Home Blog Page 114

இஸ்ரேல் – ஈரான் – அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல் இலங்கையில் தாக்கத்தை செலுத்தும்…

இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்காவின் மோதல்கள், பிராந்திய மோதலை உலகளாவிய ஒன்றாக மாற்றக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையை பொறுத்தவரை, இதன் விளைவு நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் அச்சத்தை வெளியிட்டுள்ளனர்.

பல தசாப்தங்களாக இலங்கை, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளுடனும் நட்புறவை கொண்டுள்ளது. இரண்டு நாடுகளும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கைக்கு உதவியிருந்தன.

இந்தநிலையில் இன்றும் இலங்கை, இரண்டு நாடுகளுடனும் முக்கிய உறவுகளைத் தொடர்ந்து பராமரித்து வருகிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிகின்றனர்.
ஈரானுக்கு இலங்கையில் இருந்து தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

எனினும், குறித்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போர் காரணமாக, இலங்கைக்கு பாரிய பொருளாதார தாக்கம் ஏற்படக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்
உலகளாவிய எண்ணெய் விலை அதிகரிக்கும் போது, அதுவும், இலங்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

இந்தநிலையில், பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரும் இலங்கைக்கு ஈரான்- இஸ்ரேல் போர் தாக்கத்தை ஏற்படுத்தும் போராகவே அமைந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதிக் கோரி தொடரும் ‘அணையா தீபம்’ போராட்டம்

யாழ்ப்பாணம் – செம்மணி – சிந்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதிக்கோரி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் கவனத்தை ஈர்க்கும் ‘அணையா தீபம்’ போராட்டம் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று (23) முற்பகல் 10.10 அளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ‘அணையா தீபம்’ போராட்டம் செம்மணியில் 1996களில் சருகாகிப் போன கிருசாந்தியின் உறவினரால் இன்று சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது சட்டதரணி வைஸ்ணவி சண்முகநாதன் செய்தியாளர்களிடம் போராட்டத்தின் நோக்கம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார். இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள சமயத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் உயிர்நீத்த உறவுகளுக்காக இதன்போது அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

மக்கள் செயல் என்ற அமைப்பினால் முன்னெக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் நாளை மறுதினம் (25) வரை முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை, செம்மணி மனிதப்புதைக்குழிக்கு நீதிக்கோரி இடம்பெறும் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தீப்பந்தம் ஏந்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எரிபொருள் விலை உயரும் அபாயம்?

உலகின் எரிபொருள் வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி எனப்படும் ஹார்முஸ் நீர்முனையை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதனால் பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் உள்ளூர் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஈரானால் ஞாயிற்றுக்கிழமை (22) காலை மத்திய மற்றும் வடக்கு இஸ்ரேலில் உள்ள நகர்ப்புறங்களை குறிவைத்து பல ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்தே இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

இதேவேளை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, நிலைமை தொடர்ந்து மோசமடையக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் தூதுவர் வலியுறுத்தினார்.

வொல்கர் ரெக்குக்கு செம்மணி புதைகுழியை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படும் : அரசாங்கம் அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக்,(Volker Türk) இலங்கை வரும்போது, ஏற்கனவே திட்டமிடப்பட்ட சந்திப்புக்களுக்கு மேலதிகமான நிகழ்ச்சித்திட்டங்களும், உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தமது நான்கு நாள் பயணத்தின் இறுதி நாட்களில் அவர் கொழும்பிலும் சமூக ஆர்வலர்களை சந்திக்கவுள்ளார். அத்துடன் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தை சந்தித்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணையின் முன்னேற்றத்தையும் மதிப்பீடு செய்யவுள்ளார்.

