (எம்.ரி.டவினா) கப்பலைக் கைப்பற்றியமையும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இலங்கை கடல் எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் அமெரிக்காவின் இராணுவக் கண்காணிப்பு மற்றும் தன்னிச்சையான தலையீடுகள் எந்தளவிற்கு அதிகரித்துள்ளன என்பதைப் பறைசாற்றுகின்றன. உலகின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும், நாளொன்றுக்கு 300க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிக்கும் இந்த முக்கியமான கப்பல் பாதையைத் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அமெரிக்கா முயல்கிறது.
இந்தச் சூழலில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததும், உலகச் சந்தை யில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 20 டொலர்கள் வரை சரிவடைந்தது.  இந்த உலகளாவிய இராஜதந்திர மாற்றத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உடனடியாக வரவேற்று, ‘பேச்சுவார்த்தைகளே மனிதகுலத்தின் பலம்’ எனப்பதிவிட்ட வேளையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் உடனடியாக எந்தவொரு கருத்தையும் வெளியிடாது மௌனம் காத்தமையானது அதன் கடுமையான மூலோபாயத் தடுமாற்றத்தையே வெளிப்படுத்துகிறது.
இந்த அமைதி உடன்படிக்கையும் உலகளாவிய எண்ணெய் விலை வீழ்ச்சியும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குப் பாரிய இராஜதந்திர மற்றும் அரசியல் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், அரசாங்கம் பதவியேற்று மாதங்கள் பல கடந்தும், ரணில் விக்கிரமசிங்கவினால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு தற்காலிகமாக உருவாக்கப்பட்ட பொருளாதார ஸ்திரத் தன்மையைத் தாண்டி, எந்தவொரு புதிய பொருளாதார முன்னேற்றத்தையும் எட்டவில்லை.
மாறாக, அண்மைய நாட்களாக இலங்கையின் பொருளாதாரம் கடுமையான சரிவை நோக்கி நகர்வதையும், பணவீக்கம் அதிகரிப்பதையும் அரசாங்கம் உள்நாட்டில் மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் மெதுமெதுவாக வீழ்ச்சி யடைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் எச்சரித்திருந்த பின்னணியில், இந்த உள்நாட்டுப் பொரு ளாதாரப் பின்னடைவு மற்றும் தளர்வு நிலைகளுக்கு தங்களின் தவறான கொள்கைகளை ஒப்புக்கொள்ளாத தற்போதைய அரசாங்கம், ‘மத்திய கிழக்கின் போர்ச்சூழல் தான் பொருளாதாரச் சரிவுக்குக் காரணம்’ என்ற ஒற்றைக் காரணியை மக்கள் மத்தியில் தங்களின் இராஜதந்திரப் போர்வையாகவும், தற்காப்புக் கேடயமாகவும் பயன்படுத்தி வந்தது.
முன்னதாக, கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் பதவியேற்றவுடன் எடுத்த முதிர்ச்சியற்ற வரிவிலக்குகள் மற்றும் தன்னிச்சையான இரசாயன உரத் தடை போன்ற தவறான தீர்மானங்களால் நாட்டின் பொருளாதாரம் அடிமட்டமாகச் சரிவடைந்த போது, அதே காலகட்டத்தில் பரவிய ‘கொவிட் பெருந்தொற்று’ சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, பொருளாதார வீழ்ச்சியின் முழுப் பழியையும் கோவிட் மீது