நல்லிணக்கச் செயற்பாடுகளில் தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து ள்ளனர் – சந்திரகுமார்

இலங்கையில் தற்போது நல்லிணக்கச் செயற்பாடுகளில் தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றனர். புதிய இராணுவத்தளபதியின் நியமனம் நல்லிணக்கத்தின் மீது தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய முதன்மை செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மை செயலாளரும், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆலோசகருமான அமி ஓ பிரின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான மு. சந்திரகுமாரை அவரது கிளிநொச்சி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று காலை காலை பதினொரு மணிக்கு இடம்பெற்ற இச் சந்திப்பில் இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளின் நிலைமைகள், ஜனாதிபதி தேர்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது நல்லிணக்கச் செயற்பாடுகளில் தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றனர். குறிப்பாக நல்லாட்சி அரசின் காலத்தில் தமிழர்களின் தொல்லியல் பிரதேசங்கள் உட்பட பல இடங்களின்ஆக்கிரமிப்புக்கள் அதிகமாக இடம்பெறுகின்றமை, என்பன நல்லிணக்கச் செயற்பாடுகளை கேள்விக்குட்படுத்துகிறது எனத்தான் சுட்டிக்காட்டியதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் விருப்பத்திற்கு மாறாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் உருவாக்கப்பட்டமை மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படுகின்றமை, அவர்களுக்கான நீதியான தீர்வுகள் காணப்படாமை பற்றியும், குறித்த அலுவலகத்தின் மூலம் இதுவரை ஆரோக்கியமான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்ற விடயம் என்பன நல்லிணக்கத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியருக்கிறது.

இதனை தவிர புதிய இராணுவத்தளபதியின் நியமனமும் நல்லிணக்கத்தின் மீது தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்திருக்கிறது.

இதனைத் தவிர கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கை மீது இருந்த சர்வதேச அழுத்த தற்போது இல்லை எனவும் இலங்கை மீதான சர்வதேச விசாரணையை மேற்கொள்ளும் வகையில் பெயர் குறிப்பிட்டு நீதிபதிகளை நியமிக்கும் அளவுக்கு காணப்பட்ட சர்வதேச அழுத்தம் தற்போது இல்லை என்றும் தான் சுட்டிக்காட்டியதாக தெரிவித்த அவர்,ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் இரண்டு தரப்பினர்கள் மீது நம்பிக்கை இழந்தே காணப்படுகின்றனர். எனவே இச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் வாக்குகள் பற்றி எதனையும் கூற முடியாது என்றும் தெரிவித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.