வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்க அமைச்சர் டக்ளஸ் யோசனை

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு மீன் பிடி தொழிலில் ஈடு பட அனுமதிக்கும் யோசனை ஒன்றை இந்தியாவிடம் முன்வைத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய மீனவர்களின்  எல்லைதாண்டும்  பிரச்னை தொடர்பில், இலங்கை அரசாங்கம், தொடர்ச்சியாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிட்ட டக்ளஸ் தேவானந்தா, அந்தப் பேச்சுவார்த்தைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சர்வதேச ஊடகமான பிபிசி தமிழுக்கு வழங்கிய செவ்வியில் “இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களை அனுமதிப்பதற்கான யோசனையொன்றை  இந்தியாவிடம் முன்வைத்துள்ளேன்.

சில கட்டுப்பாடுகளின் கீழ் இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்து, கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அனுமதி பத்திர நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தி, அதனூடாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க  யோசனை முன்வைத்துள்ளேன்.

இந்த அனுமதி பத்திர நடைமுறையானது, நாட்டு படகுகளுக்கு மாத்திரமே செலுப்படியாகும்.

இந்த யோசனையின் கீழ், இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் மாத்திரமே இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கவும்  வேண்டும் என்ற யோசனையும் முன்வைத்துள்ளேன்” என்றார்.