Home Blog Page 3062

வல்லரசுகள் தமிழ் மக்களை தேசமாக அங்கீகரிப்பதன் மூலமே தமிழ்மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும் – கஜேந்திரகுமார்

வல்லரசு நாடுகள் தமிழ்மக்களின் அடையாளத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்த்தேசத்தை அங்கீகரிக்கின்ற, தமிழ்த்தேசத்தின் தனித் துவமான இறைமையை அங்கீகரிக்கின்ற தமிழ்மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு வல்லரசு நாடுகள் முதற்கட்டமாக இணங்க வேண்டும். அவ்வாறு இணங்குவது மட்டுமல்லாமல் இந்தத் தீர்வுத் திட்டத்தை இலங்கை அரசாங்கத்தை அமுல்படுத்துமாறு கூற முன்னர் அந்த வல்லரசுகள் தமிழ்மக்களை ஒரு தேசமாக அங்கீகரிக்க வேண்டும்.

அப்படியானால் தான் தமிழ்மக்களுக்கு வல்லரசு நாடுகள் மீது நம்பிக்கையே வருமெனத் தெரிவித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை விடுத்து வெறும் ஒப்பந்தங்கள் மாத்திரம் செய்வதால் மாத்திரம் பயன் எதுவும் ஏற்படப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கொக்குவிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் திங்கட்கிழமை(29) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்போன்று இடம்பெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தியா அல்லது சர்வதேச நாடொன்று மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமாக வந்து எழுத்துமூலமான உறுதிமொழியை வழங்கும் பட்சத்தில் தாம் அவர்கள் கூறும் புதிய ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கத் தயாரெனத் தமிழ்மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உங்கள் கருத்தென்ன? என ஊடகவியலாளரொருவர் கேள்வி எழுப்பினார்.

குறித்த கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித் துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக இந்தியா கணித்துள்ள புதிய தரப்பு நாங்கள் சொல்லிவரும் விடயங்களுக்கு மேலதிகமாகப் புதிதாக ஒன்றையும் சொல்லவில்லை. ஒப்பந்தம் என்பது இலங்கை அரசுடனோ அல்லது சிங்களக் கட்சிகளுடனோ அல்ல. இவ்வாறான ஒப்பந்தங்கள் ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்படாதெனக் கடந்த எழுபது வருடகால அனுபவம் சொல்லுகிறது.

தமிழ் அரசியலைத் தங்களுடைய தேவைகளுக்காகப் பயன்படுத்த நினைக்கும் தரப்புக்களுடன் தான் குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படல் வேண்டும். ஆனால், அந்த ஒப்பந்தங்கள் என்ன அடிப்படையில் அமைய வேண்டு மென்பதைக் கூறாதது ஏன்? இங்கு தான் பிரச்சினையே காணப்படுகிறது எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

கையிலே ஒப்படைத்த எமது உறவுகளை திரும்பி தருவதற்கு எதற்கு ஓம்.எம்.பி?

கடத்தபட்டு காணாமல் ஆக்கபட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்றும் நீதிக்காக நாம் ஏங்கிக்கொண்டிருக்கும் அவல நிலையில் தீர்வை வழங்க வேண்டியவர்கள் அசமந்தமாகவே இருக்கிறார்கள் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ‘சர்வதேசமே எமக்கு நீதி விசாரணை வேண்டும் நிலையான தீர்வு வேண்டும்’, ‘கையிலே ஒப்படைத்தவரை திரும்பி தருவதற்கு எதற்கு ஓம்.எம்.பி?’ என்ற பலமான கோரிக்கையின் அடிப்படையில் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ” பல வருடங்கள் கடந்தும் எமது கோரிக்கைகளுக்கு தீர்வு வராத நிலையில் நீதிக்கான போராட்டத்தில் தொடர்ந்தும் நாம் ஈடுபட்டுள்ளோம்.முல்லைத்தீவில் மரணடைந்த திரேசம்மா என்ற எமது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருடன் இதுவரை 38 பேர் இந்த போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மரணித்துள்ளனர்.38 பேர் இறந்த நிலையில் இன்னும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலர் உடல் தளர்வுற்ற நிலையில் காணப்படுகின்றனர். இந்த நிலையில் தான் நாம் நீதியை கோரி நிற்கின்றோம்.

வவுனியாவில் மொத்தமாக 420 பேர் காணாமல் ஆக்கபட்டுள்ளனர். எனவே அவர்கள் காணாமல் ஆக்கபட்ட காலங்களில் பணியாற்றிய தளபதிகளிடம் விசாரணை நடாத்தினால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

diappe 1 கையிலே ஒப்படைத்த எமது உறவுகளை திரும்பி தருவதற்கு எதற்கு ஓம்.எம்.பி?கடத்தபட்டு காணாமல் ஆக்கபட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்றும் நீதிக்காக நாம் ஏங்கிக்கொண்டிருக்கும் அவல நிலையில், தீர்வை வழங்க வேண்டியவர்கள் அசமந்தமாகவே இருக்கிறார்கள். எனவே இந்த விடயங்களை ஊடகங்கள் வாயிலாக சர்வதேச சமூகத்திற்கு கூற முனைகின்றோம்” என்று தெரிவித்தனர்

 

 

கைத்தொலைபேசி ஊடான தேர்தல் பிரச்சாரத்திற்கு சிங்களக் கட்சிகள் முயற்சி

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் கைத்தொலைபேசி ஊடாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் பரப்புரைகளை மேற்கொள்ளவுள்ளதாக சிறீலங்கா மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

