Home Blog Page 116

Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025

Ilakku Weekly ePaper 343

Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025

Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

  • ஈழத்தமிழர் இறைமை மீளுறுதி செய்யப்படாதவரை மனிதஉரிமைகள் ஆணையகத்தால் எதுவும் செய்ய இயலாது | ஆசிரியர் தலையங்கம்
  • வொல்கர் ரேக் சொல்வாரா? செய்வாரா? – விதுரன்
  • ஆட்சிக்காக யாரோடும்; சேருவோம்.! அரசியல் தீர்வுக்காக விலகிச்செல்வோம்.! இதுவே தமிழ்த்தேசிய அரசியல்! – பா. அரியநேத்திரன்
  • வலுவானதாக மாறுமா ஐ.நாவின் தீர்மானம்-சுதர்சன்
  • பூகோளச் சிக்கலுக்குள் மீண்டும் இலங்கை (பகுதி-04 (இறுதிப்பகுதி) விதுரன்
  • இந்தியா, அமெரிக்கா, சீனா, ஈரான் ஆகியவற்றுக்கிடையேயான போரும் சிறீலங்காவின் இனப் பிரச்சினையும் – தமிழில்: ஜெயந்திரன்
  • தீப்பந்தம்- இசையமைப்பாளர்: சத்தியன்
  • மலையகத்தில் நாட்கூலி முறையில் உள்ள சிக்கலும் மறைமுகமாக இடம்பெறும் இனவழிப்பும் – மருதன் ராம்
  • ஈரான்-இஸ்ரேல் பிளவுக்கு நடுவே இந்தியாவின் ஆபத்தான கயிற்று நடை – சத்யா சிவராமன்
  • நாட்டின் எல்லைகளைப் பகிராத இஸ்ரேல்; ஈரான் போரின் பின்னணி என்ன? (பகுதி-1) நேர்காணல் B.A காதர்
  • ஈரானின் பலம் அறியாது களத்தில் குதித்ததா இஸ்ரேல்? வேல்ஸில் இருந்து அருஸ்

 

ஈழத்தமிழர் இறைமை மீளுறுதி செய்யப்படாதவரை மனிதஉரிமைகள் ஆணையகத்தால் எதுவும் செய்ய இயலாது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 344

ஐக்கிய நாடுள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் செப்ரெம்பர் மாதத் தொடக்க அமர்வில் இணை அனுசரணை செய்யும் நாடுகளால் சிறிலங்கா தொடர்பில் புதிய முன்மொழிவு கொண்டுவர வேண்டியிருப்பதால் பிரித்தானியா இணை அனுசரணை வழங்கும் மற்றைய நாடுகளுடன் பேச்சுக்களை இப்போதிருந்தே தொடங்க வேண்டியுள்ளது எனச் சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவர் மதிப்புக்குரிய அன்றூ பற்றிக் அவர்கள் யூன் 18இல் யாழ்ப்பாணத்திற்குச் சென்று தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரனைச் சந்தித்த பொழுது கூறியுள்ளர். பிரித்தானியத் தூதுவரின் மனித உரிமைகளைப் பேணுவது குறித்த இந்தக் கடமை உணர்வு ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் அனைவருக்கும் அவர்களின் இவ்விடயம் தொடர்பான கடமைப் பொறுப்பையும் உடன் செயப்பட வேண்டிய நேரமுகாமைத்துவத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது. மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களின் சங்க உறுப்பினர்களைச் சந்தித்த பிரித்தானிய தூதுவர், அவர்களின் வேதனைகளையும் துயரங்களையும் நேரடியாகக் கேட்டறிந்தமையை இலக்கு பாராட்டுகின்றது. தூதுவர் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த பொழுது அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலை ஊக்குவிப்பதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் சிவில் சமூகத்தின் முக்கிய பங்களிப்பை பிரித்தானியா அங்கீகரிக்கிறது எனக் கூறியுள்ளமை சிவில் சமூக அமைப்புக்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் சிறிலங்காவுக்கு இம்மாத இறுதி வாரத்தில் மனித உரிமைகளின் நிலை குறித்த மதிப்பீட்டுக்குச் செல்லும் நேரத்தில் மனித உரிமைகள் நிலை குறித்த கடந்த கால நிகழ்கால தரவுகளையும் தகவல்களையும் சான்றாதாரத்துடன் வெளியிட வேண்டிய தேவையை உணர்த்தியுள்ளது என்பது இலக்கின் கருத்தாகவுள்ளது. மேலும் இஸ்ரேல் ஈரான் யுத்தத்தால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரின் சிறிலங்காவுக்கான பயணம் கேள்விக்குறியானாலும் கூட பிரித்தானியத் தூதுவருக்குத் தகுந்த சான்றாதாரங்களை சிவில் சமூகத்தினர் விரைவாகக் கையளிப்பது ஏற்புடைய பலன்களை அளிக்கும் என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
இந்நேரத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்துடன் பணியாற்றிய தன்னார்வ அமைப்புக்கள் ஆணையகத்திடம் தேவையான அனைத்துலக சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் அளவுக்குச் சான்றுகள் இப்பொழுதே உள்ளன எனவும் இந்நிலையில் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதும் இதற்கான சான்றாதாரங்களை ஆவணப்படுத்தும் அலுவலகத்தை அமெரிக்காவின் இன்றைய நிலைப்பாடுகளால் நிதியளிப்பு இல்லாது மூடப்பட்டு விடாது தடுப்பதுமே இன்றைய சமகாலத்தின் தேவையாக உள்ளதெனக் கூறியுள்ளமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம். இதற்கு இரண்டு விடயங்களில் ஈழத்தமிழர்கள் தெளிவாகவும் ஒருங்கிணைந்தும் விரைவாகச் செயற்பட வேண்டும். ஒன்று ஈழத்தமிழர்கள் தாங்கள் இறைமையுள்ள மக்கள் என்பதை எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் மாறாத உறுதியுடன் வெளிப்படுத்துதல். அடுத்தது ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளைப் பேணுவதற்கான நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டாலே உலகின் குடிகளாக உள்ள ஈழத்தமிழர்கள் தமது நிதியுதவிகளை ஒருங்கிணைத்து நிதியின்றி தடைப்படக்கூடிய மனித உரிமைகளை பாதுகாப்பான அமைதியைப் பேணும் செயற்திட்டங்களைத் தொடர்ந்து இயங்க வைக்க முயற்கிக்க வேண்டும். இவை இரண்டிலும் ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகிலும் எந்த அளவுக்கு ஒருங்கிணைந்து செயற்படுகின்றார்களோ அந்த அளவுக்குத்தான் ஈழத்தமிழரின் மனித உரிமைகள் பாதுகாப்புப் பெறும் என்பதே இலக்கின் உறுதியான கருத்தாகவுள்ளது. மேலும் ஈழத்தமிழர் பாதுகாப்பான அமைதி வாழ்வுக்கான மனித உரிமைகள் பாதுகாப்புப் பேரவை ஈழத்தமிழர்களால் உலகளாவிய நிலையில் அனைத்து ஈழத்தமிழர் மனித உரிமைகள் மற்றும் ஈழத்தமிழர் பாதுகாப்பான அமைதிக்கான செயற்பாட்டாளர்கள் அனைவரையும் இணைத்து நிறுவப்பட்டால் மட்டுமே சரியானதைச் சரியான நேரத்தில் சரியான முறையில் உலகின் முன்வைக்க இயலும் என்பது இலக்கின் உறுதியான கருத்தாகவுள்ளது. இல்லையேல் கடந்த வார வீரகேசரி வார இதழில் கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது போல 13வது திருத்தத்தை வலியுறுத்துமாறு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க எந்தச் சட்டநிலைத் தகுதியும் இல்லாத ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்குச் சில தமிழ் சிவில் அமைப்புக்கள் கோரிக்கை மனு சமர்ப்பித்துள்ளமை போன்ற செயற்பாடுகளே நடைமுறையாக அமையும்.