இறுதியாக நாட்டில் இருந்து புறப்படும் முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பையும் அவர் நடத்தவுள்ளார்.
இந்தநிலையில், கடந்த கால மனித உரிமைகள் பிரச்சினைகளைக் கையாள்வதில் அரசாங்கம் தமது நேர்மையையும், நாட்டில் நல்லிணக்கத்திற்கான அதன் உறுதிப்பாட்டையும் நிரூபிக்க விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனவே, வொல்கர் ரெக்குக்கு செம்மணி புதைகுழியை பார்வையிடுவது உள்ளிட்ட விடயங்களுக்கு இலங்கையில் தடையற்ற அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவை பாதுகாக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு அவசரக் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் அதனுடன் இணைந்த ஊடக நிறுவனங்களால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயகத்திற்காக, 2016ஆம் ஆண்டின் தகவலறியும் உரிமைச் சட்டம் அவசியம் என குறித்த தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் தகவலறியும் உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தலைவர் ஒருவர் இல்லை எனவும் இது அதன் செயல்பாடுகளைத் தடுக்கிறது எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், பலமுறை கோரிக்கைகள் இருந்தபோதிலும், ஆணைக்குழுவுக்கு அத்தியாவசிய சட்ட ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஒப்புதல் அளிப்பதில் அரசாங்கம் தாமதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அந்த ஆணைக்குழுவின் திறனைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின் பிரகாரம் அதனால் ஒரு சுயாதீன நிதியை இயக்க முடியாது. எனவே, ஒரு புதிய தலைவரை தகவலறியும் உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உடனடியாக நியமித்து, அதன் சுதந்திரத்தையும் செயல்திறனையும் மீட்டெடுக்குமாறு ஜனாதிபதியை குறித்த ஊடகக் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.

செம்மணி ‘அணையா விளக்கு’ போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் போராட்டம்

செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள ‘அணையா விளக்கு’ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்  மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அவர் இதனை தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பாகவும் அத்தோடு தமிழர்களுக்கு மறுக்கப்படும் நீதி சம்பந்தமாகவும் அவருடைய கவனத்தை ஈர்க்கும் வகையாக யாழ்ப்பாணம் – செம்மணியில் மாபெரும் அணையா விளக்கு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணத்திலும் அவ்வாறான ஒரு அடையாள போராட்டத்தினை இன்றைய தினம் (23) ஏற்பாடு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து தமிழ் உறவுகளும் அனைத்து உணர்வாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். செம்மணியில் மாத்திரம் அல்ல கடந்த காலத்தில் கொக்குத்தொடுவாயிலும் கூட கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் எந்த வகையான நீதியும் இதுவரைக்கும் கிடைக்கப் பெறவில்லை. இந்த மனித புதைக்குழியை விசாரணை செய்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு போதிய அளவு தேவையான தொழில்நுட்ப அறிவு இல்லாததன் காரணத்தினால் இதற்கு சர்வதேச உதவியை இலங்கை அரசாங்கம் பெற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிலும் குறிப்பாக மனித புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் அதிகளவில் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆடைகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை இது ஒரு பாரிய சந்தேகத்தை தரும் ஒரு விடயம்.

இந்த விடயத்தை நேர்மையாக இலங்கை அரசாங்கம் விசாரணை செய்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்பிக்கை எங்களுக்கு இல்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

