மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பூரண ஆதரவு வழங்கவேண்டும்: நாடு தழுவிய வகையில் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பூரண ஆதரவு வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளது.
நாடுதழுவிய ரீதியில் நடந்து கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்திற்கு மட்டக்களப்பில் உள்ள இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்,மட்டக்களப்பு வைத்திய அரச வைத்தியர்கள் சங்கம்,கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சங்கம்,மட்டக்களப்பு வர்த்தக சங்கம்,ஏறாவூர் வர்த்தக சங்கம்,மட்டக்களப்பு மாவட்ட விவசாய சம்மேளனம், மட்டக்களப்பு மாவட்ட அழகுக் கலை ஞர்கள் நிபுணர் சங்கம், இந்து லங்கா சமூக அமைப்பு,சமூக மாற்றத்திற்கான இயக்கம் என்பவை ஒன்றிணைந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முழு அடைப்பு ஏற்பாட்டு குழுவினை ஏற்பாடுசெய்துள்ளது.
இன்று மட்டக்களப்பு தாமரைக்கேணியில் ஒன்றுகூடிய தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது.இதன்போது விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பினை ஏற்பாடுசெய்த தொழிற்சங்க கூட்டமைப்பு முழு அடைப்புக்கான ஆதரவினை கோரியுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் நடத்தப்படவுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவிலும் ஆதரவு தெரிவித்து கடையடைப்பு நடத்தவுள்ளதாக ஆசிரியர் சேவா சங்கத்தின் தலைவர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் தங்களது வாழ்வை கொண்டு நடத்த கஸ்டப்படும் நிலையில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சனைக்கு திர்வை காண்பதை விடுத்து இந்த பிரச்சனையை மேலும் விரிவடையச்செய்து மக்களை துன்புறுத்தக்கூடிய நிலையை தோற்றுவித்துள்ளது. எனவே இதனை பொறுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
நாளை (06) நடைபெறவுள்ள 24 மணிநேர ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்க 2000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் தயாராகவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.