போட்டுவிட்டுத் தப்பிக்க முயன்ற வரலாற்றுத் தவறை தற்போதைய அரசாங்கமும் ‘காகம் உட்காரப் பனம்பழம் விழுந்த’ கதையாக மத்திய கிழக்குப் போரின் மீது போட்டுத் தப்பிக்க முயன்றது. ஆனால், தற்போது அமெரிக்கா – ஈரான் அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டு, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், உள்நாட்டுப் பொருளாதாரப் பின்னடைவுக்கு இனிமேலும் வெளிப்புறக் காரணிகளைக் காட்டி அரசாங்கம் தப்பிக்க முடியாது.
உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயரும் போது, பேரலுக்கு ஒரு டொலர் உயர்ந்தால் லீற்றருக்கு இரண்டு ரூபா அதிகரிக்க வேண்டும் என்று மிகத்துல்லியமாகக் கணக்குக் காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தற்போது உலகச் சந்தையில் பரலுக்கு 20 டொலர்கள் வரை விலை வீழ்ச்சியடைந்துள்ள போது, அந்தப் பலனை உள்நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு எத்தகைய கணக்கைக் காட்டப் போகிறார் என்ற நியாயமான கேள்வி எழுந்துள்ளது.
மத்திய கிழக்குப் போரினால் ஏற்பட்ட பொருளா தாரப் பின்னடைவுகள் உடனடியாகச் சீராகாது என்பது உண்மை என்றாலும், போர் முடிவுக்கு வந்துவிட்ட சூழலில், சந்தை வழமைக்குத் திரும்பிய பின்னரும் இலங்கையின் பொருளாதாரம் மேல்நோக்கி வளர்ச்சி பெறத் தவறினால், அரசாங்கம் இவ்வளவு காலமும் கூறிவந்த காரணங்கள் யாவும் வெறும் அரசியல் சாக்குப்போக்குகள் என்பதும், அவர்களிடம் தெளிவான பொருளாதாரக் கொள்கை இல்லை என்பதும் மக்கள் மத்தியில் அம்பலமாகிவிடும்.
இத்தகையதொரு இக்கட்டான அரசியல் சூழல் உருவாகுவது அரசாங்கத்தின் நாடித்துடிப்பிற்கே பேராபத் தாக முடியும் என்பதால் தான், இந்த உலகளாவிய அமைதி உடன்படிக்கையை அரசாங்கத் தரப்பு உடனடியாக வரவேற் காது மௌனம் காத்தது. அமெரிக்காவுடனான இந்த இராஜதந்திர விரிசலும், ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இலங்கை எடுத்த பிடிவாதமான போக்கும், வல்லரசு நாடுகளின் மூலோபாய நலன்கள் மோதிக்கொள்ளும் இந்தியப் பெருங்கடல் பிராந் தியத்தில் இலங்கை எவ்வளவு பலவீனமான இராஜதந்திரக் கயிற்றில் நடக்கிறது என்பதைத் துல்லியமாக உணர்த்து கின்றது.
உலகளாவிய ரீதியில் அமெரிக்காவின் ஆதிக் கம் சவாலுக்குட்படுத்தப்படும் இக்காலகட்டத்திலும், இலங்கை யின் பிரதான ஏற்றுமதிச் சந்தையாகவும், சர்வதேச நிதி நிறுவனங்களின் பின்னணியாகவும் அமெரிக்காவே விளங்குவதை தற்போதைய அரசாங்கம் மறந்துவிட்டுச் செயற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இராஜதந்திரக் கோபத்தால் விதிக் கப்படவுள்ள சுங்கவரி நெருக்கடிகளை எதிர்கொள் வதா, அல்லது மத்திய கிழக்கு அமைதியினால் ஏற்படும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப உள் நாட்டுக் கொள்கைகளைச் சீரமைப்பதா என்ற இருமுனைத் தாக்குதலுக்குள் தற்போதைய இலங்கை அரசாங்கம் சிக்கு ண்டு, தெளிவான திசையின்றிக் தத்தளித்துக் கொண்டிருக் கிறது என்பது தெளிவாகிறது.