“எம்மால் முடியும்” என்ற பெயரில் ஆரம்பிக்கப்படவுள்ள கைத்தொலைபேசி அப்ஸ் ஊடாக இந்த பிரச்சார வேலைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இந்த பணிகள் இந்த வாரத்தின் இறுதிப்பகுதியில் ஆரம்பமாகும் எனவும் அதன் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமால் ராஜபக்சா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5 ஆம் நாள் அரச தலைவர் வேட்பாளரை தாம் அறிவிக்கவுள்ளதாகவும், தற்போது உலகில் உள்ள தொழில் நுட்பங்களை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய பாராளுமன்ற வளாகத்தில் ஒன்றுதிரண்ட அகதிகள்

அவுஸ்திரேலியாவில் அகதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிரந்தர பாதுகாப்பு விசாவிற்குப் பதிலாக தற்காலிக விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவுஸ்திரேலிய பாராளுமன்ற வளாகத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட அகதிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் ஈராக், ஈரான், இலங்கை, சூடான், சோமாலியா, மியான்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் சில  கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகதிகளுக்காக 3 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகளுக்கு விசா வழங்கப்படுகின்றது. அதுவும் இவர்கள் முக்கிய நகரங்களுக்கு வெளியே வசிக்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டதன் பின்னரே இந்த விசா வழங்கப்படும்.

2013ஆம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சி பதவியேற்ற பின்னரே படகு மூலம் வரும் அகதிகளுக்கு தற்காலிக விசா வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

 

சக கைதியின் குடும்பத்திற்கு வீடு வழங்கிய நாமல்

சிறையில் தன்னுடன் இருந்த சக கைதியின் குடும்பத்தினருக்கு தான் வாக்களித்தபடி வீடு ஒன்றை வழங்கியுள்ளார் நாமல் ராஜபக்ஸ. கிளிநொச்சி கனகாம்பிகைக் குளத்தைச் சேர்ந்த சவரிமுத்து லோகநாதன் என்பவரின் குடும்பத்தினருக்கே வீடு கையளிக்கப்பட்டது.

பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஸவுடன், இரணைமடு, கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதியொருவரும் இருந்துள்ளார்.

அவர் சிறையிலிருக்கும் போது, தான் வீட்டிற்குச் சென்றால் தனக்கு தங்குவதற்கு நிரந்தர வீடு இலலையென்றும், சிறையிலிருந்து சென்றால் தனக்கு வீட்டு வசதியேற்படுத்திக் கொடுக்குமாறும் நாமல் ராஜபக்ஸவிடம் கோரியிருந்தார்.

இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் 13ஆம் திகதி நாமல் ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் கிளிநொச்சி, பன்னங்கண்டி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது, சிறையில் தனக்கு அறிமுகமான நபரின் குடும்பத்தினரை சந்தித்து வீட்டு வசதிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

இப்போது புது வீட்டை கட்டி முடித்து, அதற்கான உறுதியையும் அவரகளிடம் வழங்கியுள்ளார்.

மேலும் கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை வழங்கி,  கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானத்தையும் பார்வையிட்டார்.

 

மணலாறில் தமிழர்களின் பூர்வீக நிலம் 1036 ஏக்கர் சுவீகரிப்பு : கண்டுகொள்ளாத கூட்டமைப்பு

தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களை பௌதீக ரீதியாக இணைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நில அபகரிப்பு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முப்பத்து ஐந்து வருடங் களுக்கு முன்னர் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கிராமத்திலிருந்து விரட்டப்பட்டிருந்த தமிழ் விவசாயிகள், மீண்டும் 2012 ஆம் ஆண்டு தங்களுடைய கிராமங்களுக்குத் திரும்பி வந்திருந்தபோது, விவசாயம் செய்யக்கூடிய தமது தாழ்நிலப் பகுதிகளை சிங்களக் குடியேற்றவாசிகளிடம் இழந்ததுடன் அதற்கு நீர்ப்பாசனம் செய்யும் நீரேரிகளையும் இழந்துள்ளனர். இவ்வாறான நிலையில் தற்போது இலங்கை வன ஜீவராசிகள் திணைக் களம் தமிழ் மக்களுடைய மேட்டு நிலக் காணிகளையும் அதாவது மானா வாரியாகப் பயிர் செய்யக்கூடிய காணிகளையும் பறிமுதல் செய்ததோடு, அந்தக் காணிகளைப் பறவைகள் சரணாலயமாக மாற்றியுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் விவசாயிகள் விசனம் வெளியிட்டுள்ளதாக தமிழ் நெற் செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாகத் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் இந்தப் பகுதிகளைக் கடற்கரையின் மூலமாகத் துண்டிக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கொக்குத்தொடுவாயில் மீளக்குடியமர்ந்திருக்கும் தமிழ் விவசாயிகளில் ஒருவரான சந்திரசேகரம் கந்தையா தமிழ் நெற் செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

கொக்குளாய் கடல்நீரேரிக்கும் கரைத்துறைப் பற்று கடலுக்கும் அருகில் அமைந்துள்ள கொக்குத்தொடுவாய் கிராமமானது, விவசாயம் மற்றும் மீன்பிடியை பிரதான வாழ் வாதாரத் தொழிலாகக் கொண்டுள்ளது. தமிழ் விவசாயிகள் ஆயிரத்து முப்பத்தாறு ஏக்கர் தாழ்வு நிலத்தை மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்குப் பறிகொடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கு கடந்த இரண்டாயிரத்துப் பன்னிரண்டாம் ஆண்டு குடியேற்றத்துக்கென குறைந்தளவான மக்கள் வசிக்கும் நிலங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டதாகவும், எனினும் தற்போது அவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்த முடியாமல் மீண்டும் அங்கிருந்து இடம்பெயரும் அவலத்துக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் கந்தையா மேலும் தெரிவித்துள்ளார்.