தமக்கு விருப்பமானவர்களை ஆட்சியில் அமர்த்துவதையே ஆட்சி மாற்றம் என்று சதாம் ஹுசைன் முதல் பிரபாகரன் வரை செயற்பட்ட அதே வல்லாண்மைகளே, இன்று ஈரானில் தான் விரும்பிய ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த இஸ்ரேலுடன் இணைந்து செயற்படுகின்றன. இஸ்ரேலுக்கு தனது இருப்பினைப் பாதுகாக்க ஈரான் மேல் தாக்குதல் நடாத்தலாம் என்னும் இதே அமெரிக்க மேற்குலக நாடுகள்தான், வரலாற்றக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமுள்ள இறைமையுடன் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள், தங்கள் உயிரையும் உடைமைகளையும் நாளாந்த வாழ்வையும் சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்பிலிருந்து பாதுகாக்க சனநாயகப் போராட்டத்தை முன்னெடுத்தாலும் சரி ஆயுத எதிர்ப்பை வெளிப்படுத்த வல்ல நடைமுறையரசை அமைத்தாலும் சரி அவற்றை ஏற்க மறுத்து, ஈழத்தமிழர்கள் மேல் சிறிலங்கா மேற்கொள்ளும் இனஅழிப்பை அதன் தேசிய பாதுகாப்புக்கான செயற்பாடு என அங்கீகரித்து நிற்கின்றன. இந்நிலையில் ஈழத்தமிழர்களாலேயே ஈழத்தமிழர் இறைமை எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் மீளுறுதி செய்யப்படாத வரை மனித உரிமைகள் ஆணையகத்தால் சிறிலங்காவைக் கொண்டு பொறுப்புக்கூறலைச் செய்விக்கவே இயலாது என்பதே இலக்கின் இவ்வாரக் கருத்தாக உள்ளது.
மேலும் பிரித்தானியத் தூதுவர் வடமாகாண ஆளுநர் வேதநாயகத்தைச் சந்தித்து தையிட்டி திஸ்ஸ விகாரைப் பிரச்சினை, 5941 ஏக்கர் தனியார் நிலத்தை மூன்று மாதத்துள் உரிமம் காட்டாதவிடத்து அரசுட மையாக்கும் வர்த்தமானிப் பிரகடனப்பிரச்சினை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு போன்ற சமகால பிரச்சினைகள் குறித்தும் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள், சுற்றுலாப் பயணத்துறையை மேம்படுத்தல் விமான மற்றும் கப்பல் சேவைகளை வளர்த்தல் என்பன குறித்தும் கேட்டறிந்துள்ளமை ஈழத்தமிழ் மக்கள் குறித்த அவரின் அக்கறையாக உள்ளமைக்கு இலக்கு அவருக்கு நன்றி கூறுகிறது. பணியாட்சியில் உள்ள தமிழ் ஆளுநர்கள் அதிகாரிகள் எந்த அளவுக்குத் தங்கள் மனச்சாட்சிக்கு அமைய தரவுகளையும் தகவல்களையும் உண்மையாக வழங்குவார்களோ அந்த அளவுக்குத்தான் அவர்களின் நிர்வாகத்தில் ஈழத்தமிழர்கள் அனைத்துலக ஆதரவுகளை உதவிகளை வழிகாட்டல்களைப் பெறலாம். இது உள்ளூராட்சிக்கும் பொருந்தும். பிரித்தானியத் தூதுவர் யாழ்ப்பாண மாநாகரசபை முதல்வர் விவேகானந்தராசா மதிவதனியைச் சந்தித்து பிராந்திய மேம்பாடு, சேவை வழங்கல்கள், மற்றும் இளையர்களுக்கான வேலை வாய்ப்பு, மாகாண மற்றும் நகராட்சி நிலையில் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான உள்ளூர் முன்னுரிமைகள் குறித்து கலந்து பேசியுள்ளார். அவரின் இந்த ஆர்வத்தையும் முன்மாதிரியையும் பார்த்தாவது உள்ளூராட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரும் தனது மண்ணினதும் மக்களினதும் தேவைகள் அதற்கான வர்த்தகத் திட்டங்கள் கல்வி தொழில்நுட்ப இணைப்புக்கள் மூலதன மற்றும் மூலவள மனிதவள நிலைகள் குறித்த ஒழுங்கமைக்கப்பட்ட ஆவணங்களைத் தயாரித்து கைகளில் வைத்திருந்தால் மட்டுமே ஈழத்தமிழர் மேல் அக்கறை காட்டும் அனைத்துலகத்தினர் வழி ஈழத்தமிழர்கள் தங்களுடைய தேவைகளை பெறுவதற்கான நிலைமைகளை உருவாக்க முடியும். அதுவும் உலகம் தன்னியங்கிகளதும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளதும் போருக்குள் போய்க் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் மக்களே தங்களின் இறைமையைப் பாதுகாப்பதற்கான வழியில் செயற்பட வேண்டுமென்பது இலக்கின் கருத்தாகவுள்ளது.

