Home Blog Page 3061

பாகிஸ்தான் காவல் நிலையம் மீது தாக்குதல் – 5 பேர் பலி

பாகிஸ்தானில் காவல்துறை அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன், 27 பேர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

நேற்று (30) மாலை கெட்டா பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது உந்துருளியில் வந்த தற்கொலையாளிகள் தாக்குதல் நடத்தியதாகவும், அது காவல்துறை வாகனத்தை குறிவைத்தே காவல் நிலையத்திற்கு அண்மையில் நிகழ்ந்ததாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் இரு காவல்துறை அதிகாரிகளும் அப்பாவி மக்கள் மூவரும் கொல்லப்பட்;டதுடன். பல காவல்துறை அதிகாரிகள் உட்பட 27 பேர் காயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளர்.

பாகிஸ்தானில் அண்மைக்காலமாக இவ்வாறான பல தாக்குதல்கள் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

தமிழினத்தை மீண்டும் மீண்டும் ஏமாற்றலாமென கனவு காண்கிறதா- தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம்

அரசுக்கு முண்டு கொடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு வாத அரசியல் நடவடிக்கைகளை ஏன் கையில் எடுத்துள்ளமைகான காரணம் என்ன என்ற வினா தாயக உறவுகளின் மத்தியில் மேலெழுந்துள்ளதோடு பாரிய அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியானது ஆட்சிப்பீடத்தில் இருப்பதற்கு எந்தவிதமான நிபந்தனைகளையோ, உடன்படிக்கைகளையோ செய்யாது வரவுசெலவுத்திட்டங்கள், பெரும்பான்மையை நிரூபிக்கும் சந்தர்ப்பங்கள், நம்பிக்கை இல்லாப்பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கள் உள்ளிட்ட அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தமிழர்களையும் மறந்து தேசியத்தினையும் இழந்து காவல்தெய்வமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்து வருகின்றது. எத்தனையோ விமர்சனங்களும், வினாக்களும் பொதுவெளிகளிலும், ஊடகங்களிலும், ஏனைய பல்வேறு தரப்புக்களாலும் முன்வைக்கப்பட்டபோதும் அமைதியாக குஞ்சை அடைகாப்பது போன்று ஐ.தே.க அரசாங்கத்தின் மீது எந்தவிதமான கீறல்களும் விழாது பாதுகாத்து வந்திருந்த கூட்டமைப்பு இந்த மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து தான் பாதுகாத்து வந்திருந்த அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடக்கம் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்களும் சரவெடியாக அடுக்க ஆரம்பித்துள்ளனர். அரசாங்கம் எம்மை ஏமாற்றி விட்டது என்கிறார் தீடீரென விழித்தெழுந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மைத்திரி நம்பிக்கைத் துரோகமிழைத்துவிட்டார் என்கிறார் கம்பெரலிய கனவில் மிதந்து கொண்டிருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா.

தமிழர் தாயகத்தில் பௌத்த மதத்தின் ஆக்கிரமிப்பால் அழிவடையும் இந்து மதத்தைக் காப்பதற்கு இந்தியா உதவவேண்டும் என்கிறார் தமிழ் மக்களின் அதிக ஆணைபெற்றவர் என்று மார்பு தட்டிவரும் சிறிதரன், புதிய அரசியலமைப்பு வராது விட்டால் நாடு பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்கிறார் சுமந்திரன்.

மைத்திரியும், ரணிலும் ஏமாற்றிவிட்டதால் அரசாங்கத்தினை பதவியில் தொடரவைப்பதா இல்லையான என்ற கோணத்தில் செல்வம் அடைக்கலநாதன், யோகேஸ்வரன், ஸ்ரீநேசன், கோடீஸ்வரன் என தமது மனதுக்குப்பட்டவகையில் அரசுக்கு எதிரான வார்த்தைகளை அள்ளிவீசுகின்றார்கள். சனநாயகத்தினை உறுதிப்படுத்துவதற்காக ரணில் அரசாங்கத்தினை ஆட்சியில் அமரவைத்திருக்கின்றோம்.