“சுரேஷ் சலேவின் முயற்சி பயனற்ற செயல்” என்கிறது அரசாங்கம்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் சுரேஷ் சலே, வாய் மூலமாக உணவு உட்கொள்வதை மட்டுமே தவிர்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ விஞ்ஞான முறைகளின் ஊடாக உடலுக்குத் தேவையான திரவ ஆகாரங்கள் அல்லது ஊட்டச்சத்துக்களைப் பெற்றுக்கொள்வதை சுரேஷ் சலே நிராகரிக்கவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தகைய மருத்துவ முறையிலான ஊட்டச்சத்துக்கள் இன்றி எவராலும் இவ்வளவு காலம் பட்டினியுடன் உயிர்வாழ முடியாது எனத் தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளரின் இந்த முயற்சி பயனற்ற ஒரு செயலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளது.

இந்த அதிகாரிகள் குழுவின் பயணம் ஜூன் மாதம் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை அமையவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் ஈவன் பெபஜோர்ஜியு (Evan Papageorgiou) உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த பயணத்தில் இணையவுள்ளனர்.

இலங்கை தற்போது நடைமுறைப்படுத்தி வரும் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் அதன் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராய்வதே இந்த பயணத்தின் முதன்மை நோக்கமாகும்.

இஸ்ரேலின் பங்கு வொஷிங்டனால் தீர்மானிக்கப்படும் – சாத்தம் ஹவுஸ்

ஈரானுடன் வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேலின் பங்கு வொஷிங்டனால் தீர்மானிக்கப்படும் என்று சாத்தம் ஹவுஸின் (பிரித்தானியாவைச் சேந்த சிந்தனைப் பள்ளி) மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா திட்டத்தின் மூத்த ஆலோசகரான யோசி மெக்கெல்பர்க் கடந்த வியாழக்கிழமை(18) தெரிவித்ததுள்ளார்.
நெதன்யாகுவை “ஒரு அற்புதமான பிரதமர்” என்று வர்ணித்த மற்றும் லெபனான் மீதான அவர்களின் கருத்து வேறுபாடுகளைக் குறைத்து மதிப்பிட்ட ட்ரம்பின் முந்தைய கருத்துக்களைக் குறிப்பிட்ட மெக்கெல்பர்க், “போரை எவ்வாறு தொடர்வது என்பது குறித்து அவர்களுக்குள் உண்மையான கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும்”, ட்ரம்ப் “நெதன்யாகுவிடம் சற்று மென்மையாக நடந்து கொண்டார்”. வரவிருக்கும் தேர்தல் காலத்திற்கு முன்னதாக, இஸ்ரேல் என்ன சாதித்துள்ளது என்பது குறித்து இப்போது அங்கு ஒரு விவாதம் தொடங்கும்.
“கடந்த இரண்டரை ஆண்டுகளையும், பல முனைகளில் கிட்டத்தட்ட அதிகபட்ச சக்தியைப் பயன்படுத்தியும் ஒரு தீர்க்கமான முடிவு இல்லாமல் இஸ்ரேல் உண்மையில் என்ன சாதித்தது என்பதையும் அனைவரும் பார்ப்பார் கள்,”. “பேச்சுவார்த்தையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தி லும் இஸ்ரேல் ஈடுபடுத்தப்படாமலேயே முடிவு தீர்மா னிக்கப்பட்டது. மேலும், வரவிருக்கும் 60 நாள் பேச்சு வார்த்தையில், இஸ்ரேல் எந்த அளவிற்கு ஈடுபடும் என்பது எங்களுக்குத் தெரியாது. அடிப்படையில், அது ட்ரம்ப் நிர்வாகத்தால் அதற்கு ஆணையிடப்படும்.”
இஸ்ரேலில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பிலும், இந்தப் போர் ஒரு “தோல்வி” என்ற மனநிலையே நிலவியது. இஸ்ரேல் “ஓரங்கட்டப்பட்டது” மட்டுமல்லாமல், நெதன்யாகு அறிவித்த போர் நோக் கங்களான ஈரானில் ஆட்சி மாற்றம், அதன் அணுசக்தித் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருதல், ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவைத் துண்டித்தல் மற்றும் அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திறனைக் குறைத்தல் ஆகிய வற்றில் எதுவும் அடையப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

இலங்கைக்கு சீன ஆயுதங்கள் வழங்கப்பட்ட விவகாரம்: ஜகநாத் கொலம்பகேவை விசாரிக்க வலியுறுத்தல்

இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசுக்கு கொழும்பு மற்றும் காலியில் அமைந்திருந்த இரு களஞ்சியங்கள் ஊடாக சீனா ஆயுதங்களை வழங்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஜகநாத் கொலம்பகேயை சர்வதேச பொறிமுறை ஊடாக விசாரணை செய்ய வேண்டும் என்று வேலன் சுவாமிகள் கோரிக்கை முன்வைத்தார்.

இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழருக்கு அநீதியை நிகழ்த்திய இலங்கை அரசுக்கு இலங்கையில் வைத்தே சீனா இரு இடங்களில் இருந்து ஆயுதங்கள் வழங்கியதாக முன்னாள் கடற்படை தளபதி கொலம்பகே கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருக்கிறார் என்று வேலன் சுவாமிகள் சுட்டிக்காட்டினார்.

“அவருடைய கருத்து மிகவும் பாரதூரமானது தமிழ் மக்கள் மீது அநீதியை நிகழ்த்திய இலங்கை அரசு பயன்படுத்திய இரசாயன ஆயுதங்கள் தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் வெளிவந்துள்ளன”.

“அது மட்டுமல்லாது இறுதி யுத்தத்தில் பாவிக்கப்பட்ட கொத்தணி மற்றும் பொஸ்பரஸ் குண்டுகள் எங்கிருந்து பெறப்பட்டன. யார் அதனை வழங்கியிருப்பார்கள் என்பது தொடர்பிலும் முன்னாள் கடற்படை தளபதியை சர்வதேச ரீதியாக விசாரணை செய்ய வேண்டும்” என்று வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

செம்மணியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் சுமார் 380 ஐ தாண்டி உள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிக்கு செம்மணி ஆதாரமாக இருக்கிறது.

அதேபோன்று முள்ளிவாய்க்காலிலும் தமிழ் மக்களுக்கு அநீதி நிகழ்த்தப்பட்டுள்ளது அது தொடர்பிலும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று வேலன் சுவாமிகள் வலியுறுத்தினார்.

ஆரம்பமாகியுள்ள டிரம்பின் 60நாள் ஆட்டக்காலத்தில் ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழரே பாதுகாக்க வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 396

