நாடு முழுவதும் கொரோனா தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப் படுத்துவதற்கு இணையாக, நாடு முழுவதும் தகனம் செய்யும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் நாளாந்தம் 100க்கும் மேற்பட்டோர்கள் மரணிப்பதாக அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது என்றும் சகல பிரதான வைத்திய சாலைகளிலும் பிண அறைகளின் திறனைக் கடந்துள்ளதாகவும் தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் மரணிப்போரின் சடலங்களைத் தகனம் செய்ய நாட்டில் தகனம் செய்வதற்கான திறனை மீறியுள்ளதாக ஊடக சந்திப்பில் இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும் கொழும்பை அண்மித்த வைத்தியசாலைகளில் 20க்கும் மேற்பட்ட சடலங்கள் காணப்படுகின்றன என்றும் கொழும்பு தேசிய வைத்திய சாலையிலுள்ள அனைத்து குளிரூட்டிய பிண அறைகளிலும் இரு சடலங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன எனவும் பல இடங்களிலும் அங்கும் இங்கும் சடலங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதான மத்திய நிலையங்களை அமைப்பது சரி , வைத்திய சாலைகளில் படுக்கை விடுதிகளை அதிகரிப்பது சரி அதே போன்று சுடுகாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.