வொல்கர் ரேக் சொல்வாரா? செய்வாரா?  – விதுரன் 

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக் எதிர்வரும் 23 – 26ஆம் திகதி வரை உள்நாட்டில் தங்கியிருக்கவுள்ளார்.
இவ்வாறு தங்கியிருக்கும் காலத்தில் கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், தலைநகரைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை முன்னெடுக்கவுள்ளார்.
தொடர்ந்து, கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ள அவர், தலதா மாளிகைக்கச் செல்லவுள்ளதோடு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் அவர் செம்மணிப்புதைகுழியைப் பார் வையிடுவதோடு சிவில் சமூகப்பிரதிநிதிகளையும், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதி
நிதிகளையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது.
இதேவேளை, உயர்ஸ்தானிகர் போரின் கோரமுகமாயுள்ள முல்லைத்தீவின் முள்ளிவாய்க் காலுக்கு விஜயம் செய்யுமாறுகோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவு கள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக்குக்கு கடித மொன்றை அனுப்பிவைத்திருந்த போதிலும், அதுபற்றிய எந்தப் பதிலளிப்புக்களும் இன்னமும் செய்யப்படவில்லை.
இவ்வாறான நிலையில், ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக்கை இலங்கை அரசாங்கம் அழைக்க வேண்டியதன் காரணத்தினை நாம் சற்று ஆழமாக பார்க்க வேண்டியுள்ளது.
அநுர அரசாங்கத்தின் அழைப்பின் நோக்கம்
தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடியுடன் பதவி யில் அமர்ந்துள்ள அநுரகுமார திசாநாயக்க தலை மையிலான அரசாங்கம் ஆட்சிப்பொறுப் பெடுத்த இதுகால வரையிலான ஏழு மாதங்களுக்குள் இரண்டு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளை முழுமையாகச் சந்தித்து விட்டது. இந்த இரண்டு அமர்வுகளில் முதலாவது அமர்வில் ஐ.நா.வுக்கான இலங்கையின் வதி விடப்பிரதிநிதி ஹிமாலி அருணத்திலக்க, உயர்ஸ்தானிகரின் ஆரம்ப உரையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் பற்றி வலியுறுத்திய போதும், அதன்பின்னர் வாய்மொழி மூலமான சமர்ப் பணத்தின் போது கூறப்பட்ட விடயங்களையும் முழுமையாக நிராகரித்தார்.
உள்ளக தேசிய பொறிமுறையை அமைத்து அதற்கமைவாகவே அரசாங்கம் செயற்படப் போவதாகவும் அறிவித்தார். மனித உரிமைகள் மீறப்பட்ட நிகழ்வுகள் திட்டமிட்ட பாரபட்சமான குற்றச்சாட்டுக்கள் என்றும் உரைத்தார்.
இரண்டாவது அமர்வில், இலங்கையில் இருந்து சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழுவினரும் மேற்படி கருத்தினையே கூறினார்கள். அத்துடன் தாம் முறைமை மாற்றத்தினை மையப்படுத்திய அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதால் தமக்கு வாக்களித்த மூவின மக்களுக்கும் பார பட்சமின்றி செயற்படுவதாகவும் அறிவித்தார்.
அத்துடன், ஐ.நா.மனித  உரிமைகள் பேரவையின் அறிக்கை, உயர்ஸ்தானிகர் சுட்டிக் காட்டிய மீறல்கள் உள்ளிட்ட விடயங்கள் அனைத்தையும் நிராகரிப்பதாகவும் வெளிநாட்டு விசாரணையாளர்கள் உள்ளிட்டவர்களை அனுமதிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந் தார்.