அமெரிக்க ஈரான் 60நாள் இடைக்கால அமைதி உடன்படிக்கை பிரான்சில் 52 வது ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு வருகைபுரிந்திருந்த அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்பினால் 1919 இல் யேர்மனியுடன் நேசப்படைகள் மேற்கொண்ட அமைதி உடன் படிக்கை கைச்சாத்திடப்பட்ட வரலாற்றுத் தன்மையுடைய வேர்சாய் அரண்மனையில் பிரான்சின் அரசத்தலைவர் மக்ரோன் அருகிருக்க ஈரானியத்தலைவர்களுடன் 17.06. 2026இல் கையெழுத்து இடப்பட்டது. 19.06. 2026 முதல் இந்த இடைக்கால உடன்படிக்கை உத்தியோக பூர்வமாக நடைமுறைக்கு வந்து 20.06.2026 இல் இந்த உடன்படிக்கை லெபனானையும் உள்ளடக்குகிறது என அமெரிக்க அளித்த விளக்கத்தை அடுத்து இஸ்ரேலுக்கும் கிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான போர்நிறுத்தமும் நடைமுறைக்கு வந்துள்ளது.       1919 ம் ஆண்டின்  வேர்சாய் உடன்படிக்கை 2ம் உலகப்போராக பரிணாமடைந்தது போல இந்த இடைக்கால உடன்படிக்கையும் தொடங்கி விட்ட மறைமுகநிலை 3ம் உலகப்போரை வெளிப்படையான போராக மாற்றிவிடுமா என்கிற அச்சம் அனைத்துலக போரியல் ஆய்வாளர்களால்  எழுப்பப்பட்டதை உறுதியாக்குவது போல அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் ஈரானிய உச்சத்தலைவர் மொஜ்தபா அல் கமெனி அவர்கள் கூற்றுக்கு தனது ‘ட்ருத்’ பதிவில் அளித்துள்ள பதில் அமைகிறது.
“ஏமாற்றத்தின் காரணமாகவே அமெரிக்கா ஈரானுடன் அமைதிப்பாதையில் நுழைந்தது” என்ற ஈரானிய உச்சத்தலைவர் மொஜ்தபா அல் கமெனி அவர்கள் கூற்றுக்கு  தனது “ட்ருத்” கணக்கில் “ அவர்கள் முடித்துவிட்டார்கள். இந்த 60நாள் ஆட்டத்தை நாம் விளையாடுவோம்” என அமெரிக்க அரசத்தலைவர் ட்ரம்ப் அவர்கள் பதிவிட்டுள்ளமை அமெரிக்கா இந்த காலக்கட்டத்தை ஈரானின் இறைமையை மதிப்பதாக உடன்படிக்கையில் எழுதிவிட்டு அதற்கு எதிர்மாறாக ஆயுதபலத்தினால் அமெரிக்க முடிவுகளைத் திணிக்கும் முறையில் செயற்படப்போகிறது என்பதைக் கூறாமல் கூறியுள்ளது. ட்ரம்ப் அவர்கள் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தை அமெரிக்க யுத்த அமைச்சகமாகப் பெயர் மாற்றம் செய்திருப்பது அமெரிக்க காங்கிரசின் செனட்டின் வழமையான அமெரிக்க அரச அதிபர் தான் நினைத்ததைச் செய்வதைத் தடுக்கும் அரசியலமைப்புப் பாதுகாப்புக்களில் இருந்து விடுபட்டு நாடு யுத்த சூழலில் உள்ளதென அரசஅதிபரின் கட்டுப்பாட்டுக்குள் அனைத்தையும் செயற்படுத்தும் முயற்சியாகவும் அமைவதால் அமெரிக்க தொடர்ந்து போர்களை; சந்திப்பதற்கான முன்ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகிறது என்பதைத் தெளிவாக்குகிறது.
