மலேசிய கடல் பகுதியில் கவிழ்ந்த படகு: வெளிநாட்டினர் ஒருவர் உயிரிழப்பு-35 பேர் மீட்பு 

மலேசியாவின் செலாங்கூர் கடல் பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில், அதில் பயணித்த ஆவணங்களற்ற குடியேறி ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

மேலும் 35 ஆவணங்களற்ற வெளிநாட்டினர் மீட்கப்பட்டுள்ளனர் என மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் செலாங்கூர் இயக்குநர் கேப்டன் சிவக்குமார் தெரிவித்திருக்கிறார்.

அமலாக்க முகமையின் படகும் மலேசிய கடற்படை மற்றும் கடலோர் காவல்துறையினரின் படகுகளும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டது என செலாங்கூர் இயக்குநர் கேப்டன் சிவக்குமார் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த 35 வெளிநாட்டினரில் 28 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அதே சமயம், தற்போது மீட்கப்பட்ட வெளிநாட்டினர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படவில்லை.

இவ்வாறான ஆவணங்களற்ற வெளிநாட்டினர் வழக்கமாக இந்தோனேசியாவிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக மலேசியாவில் கடந்த காலங்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி செல்லக்கூடிய வெளிநாட்டினர் மலேசியாவில் உள்ள தரகர்களின் உதவியுடன் பாமாயில் தோட்டங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் பணியாற்றுகின்றனர். அவர்கள் முறையான பயண ஆவணங்களின்றி பணியாற்றுவதால் கட்டாய உழைப்பு, குறைந்த சம்பளம், பாதுகாப்பற்ற பணி சூழல் போன்றவற்றை எதிர்கொள்கின்றனர்.