அவ்வாறு கடந்தகால அரசாங்கங்களைப் போன்றே பிரதிபலித்தவர்கள் திடீரென்று எதற்காக உயர்ஸ்தானிகரை அழைத்துள்ளார்கள் என்ற கேள்வி எழுவது நியாயமானது. அநுர அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் கடந்தகால அரசாங்கங்களைப் போன்றல்லாது, ‘நீருக்கால் நெருப்பை கொண்டு செல்லும்’ தன்மையைக் கொண்டது. ஆகவே அவ்விதமானதொரு செயற் பாட்டைத் தான் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை விடயத்தில் கையாள்வதற்கு முனைகின்றது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடருடன் இலங்கையில் நல்லிணக் கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ள  தீர்மானம் முடிவுக்கு வரவுள்ளது. அத்தீர்மானத்தினை தொடர்ந்தும் பேணு வதற்காக புதிய தீர்மானத்தை கொண்டுவரும் முயற்சியில் பிரித்தானியா களமிறங்கியுள்ளது. அநுர அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் மீண்டும் புதிய தீர்மானம் கொண்டுவருவதை தடுப்பதென்றால் பிரித்தானியாவுடனோ அல்லது கனடாவுடனோ அணுகுமுறை ரீதியாக கையாள முடியாதவொரு விடயம்.
ஆகவே, தான் தாங்கள் வெளிப்படை யானவர்கள், இங்கே அமைதியாக மக்கள் சகோ
தரத்துவத்துடன் இருக்கின்றார்கள் என்ற விம்பத்தை உயர்ஸ்தானிகருக்கு காண்பிப்ப தோடு பொருளாதார வங்குரோத்திலிருந்து மீள் எழவேண்டியதுதான் முதன்மையான விடயம் என்பதையும் வலிந்தூட்டுவதற்
கான முயற்சியாகவே உயர்ஸ்தானிகருக்கான அரசாங்கத்தின் அழைப்பினை நோக்க வேண்டி
யுள்ளது.
மேலெழுந்த போர்க்கொடி
கடந்த காலங்களில் இலங்கைக்கு வலிந்து விஜயங்களை மேற்கொண்ட நவநீதம்பிள்ளை அம்மையாராக இருக்கலாம், செயிட் அல்ஹு சைனாக இருக்கலாம் இவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வீதிக்கு இறங்கியவர்கள் தென்னிலங்கை சிங்கள் தேசியவாத சக்திகளே. ஆனால் வொல்கர் ரேக்கின் வருகையை எதிர்ப்பவர்கள் நீதியை எதிர்பார்த்து காத்திருந்து களைத்துப்போன  பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே.  அவர்கள் எதிர்ப்பதில் நியாயம் இருக்கின்றது. அவர்களுக்கு எஞ்சிய நம்பிக்கை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிடம் தான் உள்ளது. அந்த எதிர்பார்ப்புக் கூட வோல்கர் டேர்கின் வருகையால் கலைந்துபோய்விடக்கூடாது என்பதே அந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாகின்றது.
அதாவது, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு அமைவாக, இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் எதிர்வரும் செப்டெம்பருடன் நிறைவுக்கு வருகின்றது. அது நீட்டிக்கப்படுவதற்கான எந்த உத்தரவாதங்களும் தற்போது வரையில் இல்லை.
அவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டால் சாட்சியங்களை திரட்டல் உள்ளிட்ட முக்கிய செயற்பாடுகள் அனைத்தும் முழுமையாக முடங் கும் என்பது அவர்களுக்குள்ள முதலாவது அச்ச மாக உள்ளது.
இரண்டாவதாக, உயர்ஸ்தானிகர் இலங்கை வருவதும் அரசாங்கத்தின் கண்துடைப்பு கட்ட மைப்புக்களான வலிந்து காணாமலாக்கப்பட்ட வர்களுக்கான அலுவலகம், புதிய பயங்கரவாத தடைச்சட்டத்துக்கான சட்டமூலம் உள்ளிட்ட அரசாங்கம் காண்பிக்கும் மாயைக்குள் சிக்கினால் நிலைமைகள் மோசமாகும்.
