பிள்ளையானின் விடுதலையில் ராஜபக்சக்களின் திட்டம் இருந்ததாக நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை பிணையில் விடுவிக்க கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக ஆட்சியேற்ற பின்னர் விசேட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக பிரதி மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் மட்டக்களப்பு சிறைக்குச் சென்று பிள்ளையானை சந்தித்துள்ளதாக பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஒரு வாரத்திற்குள் பிள்ளையானுக்கு பிணை வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக இதன்போது அவர்கள் பிள்ளையானிடம் உறுதியளித்துள்ளனர்.

இந்த தகவல், பிள்ளையானின் முன்னாள் செயலாளர் அசாத் மௌலானா வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்று (20) முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் வசித்து வரும் அசாத் மௌலானாவிடம், அங்குள்ள இலங்கைத் தூதரகத்தில் வைத்து விசேட புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வாக்குமூலமொன்றை பதிவு செய்துள்ளனர்.

இதனடிப்படையிலேயே குறித்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள் இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.