தாழ்நிலப் பகுதிகளில் காணப்படும் விவசாய நிலங்கள் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் நீர்ப்பாசனக் குளங்கள் ஆகியன சிங்களக் குடியேற்றவாசிகளால் மணலாறு அதாவது வெலி ஓயா பிரிவின் கீழ் 2012 ஆம் ஆண்டுக்கு முன் மாற்றப்பட்டுள்ளது.

இதன்மூலம் தங்களது வாழ்வாதாரத்தைத் தொடர நினைத்த தமிழ் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வெலி ஓயா எனப்படும் சிங்களக் கிராமமானது மணலாறு எனப்படும் பழமையான தமிழ்க் கிராமத்தை அழிக்கும் முகமாகவே உருவாக்கப்பட்டது. இலங்கை அரசாங்கமானது மகாவலித் திட்டத்தைத் தமிழ்ப் பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைக்குப் பயன்படுத்துகின்றது. அதாவது வடக்கையும் கிழக்கையும் பிரிப்பது கொழும்பை மையமாகக் கொண்ட அரசின் முக்கிய நோக்கமாகக் காணப்படுகின்றது.

வடக்கையும் கிழக்கையும் நில ரீதியாகப் பிரிப்பதன் மூலம் தமிழர்களின் பிரதேச ரீதியான ஒற்றுமையை சிதைப்பதே இதன் நோக்கமாகும். மீள்குடியேறிவரும் தமிழர்கள் தங்களுடைய விவசாய நிலங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. ஆரம்பத்தில் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து செயற்படும் கண்ணிவெடி அகற்றும் குழுக்கள் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி தமிழ் விவசாயிகளை அவர்களது விவசாய நிலங்களுக்குள் அனுமதிக்கவில்லை.

இந்த உயர்ந்த நிலங்களை விவசாயிகள் மானாவாரி என்று அழைப்பார். ஏனெனில் இந்த நிலங்களில் பருவ மழையை அடிப்படையாகக் கொண்டே விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப் படுகின்றது. அந்த விவசாயி மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வெள்ளைக் கல்லடி தீ, முந்தல், குஞ்சுக்கால்வெளி, கோட்டைக்கணி ஆகியன பகுதிகளைச் சேர்ந்த நிலங்கள் பறவைகள் சரணாலயத்துக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அந்தப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் விவசாயிகள், ஆங்கிலேயர் காலத்திலிருந்து குறித்த காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களை வைத்திருக்கின்றனர்.

எனினும் இலங்கை வனஜீவராசிகள் திணைக்களமானது இந்த நிலங்களுக்குள் புகுந்து எல்லைக் கற்களை நட்டுள்ளனர். இந்த செயற்பாடு கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெறும் முன்னரே மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பகுதியானது கொக்குளாய் சரணாலயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சரணாலயமானது கொக்குளாய்க்குப் பத்துக் கிலோமீற்றர் தெற்காக ஆரம்பத்தில் காணப்பட்டது. எனினும் தற்போது அது வடக்காக நகர்ந்து கொக்குத்தொடுவாய் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக கந்தையா மேலும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு, குடியுரிமை வழங்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள்

ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என, இந்திய நாடாளுமன்றத்தில் கவனயீர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அகதி முகாம்களில் அவதியுறும் ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார் இந்திய நாடாளுமன்றில் கவனயீர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பை ரவிக்குமார் மேற்கோள்காட்டியிருக்கிறார்.

ஆதவன் வானொலியில் கடந்த மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற தமிழகத்தில் உள்ள ஈழத்து அகதிகள் தொடர்பான சிறப்பு வாரம் ஒரு வலம் நிகழ்ச்சியில் நேரலையாக பங்கேற்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான ரவி ரவிக்குமார் ஈழத் தமிழர்கள் தொடர்பான கவன ஈர்ப்பை மத்திய அரசுக்கு வலியுறுத்தப் போவதாக உறுதி அளித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

அரச தலைவர் – மாகாணசபை தேர்தல்கள் ஒன்றாக நடத்தப்பட வேண்டும் – பவ்ரல் அமைப்பு

சிறீலங்காவில் அரச தலைவர் தேர்தலும் மாகாணசபைத் தேர்தலும் ஒன்றாக நடத்தப்பட வேண்டும் என சுயாதீனமானதும், நேர்மையானதுமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கைக் குழு (பவ்ரல்) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சிறீலங்கா அரச தலைவருக்கு இந்த அமைப்பு அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இதற்கான சட்டமூலம் திருத்தப்பட வேண்டும். எல்லைகள் தொடர்பான அறிக்கை இல்லாத காரணத்தினால் மாகாணசபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்தினால் 2 பில்லியன் ரூபாய்களை சேமிக்கலாம்.

இரண்டு தேர்தல்களையும் 6 மாத இடைவெளியில் நடத்தினால் அரசியல் வாதிகள் மக்களுக்கான பணிகளை விடுத்து தேர்தல் பணிகளிலேயே அதிக அக்கறை காண்பிப்பார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு காலாவதியாகிவிட்டது – தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் பேட்டி

யுத்தத்திற்குப் பின்னரான நிலைமாறு கால அரசியலில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் தமிழ் மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக இருப்பார் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் வடமாகாண முன்னாள் அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய பேட்டியில்; இவ்வாறு தெரிவித்தார். பேட்டியின் இறுதிப்பகுதி வருமாறு,

கேள்வி:- விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் யுத்தத்தின் ஈற்றில் சரணடைய வில்லை என்று இராணுவத்தினர் கூறுகின்றமையை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

பதில்:- பொறுப்புக் கூறவேண்டிய அரசாங்கத் தரப்பே காணாமலாக்கப் பட்டவர்கள் என்று எவருமே இல்லை, அவர்கள் எல்லோரும் வெளிநாடுகளுக்குப் போய்விட்டவர்கள் என்று பொய்சொல்லும்போது, யுத்த விதிகளை மீறி யுத்தத்தின்போது பிடிபட்டவர்களையும், யுத்தத்தின் பின்பு சரணடைந்தவர்களையும் கொன்றொழித்த இராணுவம் உண்மையைப் பேசும் என்று நாம் எவ்வாறு எதிர்பார்க்கமுடியும்? தமது கணவன்மார்களையும், பிள்ளைகளையும் படையினரிடம் ஒப்படைத்த அவர்களது உறவினர்கள் இப்போதும் உயிருள்ள சாட்சியங்களாக இந்த மண்ணில்தான் இருக்கின்றார்கள்.