யானை ஆட்சியில் அமர்ந்திருந்தாலும் அதன் பாகனாக இருக்கும் கூட்டமைப்பின் அங்குசத்தின் சுட்டுக்களிலேயே அது நகர்கின்றது என்று பூடகம் போட்டவர்கள் ஏன் இவ்வாறு திடீரென்று அரச எதிர்ப்புவாத கருத்துக்களை காட்டுத் தீயாய்ப் பரவ விடுகின்றார்கள் என்ற சந்தேகம் அனைவரினதும் மனதில் இயல்பாகவே எழுகின்றது. சிறீலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய சனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் செப்டம்பர் மாத பிற்பகுதியில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், சனாதிபதி தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதிக்குமிடையிலான ஒரு சனிக்கிழமை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாகவும் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

ranil sampanthan தமிழினத்தை மீண்டும் மீண்டும் ஏமாற்றலாமென கனவு காண்கிறதா- தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம்மறுபக்கத்தில் இனப்படுகொலையை அரங்கேற்றிய மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன முன்னணி எதிர்வரும் மாதம் 11ஆம் திகதி தனது சனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்குரிய முனைப்புக்களைச் செய்துவரும் அதேநேரம் ஆரம்பகாலம் தொட்டு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் ஊடாக தமிழர்களை நசுக்கி வரும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் 5ஆம் திகதி தனது புதிய கூட்டணிக்கான உடன்படிக்கை நிகழ்வையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் முஸ்லிம் கட்சிகள் ஐ.தே.க தரப்புடன் இணைவது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில் கூட்டமைப்பும் பெரும்பாலும் அவ்வாறான முடிவொன்றையே எடுக்கவுள்ளது. மகிந்த இனவழிப்புக்கு காரணமாக இருந்தவர் என்பதால் அவரை ஆதரிக்க முடியாது என்பதில் நியாயமான காரணம் இருந்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப் பதற்கு கூட்டமைப்பிடம் நியாயமான காரணங்கள் எதுமே இல்லை.

மேலும் தற்போதும் அக்கட்சியின் அரசுக்கு எந்தவிதமான நிபந்தனைகளுமின்றி சரணாகதியடைந்து ஆட்சியில் அமர்வதற்கு முண்டுகொடுத்துக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு சனாதிபதி தேர்தல் உட்பட அடுத்து வரும் எந்தவொரு தேர்தலிலும் தமிழ் மக்களிடத்தில் வாக்குகளை கேட்டுச் செல்வதற்கு எவ்விதமான விடயங்களும் கையில்லை. உரிமைகளை பெற்றுத்தருவோம் என்றோ அல்லது அபிவிருத்தியை பெற்றுத்தருவோம் என்றோ கூறி தாம் சார்ந்திருக்கும் தென்னிலங்கை சிங்கள, பௌத்த பெருந்தேசியவாத கொள்கையைக் கொண்ட ஐ.தே.கவுக்கு வாக்குகளை சேகரிக்க முடியாது.

யானையின் தும்பிக்கையாக இருக்கும் தம்மீது தமது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதை பட்டவர்த்தனமாக புரிந்திருக்கும் கூட்டமைப்பு தேர்தல்களுக்கு முன்னதாக மக்களிடத்தில் செல்வதற்கான வழியை அமைப்பதற்காகவே இத்தகைய எதிர்ப்பு வாத அரசியல் நாடகமொன்றை மெல்லென அரங்கேற்ற ஆரம்பித்தள்ளது என்பது வெளிப்படையாகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2015ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையில், வரவு செலவுத்திட்டங்களுக்கு கண்மூடித்தனமாக ஆதரவு வழங்கியது, மூன்று தடவைகளுக்கு மேலாக நம்பிக்கை இல்லாப்பிரேரணை கொண்டுவரப்பட்டபோது அதனை எதிர்த்து வாக்களித்து தோற்கடித்து, ஐ.தே.க அரசாங்கத்தினை காப்பாற்றியது, ஒக்டோபர் புரட்சியின் போது எவ்விதமான நிபந்தனையுமின்றி ஆட்சியமைப்பதற்கு கைகொடுத்திருந்தது, தாயகம், தேசியம், சுயநிர்ணயம், பகிரப்பட்ட இறையாண்மையுடன் இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்ற மக்கள் ஆணை பெற்ற கோட்பாட்டை கைவிட்டு ஒற்றை ஆட்சிக்குள் தீர்வினை தேட விளைந்தது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் விடயம் உட்பட தாயக தமிழர்கள் முகங்கொடுக்கும் எந்தவொரு ஆக்கிரப்புக்கள், கையகப்படுத்தல்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக எந்தவிதமான சனநாயகப் போராட்டங்களையோ அல்லது முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு ஆதரவையோ வழங்காதும் இருந்தது.

