பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு – ஐ.நா

நாம் எதிர்வு கூறியது போலவே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தற்போதைய கோவிட்-19 நெருக்கடி காலகட்டத்தில் பெருமளவில் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரனியோ குற்ரெறஸ் இன்று (27) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலகம் சமச்சீரற்ற பிளவைச் சந்தித்துள்ளது. தனிமைப்படுத்தல் நடவடிக்கை களினால் 15 மில்லியன் பாலினத்தவர் சார் வன்முறைகள் ஒவ்வொரு 3 மாதமும் மேலதிகமாக இடம் பெறலாம் என இந்த தொற்று நோயின் ஆரம்பத்தில் நாம் எச்சரித்திருந்தோம். அது தற்போது உண்மையாகி உள்ளது.

2019 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 12 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 83 விகிதம் அதிகரித்துள்ளது. இதில் காவல் துறையினரிடம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 64 விகிதத்தால் அதிகரித்துள்ளது.

நோய் உக்கிரமடைந்த முதல் மாதத்தில் வன்முறைகள் தொடர்பில் உதவிகளைக் கோரி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் 60 விகிதமாக அதிகரித்திருந்தது.

இந்த வாரம் பாரிஸ் நகரத்தில் இடம் பெறும் பாலின சமத்துவம் தொடர்பான உலகத் தலைவர்களின் மாநாட்டில் இது தொடர்பில் விரிவாக ஆய்வு செய்யப்படும் என அவர் மேலும் தொவித்துள்ளார்.