கேள்வி:- யுத்தத்தின்போது சரணடைந்து காணாமல்போனவர்கள் உட்பட காணாமல் ஆக்கப்பட்டவர்கள்  குறித்து அடுத்தகட்டமாக எவ்விதமான நடவடிக்கைகளை  எடுக்க முடியும்?

பதில்:- யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத்தேடி அவர்களின் உறவினர்கள் கண்ணீரும் கம்பலையுமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். உணவுத்தவிர்ப்புப் போராட்டம் உட்பட எல்லாவிதமான போராட்டங்களையும் நிகழ்த்திப் பார்த்துவிட்டார்கள். எல்லாத்தரப்பு அரசியல்வாதிகளின் கால்களில்கூட விழுந்து மன்றாடியும் பார்த்துவிட்டார்கள. இதுவரைக்கும்  பொறுப்பான பதில் எவர்களிடமிருந்தும் கிடைக்கவில்லை. மன்னிப்போம் மறப்போம் என்று அரசு அசட்டை செய்கிறது. இனி இவர்களால் முன்னெடுப்பதற்கு வேறு போராட்டங்கள் எவையும் இல்லை. பார்ப்பதற்கு வேறு அரசியல்வாதிகளும் இல்லை. காணாமல் போனோருக்கான அலுவலகமும் தீர்வைப் பெற்றுத் தருவதாக இல்லை.

30/1 தீர்மானத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்து, உண்மையை வெளிக் கொணர வைத்து அரசாங்கத்திடம் இருந்து உரிய பரிகாரத்தைப் பெற்றுக்கொடுக்க எமது தலைவர்கள் தவறிவிட்டார்கள். தென்னிலங் கைப் பாராளுமன்ற அரசியல் நெருக்கடிகளின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்குத் தமிழ் இனம்சார்ந்து எவ்விதபேரத்தையும் முன்வைக்காமல் ஆதரவளித்த எமது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறைந்தபட்சம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர் பாகவும் சிறையில் வாடுகின்ற அரசியல் கைதிகள் தொடர் பாகவும் பேரம் பேசியிருக்க முடியும். ஆனால் இவர்கள் அடுத்த தேர்தலில் தாங்கள் வெல்ல வேண்டும் என்பதில் மாத்திரம் குறியாக இருந்து கம்பெர லியாவை மாத்திரம் வாங்கி வந்திருக்கிறார்கள்.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணியன்று அவசியம் என்பது குறித்து தங்களின் நிலைப்பாடு என்ன?

IMG 0993 copy கூட்டமைப்பு காலாவதியாகிவிட்டது - தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் பேட்டிபதில்:- தமிழ்த் தேசிய கூட்டமைப்பு காலாவதியாகிவிட்டது. யுத்ததிற்குப் பின்னர்; தமிழ் இனம் சார்ந்து அரசியலை முன்னெடுக்கத் தவறிவிட்டது. விடுதலை அரசியல்  தேர்தல் அரசியல் போன்று இன்னகாலத்துக்குள் முடியுமென்று தீர்மானிக்க முடியாதது. இது தொடர் அஞ்சலோட்டம் போன்றது. முள்ளிவாய்க்காலில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுத அலகு தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், அஞ்சலோட்டம் போன்று சனநாயக ரீதியாகப் போராட்டத்தை அடுத்தகட்டத்துக்கு முன்னெடுத்திருக்கவேண்டிய கடப்பாடு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு இருந்தது. விடுதலைப் புலிகளே தங்களை உருவாக்கினார்கள் என்று சொல்லிக்கொள்ளும் கூட்டமைப்பு அந்தப் பணியிலிருந்து விலகிச்சென்றது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் விடுதலைப்புலிகள் இழைத்திருக்கக் கூடிய தவறுகளை அரசாங்கத்தின் போர்க் குற்றங்களுடன் சமப்படுத்தி சர்வதேச அரங்கில் அரசாங்கத்தைப் பிணையெடுத்தார்கள். அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதல் விடுதலைப்புலிகள் உட்பட உலகெங்கிலும் உள்ள தேசிய இனங்களின் விடுதலைக்காக போராடுகின்ற  அமைப்புகளுக்கு பாதகமாக அமைந்தது. அதே போன்று சித்திரையில் இடம்பெற்ற இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை சனநாயக ரீதியில் முன்னெடுப்பதற்குத் தடங்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

2009 இற்கு பின்னர், பத்து வருட காலத்துக்குத் தேவையற்ற விதத்தில் காலநீடிப்பை வழங்கித் தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பின்தள்ளியதுதான் தமிழ்க் கூட்டமைப்பு செய்த ஒரே சாதனை. மேற்குலகின் நலன்களுக்காக சனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா ஆகியோரின் வலிந்து ஓட்டுப் போடப்பட்ட  ஆட்சி அதிக காலம் நீடிக்காது என்பது சாதாரண பாமரமக்களுக்கும் தெரியும்.ஆனால், இவர்கள்  எந்தவித நிபந்தனையும் விதிக்காது ஆதரவு வழங்கி வந்துள்ளனர்.  கடைசியில், அரசாங்கம் நினைப்பது போன்றே அபிவிருத்தியினால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கலாம். என்ற நிலைக்குக் கீழ் இறங்கி கம்பெரலியாத் திட்டத்துடன் ஒழுங்கை ஒழுங்கையாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இனப்பிரச்சினை தோற்றம் பெற்றதற்கான அரசியற் காரணிகள் இன்னமும் தீர்க்கப்படாமல் நீடித்திருக்கும் நிலையில் யுத்தத்திற்குப் பின்னரான தமிழ் அரசியலை முன்னெடுப்பதற்குத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான மாற்று ஒன்று அவசியமாகும்.

