வலி கிழக்கு தவிசாளரைக் கைது செய்யும் முயற்சி பிசுபிசுப்பு – முன்பிணை கோரும் நிரோஷ்

தன்னைப் பொலிஸார் கைதுசெய்வதற்கு முயற்சி செய்வதாகத் தெரிவித்து தனக்கு முன் பிணை வழங்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு மீதான விசாரணை நாளை புதன்கிழமை வரை நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணிகளான வி.திருக்குமரன், வி.மணிவண்ணன் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிவான், பொலிஸார் தரப்பு நியாயங்களையும் கோரவேண்டும் என்பதால் நாளை புதன்கிழமை வரை விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

எனவே, நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள வழக்கு விசாரணைக்குச் சமுகமளிக்குமாறு அச்சுவேலிப் பொலிஸாருக்கும் நீதிவான் அழைப்பாணை அனுப்பியுள்ளார்.