உலக அரசிலை புரிந்து கொள்வது சிக்கலானது. பல்கலைக்கழகங்களில் அரசியல் அறிவியலை ஒரு கோணத்தில் கற்பிக்கிறார்கள். அதிகார மையங்களுக்கு ஒவ்வாத கருத்துக்களை இங்கு கற்பிப்பதில் சிக்கல்கள் உள்ளன. ஒரு சில ஆசிரியர்கள் இதையும் மீறி தங்களுக்கு உண்மை என்று தோன்றுவதை கற்பிக்கிறார்கள். இவர்களை போன்றவர்கள் பலகலைக்கழகங்களில் அதிகம் இல்லை.
பேராசிரியர் நோம் சொம்ஸ்கி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பிப்பவர் அல்ல. ஆனால் மாணவர்களுடன் பல தசாப்தங்களாக அரசியலை பேசி வருபவர். உலக அரசியலை இவரிடமிருந்து கற்றுக்கொள்வைதையே பல பிரபல சிந்தனையாளர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
மேலே குறிப்பிட்ட தலைப்பில் பேராசிரியர் நோம் சொம்ஸ்கி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதில் இன்றைய உலக அரசியல் பற்றி ஒரு அறிமுகம் தருகிறார். இன்றைய மானுடத்தின் எசமான்கள் யார், இந்த எசமான்களுக்கு இன்று சவாலாக இருப்பவர்கள் யார் என்பதை பற்றி இதில் பேசுகிறார். இவர் கூறிய கருத்துக்கள் பின்வரும் ஐந்து பிரிவுகளாக வெளியிடப்படுகிறது.
1) மேற்குலக அதிகாரத்திற்குள்ள அழுத்தங்கள்
2) இன்றைய கிழக்கு-ஆசியா சவால்கள்
3) இன்றைய கிழக்கு-ஐரோப்பியா சவால்கள்
4) இன்றைய இஸ்லாமிய-உலக சவால்கள்
5) இரண்டாவது சக்தி என்பனவே இவை.
மேற்குலக அதிகாரத்துக்குள்ள அழுத்தங்கள்
“யார் உலகை ஆளுகிறார்கள்” என்று கேட்டால் நாம் வழமையாக கையாளும் முறையில், அரசுகளையும், முக்கியமாக வல்லரசுகளையும், அதன் முடிவுகளையும், அவற்றிற்கிடையிலான உறவுகளையுமே கணக்கிலெடுக்கிறோம். அது முற்றிலும் பிழையில்லை. இருந்தாலும் இவ்வாறு சுருக்கி பார்ப்பதால் நாம் பிழையான விளக்கங்களை ஏற்றுக்கொள்ளும் சாத்தியங்கள் உண்டு என்பதையும் மனம்கொள்ளல் வேண்டும்.
அரசுகளுக்குள்ளேயும் சிக்கலான கட்டமைப்புகள் இருக்கும். இதன் அரசியல் தலைமைத்துவங்கள் எடுக்கும் முடிவுகளில் அரசுகளுக்குள்ளே இருக்கும் அதிகாரபலமுள்ள மையங்கள் அதிக தாக்கம் செலுத்தும். பொதுமக்கள் பெரும்பாலும் ஓரங்கட்டப்படுவார்கள். சனநாயகத்தை மதிக்கும் நாடுகளுக்கும் இது பொருந்தும்.
சனநாயக தன்மைகள் குறைந்த நாடுகளில் இது மேலும் பொருந்தும். மானுடத்தின் எசமான்கள் உண்மையில் யார் என்பதை புறந்தள்ளி உலகை யார் ஆளுகிறார்கள் என்பது பற்றிய உண்மையான புரிதலை நாம் பெற்றுக்கொள்ள முடியாது.
அடம் சிமித் என்ற பொருளாதார நிபுணர் அவருடைய காலத்தில் (1723-90), மானிடத்தின் எசமான்களை உற்பத்தியாளர்களும் பெரும் விற்பனையாளர்களும் என்று விபரித்தார். இன்றைய காலத்தில் இவர்களை பெரும் பல்தேசிய கம்பனிகளும், பெரும் நிதி நிறுவனங்களும், பெரும் விற்பனை மையங்களும் என்று விபரிக்கலாம். அன்று அடம் சிமித் சொல்லிய மானுடத்தின் எசமான்களின் தாரக மந்திரம்தான் “எல்லாம் எங்களுக்கே. மற்றவர்களுக்கு எதுவுமில்லை” என்பது. வேறு வார்த்தையில் சொல்வதானால் இதுவே ஒருபக்க சார்பான வர்க்கப்போர்.