கேள்வி:- யுத்தத்திற்கு பின்னரான தமிழ் அரசியலை முன்னெடுக்க வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் பொருத் தமானவர்  என்று நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்:- விக்னேஸ்வரன் அவர்கள் அவரது அரசியல் எதிரிகளால் அரசியல் தெரியாதவர், நிர்வாகம் தெரியாதவர், மாகாண சபையின் ஐந்து வருட பதவிக்காலத்தையும் வீணாக்கியவர்; என்று கடுமையாக விமர்சிக்கப் படுகிறார். பொதுமக்களால் நேர்மையானவர், உண்மைகளை இடித்து ரைப்பவர், தமிழினம் சார்ந்து ஆணித்தரமாகப் பேசுபவர் என்று கருதப் படுகிறார். நான் ஐந்து வருடகாலம் மாகாணச பையின் உறுப்பினராக இருந்தவன் என்ற வகையில் இவர் எவ்வாறு அவரது பணிகளைச் செய்யவிடாது மாகாண சபைக்குரிய அதிகாரங்களைக் காட்டி அரசாங்கத் தரப்பாலும், அரசியல் காழ்ப்பால் உட்கட்சித் தரப்பாலும் தடுக்கப்பட்டார் என்பதை நான் நன்கு அறிவேன்.

wick and kajan 1 கூட்டமைப்பு காலாவதியாகிவிட்டது - தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் பேட்டிஅவர் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாகத் தீவிரமான கருத்துகளை தெரிவித்து வந்தமையும், மாகாணசபையில்  தமிழின அழிப்புப் பிரேரணையை நிறைவேற்றியமையும், எங்கே இவர் மக்கள் மத்தியில் தங்களை மிஞ்சிப் பெரும் செல்வாக்கு பெற்று உயர்ந்து விடுவாரோ என்று தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் எழுந்த அச்சமும் இவர் பணிகளுக்கு இடையூறாக அமைந்தன. என்னைப் பொறுத்தவரையில் இவர் யுத்தத்திற்குப் பின்னரான நிலைமாறு கால அரசியலில் தமிழ் மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக இருப்பார்.

நேர்காணலின் முதலாவது பகுதியை வாசிக்க பின்வரும் இணைப்பை அழுத்தவும்:

எமது தேசிய சூழலை நல்லாட்சி செய்யும் அதிகாரம் எங்களிடமே இருக்க வேண்டும்(நேர்காணல் -1) – ஐங்கரநேசன் 

2020ம் ஆண்டு சனாதிபதி தேர்தல் – இந்தச் சூழ்நிலையை தமிழர்கள் எவ்வாறு தமக்குச் சாதகமாக்கலாம்? – அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

2020ம் ஆண்டு இலங்கை சனாதிபதி தேர்தலில் யார் யார் வேட்பாளர்களாகப் போட்டியிட உள்ளனர் என்கிற விடயம் இன்று அனைத்துலக பிரச்சினையாக உள்ளது என இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரா குறிப்பிட்டுள்ளார். இதனால் பொது எதிரணியின் சனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சவை களமிறக்கினால் கட்சிக்குள் பிளவு ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் முன்னாள் அமைச்சரும் சட்டநிபுணரும் பொதுசன முன்னணியின் தவிசாளருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கோத்தபாயவின் மேல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் இதுவரை குற்றவாளியாகக் காணப்படாததினாலும் கோத்தபாய சுயமாகவே அமெரிக்கப் பிரகாவுரிமையையும் நீக்கியுள்ளதாலும் அவர் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க எந்தத் தடையுமில்லை என வீரகேசரிக்கு அளித்த செவ்வியில் கூறியுள்ளார்.

கோத்தபாய அமெரிக்க பிரசையாக இருந்த காலத்திலேயே இலங்கைப் பிரசையாகவும் நாட்டிலிருந்து பாரிய சேவை ஆற்றியுள்ளார் எனப் பாராட்டியும் உள்ளார்.சனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தல் நடத்தவுள்ளதாகவும் பேராசிரியர் பீரிஸ் கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கம் முன் எடுத்த எந்த விடயத்தையும் தாம் கவனத்தில் எடுக்கப் போவதில்லை எனவும் புதிய சிந்தனை, புதிய ஆரம்பம் என்பதற்காகவே மக்கள் தமக்கு ஆணை தருகிறார்கள் எனவும் பேராசிரியர் பீரிஸ் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதா அல்லது மறுசீரமைவுகளைச் செய்வதா என்பதும்  மக்களின் தீர்மானத்திற்கு அமைவாகவே தாங்கள் மேற்கொள்வார்கள் எனக் கூறிய பீரிஸ் அவர்கள் “மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றச் சாட்டுக்கள் இடம்பெற்றமைக்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டு ஜெனிவா தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ராஜபக்ச தரப்பினர் ஆட்சிக்கு வந்தால் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேருமல்லவா? என்று கேட்கப்பட்ட  கேள்விக்கு “ இவ்வாறான முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் இதுவரையில் எவையும் நிரூபிக்கப்படவில்லை. மனித உரிமைகளின் பெயரில் செயற்படும் நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் கிடைக்கிறது.