குறிப்பாக, உயர்ஸ்தானிகர் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்திய செப்டெம்பரில்  வெளியிடவுள்ள எழுத்துமூலமான அறிக்கையின் காத்திரமான தன்மையை மலினப் படுத்தும் என்ற அச்சமும் காணப்படுகின்றது.
இந்த விடயங்களின் அடிப்படையில் தங்களது கரிசனைகளை வெளியிட்டே உயர்ஸ் தானி கரது இலங்கை விஜயத்தை பிற்போடுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் பகிரங்கமாக கோரிக்கை விடுத்தனர். அவர்களுக்குவலுச்சேர்க்கும் வகை யில், 104 சிவில் சமூகப்பிரதிநிதிகளின் கூட்டு, சர்வ தேச மனித உரிமைகள் அமைப்புக்களின் கூட்டு, தமிழ் சிவில் சமூக அமையம் மற்றும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட தரப்பினர் தனித்தனியாக 4 கடிதங்களை உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்திருந்தனர். ஆனால், உயர்ஸ்தானிகரின் பக்கத்திலிருந்து எவ்விதமான பதிலளிப்புகளும் இதுவரையில் கிடைத்திருக்கவில்லை என்பது ஏமாற்றம் தான்.
சொல்வரா? செய்வாரா?
இவ்வாறான நிலையில் இலங்கை வரும் உயர்ஸ்தானிகர் ஆகக்குறைந்தது, இலங்கையில் மனித உரிமைகள்,மனிதாபிமானச் சட்ட மீறல்கள் நிகழ்ந்தன. அதற்கு அரசாங்கம் பொறுப் புக்கூற வேண்டும் என்பதை அரச தரப்புச் சந்திப்புக்களின்போதும், இலங்கையிலும் பகிரங் கமாக வலிறுத்துவாரா?
செம்மணி மனிதப் புதைகுழு உட்பட கொக்குத்தொடுவாய், மன்னார், திருகோணமலை கீழறை சித்திரவதை முகாம், உட்பட அனைத்து இடங்கள் குறித்த பகுப்பாய்வுக்கு அரசுக்கு அழுத்தமளிப்பாரா? சர்வதேச பிரசன்னத்தைக் கோருவாரா?
இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற் றிட்டத்தினை வருடமொன்றுக்காவது நீடித்து அதன் அங்கத்தவர்களை இலங்கைக்குள் பிரவேசிக்க அரசைக் கோரும் அதேநேரம் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தின் இதுகாலவரையிலான சேக ரிப்பை வெளிப்படுத்துவாரா?
படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், சாட்சியங்கள் உள்ள கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களின் விசாரணைகளை, வழக்குகளை முன்னெடுப்பதற்கு அழுத்தங்களை அரசுக்குப் பிரயோகிப்பாரா?
உயிர்வாழும் உரிமை, சுதந்திரமான, சுயா தீனமான நடமாட்டம், கருத்துச் சுதந்திரம், சொந்த நிலங்களில் வாழும் உரிமை, கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்புக்களுக்கு அரசாங்கத்தின் உறுதிமொழி களை பெற்றுக்கொள்வாரா?
ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் இணைந்த வட,கிழக்கில் சுயநிர்ணயத்துடன் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை இனப் பிரச்சிக்கான முற்றுப்புள்ளியாக வைத்து கோரும் தமிழ் மக்களின் நியாயத்தை எடுத்துரைத்து ஒற்றையாட்சி நீக்கப்பட்டு தமிழ் மக்களையும் அரவணைக்கும் புதிய அரசியலமைப்பொன்றுக்கு வலியுறுத்துவாரா?
இலங்கை விஜயத்தில் நேரில் காணும் சாட்சிகளை யும், ஆதாரங்களையும் தன்னுடைய செப்டெம்பர் அறிக்கையில் உள்ளீர்த்து காத்திரமானதொரு அறிக்கையையும், பரிந்துரைகளையும், முன்வைப் பாரா?
இப்படி, எதிர்பார்ப்புக்கள் நிறைந்த பல கேள்விகள் ஐ.நா.மனித உரிமைகள் உயிர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடத்தில் உள்ளன. இவை அனைத்துமக்கும் அவரது இலங்கை விஜயமும் ஈற்றில் உரைக்கும் சொற்களும், செயற்பாடுகளும் தான் பதிலளிக்கப்போகின்றன.

உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரிய போராட்டம் நேற்று (22) இரண்டாம் நாளாகவும் அமைதி வழியில்  முன்னெடுக்கப்பட்டது.
காணிகளை விடுவிக்க கோரி  நேற்று முன் தினமும்(21) மயிலிட்டி சந்தியில்  போராட்டம் நடைபெற்றது.

ஞாயிறு விடுமுறை என்பதால் பாடசாலை சிறுவர்கள் தமது நிலங்களிலே மூன்றாம் தலைமுறையாக உரிமை கேட்டு பெற்றாருடன் பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் மயிலிட்டி, பலாலி, காங்கேசன்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள், முதியோர்கள், இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் என பல தரப்பினரும் பங்கு பற்றி இருந்தனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து போன மக்கள் யுத்தம் நிறைவடைந்து தமது காணிகளுக்கு வந்த பின்னரும் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் காணிகளை விடுவிப்பதாக கூறி சிறு சிறு இடங்களை மாத்திரம் விடுவித்துள்ளன என்று போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.

இதனால் வாடகை வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் முகாம்களிலும் இன்று வரையும் காணி சொந்தக்காரர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தற்போது தமிழ் மக்களின் பலத்த ஆதரவை பெற்று அனைத்து காணிகளையும் உடனடியாக விடுவிப்போம் என்ற வாக்குறுதிகளை வழங்கி, ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களை கடந்த பின்னும் பெரிய அளவில் காணி விடுவிப்பில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக காணிகளை வைத்திருப்பதாக கூறுகின்ற இராணுவம் தற்போது மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகிய நிலையிலும் அவர்களின் காணிகளை விடுவிக்காமல் வைத்திருக்கின்றனர் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்திருந்தனர்.

அணுவாயுதத்தை தயாரிக்கும் திட்டம் ஈரானிடம் இல்லை – ஐ.நா

அணுவாயுதத்தை தயாரிக்கும் எந்த திட்டமும் ஈரானி டம் இல்லை நாம் அதனை அவர் களிடம் காணவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி பிரிவின் தலைவர் ரபேல் குறேசி அல்ஜசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கடந்த செவ்வாய்க்கிழமை(17) தெரிவித் துள்ளார்.
ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்கும் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தெரிவித்து இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை (13) ஈரானின் அணு ஆய்வு மையங்கள் மற்றும் படை அதிகாரிகள் மீது தாக்கு தலை நடத்தியிருந்தது. ஆனால் இஸ்ரேலின் இந்த கூற்றை அணுசக்தி மையத்தின் தலைவர் மறுத்துள்ளார். ஈரான் அணுவாயுதத்தை தயாரிக்கும் கட்டத்தை நெருங்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனா ல்ட் ட்ரம்பும் கடந்த செவ்வாய்க் கிழமை(17) தெரிவித்திருந்தார்.
ஆனால் ஈரான் அணுவாயுதத்தை தயாரிக் கும் நிலையில் இல்லை என்பதை அமெரிக்காவின் புலனாய்வுத்துறை உறுதிப்படுத்தியுள்ளதாக அதன் தலைவர் துல்சி கபாட் தெரிவித்திருந்தார். எனினும் அவரின் கூற்று தொடர்பில் தான் கருத்தில் எடுக்கப்போவதில்லை என ஊடகவியலாளர்களிடம் பேசும்போது ட்ரம்ப் தெரிவித்திருந்தார். எனினும் குறேசி அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளின் கருத்துக் களை மறுதலித்துள்ளதுடன் தற்போது ஈரான் அணுவாயுதம் தயாரிக்கும் நிலையில் இல்லை எனவும், ஆனால் சில வருடங்களில் அது சாத்தியமாகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வியாழக்கிழமை(19) அதிகாலை இஸ்ரேல் ஈரானின் மற்றுமொரு அணு சக்தி நிலையத்தை தாக்கியுள்ளது. எனினும் அங்கு அணுசக்திக்கான பார நீரை உற்பத்தி செய்வதனால் கதிர்வீச்சுக்கள் ஏற்படும் அபாயம் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்கும் நடவடிக்கைகளை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் என ரஸ்யா எச்சரித்துள்ளது. ஈரானின் சில அணுசக்தி நிலையங்களில் தமது அதிகாரிகளும் பணியாற்றி வருவதாகவும், எரிசக்தி தேவைக்காக அணு சக்தியை பயன்படுத்தும் உரிமை ஈரானுக்கு உண்டு எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.