இவற்றை விடவும், ரணங்களைச் சுமக்கும் எந்தவொரு உறவுகளின் மனங்களில் உள்ள வேதனைகளையும் உணராது சர்வதேச அரங்கில் நீதிகோரலுக்காக நிறைவேற்றப்பட்ட ஜெனீவா பிரேரணையும் நீர்ப்புறச்செய்து தான் முண்டுகொடுக்கும் அரசாங்கம் மூச்சுவிட்டுச் செயற்படுவதற்காக செவ்வனே காப்பாற்றியிருந்தது கூட்டமைப்பு. இவ்வளவு தூரம் பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கத்திடம் சரணாகதியடைந்து விட்டு எவ்வாறு தாயகத்தில் உள்ள உறவுகளிடத்தில் மீண்டும் தமக்கோ அல்லது தாம் சார்ந்த தென்னிலங்கை தரப்பினருக்கோ வாக்குகளை கோருவது. ஆகவே தான் மகிந்தவை பரம விரோதியாகவும், தாம் தற்போது சார்ந்திருக்கும் தென்னிலங்கை தரப்பினை மென்வலு விரோதியாகவும் சித்தரித்து பகிரங்க வெளியில் எதிர்ப்புக்குல் எழுப்பும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.

உரிமைகளுக்காகவும், அபிலாசைகளுக்காகவும் ஏழு தசாப்தத்திற்கும் மேலாகவும் காத்திருக்கும் பாரம்பரியம் கொண்ட தன் இனத்தினையே இலகுவாக ஏமாற்றி தமது அரசியல் இருப்பினையும் சுகபோகத்தினையும் பாதுகாக்க விளையும் அரசியல் தரப்புக்களின் மாய வித்தை என்பது தாயக உறவுகள் தெளிவாக உணர்ந்துள்ளனர். ஆகவே இந்த எதிர்ப்புவாத அரசியல் சரசரப்புக்களுக்கு ஒருபோதும் பனங்காட்டு நரிகள் அஞ்சப்போவதுமில்லை. சோரம்போகப் போவதுமில்லை என்பது திண்ணம்.

சிறீலங்காவில் ஊடக சுதந்திரம் மறுக்கப்படுகின்றது – அனைத்துலக மன்னிப்புச்சபை

முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டதற்காக சிறீலங்கா அரசினால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஊடகவியலாளர் சக்திகா சத்குமார உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

நேற்று (30) வெளியிட்ட அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பௌத்த ஆலயங்களில் பௌத்த துறவிகளால் பாலியல் துன்புறத்தல்களுக்கு உள்ளாகிய இளம் துறவிகள் தொடர்பில் பத்தி ஒன்றை எழுதி முகநூலில் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட சத்குமார தற்போது 10 வருட சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

அமைதியான முறையில் தனது கருத்தை வெளியிட்டவரை கைது செய்துள்ளது ஊடக சுதந்திரத்தை மீறும் செயலாகும். எனவே அவர் நிபந்தனையற்ற முறையில் உடனடியாக விடுதலைசெய்யப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு;பாராளுமன்றத்தில் நடந்த ஒரு ‘பிரேத பரிசோதனை’ – பூமிகன்

புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் முயற்சிகளுக்குப் புத்துயிரளிக்க கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தனும், சுமந்திரனும் முற்பட்ட அதற்கு ஏற்கனவே சமாதி கட்டப்பட்டு விட்டது என்பதை ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றார். இந்த நிலையில், கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நடைபெற்றது புதிய அரசியலமைப்பு மீதான ஒரு பிரேத பரிசோதனையாகவே இருந்தது. இதனைக் கொன்றது யார்? அதற்கு எவ்வாறு சமாதி கட்டப்பட்டது என்பதையிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக வாதிட்டுள்ளார்கள்.

“இரண்டு வருடங்களில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் வைத்து இரு வாரங்களுக்கு முன்னர் தெரிவித்ததில் தெளிவான செய்தி ஒன்று பொதிந்திருந்தது. கடந்த மூன்று வருட காலமாக இடம்பெற்று, குற்றுயிராக – கோமா நிலையில் கிடந்த புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் முயற்சிக்கு சமாதி கட்டப்பட்டுவிட்டது என்பதுதான் அது. இன்னும் நான்கு மாதங்களில் சனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. அது முடிந்து சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறும். ஆக, இதற்கு முன்னதாக அரசியலமைப்பைத் தயாரிக்கும் முயற்சிளுக்குப் புத்துயிர் கொடுக்க முடியாது. இந்த நிலையில் இன்னும் இரண்டு வருடங்களில் தீர்வு என பிரதமர் கூறியிருப்பது ஒரு புறம் அடுத்த தேர்தலை இலக்கு வைத்த வாக்குறுதியாக இருந்தாலும், மறுபுறத்தில் தற்போதைய அரசியலமைப்பாக்க முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்பதை மறைமுகமாக அறிவிப்பதாகவும் அமைந்திருந்தது.

புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் பாராளுமன்ற வழிநடத்தல் குழுவுக்கு ரணில்தான் தலைமை தாங்கினார். அதற்கான செயலகத்துக்குப் பொறுப்பாக கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ணவும், சுமந்திரனும் இருந்தார்கள். ஆக, அரசியலமைப்பாக்க முயற்சிகளுக்கு சமாதி கட்டப்பட்டுவிட்டது என்பது இவர்களுக்குப் புரியாமலிருக்காது.TH24WORLDSRILANKAPOLITICS புதிய அரசியலமைப்பு;பாராளுமன்றத்தில் நடந்த ஒரு 'பிரேத பரிசோதனை' - பூமிகன்

பிரதமர் இந்த அறிவித்தலை வெளியிட்ட பின்னணியில், “புதிய அரசியலமைப்புக்கு என்னதான் நடந்தது?” என்பதைக் கேள்விக்குட்படுத்தும் வகையில் பாராளுமன்ற விவாதம் ஒன்றும் நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவந்த விஷேட கவனயீர்ப்புப் பிரேரணையையடுத்து வியாழன் வெள்ளி என இரண்டு நாட்களுக்கு இந்த விவாதம் இடம்பெற்றது. இந்தப் பிரேரணையின் மூலம் அரசியலமைப்பைத் தயாரிக்கும் முயற்சிகளுக்குப் புத்துயிர் கொடுப்பதற்கே கூட்டமைப்பு முயன்றதாகத் தெரிகின்றது. ஏனெனில் கூட்டமைப்புக்கு அது தேவையாக இருந்தது.

அடுத்தமாதம் புதுடில்லி செல்வதற்கு கூட்டமைப்பு திட்டமிடுகின்றது. அரசியலமைப்பைத் தயாரிக்கும் முயற்சிகள் ஒன்றுமே இல்லை – தேர்தல் தயாரிப்புக்கள்தான் நடைபெறுகின்றது என்றால், அங்கு சென்று பேசுவதற்கு எதுவுமே கூட்டமைப்புக்கு இருக்காது. அதனைவிட, புதிய அரசியலமைப்பில்தான் கூட்டமைப்பு தனது அரசியல் முதலீடுகளைச் செய்திருக்கின்றது. அதற்குச் சமாதி கட்டப்பட்டுவிட்டது என்றால், தேர்தலுக்கு முகங்கொடுக்கும் போது மக்களை எதிர்கொள்ள கூட்டமைப்பிடம் எதுவும் இருக்கப்போவதில்லை. அதனால்தான் இந்த விவாதத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு என்னவாக இருந்தாலும், அரசியலமைப்பு குறித்த ஒரு பிரேத பரிசோதனைதான் இரண்டு நாட்களாகப் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது எனச் சொல்லலாம். கூட்டமைப்பினரைப் பொறுத்தவரையில் இங்கு அவர்கள் காராசாரமாக நிகழ்த்திய உரைகள், மக்கள் மத்தியில் தமக்கான ஆதரவுத் தளத்தைத் தக்க வைப்பதற்குப் போதுமானது என அவர்கள் நம்பலாம். ஆனால் மக்களைப் பொறுத்தவரையில், அதனை அவர்கள் நம்பத் தயாராகவில்லை. கடந்த மாதம் கூட ரணிலைப் பாதுகாத்தவர்கள் இப்போது வீராவேசமாகப் பேசுவதை நம்புவது எப்படி என்பதுதான் அவர்களுடைய கேள்வி!

