கின்னியா வெந்நீர் ஊற்று: சேதமடைந்த பழமை வாந்த பகுதியை மீளமைக்க நடவடிக்கை

WhatsApp Image 2026 07 21 at 2.24.00 PM கின்னியா வெந்நீர் ஊற்று: சேதமடைந்த பழமை வாந்த பகுதியை மீளமைக்க நடவடிக்கை

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் உள்ள தொல்லியலுக்குரிய பகுதியில் சிதைவடைந்துள்ள பழமைவாந்த பகுதியை  மீளமைப்பதற்கான நிகழ்வு புதன்கிழமை (22) இடம்பெறவுள்ளதாகவும், இதில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் இ.ஏ.செனரத் விக்ரமசிங்கே உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த செயற்திட்டத்திற்காக தொல்லியல் திணைக்களத்தினால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதுபோன்று மேலும் சில தொல்லியல் இடங்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும், குறித்த நடவடிக்கையின் மூலம் சுற்றுலா பகுதியாகவுள்ள கின்னியா பகுதியை சுற்றுலா பயணிகளுக்கு பயன்தருகின்ற வகையில் மாற்ற முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை மடத்தடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான குறித்த தனியார் காணியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் ஆலயத்தை புனருத்தாபனம் செய்வதற்காக 2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிதைவடைந்து இருந்த ஆலயத்தை உடைத்து அதனை கட்ட முற்பட்டபோது 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த பகுதி தொல்லியலுக்குரியது என தடை விதித்து அப்போதைய மடத்தடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தர்மகர்த்தாவான தட்சணாமூர்த்தி ரெட்ணம்மா கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த தனது காணியில் பிள்ளையார் கோவிலை கட்டுவதற்கான அனுமதி கோரி தற்போதைய தர்மகர்த்தா கணேஸ் கோகிலவதனியினால் 2022 ஆம் ஆண்டு திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னெடுத்திருந்தார்.

குறித்த வழக்கின் தீர்ப்பில் பிள்ளையார் ஆலயத்திற்தின் கட்டுமானத்திற்காக பிறிதொரு இடத்தில் 10 பேர்ச் காணி வழங்கப்பட்டதோடு குறித்த தொல்லியலுக்குரிய இடத்தில் எவ்வித கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படக்கூடாது என்ற கட்டளையும் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செளியனினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கையானது தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது.