இலங்கையில் மீண்டும் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு – “திட்டமிட்ட சதி” என்கிறார் அமைச்சர் காஞ்சன விஜேசேகர

இலங்கையில் மீண்டும் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு: இலங்கைக்கு தேவையான பெட்ரோல் போதுமான அளவு தம்வசம் காணப்படுகின்ற போதிலும், சிலரது திட்டமிட்ட சதிகளினால் பெட்ரோல் வரிசை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.

நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் வரிசைகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றை பெற மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன் வரிசையில் நிற்கின்றனர்.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில்,இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் காஞ்சன விஜேசேகர,

எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் பெட்ரோல் தட்டுப்பாட்டை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.   அத்துடன், டீசலுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவும் அவதானம் ஏற்பட்டுள்ளது.

நுரைச்சோலை மின்உற்பத்தி நிலையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செயலிழந்துள்ளதை அடுத்து, ஏனைய மின்உற்பத்தி நிலையங்களின் ஊடாக மின்சார உற்பத்தியை மேற்கொள்வதற்கு தேவையான டீசலை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வாகனங்களுக்கு டீசலை வழங்குவதை விடவும், மின்சார உற்பத்தியை மேற்கொள்வது அவசியம் என கொள்கை அளவில் தீர்மானமொன்று எடுக்கப்பட்டு, பெருமளவிலான டீசல் மின் உற்பத்திக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

நாளொன்றுக்கு 4000 மெட்ரிக் டன் டீசல் தேவைப்படுகின்ற நிலையில், தற்போது சந்தைக்கு 1000 முதல் 1500 மெட்ரிக் டன் டீசல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது என்றார்.

Tamil News