ஆசிரியர்

மலையக மக்களுக்கான காணி உரிமை கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

காணி உரிமை தினத்தை முன்னிட்டு அட்டன் நகரில் கவனயீர்ப்பு பேரணியுடன் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை (21) காலை முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்களின் காணி உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மலையக மக்களின் காணி உரிமை மற்றும்  வீட்டுரிமைக்கான அமைதி வழிப்போராட்டம் எனும் தொனிப்பொருளில்  அட்டன் பல்பொருள் அங்காடியிலிருந்து பஸ்தரிப்பிடம் வரை பேரணியாக வருகைந்தந்து ஆர்ப்பாட்டம்  முன்னெடுத்தனர்.

மலையக மக்களின் காணி உரிமையை கோரிய கோசங்கள் பதாதைகள் ஏந்தி இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் மலையக சிவில் அமைப்புகள்,  அரசியல் துறைசார்ந்தோர் கலந்து கொண்டனர்.

இன்றைய ஆர்பாட்ட பேரணிக்கு மலையக அரசியல் அமைப்புகள் தமது  ஆதரவினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025

Ilakku Weekly ePaper 343

Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025

Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

  • ஈழத்தமிழர் இறைமை மீளுறுதி செய்யப்படாதவரை மனிதஉரிமைகள் ஆணையகத்தால் எதுவும் செய்ய இயலாது | ஆசிரியர் தலையங்கம்
  • வொல்கர் ரேக் சொல்வாரா? செய்வாரா? – விதுரன்
  • ஆட்சிக்காக யாரோடும்; சேருவோம்.! அரசியல் தீர்வுக்காக விலகிச்செல்வோம்.! இதுவே தமிழ்த்தேசிய அரசியல்! – பா. அரியநேத்திரன்
  • வலுவானதாக மாறுமா ஐ.நாவின் தீர்மானம்-சுதர்சன்
  • பூகோளச் சிக்கலுக்குள் மீண்டும் இலங்கை (பகுதி-04 (இறுதிப்பகுதி) விதுரன்
  • இந்தியா, அமெரிக்கா, சீனா, ஈரான் ஆகியவற்றுக்கிடையேயான போரும் சிறீலங்காவின் இனப் பிரச்சினையும் – தமிழில்: ஜெயந்திரன்
  • தீப்பந்தம்- இசையமைப்பாளர்: சத்தியன்
  • மலையகத்தில் நாட்கூலி முறையில் உள்ள சிக்கலும் மறைமுகமாக இடம்பெறும் இனவழிப்பும் – மருதன் ராம்
  • ஈரான்-இஸ்ரேல் பிளவுக்கு நடுவே இந்தியாவின் ஆபத்தான கயிற்று நடை – சத்யா சிவராமன்
  • நாட்டின் எல்லைகளைப் பகிராத இஸ்ரேல்; ஈரான் போரின் பின்னணி என்ன? (பகுதி-1) நேர்காணல் B.A காதர்
  • ஈரானின் பலம் அறியாது களத்தில் குதித்ததா இஸ்ரேல்? வேல்ஸில் இருந்து அருஸ்

 

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு” போராட்டம்

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு” போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் என்கிற தன்னார்வ இளையோர் அமைப்பினால் எதிர்வரும் திங்கட்கிழமை (23) புதன்கிழமை (25) வரையில் செம்மணி வளைவுப் பகுதியில் வெகுசனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அணையா விளக்குப் போராட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தின்போது தமிழர்களது பண்பாட்டில் நம்பிக்கை சார்ந்த மரபாக இருக்கின்ற அணையா விளக்கினை முன்னிலைப்படுத்தியே இந்தப் போராட்டம் ஏற்பாட்டாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரையில் செம்மணி பகுதியில் பல்வேறு இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் அகழப்பட்டுள்ள போதிலும், அது குறித்த மர்மம் இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது.

இனவழிப்பிற்கு ஆதாரமான இந்தக் குற்றச்செயல்களுக்கான காரணமோ, இதற்கு அதிகாரம் வழங்கிய தரப்புக்கள் யார் என்பதோ, மீளவும் இதுபோன்ற மனிப் புதைகுழிகள் உருவாக்கப்படாது என்பதற்கான பொறுப்புக்கூறலோ வெளிப்படுத்தப்படவில்லை.