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வழமைபோல ஆக்ரோஷமாக ஒன்றரை மணிநேரம் பேசினார். “புதிய அரசியலமைப்பு தொடர்பாகவும் அதிகார பரவலாக்கம் குறித்தும் அரசாங்கம் உள்நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் சர்வதேச மட்டத்தில் எமது நாடு நம்பிக்கையற்றதொன்றாகிவிடும். புதிய அரசியலமைப்பு தயாரிப்புக்காக முன்மொழியப்பட்ட பிரேரணைகளை எடுத்துக்கொண்டு பிளவுபடாத நாட்டுக்குள் முறையான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விரைவாக செயற்படவேண்டும்.  இல்லாவிட்டால் இந்த அரசாங்கம் தொடர்ந்து பயணிக்க முடியாதநிலை ஏற்படும்” என்பது சம்பந்தனின் எச்சரிக்கை. சம்பந்தன் இவ்வாறு எச்சரிப்பதும் பின்னர் ரணிலுடன் பேரம் பேசி ஆதரவளிப்பதும் வழமையானது என்பதால் அதனையாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.Sambandan புதிய அரசியலமைப்பு;பாராளுமன்றத்தில் நடந்த ஒரு 'பிரேத பரிசோதனை' - பூமிகன்

அரசாங்கம் தனது பயணத்தின் இறுதிக்கு வந்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் மாற்றங்கள் வரப்போகின்றது. அரசியலமைப்பை உருவாக்கும் பணியின் ஆரம்பத்தில் சொல்லியிருக்க வேண்டியதை இறுதிக் காலத்தில் சொல்வதன் மூலம் சம்பந்தனால் எதனையும் சாதிக்க முடியாது என்பது அவருக்கும் தெரியும்.

அரசியலமைப்பு பணி ஆரம்பமாவதற்கு முன்னரே, அதாவது 2015 இலேயே, “அடுத்த வருடத்தில் தீர்வு” என நம்பிக்கை வெளியிட்டவர் சம்பந்தன். கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், “தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திகளைச் செய்வது, அவர்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குவதற்குப் பதிலீடாகாது. புதிய அரசமைப்பைக் கொண்டுவராவிட்டால் நாடு இதுவரை சந்தித்திராத பேரழிவை எதிர்கொள்ளும். 70 ஆண்டுகளாக நாங்கள் தீர்வைப் பெற முயல்கிறோம். எங்களால் இயன்ற முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளோம். எங்களுக்கு தேவை என்றபடியால் தான் நாங்கள் உச்சபட்ச ஒத்துழைப்பு மற்றும் விட்டுக்கொடுப்பை வழங்கியுள்ளோம். பிரதமரும் அரசும் தங்களின் பொறுப்பில் இருந்து நழுவி விட முடியாது” எனத் தெரிவித்தார்.

அரசாங்கம் இவ்வாறுதான் செயற்படும் என்பதற்கு இலங்கையின் வரலாற்றில் 70 ஆண்டு கால அனுபவம் உள்ளது. எழுத்து மூலமாகக் கொடுத்த வாக்குறுதிகளையே கிழித்தெறியும் அரசாங்கங்களை நாம் கண்டுவந்திருக்கின்றோம். தந்தை செல்வாவுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் இரண்டு தடவைகள் மீறப்பட்டன. மூன்று சந்தர்ப்பங்களில் மட்டும்தான் அதிகபட்சமான தீர்வுக்கு இலங்கையின் அரசாங்கங்கள் இறங்கிவந்திருந்தன.

ஒன்று – இந்தியாவின் அழுத்தத்தால் உருவான 13 ஆவது திருத்தம். இரண்டு – உள்ளக சுயாட்சிக்கு இணங்கிய ஒஸ்லோ உடன்படிக்கை, மூன்று சந்திரிகா தயாரித்த பிராந்தியங்களின் ஒன்றியம். இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் விடுதலைப் புலிகளின் பலம் அரசாங்கத்தை பணியவைத்தது. 87 இல் இந்தியாவின் தலையீடு 13 ஆவது திருத்தத்துக்கு காரணமாக இருந்தது என்றும் சொல்லலாம். அதாவது ஆயுத பலம் அல்லது, வெளிநாட்டு அழுத்தம்தான் அரசாங்கத்தைப் பணியவைக்கும். இல்லையெனில் பேரினவாத நிலைப்பாட்டில்தான் அரசு செல்லும். சிறீலங்கா அரசாங்கம் என்பது நன்கு கட்டமைக்கப்பட்ட பௌத்த –

சிங்கள கடும்போக்கால் நிறுவன மயப்படுத்தப்பட்ட ஒன்று. 2015 தேர்தலின் போது சம்பந்தனுக்கு கொடுத்த வாக்குறுதிக்காக சனாதிபதியும், பிரதமரும் புதிய அரசியலமைப்பைக்கொண்டுவந்து இன நெருக்கடிக்குத் தீர்வைத் தருவார்கள் என யாராவது நம்பியிருந்தால் அவர்கள் வரலாற்றைப் படிக்காதவர்களாக இருக்க வேண்டும். புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டபோதே, அதன் முகவுரையில் அதிகாரப்பரவலாக்கல் என்ற பதம் நீக்கப்பட்டது. அப்போதே இந்த ஆட்சியில் தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பது வெளிப்படையாகியது. அப்போதே உசாரடைந்து அதற்கேற்ற உபாயங்களை கூட்டமைப்புத் தலைமை வகுத்திருக்க வேண்டும்.