உதாரணமாக யஸ்மின் சுக்கா முன்னெடுக்கும் செயற்திட்டத்திற்கு பெரும் தொகை நிதி கிடைக்கிறது. இதனால் அந்தத் திட்டத்தை உயிர்ப்புடன் வைத்து தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதற்காக அவர்கள் பல விடயங்களைச் செய்வார்கள்” எனப்பதில் அளித்துள்ளமை சனாதிபதி தேர்தலின் பின்னர் எந்த அளவுக்கு மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து பொதுசன ஐக்கிய முன்னணி அலட்சியமாக நடந்து கொள்வார்கள் என்பதற்கு எதிர்வு கூறியுள்ளது.

மௌபிம ஜனதா கட்சி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈழவர் ஜனநாயக முன்னணி, முஸ்லிம் உலமாகட்சி, லிபரல் கட்சி, நவசிஹல உறுமய, ஜனநாயக தேசிய ஒன்றியம், ஐக்கிய லங்கா மகாகட்சி, பூமி புத்ரா கட்சி ஆகிய பத்துக்கட்சிகள் பொதுசன பெரமுனவில் இணைந்துள்ளன. ஆகஸ்ட் 11இல் முன்னாள் சனாதிபதியும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச பொதுசன முன்னணியின் உத்தியோக பூர்வமான தலைமையை ஏற்றுக் கொண்டு சனாதிபதி தேர்தலுக்கான பொதுசன முன்னணியின் சனாதிபதி வேட்பாளரையும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே ஐக்கிய தேசியக்கட்சியும் மற்றைய சிங்களக் கட்சிகளும் தேர்தல் இணைப்புக்களை ஏற்படுத்துவதிலும் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களை இனங்காண்பதிலும் படுவேகமாக ஈடுபட்டுள்ளன.

Karu Ranil Sajith 2020ம் ஆண்டு சனாதிபதி தேர்தல் - இந்தச் சூழ்நிலையை தமிழர்கள் எவ்வாறு தமக்குச் சாதகமாக்கலாம்? - அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்ஆயினும் எல்லாச் சிங்களக் கட்சிகளுமே பொதுத்தன்மையாக 2020 இலங்கை சனாதிபதி தேர்தல் களத்தை வழமை போல் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு பேரெழுச்சி கொடுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. அதே வேனை சனாதிபதியின் பதவிக்காலத்தை நீடித்து சிங்களபௌத்த பேரினவாதத்தை மேலும் பலப்படுத்திய பின்னர் கூட்டாகத் தேர்தல்களம் காணலாமென்ற முயற்சிகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

சிங்கள பௌத்த பேரினவாதிகள்  1949 இல் இலங்கையின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தி உலகச் சந்தையில் இலங்கை என்றொரு நாட்டிற்கு பொருளாதார முக்கியத்துவம் அளித்த மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து இலங்கைப் பாராளுமன்றத்தில் சட்டவாக்க அதிகாரத்தைத் தமதாக்கக் கூடிய வகையில் பாரா­ளுமன்றச் சிங்களப் பிரதிநிதித்துவத்தைப் பெருக்கிக் கொண்டனர்.  இதனை எதிர்த்து மலையகத் தமிழர்கள் மேற்கொண்ட சனநாயகப் போராட்டங்களை அலட்சியப்படுத்தி தமிழர்களின் சனநாயக வழிப்போராட்டங்களை கவனத்தில் எடுக்காத அரசியல் தந்திரோபாயத்தைத் சிங்கள அரசியலாகவே தொடக்கி வைத்தனர். தொடர்ந்து  1956இல் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து அனைத்துத்  தமிழர்களும் அரசகட்டமைப்புக்குள் தொழில் செய்யும் உரிமையைப் பறித்து அரசின் நிர்வாகத்தைச் சிங்கள மயப்படுத்தினர். இதற்கு எதிராக அமைதிவழியில் தமிழர்கள் தொடங்கிய சனநாயகப் போராட்டங்களை வன்முறைப்படுத்தி நாட்டில் குழப்பநிலையைத் தோற்றுவித்து அதனைப் பயன்படுத்தி 150 தமிழர்களுக்கு மேல் திட்டமிட்ட முறையில் இனஅழிப்புச் செய்துதமிழர்களை இனங்காணக் கூடிய அச்சத்துக்குள்ளாக்கி கிழக்கில் தமிழர்களின் நிலங்களை வன்முறையில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கும் போக்கைத் தொடக்கி வைத்து நில வளமும் நீர் வளமும் கொண்ட தமிழர் தாயகத்தின் கிழக்கு மாகாணத்தை அதிலும் குறிப்பாகத் தமிழர் தாயகத்தின் பெருநிலப்பரப்பான திருக்கோவில் அம்பாறை மாவட்டத்தைச் சிங்களக் குடியிருப்பாக்கி கையகப்படுத்தி  அதன் விரிவாக்கமாகத் தமிழர் தாயகத்தின் முக்கிய துறைமுக நகரமான திருகோணமலை வரை சிங்களக் குடியேற்றங்களை குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கில் பெருக்கினர்.

இந்தத் தமிழின அழிப்புத் திட்டத்தின் தொடர்ச்சியாக, கொழும்பை மையப்படுத்தி தமிழர்களின் வடக்கு கிழக்குக்கு வெளியே இருந்த வாழ்வாதாரங்களை பறித்தெடுக்கும் நோக்கிலும் தமிழின அழிப்பைத் திட்டமிட்ட முறையில் சிங்கள அரசுக்களின் அரசியல் தந்திரோபாயம் ஆக்கும் போக்கிலும் 1958இல் நடாத்திய பெருமளவிலான தமிழினப்படுகொலைகள் இலங்கைத் தமிழினத்தினை அச்சப்படுத்தி அவர்களின் அரசியல் பணிவைப் பெறும் தந்திரோபாயத்தை இலங்கை அரசுகள் தொடர வைத்தன.