எனவே இருள் சூழ்ந்திருக்கும் செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திற்கு ஒளி பாய்ச்சப்படல் வேண்டும் என்கிற குறியீட்டு அர்த்தத்திலேயே இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் எரியக்கூடிய அணையா விளக்கு ஏற்றப்படுகின்றது.

போராட்டம் இடம்பெறும் மூன்று தினங்களில், முதல் இரண்டு நாட்களிலும் சுழற்சி் முறையிலான அடையாள உண்ணாவிரதமும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான செய்திப் பட கண்காட்சியும், மக்கள் கையெழுத்து திரட்டலும், செம்மணி மனிதப் புதைகுழியோடு தொடர்புபட்ட கதை, கவிதை படிப்பும், நாடக அளிக்கையும் இடம்பெறும்.

25ஆம் திகதியாகிய மூன்றாம் நாள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும். போராட்டத்தின் இறுதி நாளன்று ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செம்மணி மாத்திரமல்லாது வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் அதிகளவில் பொதுமக்களை இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நில அபகரிப்பிற்கு தீர்வைக் காணுமாறு வோல்க்கெர் டேர்க்கரின் விஜயத்தின்போது வேண்டுகோள் விடுக்கவேண்டும் – ஓக்லாந்து நிறுவகம்

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்கர் இலங்கைக்கு  23ம் திகதி முதல் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கையில் தற்போது இடம்பெறும் நில அபகரிப்புகள் கடந்த கால நில அபகரிப்புகள் மற்றும் தமிழர்களிற்கு எதிரான மனித உரிமைமீறல்களிற்கு இலங்கை அரசாங்கம் தீர்வை காணவேண்டும் என ஐக்கியநாடுகள் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என ஓக்லாந்து நிறுவகம் வேண்டுகோள் விடுக்கின்றது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களாகின்ற போதிலும்,1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தது முதல் ஒடுக்குமுறைக்குள்ளான புறக்கணிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்னமும் நீதிக்காக காத்திருக்கின்றார்கள்.

பொறுப்புகூறல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்பை மனித உரிமை ஆணையாளரின் விஜயம் வழங்குகின்றது.

கடந்தமாதம் பல சிறுவர்கள் உடல்கள்கள் உட்பட 19 பேரின் மனித எச்சங்கள் காணப்பட்ட மனித புதைகுழி கடந்த மாதம் இலங்கையின் வடக்கில் யாழ் நகரத்திற்கு அருகில் உள்ள செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டபோதிலும்,பல தசாப்தங்களாக தண்டனை விடுபாட்டுரிமை,அவற்றை விசாரணை செய்ய தவறியமை போன்றவை காணப்பட்டதால் ,மனித புதைகுழியை தோண்டும்போது சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்ற காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் வேண்டுகோள்களுடன் ஒக்லாந்து நிறுவகம் இணைந்துகொள்கின்றது.

நிலைமையை முழுமையாக மதிப்பிடுவதற்கு ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வடக்குகிழக்கின் அனைத்து பகுதிகளிற்கும் விஜயம் மேற்கொள்ளவேண்டும்.

2009ம் ஆண்டு யுத்தத்தின் இறுதியில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலைகள் காரணமாக  169 796 தமிழர்கள் காணாமல்போயுள்ளதாகவும் கொல்லப்பட்டதாக கருதப்படுவதாகவும் முள்ளிவாய்க்காலிற்கு மனித உரிமை ஆணையாளர் விஜயம் மேற்கொள்ளவேண்டும் என காணாமல்போனவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த விஜயங்கள் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புகள்,நில அபகரிப்பு,கண்காணிப்பு, அச்சுறுத்தல் தமிழர்களின் பாரம்பரியம் திட்டமிடப்ட்டு சிதைக்கப்படுதல்,தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களில் புத்தவிகாரைகள் உருவாக்கப்படுதல் தடையின்றி தொடர்தல் போன்றவற்றைமதிப்பிடுவதற்கும் பார்ப்பதற்கும் உதவியாக அமையும்.

யாழ்ப்பாணம் தையிட்டியில் படையினரின் சட்டவிரோத விகாரைகளிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.தமிழர்களின் வரலாற்றை கலாச்சாரத்தை அழிப்பதற்கு இலங்கையின் ஆட்சியாளர்கள் முன்னெடுத்துவரும் திட்டமிட்ட தந்திரோபாயம் இதுவாகும்.