கல்முனை விவகாரத்தில் கூட்டமைப்புத் தலைமைக்கு கொடுத்த வாக்குறுதியைக்கூட அரசாங்கம் காப்பாற்றவில்லை. ஆனால், கூட்டமைப்பின் வாக்குகளால் அரசு நம்பிக்கையில்லாப் பிரேரணையிலிருந்து தப்பியது. அந்த ஒரு சிறிய பிரச்சினைக்கே தீர்வு கிடைக்கவில்லை. கன்னியா, செம்மலை விவகாரங்கள் நீதிமன்றத்துக்குச் செல்கின்றன. இவற்றுக்குக் கூட அரசியல் ரீதியிலான தீர்வு இல்லை. இந்த நிலையில், இனநெருக்கடிக்கு அரசாங்கம் நியாயமான தீர்வைத் தரும் என கூட்டமைப்பு நம்பிக்கொண்டிருக்கின்றதா? கூட்டமைப்புக் கோரிய விவாதத்துக்குப் பதிலளிக்கக்கூட பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் யாரும் சபையில் இருக்கவில்லை. சம்பந்தன் பேசிய போது சபையில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே இருந்தார்கள்.

அரசியலமைப்பு குறித்த இந்த விவாதம் – அல்லது பிரேத பரிசோதனை இரண்டு விடயங்களைத் தெளிவாக்கியிருக்கின்றது. ஒன்று – சிங்களக் கட்சிகள் எவற்றுக்குமே இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் அக்கறை இல்லை. இரண்டு – அதனைத் தெரிந்து கொண்டும் பாராளுமன்ற ஆக்ரோச உரைகளின் மூலம் இழந்து போன தமது ஆதரவுத் தளத்தைக் கட்டியெழுப்பவும், தமது தவறுகளுக்கான பொறுப்பை அரசாங்கத்தின் தலையில் போட்டுவிடுவதற்கும் கூட்டமைப்பு முயன்றுள்ளது.

கன்னியாவில் கரடியாக புகுந்த பிக்குகள் ; ஆடி அமாவாசையில் சம்பவம்

ஆடி அமாவாசை விரதமான இன்று 31 ஆம் திகதி திருகோணமலை கன்னியா வெந்நீருற்று சிவாலயத்தில் தமது பித்துருக்களுக்கான பிதுர்க்கடன் வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.

யுத்தத்திற்கு பின்னர் கன்னியா பகுதி பௌத்த மத தலைவர்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக இவ்விரத்தை ஆலய பரிபாலன சபையினரின் முயற்சியால் சிறப்பாக இடம் பெற்றுவருகின்றது.kanniya 2 கன்னியாவில் கரடியாக புகுந்த பிக்குகள் ; ஆடி அமாவாசையில் சம்பவம்

இதன் போது இங்கு வருகை தந்த பக்தர்கள் கன்னியா வெந்நீருற்றில் குளித்து விட்டு சிவாலயத்திற்கு முன்  அமைக்கப்பட்டுள்ள மதக் கிரிகை நிலையத்தில் அந்தனர்களால் மேற் கொள்ளப்பட்ட கிரியை முறையின் பின் எள்ளும் நீரும் இறைத்து இறந்த தமது  தந்தையருக்கான பிதுர் கடனை செய்து தான தர்மம் வழங்கும் கருமங்கள் இடம் பெற்றது.

