இலங்கையில் நான்கு நாள் வேலை வார முறைமையை அறிமுகப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தேசிய தொழில் ஆலோசனைச் சபைக்குக் கிடைத்துள்ள இக்கோரிக்கைகள் குறித்து, நிறுவனங்களின் தன்மைக்கு ஏற்ப ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்குமாறு தொழில் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து இதுவரை இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சின் செயலாளர் பியதிஸ்ஸ தெளிவுபடுத்தியுள்ளார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் ஆற்றல் நுகர்வைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மீண்டும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவலான செய்திகள் வெளியாகி வருகின்றன.
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் வீழ்ச்சியடைந்து வருவது மற்றும் இறக்குமதிச் செலவுகள் அதிகரித்து வருவதனால் ஏற்படும் பொருளாதார அபாயங்களைக் குறைப்பதற்காக, கொவிட் பெருந்தொற்று காலத்தைப் போல அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு இந்த வாரம் முதல் ‘வீட்டிலிருந்து வேலை செய்யும்’ அறிவிப்பு வெளியாகும் என்று உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் பரவிய பின்னணியிலேயே அமைச்சின் செயலாளரிடமிருந்து இந்த விளக்கம் கிடைத்துள்ளது.
உலகளாவிய ரீதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகள் காரணமாக வளங்களைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தட்டுப்பாடுகளை எதிர்கொள்ளவும், ஆற்றல் சேமிப்பை உறுதி செய்யவும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ‘வீட்டிலிருந்து வேலை செய்யும்’ உத்தி பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், தற்போதைய நிலவரப்படி அத்தகைய உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்று தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது



