பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் மீது தாக்குதல்- சிறீதரன் கண்டனம்

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது மருதங்கேணிப் பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தியுள்ளமை இந்த நாட்டின் அதியுச்ச அடக்குமுறையையே காட்டிநிற்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இந்த நாட்டின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் மீது ஆயுதமுனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ் அச்சுறுத்தலானது, சாதாரண தமிழ் மக்களின் இயல்புவாழ்வில் இராணுவம் மற்றும் அரச புலனாய்வாளர்களால் எத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதை மிகத்தெளிவாகக் காட்டியிருக்கிறது.

மக்கள் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய சிறப்புரிமையை மீறி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பகிரங்கமாக  மேற்கொள்ளப்பட்டுள்ள இக் கொலைமுயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதோடு, இச்சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்.