1965ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை தமிழர்களின் உயர்கல்வியை மறுக்கும் அல்லது குறைக்கும் வகையில் பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழ் இளம் தலைமுறையினரின் வளர்ச்சிகள் தடுக்கப்பட்டன. இதனை எதிர்த்து சனநாயகவழிகளில் போராடத் தொடங்கிய அரசியல் விழிப்புணர்வு பெற்ற தமிழர்களை காரணமின்றிக் கைது செய்தும் விசாரணையின்றித் தடுத்து வைத்துச் சித்திரவதை செய்தும் காவல்துறையினரை இராணுவத்தினராக மாற்றிப் பகைநாடொன்றில் ஊடுருவி அழிப்பது போல அப்பாவித் தமிழ் இளைஞர்களைக் கொன்றழித்தும் காணாமல் போகச் செய்தும் 1970கள் முதல் 1978 வரை வகைதொகையற்ற மனித அவலங்களை ஏற்படுத்தித் தமிழ் மக்களின் நாளாந்த வாழ்வை திட்டமிட்ட வகையில் முடக்கத் தொடங்கினர். சிங்களம் மட்டும் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட திரு கோடீஸ்வரன் அவர்கள் சோல்பரி அரசியல் அமைப்பின் மூலம் தமிழர்களின் இறைமையை இலங்கைப் பாராளுமன்ற ஒற்றையாட்சிக்கு உட்படுத்திய பொழுது பிரித்தானிய அரசு வழங்கிய 29(2) அரசியலமைப்புப் பாதுகாப்புக்கு கீழ் பிரித்தானியப் பிரிவிக்கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்தார். அதனை ஏற்று பிரித்தானிய அதி உயர் நீதிமன்றமான பிரிவிக் கவுன்சில் சிங்களம் மட்டும் சட்டத்தை இலங்கைப் பாராளுமன்றம் மறுபரிசீலனை செய்யுமாறு பணித்து அவருக்கு அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்ட காலத்திற்கான சம்பளத்துடன் மீளவும் வேலை வழங்குமாறு நீதி வழங்கியது.

61sathyagraha 2020ம் ஆண்டு சனாதிபதி தேர்தல் - இந்தச் சூழ்நிலையை தமிழர்கள் எவ்வாறு தமக்குச் சாதகமாக்கலாம்? - அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்இதனை ஏற்க மறுத்து சிங்கள பௌத்த பேரினவாதம் தன்னைச் சிறிலங்காக் குடியரசு என தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநிதிகள் பங்கேற்காத பாராளுமன்றத்திற்கு புறம்பான அரசியல் நிர்ணய சபை மூலம் 22.05.1972 இல் பிரகடனப்படுத்தி இலங்கைத் தமிழர்கள் மேலான் ஆக்கிரமிப்பு அரசை நிறுவிக் கொண்டது. இவற்றை சனநாயக வழிகளில் எதிர்த்த தமிழ் அரசியல் தலைமையாளரான எஸ்.ஜே. வி செல்வநாயகம் அவர்கள் தனது காங்கேசன்துறைப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை விட்டு விலகி அடையாளக் குடியப்பம் நடாத்துவித்து 1975இல் அதில் ஒன்பதினாயிரத்திற்கும் அதிகமான மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு வந்து தமிழர்கள் கால் நூற்றாண்டாக ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமையில் தாங்கள் பிரித்தானியர்களிடம் இழந்த அரசியல் உரிமைகளை மீளப்பெற எடுத்த முயற்சிகள் முடியாமல் போனமையால் இனி தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கும் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தித் தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக உலகுக்கு அறிவித்து  தமிழர்களின் உள்ளக சுயநிர்ண உரிமையை வாபஸ்பெற்று தமிழர்களின் வெளியக சுயநிர்ணய உரிமையை உலகுக்கு வெளிப்படுத்தினார்.

நாடற்ற தேசஇனமாக இலங்கைத் தமிழ் மக்கள் மாற்றப்பட்ட நிலையில் சிங்கள அரசாங்கம் தமிழர்களின் தாயகத்தை சனநாயகவழிகளில் ஏற்க மறுத்தால் வேறு எந்த வழிகளிலும் அதனை அடைவோம் என்ற தேர்தல் அறிக்கையுடன்  1977 தேர்தலை தங்கள் தாயகத்தை மீட்டெடுத்து மக்களாட்சியை நிலைப்படுத்துவதற்கான குடியப்பமாகத் தமிழர்கள் அறிவித்து அதில் வெற்றியும் பெற்றனர். இந்த அரசியல் மாற்றங்களை ஆயுதபடைபலம் கொண்டு சிங்களப் பேரினவாத அரசு அழித்தொழித்த காலகட்டத்தில் தமிழ் மக்கள் குறிப்பாக தமிழ் இளம் சமுதாயம் 1970 முதல் 1978 வரை உயிர் உடமைகள் பாதுகாப்புக்காக ஆயுத எதிர்ப்பை வெளிப்படுத்தக் கூடிய மக்கள் போராட்ட இயக்கங்களாக மாறி 1978இல் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினைத் தமிழர்களின் பாதுகாப்புக்கான தலைமை இயக்கமாகக் கொண்டு தமிழர்கள் வாழவேண்டிய வரலாற்றைச் சிங்கள அரசுக்கள் உருவாக்கின.