இதேவேளை இப்பகுதியில்  போட்டியாக அங்கிருக்கும் பௌத்தர்களால் சைத்தி இருக்கும் பகுதியாக குறிப்பிடும் இடமான சிவாலயத்திற்கு முன்னுள்ள மேட்டுப் பகுதியில் பௌத்த மத துறவிகளின் வழிகாட்டலில் பல பௌத்த மக்கள் கலந்து கொண்ட அதிஸ்டான பூசை எனப்படும் விசேட பூசையை நடாத்தி அதில் நூற்றுக்கணக்கான பௌத்த மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வு இந்து மக்களின் புனித நிகழ்வான ஆடி அமாவாசை நிகழ்வை குழப்புவதற்காக சில பௌத்த துறவிகள் மற்றும் இனவாதத்தை தூண்டும் அரசியல்வாதிகளின் செயலாகவே நோக்குவதாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட இந்து பக்தர்கள் கவலை வெளியிட்டனர்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அமெரிக்க, ஐரோப்பிய சதி – விஜேதாச ராஜபக்ஸ

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் ஹம்பாந்தோட்ட – சீன துறைமுக ஒப்பந்தத்தின் விளைவாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவுள்ள இந்த உடன்படிக்கையை நீக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த குண்டுத் தாக்குதலுக்கு இந்நாட்டிலுள்ள பயங்கரவாதிகளைப் பயன்படுத்திக் கொண்டனர். இந்த தாக்குதல் அமெரிக்காவினதும், ஐரோப்பிய நாடுகளினதும் ஒரு சதியே ஆகும். அந்த நாடுகள் இந்த சீன உடன்படிக்கை குறித்து அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கினால், இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லாமல் போகும் எனவும் அந்த நாடுகள் கூறியிருந்தன.625.500.560.350.160.300.053.800.900.160.90 1 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அமெரிக்க, ஐரோப்பிய சதி - விஜேதாச ராஜபக்ஸ

இதனையடுத்தே இனவாத கலவரம் இந்த நாட்டில் ஏற்பட்டது. இந்த அனைத்தும் ஹம்பாந்தோட்ட உடன்படிக்கையின் பிரதிபலனாகும். இந்த உடன்படிக்கை தேசிய பாதுகாப்புக்கு ஒரு தடைக்கல்லாகும். இந்த துறைமுகத்தை சீனாவுக்கு விற்பனை செய்யும் போது வெளிநாட்டுக்கு இந்த நாடு செலுத்த வேண்டியிருந்த கடன் தொகை 60 பில்லியன் டொலராக காணப்பட்டது. விற்பனை செய்ததன் பின்னர் 85 பில்லியன் டொலர்களாக இந்த கடன் அதிகரித்துள்ளது. இந்த நாட்டை அழிப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தை ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இந்த நாட்டின் காணிகளை விற்பனை செய்வது ரணிலின் ஒரு பிரயத்தனம் ஆகும். மக்களின் காணிகளை கொள்ளையடிப்பது மத்திய வங்கியின் நிதி மோசடியைப் போன்று இலகுவானதல்ல என ரணிலுக்கு ஞாபகப்படுத்துகின்றோம். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் பிணையின்றி வீட்டுக்கு அனுப்புவோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

சிறையில் மீனவர்களைச் சந்தித்த ஆனந்தி

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஏழு பேரினது விடுதலையைத் துரிதப்படுத்தவதற்காகவும் ஆறுதல் தெரிவிப்பதற்காகவும் நேற்று வவுனியா சிறைச்சாலைக்கு விஜயம் செய்துள்ளதாக முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 7 பேரையும் சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கூறும் போது,

கடந்த (27.07.2019) அதிகாலை தொழில் நிமித்தம் கடலுக்குச் சென்ற இந்திய மீனவர்களின் படகில் டீசல் இல்லாத காரணத்தினால் தரித்து நின்ற படகை முற்றுகையிட்ட இலங்கைக் கடற்படையினர் அதில் இருந்த 7 மீனவர்களை கைது செய்து இலங்கைக்குக் கொண்டுவந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

12 மணி நேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை

பருவநிலை மாற்றம் உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. பயங்கரவாதத்தை விட காடுகள் அழிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது உலக நாடுகளுக்கு சவாலாக இருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில்  மக்கள் தொகை அதிகம் கொண்ட 2-வது நாடாக திகழும் எத்தியோப்பியாவில், வனப்பகுதி அண்மைக்காலத்தில் வேகமாக சுருங்கி வருகிறது.

கடந்த நூற்றாண்டில் 30 சதவீதமாக இருந்த எத்தியோப்பிய காடுகளின் பரப்பளவு, கடந்த 2000-ம் ஆண்டில், 4 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது. இதனால் நாட்டில் நிலவும் வறட்சியை மரங்களால்தான் எதிர்கொள்ள முடியும் என அந்நாட்டு அரசு தீர்க்கமாக நம்புகிறது. எனவே மழைக்காலத்துக்கு முன் 400 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என பிரதமர் அபிய் அகமது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது.