மேலும் ட்ரம்ப் அவர்கள் தனது முதலாவது ஆட்சிக்காலத்தில 2018 இல்  1948 இல் அக்கால அமெரிக்க அரசத்தலைவர் ட்ரூமன் அவர்கள் உருவாக்கிய பசுபிக் கடல் பிராந்திய கட்டளைப் பணியகத்தை இந்தியாவையும் உள்ளடக்கி பசுபிக் இந்தோ கடல் பிராந்தியக் கட்டளைப் பணியகமாக மறுபெயரீடு செய்தார். எட்டு ஆண்டுகளில் இன்று மீளவும் இந்தியாவை விலக்கும் நோக்கில் மீளவும் பசுபிக் கடல் பிராந்தியக் கட்டளைப் பணியகமாக பெயர் மாற்றம் செய்துள்ளார். இந்தியாவுக்கும் ரஸ்யாவுக்கும் இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையில் உள்ள நெருக்கமான உறவுகள் குறித்த சந்தேகமும் அச்சமுமே இவ்வாறான போக்குகளுக்குக் காரணமாகின்றது. மாநாட்டில் பங்கேற்ற இத்தாலியப் பிரதமர் மெலானி தன்னுடன் நிழற்படமெடுக்க தன்னிடம் மற்றாடியதாக ட்ரம்ப் கூறியதை அவர் மறுத்ததும் அல்லாமல் அமெரிக்காவுக்கான இத்தாலிய வெளிவிவகார அமைச்சின் பயணத்தையும் இத்தாலி ரத்து செய்துள்ளது. இந்தியப் பிரதமருக்கும் “ மோடி அமைதியானவர் – இனிமையானவர் – கூட்டு மொத்தமாகக் கொல்பவர்” எனவும் “ இனி மோடியுடன் நெருங்க மாட்டேன்” எனவும் கூறிவிட்டு “ஆனால் இந்தியாவை யாரும் தாக்கினால் அமெரிக்கா உடனுதவும் “ என உத்தரவாதமும் கொடுத்தார். இரண்டு நாட்களுக்குள் “ மோடி யுத்தங்களில் ஈடுபடாததினால் தலைசிறந்த தலைவர். அமெரிக்க இந்திய வர்த்தகம் தொடரும்” இவைகள் எல்லாம் உலக அரசியல் தலைமைகளின் பதற்ற அரசியலின் வெளிப்பாடாக உள்ள நிலையில் சிறிலங்கா அமெரிக்க ஈரான் 60 நாள் அமைதி உடன்படிக்கையை வரவேற்று அறிக்கைவிட்டு அமெரிக்காவுக்கு அருகில் சென்றுள்ளது என்பதை சுட்டிக்காட்டும் இலக்கு இந்த காலகட்டத்தை சிறிலங்கா ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கத்தை வேகப்படுத்தப் பயன்படுத்தினால் அனைத்துலக நிலையில் அது கவனம் பெறாது என்கின்ற எச்சரிப்பையும் ஈழத்தமிழர்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறது.
மேலும் அமெரிக்க அரசத்தலைவர்  52வது ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டை அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் குறிப்பாக பிரான்ஸ் யேர்மன் இத்தாலி ஆகியவற்றுக்கும் இடையில் நேட்டோ பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பாக ஏற்பட்டு வந்த விரிசல் நிலைகளை ஓரளவுக்குச் சீராக்கி எதிர்வரும் யூலை மாத முதல்வாரத்தில் அங்கோராவில் நடைபெறவுள்ள நேட்டோ நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் அமெரிக்காவின் நேட்டோ 3வது வேர்சனை அதாவது அமெரிக்க நேட்டோ நாடுகள் எந்த அளவுக்கு நேட்டோ உறுப்புரிமைக்கான அமெரிக்கா எதிர்பார்க்கும் நிதிப்பங்களிப்பைச் செய்ய முடியுமோ அந்த அளவுக்குத்தான் அமெரிக்காவின் பாதுகாப்பு வழங்கப்படுதலையும் உறுதிப்படுத்தல் என்கிற முற்திட்டத்தைச் சந்தைப்படுத்துவதற்கான வர்த்தக முன் மாநாடாகவே வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளாரென்பது ஆய்வாளர்க ளின் எதிர்வு கூறலாக உள்ளது.
இறைமை என்பது கூட்டாண்மை பங்காண்மைகள் இடையிலான வர்த்தகத்தால் பாதுகாப்புப் பெறும் காலமாக இன்றைய காலகட்டம் உள்ளதென்பதை இது உறுதியாக்கியுள்ளதென்பதை எடுத்துரைக்க விரும்பும் இலக்கு ஈழத்தமிழர்கள் அரசற்ற தேசஇனமாக ( Nation Without State)  22.05. 1972 முதல் இன்று வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் நடைமுறையரசு செயற்பட்ட 1978 முதல் 2009 வரையான 31 ஆண்டுகள் தவிர்ந்த 23 ஆண்டுகளும் சிறிலங்காவின் படைபல ஆட்சி ஏற்படுத்தும் இனங்காணக்கூடிய அச்சத்துள் வாழும் நிலையில்  தங்களுக்குள் தேசிய ஒருமைப்பாட்டைப் பலப்படுத்தி மக்கள் இறைமைக்குப் பலமளித்து மக்கள் இறைமையின் அடிப்படையில் தங்களின் பிரிக்க இயலாத தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தித் ஈழத்தமிழர் தாயகத் தேசத்தை மீளவும் மக்களாகக் கட்டியெழுப்பும் பணியில் (Nation Building Process) முழுமையான அர்ப்பணிப்புடன் சனநாயக வழிகளில் மண்ணின் வளத்தையும் மக்களின் மனித வலுவையும் உலகில் உள்ள ஈழத்தமிழர்களின் மூலதனப்பலத்தையும் பயன்படுத்த வல்ல வர்த்தக அணுகுமுறையிலான செயற்திட்டங்களில் ஈடுபட்டே தங்கள் தேசத்திற்கான அனைத்துலக கூட்டாண்மைகளையும் பங்காண்மைகளையும் ஏற்படுத்த முடியும் என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
மேலும் இன்றைய உலகில் அதிக அளவில் நிச்சயமற்ற தன்மையும் பதற்றமும் காணப்படுவதற்கு உலக அரசியலின் நிசச்யமற்றதன்மை, பொருளாதாரம், சுற்றுச் சூழல் அச்சம் மட்டுமல்ல அதைவிட முக்கியமானதாக நிறுவனங்களிலும் நாளாந்தச் செய்திகளிலும் நம்பிக்கை இழக்கப்பட்டு வருவது உள்ளதென உலகின் மீக நீண்டகால செய்தி முகவராக உள்ள ரொயிட்டர் தனது ஊடகத்துறை குறித்த தனது ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளதென பிரித்தானியாவின் ஆங்கில நாளிதழ்  த கார்டியன் உடைய பத்தி எழுத்தாளர் யேன் மார்ட்டின்சன் தனது 19.06. 2026ம் திகதிய “பி பி சி ட்ரம்புக்கும் எலன் மஸ்க்குக்கும் போலிச் செய்திக்கும் தலைசிறந்த ஆயுதமாக அமையலாம் “ என்னும் அவரது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
தவறான தகவல்கள் செயற்கை நுண்ணறிவு கருவிகள் வழி பரப்பப்படுகிறது. உண்மையான தகவல்கள் மறைக்கப்படுகின்றன அல்லது மறுக்கப்படுகின்றன. எதனைச் செய்ய வேண்டுமோ அதனைச் செய்யாது எதனைச் செய்யக் கூடாதோ அதனை செய்வது ஊடகச் சுதந்திரம் என்ற பெயரில் உலக வழக்காக்கப்பட்டு வருகிறது. இதனால் செய்யப்பட வேண்டியன செயலிழக்க சனநாயக ஆட்சிமுறைமைகள் தனிமனித ஆட்சி முறைமையாக மாறுவது இன்றைய உலகில் நாளாந்த நிகழ்வாக உள்ளது. சனநாயத்தில் உள்நுழைவுகளும் வெளியேறுதல்களும் சனநாயகத்தின் பரிணாம வளர்ச்சி. பரிணாமம் என்றால் முன்பிருந்த அமைப்பியல்கள் தொடர்புகள் எல்லாமே மாறுபட்டு புதிய அமைப்பு புதிய தொடர்பாடல் தோன்றுவதாகும். இதனை சமுகவலைத்தளங்கள் பிரிதல் பிளவுபடுதல் என்ற அணுகுமுறையில் செயற்படுவதை ஏன் பிரிந்தார்கள் எதற்குப் பிரிந்தார்கள் எப்படிப் பிரிந்தார்கள் எனச் செயற்படுவதை விடுத்து ஏற்படும் புதிய நிலையில் எப்படி மக்களுக்குச் சக்தியளித்தல் நடைபெறலாமென்பதை நெறிப்படுத்தினாலே மக்களுடைய பாதுகாப்புடன் கூடிய அமைதி வாழ்வை வளர்ச்சிகளை உறுதி செய்ய மக்களுக்குச் சத்தியளிக்கும் முறையில் ஊடகங்கள் செயற்படும்-செயற்பட வேண்டுமென்பதை இலக்கு இவ்வாரத்தில் வலியுறுத்த விரும்புகிறது.
ஆசிரியர்

