பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரங்கள் பரோல் நீடிப்பு – உயர்நீதிமன்றம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளனுக்கு நீதிமன்றம் ஏற்கனவே 30 நாட்கள் பரோல் வழங்கியிருந்தது.  மேலும் இரண்டு வாரங்களுக்கு பரோலை நீடித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதற்கமைவாக பேரறிவாளன் கடந்த அக்டோபர் 9ஆம் திகதி முதல் பரோலில் வெளிவந்தார். அவரின் பரோல் காலம் வரும் 9ஆம் திகதியோடு முடிவடைவதால், மேலும் 30 நாட்கள் பரோல் நீடிப்பு கேட்டு அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த மனு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், மருத்துவ சிகிச்சை தொடர வேண்டியுள்ளதால் அதனை கருத்தில் கொண்டு பரோலை நீடிக்க வேண்டும் என அவர் தரப்பு வழக்கறிஞர் சரவணன் வாதாடினார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பேரறிவாளனின் பரோலை, மேலும் இரண்டு வாரங்களுக்கு (வரும் 23ஆம் திகதி வரை) நீடித்து உத்தரவிட்டுள்ளனர்.