அதன்படி ‘பசுமை மரபு’ என்ற பெயரில் நாடு முழுவதும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. நாட்டில் இருக்கும் அனைத்து பொதுமக்களும் இதில் பங்கெடுக்க வேண்டுமென பிரதமர் அபிய் அகமது வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் அரசு ஊழியர்களும் பங்கேற்கும் வகையில் நேற்று முன்தினம் நாடு முழுவதும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அதன்படி ஏராளமான மக்கள் இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர். இதில் 12 மணிநேரத்தில் 35 கோடியே 36 லட்சத்து 33 ஆயிரத்து 660 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டு இந்தியா 12 மணி நேரத்தில் 6 கோடியே 60 லட்சம் மரக்கன்றுகளை நட்டதே உலக சாதனையாக கருதப்பட்டது. தற்போது அந்த சாதனையை எத்தியோப்பியா பெரும் வித்தியாசத்தில் முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் போர், கலவரங்களில் 12 ஆயிரம் குழந்தைகள் பலி -ஐ.நா அறிக்கை

மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக போர் நடந்து வருகிறது. இதேபோல் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே காசா எல்லையில் நடைபெறும் மோதலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுக்கும் இடையே கடந்த 18 வருடங்களாக போர் நிலவி வருகிறது. இத்தகைய நாடுகளில், கடந்த 2018ம் ஆண்டு நடைப்பெற்ற போர் மற்றும் உள்நாட்டு கலவரங்களில் பலியான குழந்தைகள் பற்றி ஐ.நா. ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஐ.நா வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் சிரியா, ஏமன், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்த கால கட்டத்தில் கடத்தல், கிளர்ச்சியாளர்களாக பயன்படுத்தப்படுதல், பாலியல் ரீதியாக துன்புறுத்தல் மற்றும் பள்ளிகள், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் என பல்வேறு வன்முறைகள் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன.

இதில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளின் வன்முறைகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே சீராக இருந்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தீவக கப்பல் பணியில் கடற்புலிகள்

யாழ்.குறிகாட்டுவானிலிருந்து தீவகங்களுக்கு செல்லும் கப்பல்களைச் செலுத்துவதற்கு தற்போதும் கடற்படையினரே பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இளைஞர்களுக்கு போதிய பயிற்சியளிக்காமையே இதற்கான காரணமாகும்.

இந்நிலையில் கடற்புலிகள் அணியிலிருந்த கப்பலோட்டிகளை சான்றிதழ் வழங்கி பணியில் அமர்த்த முடியுமா என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சமுத்திர பல்கலைக்கழக பணிப்பாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

திங்கட்கிழமை (29) யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட வடக்கு மாகாணத்தில் உள்ள சமுத்திர பல்கலைக்கழகத்தின் உபகரணத் தேவைகள் தொடர்பாக மாணவர்களை இணைத்துக் கொள்வது பற்றியும் பணிப்பாளர் தெரிவித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மேற்படி கோரிக்கையை தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த சமுத்திர பல்கலைக்கழக பணிப்பாளர் சமுத்திரா பல்கலைக்கழக பயிற்சிகள் மூலம் 50 அடிக்கு உட்பட்ட படகுகளையே செலுத்த முடியும் என்றும் அதற்கு மேலாக வடதாரகை, நெடுந்தாரகை போன்ற படகுகளை செலுத்துவதற்கு பயிற்சிகள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

கடற்புலிகளில் இருந்த பலர் கப்பலை ஓட்டும் திறமையுடன் உள்ள போதும், அவர்களிடம் அதற்கான சான்றிதழ் இல்லை எனக் காரணம் காட்டி கடற்படையினரே தீவகப் படகுகளை செலுத்துகின்றதாகவும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

கடற்புலிகளில் இருந்த கப்பலோட்டிகள் அணியை தந்தால், சான்றிதழ் வழங்கி தொழில் வாய்ப்பை ஏற்படுத்த முடியுமா? அவ்வாறு தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவீர்களானால் கடற்புலிகளில் ஒரு அணியைத் தருகின்றேன் எனவும் சிறிதரன் கூறிய போது, அதற்கு பணிப்பாளர் அமைதியாக இருந்துள்ளார்.

இச்சமயம் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா, இந்தக் குழுவிற்குத் தொடர்புபடாத விடயத்தை பேசி பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம் என்று கூறி இந்தப் பேச்சை முடித்துக் கொண்டார்.