அநீதிகள் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வடக்குகிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் சட்டங்களை மீறியமைக்கா பொலிஸ் விசாரணை அச்சுறுத்தல் போன்றவற்றை எதிர்கொண்டுள்ளனர்.

ஓக்லாந்து நிறுவகம் ஆவணப்படுத்தியுள்ளபோல தங்கள் நிலங்கள் காலனித்துவம் செய்யப்படுவது தொடர்வதால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் வீடுகள் நிலங்களில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் உள்ளனர்.

வடக்குகிழக்கை பிரிப்பதன் மூலம் தமிழர் தாயகத்தை பிரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் தொடர்கின்றன.நீர்ப்பாசன திட்டங்கள், இராணுவ குடியேற்றங்கள் தொல்பொருள் ஒதுக்கீடுகள், சரணாலயங்கள்,பௌத்தமயமாக்கல், போன்றவற்றின் மூலம் இதனை செய்கின்றனர்.

வடக்குகிழக்கு தொடர்ந்தும் பெரும் இராணுவமயப்படுத்தலின் கீழ் காணப்படுகின்றது இது அந்த மக்களின் நாளாந்த நடவடிக்கைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

இலங்கையிலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் பொறுப்புக்கூறல் நீதிக்கான தமிழ்மக்களின் தடையற்ற அர்ப்பணிப்பு-இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச சமூகம் அழுத்தங்களை பேண உதவியுள்ளது.

மோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணவேண்டும்,பொறுப்புக்கூறல் இடைவெளிக்கு முடிவை காணஅரசமைப்பு நிர்வாக சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும்,என டேர்க் முன்னர் விடுத்த வேண்டுகோள்களால் நாங்கள் நம்பிக்கைகொண்டுள்ளோம்.

ராஜபக்ச யுகம் முடிவிற்கு வந்துள்ள போதிலும்,ஜனாதிபதி திசநாயக்கவின் அரசாங்கம் முன்னைய ஆட்சியாளர்களின் கொள்கைகளையே பின்பற்றுகின்றது.

சர்வதேச சட்டத்தினால் பாதிக்கப்பட்ட கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தியமைக்காக பொதுமக்களை தன்னிச்சையாக தடுத்துவைப்பதற்கு மிக மோசமான பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.

சர்வதேச நடவடிக்கைகளை தூண்டுவதற்கு மனித உரிமை ஆணையாளரின் விஜயமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 59 வது அமர்வும் முக்கியமானவை.

சர்வதேச மனித உரிமை மனிதாபிமான சட்டங்களை மீறியமைக்காகவும்,மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்காகவும் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படவேண்டும்.

இராணுவமயப்படுத்துதலை நிறுத்தவேண்டும்,களவாடிய நிலங்களை மீள கையளிக்கவேண்டும்,வடக்குகிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள குடியேற்றவேண்டும் என அதற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படவேண்டும்.

நம்பகதன்மை மிக்க உண்மையை தெரிவிக்கும் நடைமுறை, நீதி,இழப்பீடு போன்றவற்றை ஆரம்பிப்பதற்கும்,தமிழ் மக்களின் நீண்டகால துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கான அரசியல் தீர்வு ஆகியவற்றிற்கு இது அவசியமானது.

மயிலத்தமடு மேச்சல் நில விவகாரம்: தொடரப்பட்ட வழக்கில் இருந்து 30 பேர் விடுதலை

மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி 2023 ஒக்டோபர் 8 அன்று கொம்மாதுறை பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேருக்கு எதிராக ஏறாவூர்  காவல்துறையினரால் தொடரப்பட்ட வழக்கு, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது. நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

கடந்த 2023 ஒக்டோபர் 8 அன்று, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மட்டக்களப்பு – செங்கலடி வருகையின்போது, மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக, வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், முறைகேடாக ஆட்களைத் தடுத்து வைத்தல் மற்றும் தேசிய வீதிச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஏறாவூர் காவல்துறையினரால் வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் நேற்றுமுன்தினம் (20) நடைபெற்றது.

விசாரணையின்போது, வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு மேலதிக ஆதாரங்கள் இல்லாததால், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் 186ஆவது பிரிவின் கீழ் நீதிபதிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, வழக்கை முடிவுக்கு கொண்டுவந்து, குற்றஞ்சாட்டப்பட்ட 30 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக கந்தையா யசீதன் நியமனம்!

வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பாபு தேவ நந்தினி தலைமையில்  வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்யும் கூட்டம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு, இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 8 பேர், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் சார்பில் 5 பேர், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் 4 பேர், தேசிய மக்கள் சக்தி சார்பில் 6 பேர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) சார்பில் 2 பேர், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஒருவர், மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் 2 பேர் என மொத்தம் 28 உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.

தவிசாளர் தேர்வுக்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் கந்தையா யசீதன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் நாகராசா பகீரதன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், தவிசாளர் தேர்வு பகிரங்க வாக்கெடுப்பு மூலமா அல்லது இரகசிய வாக்கெடுப்பு மூலமா நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டார்.

இதன்போது, பகிரங்க வாக்கெடுப்புக்கு ஆதரவாக 19 வாக்குகளும், இரகசிய வாக்கெடுப்புக்கு 9 வாக்குகளும் பதிவாகின.

பகிரங்க வாக்கெடுப்பில், கந்தையா யசீதன் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.டி.பி., மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் 13 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

நாகராசா பகீரதனுக்கு 9 வாக்குகள் கிடைத்தன. தேசிய மக்கள் சக்தி (6 வாக்குகள்) நடுநிலை வகித்தது.

இதேவேளை, உப தவிசாளர் தேர்வுக்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் பேரின்பநாயகம் சுபாகர் மற்றும் சங்கு-சைக்கிள் கூட்டணியின் சார்பில் தர்மகுலசிங்கம் உதயகுமார் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

இதில், இலங்கை தமிழரசுக் கட்சியின் பேரின்பநாயகம் சுபாகர் உப தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

பிரதி நிதியமைச்சர் ஹர்சன சூர்யபெரும தமது பதவியில் இருந்து விலகல்

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி நிதியமைச்சருமான ஹர்சன சூர்யபெரும தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தமது பதவி விலகல் கடிதத்தை அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்
வெற்றிடமாகியுள்ள நிதியமைச்சின் செயலாளர் பதவியை ஏற்று கொள்ளும் வகையில் அவர் பதவி விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஹர்சன சூர்யபெருமவின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றின் ஊடாக அறியப்படுத்தியுள்ளார்.
இதன்படி இன்று (20) முதல் அமுலாகும் வகையில் ஹர்சன சூர்யபெருமவின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு முதலீடுகள் 90% அதிகரிப்பு : ஜனாதிபதி தெரிவிப்பு

2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க இலங்கை முதலீட்டுச் சபைக்கு முடிந்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் வெள்ளிக்கிழமை (20) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இலங்கை முதலீட்டு சபையின் முன்னேற்ற மீளாய்வின் போதே இது பற்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், 2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில், உள்நாட்டு முதலீடுகள் 21 மில்லியன் டொலர்களாலும், ஏற்றுமதி வருமானம் 176 மில்லியன் டொலர்களாலும் அதிகரித்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் இது வரை, இலங்கைக்கு 4669 மில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் முதலீட்டு சபையின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.

இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் சாத்தியமான தீர்வுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,

நாட்டின் பொருளாதாரம் மற்றும்  கிராமிய வாழ்க்கையை மேம்படுத்தும் பணியின் பெரும்பகுதி இலங்கை முதலீட்டுச் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், பாரம்பரிய முதலீட்டுத் துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் திறன் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு நாடாக புதிய முதலீட்டுத் துறைகளை  இனங்காணவேண்டும். அதற்கான பொறுப்பு முதலீட்டு சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு, 1978 ஆம் ஆண்டு முதல்  இதுவரை சுமார் 22 பில்லியன் டொலர் முதலீடுகளை ஈட்டவே முடிந்தது. பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை வேகமாக முன்னேற வேண்டியுள்ளது. அத்தோடு வியட்நாம் 2022 இல் மாத்திரம் 23 பில்லியன் டொலர் முதலீட்டு இலக்கை எட்டியுள்ளது.

முதலீடுகளை ஈர்க்கும் போது, சேவைத் துறையில் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். தவறவிட்ட வாய்ப்புகளைப் பின்தொடர்வதைத் தாண்டி, புதிய முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிவதே முதலீட்டு சபையின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.

ஜனாதிபதியின்  சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் மற்றும் முதலீட்டு சபையின் பதில் பணிப்பாளர் நாயகம்  ரேணுகா வீரகோன் உட்பட முதலீட்டு சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.