நாட்டுக்கும் உலகத்திற்கும் கெடுதல் விளைவிப்பது. இன்றைய உலக ஒழுங்கில், மானுடத்தின் எசமான்களின் அமைப்புக்கள் அதீத செல்வத்தையும் அதனால் வரும் அதிகாரத்தையும் கொண்டுள்ளன. செல்வம் சிலரிடம் மட்டும் குவிமையப் படுத்தப்படும் போது சனநாயகம் கருத்தற்று போவகிறது. உலகளாவிய ரீதியில் மட்டுமல்ல உள்நாட்டிலும் இவ்வாறே. இந்த அதிகாரத்தை கொண்டே அவர்கள் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்து கொள்கிறார்கள். பல வழிகளில் தங்கள் பொருளாதார பலத்தையும் பாதுகாத்து கொள்கிறார்கள்.
சர்வதேச விடயங்களில் ஒரு அரசின் கொள்கையில் தாக்கம் செலுத்துபவைகளை அலசுவதற்கு கணக்கிலெடுக்க வேண்டியவை பற்றி இன்னும் பலவற்றை சொல்லலாம். இருந்தாலும் ஏறத்தாள உண்மைக்கு அண்மையான ஒரு மதிப்பீட்டிற்கு அரசுகளையே அதிகார மையங்களாக கருதி அலசுவோம். அப்படி பார்த்தால் யார் உலகை ஆளுகிறார்கள் என்ற கேள்வியை ஆரயும் போது சில விடயங்கள் உடனடியாக எம்முன்னே வந்து நிற்கும். ஐ-அமெரிக்காவுக்கும் இன்றைய உலக ஒழுங்கிற்கும் சவாலாக ஏழும்பும் சீனா, கிழக்கு-ஐரோப்பாவில் உருவாகி வரும் புதிய பனிப்போர், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர், ஐ-அமெரிக்க மேலாதிக்கமும் அதன் வீழ்ச்சியும் இவற்றில் முக்கிமானவை.
பிரபல லண்டன் பத்திரிகை ஒன்றின் நிருபரான கிடியன் ரச்மான் (Gideon Rachman) மேற்குலகின் இன்றைய சவால்களையும் உலக ஒழுங்கையும் இவ்வாறு விபரிக்கிறார்.
“பனிப்போர் முடிவுக்கு வந்த காலத்திலிருந்து ஐ-அமெரிக்காவின் இராணுவ பலமே உலக அரசியலின் மையப்புள்ளியாக இருந்து வந்துள்ளது. மூன்று இடங்களில் இது மிகவும் முக்கியமாக இருக்கிறது. ஐ-அமெரிக்க கடற்படை கிழக்கு-ஆசியாவின் பசுபிக்கடலை தனது சொந்த ஏரிபோல பாவிக்கிறது. ஐரோப்பாவில் நேற்றோ (NATO) – அதாவது அதன் இராணுவ செலவின் முக்கால் வீதத்தை கொடுக்கும் ஐ-அமெரிக்கா – “அதன் உறுப்பு நாடுகளின் எல்லைகளை பாதுகாக்கிறது”. மத்திய-கிழக்கில் அமெரிக்காவின் இராட்சத கடற்படை மற்றும் விமானப்படை தளங்கள் அதன் நட்பு சக்திகளுக்கு ஆறுதலாகவும் எதிரிகளுக்கு பயமுறுத்தலாகவும் உள்ளன.”
கிடியன் ரச்மான் தொடர்ந்து, “இந்த மூன்று பகுதிகளிலும் இந்த பாதுகாப்பு முறைகளுக்கு இன்று சவால்கள் உள்ளன” என்றார். ஏனெனில் உக்கிரேயினிலும் சிரியாவிலும் ரசியா தலையிட்டிருக்கிறது.
சீனாவுக்கு அருகில் உள்ள “அமெரிக்காவின் ஏரியாக” இருந்த கடற்பிராந்தியத்தை சீனா கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. ஆகவே அடிப்படை கேள்வி என்னவென்றால், ஏனைய வல்லரசுளும் தங்கள் தங்கள் பிராந்தியங்களில் தங்கள் பலத்தை நிலைநிறுத்துவதை ஐ-அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்பதுதான்.
பொதுப்புத்தியில் பார்த்தாலும், பொருளாதார பலத்தை பரவலாக்கவும் இதை ஐ-அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே கிடியன் ரச்மான் தனது ஆக்கத்தில் சொல்கிறார்.
உலக ஒழுங்கையும் இப்பிரச்சனையையும் பலகோணங்களில் இருந்து அணுகலாம் என்பது உண்மைதான். ஆனால் இம்மூன்று பிரதேசங்களும் முக்கியமானவை என்பதால் இந்த கோணத்திலிருந்தே இவற்றை அலசுவோம்.
தொடரும்…..