Tamil News
இறைமையை மீட்டெடுக்க ஈழத்தமிழர் ஒவ்வொருவரையும் தமிழ் புலம்பெயர் செய்தி அழைக்கிறது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 395

Ilakku Weekly ePaper 396 | இலக்கு-இதழ்-396 | சனி, 20 ஜூன், 2026

Ilakku Weekly ePaper 396 | இலக்கு-இதழ்-396 | சனி, 20 ஜூன், 2026

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 396 | இலக்கு-இதழ்-396 | சனி, 20 ஜூன், 2026

Ilakku Weekly ePaper 396

Ilakku Weekly ePaper 396 | இலக்கு-இதழ்-396 | சனி, 20 ஜூன், 2026

Ilakku Weekly ePaper 396 | இலக்கு-இதழ்-396 | சனி, 20 ஜூன், 2026: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • ஆரம்பமாகியுள்ள டிரம்பின் 60நாள் ஆட்டக்காலத்தில் ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழரே பாதுகாக்க வேண்டும் | ஆசிரியர் தலையங்கம்
  • தலையின் மேல் தொங்கும் கத்தி | விதுரன்
  • தாய்க்கட்சிக்குள் முரண்பாடு தாயக விடுதலைக்கு தடை.!! | பா.அரியநேத்திரன்
  • போரின் விளைவுகளைச் சுமக்கும் ஈழப் பெண்கள்!! |  தீபச்செல்வன்
  • தாயகமும் இனப்படுகொலைகளும் | மட்டு.நகரான்
  • தலைவருடன் தொடரும் தமிழினத்தின் ஆண்டுகள் | கலாநிதி ஸ்ரீஞானேஸ்வரன்
  • ஒரே உழைப்பு, இருவேறு ஊதியம் : இலங்கைத் தேயிலைத் துறையில் அம்பலமான இனப் பாகுபாடு | மருதன் ராம்
  • தமிழ்நாட்டைப் புட்டிப்போட்ட விஜய் புயல்… திமுக, அதிமுக எதிர்காலம் என்ன? | ஊடகவியலாளர் கார்த்திக்
  • போரில் அமெரிக்காவின் தோல்வி உலக நெருக்கடியின் முடிவல்ல | தமிழில்: ஆர்தீகன்
  • இஸ்ரேல் சந்தித்த மூலோபாயத் தோல்வி | வேல்ஸில் இருந்து அருஸ்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

 

பிள்ளையானுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்ட விடயத்தில் உதய கம்மன்பிலவின் சூழ்ச்சி அம்பலம்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் உத்தரவின் பேரிலேயே பாதுகாப்பு அமைச்சிடமிருந்து தனக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகக் கூறுமாறு, தடுப்பு காவலில் உள்ள பிள்ளையானுக்கு உதய கம்மன்பில அறிவுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிள்ளையானை கல்கிசை நீதிமன்றத்தில் முற்படுத்திய போதே இந்த விடயங்கள் வெளிவந்துள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் மூலம் பிள்ளையானின் குழுவிற்கு 356 டி-56 (T-56) ரக துப்பாக்கிகள், 36 ஒன்பது மில்லிமீட்டர் ரக கைத்துப்பாக்கிகள் உட்பட மொத்தம் 400-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஆயுதங்கள் இதுவரை பாதுகாப்பு அமைச்சிடம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதன்படி, தங்கள் சேவை பெறுநரை நீதிமன்றத்தில் வேண்டுமென்றே ஒரு பொய்யான வாக்குமூலத்தை அளிக்குமாறு சட்டத்தரணி ஒருவர் அறிவுறுத்துவது சட்ட நெறிமுறைகளை முற்றிலும் மீறும் செயலாகும் என்று சிரேஷ்ட சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, இந்த நெறிமுறை மீறல் நடவடிக்கைக்கு உதய கம்மன்பிலவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளிக்க முடியும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செம்மணி புதை குழிக்கு நீதி கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவினர் மற்றும் காணமால் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஆணையாளர்கள் உள்ளிட்ட விசேட குழுவினரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வாய்வு பணிகளை இன்றைய தினம் நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவினர் மற்றும் காணமால் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஆணையாளர்கள் பார்வையிட நீதிமன்று அனுமதித்து இருந்து.

அந்நிலையில் புதைகுழியை பார்வையிட வரும் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அப்பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

அதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி வேண்டும் , புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் வேண்டாம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.