இந்தச் சூழலில்தான் 1958இல்தொடக்கப்பட்ட தமிழின அழிப்பின் வெள்ளிவிழாவாக 1983இல்  இலங்கையில் சிறிலங்கா அரசின் ஆதரவுடன் சிங்கள பௌத்த பேரினவாதிகள் 2000க்கும் மேற்பட்ட தமிழர்களை இனஅழிப்புக்கு உள்ளாக்கி வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்ந்த தமிழர்களின் மேலான இனத்துடைப்பு முயற்சிகள்வழியாக பல மில்லியன் மதிப்புள்ள பொருள்இழப்புக்களையும் தமிழர்களுக்கு ஏற்படுத்தி அவர்களின் தொழில் செய்யும் உரிமையினை மறுத்து அவர்களை வடக்கு கிழக்குக்கு விரட்டியடித்து வடக்கு கிழக்குதான் தமிழர்களின் தாயகம் என்பதை  வெளிப்படுத்திக் கொண்டனர். கொடிய தமிழின அழிப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில்தான் இலங்கையின் சனாதிபதியாக இருந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனா 1983 இனஅழிப்பின் பொழுது பிரித்தானிய ஊடகவியலாளர் இயன்போர்ட்டிற்கு “நான் யாழ்ப்பாண மக்களின் (தமிழர்) கருத்துக் குறித்து கவலை அடையவில்லை. நாங்கள் அவர்கள் குறித்துச் சிந்திக்க முடியாது.

அவர்களின் வாழ்க்கை அவர்களின் கருத்து குறித்துக் கவலைப்பட முடியாது. வடக்கின் மீது நாங்கள் எவ்வளவு அழுத்தங்களைக் கொடுக்கின்றோமோ அந்த அளவுக்குச் சிங்கள மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். நான் தமிழ் மக்களைப் பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்” என்றார். இதுவே அன்று தொட்டு இன்று வரை சிங்களத் தலைமைகளின் தொடர்ச்சியான நிலைப்பாடாக உள்ளது என்பதற்கு இன்று பொதுசன முன்னணியின் தவிசாளரான பேராசிரியர் ஜி எல் பீரிஸ் இன்று தமிழர்களுக்காகக் குரல் எழுப்பும் உலகின் மனச்சாட்சியுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் குறித்த வீரசேகரிப் பேட்டி மீளவும் நிரூபிக்கிறது.

இந்நிலையில் இலங்கையில் தமிழர்கள் தங்களின் தொன்மையும் தொடர்ச்சியுமான இருப்புநிலையான தாயகம், தேசியம், தன்னாட்சி என்பதனைத் தக்கவைப்பதற்கான அரசியல் விழிப்புணர்வைத் தங்களின் பாதிப்புற்றுள்ள குரலை எவ்வாறு ஒலிக்கச் செய்வதற்குத் தேர்தல் களத்தில் ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் செயற்படலாம் எனச் சிந்திக்க வேண்டிய நேரமாக அமைகிறது.

உலகநாடுகளில் அந்த அந்த நாடுகளின் சிறுபான்மையினமாகவும் புலம்பெயர் மக்களாகவும் உள்ள தமிழர்கள் உடனடியாகவும் உறுதியாகவும் தாங்கள் வாழும் நாடுகளின் மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும், மனிதஉரிமை மற்றும் மனிதநல அமைப்புக்களுக்கும் இலங்கையின் சனாதிபதி தேர்தல் நடைபெறலாமென்ற உத்தேச நிலையிலேயே தமிழர்களுக்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்களும் யுத்தக் குற்றச் செயல்களும் குறித்த அனைத்துலக அக்கறைகளை கேலிபண்ணும் சிறிலங்கா அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற இனவெறி மதவெறிப் பேச்சுக்களையும் வெளிப்படுத்தித், தொடருகின்ற இனக்காணக்கூடிய  அச்சங்களைக், குறித்த தகவல்களையும் புள்ளிவிபரங்களையும் சான்றாதாரங்களுடன் செய்திப்படுத்தி இவை குறித்த அனைத்துலக விசாரணைகளை வேகப்படுத்துமாறும், எதிர்காலத்தில் இலங்கையில் தமிழரின் மனித உரிமைக்கு எதிரானவன் முறைச் செயற்பாடுகள் நடைபெறாதவாறு அனைத்துலக அழுத்தங்களையும் தலையீடுகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்க வேண்டும்.  இதற்கான புலம்பெயர் தமிழர்களின் மனித மூலவளம் சிதறிப் போகாதவாறு புலம்பெயர் தமிழர்களின் மனித உரிமை மற்றும் அமைதிக்காக இதுவரை உழைத்து வரும் அனைத்துத் தமிழர்களையும் ஒருங்குபடுத்தி அவற்றின் தனித்துவங்களைப் பேணிய நிலையில் ஒரு பொதுக்கொள்கைக்குக் கீழ் வழிப்படுத்தும் ஈழத்தமிழர்களின் மக்கள் அமைப்பு ஒன்று விரைவாகவும் அறிவார்ந்த நிலையில் உணர்ச்சிகளைக் கடந்து உணர்வுடன் சனநாயக வழிகளிலும் அனைத்துலக நாடுகள் மற்றும் அமைப்புக்களுடனான உரிய தொடர்புகளுடனும் செயற்படுத்தப்பட வேண்டும்.

இந்நோக்கங்கள் உடன் கடந்த ஒருஆண்டாக ஆரம்பநிலையில் முயன்று வரும் ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்பு மையம் இவ்விடயத்தில் சரியானதைச் சரியாகச் செய்து தமிழர்களின் வினைத் திறனையும் விளை திறனையும் பெருக்க வேண்டிய நேரமிது. இன்று அனைத்துலக விவகாரமாக இலங்கை சனாதிபதி தேர்தல் மாறியுள்ள நிலையில் வேகமுடனும் விவேகமுடனும் ஒற்றுமையுடனும் செயற்பட்டு இனஅழிப்புக்கான நீதியையும், காணாமல் போனவர்களுக்கான பொறுப்புக் கூறலையும், தாயக மக்களுக்குக் பெற்றுக் கொடுக்க வேண்டியது புலம்பெயர் தமிழர் வரலாற்றுக்கடமையாக உள்ளது.