காந்திஜியின் வாசகங்களை வீரத்தமிழனின் பிறந்தநாளில் அவருக்கு சமர்ப்பிக்கிறேன்; பாராளுமன்றில் விக்னேஸ்வரன்

“நேதாஜி என்றென்றும் சிரஞ்சீவியாக மக்கள் மனதில் வாழ்வார் என்று காந்தியவர்கள் கூறினார்கள். மேற்கண்ட காந்திஜியின் வாசகங்களை இலங்கையில் வடக்கு – கிழக்கை மையமாக வைத்து அங்கு உதித்த வீரத் தமிழனின் இன்றைய பிறந்தநாளன்று அவர் ஞாபகார்த்தமாக சமர்ப்பிக்கின்றேன்” என்று பாராளுமன்ற உறுப்பினர் க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன் நேற்று பாராளுமன்றில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவரின் உரையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,

போர் முடிந்த பின்னரும் வருடாவருடம் படையினருக்கு கூடிய நிதிகளை பாதீட்டில் ஒதுக்கிவருவது எதற்காக? மாலைதீவோ இந்தியாவோ எமக்கு எதிராகத் தாக்குதல்களை மேற்கொள்ளமாட்டா. நீங்கள் இந்த நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய இனமக்களுக்கு எதிராகத்தான் படையினரைப் பாவிக்கப் போகின்றீர்கள். மக்கள் உங்களை வெறுக்கத் தொடங்க மேலும் மேலும் இராணுவ பலத்தைப் பாவிப்பதற்காகவா இத்தனை பெரும் தொகையை படையினர் சார்பில் செலவிடுகின்றீர்கள் என்றும் கேட்டார்.

இந்தத் தொகைகளில் ஒரு பகுதியையாவது எங்கள் பிறநாட்டுக் கடன்களை அடைக்கப் பாவிக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?, ரூபாய் 30 ஆயிரத்து 800 கோடி ரூபாயை ஒரு சிறிய நாடான இலங்கை பாதுகாப்புக்கு பாவிக்க முனைவது வியப்பை அளிக்கின்றது. அண்மையில் அரசாங்க ஊழியர்கள் எமது நிதியில் பெரும் பங்கை எடுத்துவிடுகின்றார்கள் என்று நிதி அமைச்சர் கூறியிருந்தார். இது தவறு. படையினர்தான் எமது வருமானத்தில் கூடிய பங்கை விழுங்கி வருகின்றார்கள்.

பாதீட்டால் வட, கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் குறை தீர்க்க எந்த ஒரு திட்டமும் வகுக்கப்படவில்லை. நாட்டில் சமாதானமும் சுபீட்சமும் ஏற்பட வேண்டுமானால் ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்று கூறித் திரிந்தால் அது ஏற்படாது. சுய நிர்ணய உரிமைக்கு உரியவர்களுக்கு சமஷ்டி முறையிலான ஓர் அரசியல் யாப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களையும் சமமான முறையில் வரவேற்றால்தான் சமாதானமும் சுபீட்சமும் உதயமாகும் என்பதை மறக்காதீர்கள்.

என் பேச்சை முடிக்க முன் உறுப்பினர்களுக்கு ஒரு விடயத்தை நான் நினைவுபடுத்த வேண்டும். இந்த வாரம் வட, கிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு முக்கிய வாரம். வீரமரணம் அடைந்த மாவீரரை நினைவுறுத்தும் வாரம். அதுவும் இன்றைய தினம் இவ்வாரத்தினுள் அதிவிசேட தினம்.

இந்தத் தருணத்தில் பிரிட்டிஷாருக்கு எதிராக ஆயதம் தாங்கிய சுபாஷ் சந்திரபோஸ் பற்றி அஹிம்சாவாதியான மகாத்ம காந்தி அவர்கள் கூறிய வாசகங்கள் சிலவற்றை உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகின்றேன்.

‘நேதாஜியின் தேசப்பற்று எவர்க்கும் குறைந்ததல்ல. அவரின் வீரம் அவரின் சகல காரியங்களிலும் பளிச்செனப் பிரதிபலிக்கின்றன. அவர் உன்னத குறிக்கோள்களை முன்வைத்தார். ஆனால், தோல்வியுற்றார். ஆனால், யார் தான் தோல்வியைத் தழுவாதவர்கள்?’

இன்னொரு சந்தர்ப்பத்தில் காந்தியவர்கள் பின்வருமாறு கூறினார்கள். “இந்தியாவிற்கு ஆற்றிய அவரின் சேவையின் நிமித்தம் நேதாஜி என்றென்றும் சிரஞ்சீவியாக மக்கள் மனதில் வாழ்வார்!” அகிம்சையின் பால் ஈர்க்கப்பட்டவன் என்ற முறையில் மேற்கண்ட காந்திஜியின் வாசகங்களை வீரத்தமிழனின் பிறந்தநாளில்  (நேற்றைய) அவர் ஞாபகார்த்தமாக சமர்ப்பிக்கின்றேன்” என்றார்.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 காந்திஜியின் வாசகங்களை வீரத்தமிழனின் பிறந்தநாளில் அவருக்கு சமர்ப்பிக்கிறேன்; பாராளுமன்றில் விக்னேஸ்வரன்